நல்ல காரியங்களை செய்ய நல்ல நேரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒரு சில நேரங்களில் திதிகளும், நட்சத்திரங்களும், கிரகங்களும் சாதகமாக இல்லாத போது, ஒரு காரியத்தை (எதிர்காலம் சார்ந்த பணிகள்) செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த அபிஜித் முகூர்த்தத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சூரியன் உதயமாகும் பொழுதும், அஸ்தமிக்கும் நேரத்திலும், உச்சமாக இருக்கும் காலங்களிலும் நல்ல காரியங்களைச் செய்தால் நாம் எதிர்பார்த்த பலன்களை அடைய இயலும் என்பதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்ததுடன், நமக்கு அதைப் பற்றிச் சொல்லியும் சென்றுள்ளனர். சூரியன் உதயமாகும் போதும், உச்சமாகும் போதும், அஸ்தமிக்கும் போதும் எந்தவிதமான திதி, நட்சத்திர, கிழமை, யோக, கரண மற்றும் பஞ்சாங்க தோசங்கள் எதுவும் கிடையாது.
சூரிரியன் உச்சிக்காலம் அடையும் நேரத்தினை அபிஜித் முகூர்த்தம் என்கின்றனர். அபிஜித் முகூர்த்தக் காலம் என்பது உச்சிக் காலப் பகல் பொழுதில் 11.45 முதல் 12.15 மணி வரை உள்ள முகூர்த்தம் ஆகும். இந்த முகூர்த்தத்தில் செய்யப்படுகின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தரக்கூடியது. சூரியன் உச்சமடையும் பொழுது மிகுந்த பிரகாசத்துடன் இருப்பதால் நாம் செய்யும் காரியங்களும் சூரியனை போல் பிரகாசமாக இருக்கும். பிரம்ம முகூர்த்தத்திற்கு நிகரான பலனை அபிஜித் முகூர்த்தமும், கோதூளி முகூர்த்தமும் தரவல்லது. இந்த முகூர்த்தங்களுக்கு எந்தவிதமாக தோசங்களும் கிடையாது.
இந்த அபிஜித் முகூர்த்தத்தில், திருமணம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளுதல், புதிய வாகனம் வாங்க அல்லது பதிவு செய்தல், புதியதாக பொன், ஆபரணங்கள் வாங்குதல் அல்லது செய்தல், மனை தொடர்பான பத்திர பதிவுகளை மேற்கொள்ளுதல், உத்தியோகத்தில் உள்ள உயர் அதிகாரிகளை சந்தித்தல், அரசு தொடர்பான உதவிகள் மற்றும் பணிகளை மேற்கொள்ளுதல், ஆரோக்கியம் சார்ந்து மருத்துவம் பார்க்கச் செல்லுதல், அடுக்குமாடி கட்டிடம் தொடர்பான பணிகள் துவங்க மற்றும் திட்டமிடுதல், நீண்டகாலம் நன்மை தரக்கூடிய எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும்.