பிறப்பு, இறப்பு என்ற இரு நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் மற்றும் இந்த இடங்களில் இருக்கும் பொருட்கள் தொடர்பான மதம் மற்றும் மரபுவழி விளக்கங்கள், விலக்கத் தக்க நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் ஆகியோரிடமிருந்து விலகி நிற்பதைத் தீட்டு என்கிறார்கள். தீட்டு, துடக்கு, குற்றம், ஆசௌசம் என வேறு சில பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
ஓர் இந்து சமய ஆணுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். ஆதி மூலமான ஓர் ஆண் வழியாகத் தோன்றும் மகன் - பேரன் - கொள்ளுப்பேரன் - எள்ளுப்பேரன் - எள்ளுப்பேரனுக்கு மகன் - எள்ளுப்பேரனுக்குப் பேரன் வரையில் ஆதி மூலமான ஓர் ஆணையும் சேர்த்து ஏழு தலைமுறைகள் வருகின்றது. இந்த ஏழு தலைமுறைகளுக்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் அல்லது இறப்பினாலும் அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
பஞ்சாங்கங்கள் ஒருவர் இறந்த பின் தவிர்க்க வேண்டிய சுப காரியங்கள் பற்றி சில பரிந்துரைகளை அளிக்கின்றன. இறந்தவர் மற்றும் குறிப்பிட்டவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள உறவுமுறைகள்தான் தவிர்க்க வேண்டிய சுப காரியங்களை மாதங்கள் மற்றும் ஆண்டு கணக்கில் பரிந்துரைக்கின்றன.
1. ஒருவரின் தாய் இறந்தால், ஒரு வருடம் சுப காரியம் செய்ய, கோயில் செல்ல விலக்கு.
2. ஒருவரின் தந்தை இறந்தால், ஒரு வருடம் சுப காரியம் செய்ய, கோயில் செல்ல விலக்கு.
3. ஒருவரின் மனைவி இறந்தால், மூன்று மாதங்கள் சுப காரியம் செய்ய, கோயில் செல்ல விலக்கு.
4. ஒருவரின் சகோதரன் இறந்தால், ஒன்றரை மாதங்கள் சுப காரியம் செய்ய, கோயில் செல்ல விலக்கு.
5. ஒருவரின் பங்காளிகள் (தாயாதிகள்) இறந்தால் ஒரு மாதம் சுப காரியம் செய்ய, கோயில் செல்ல விலக்கு.
ஒருவர் இறந்த நேரத்தின் போது வரும் சில அசுப நட்சத்திரங்களுக்கும் தோஷம் உண்டு. அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்று ஐந்து நட்சத்திரங்கள் ‘தனிஷ்டா பஞ்சமி’ என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நட்சத்திரம் வரும் போது ஒருவர் இறந்தால் ஆறு மாதங்களுக்கு அடைப்பு (வீடு மூடப்பட்ட வேண்டும்) என்கிறார்கள். இவை தவிர, கார்த்திகைக்கு மூன்று மாதங்களும், ரோகிணி மற்றும் மகத்திற்கு ஐந்து மாதங்களும், புனர்பூசம், உத்திரம், உத்திராடம் மற்றும் விசாகத்திற்கு மூன்று மாதங்களும், மிருகசீரிஷம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களுக்கு இரண்டு மாதங்களும் அடைப்புக் காலமாக இருக்கிறது.
இறந்தவரின் அடைப்புக் காலத்தில், அவர் வீட்டில் இறந்திருந்தால் அவர் படுத்திருந்த இடத்தில் ஒரு நிறை செம்பில் நீர் வைத்தும், தீபம் ஏற்றியும் வருகிறார்கள். இந்தக் காலங்களில் நற்காரியங்களை செய்வதிலிருந்து விலக்களிக்கிறார்கள்.இந்த அடைப்பு சடங்குமுறை ஆவி வழிபாட்டு முறையாக இருக்கிறது.