வாஸ்து என்பது நம் முன்னோர்கள் நாம் வாழும் வழிமுறையை வகுத்துக் கொடுக்கப் பயன்படுத்திய பல வழிகளில் ஒன்று. இன்றும் சுப நிகழ்ச்சிகளின் போதும், புதிய செயல் தொடங்கும் போதும் வாஸ்துவிற்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. வீடு கட்டுவது தொடங்கி, குழந்தைப் பிறப்பு முதல் எல்லா செயல்களுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றுதான் வீட்டில் நாம் சாதாரணமாகக் கருதும் கண்ணாடியின் இடம்.
கண்ணாடி இல்லாத வீடு
பெயருக்கேனும் ஒரு கண்ணாடி இல்லாத வீடு இல்லை. முகம் பார்ப்பது என்ற பயன்பாட்டிற்கு அப்பால் அண்மையக் காலங்களில் அலங்காரப்பொருட்களில் ஒன்றாகக் கண்ணாடி மாறியுள்ளது. சுவர்களில் இடம் பிடித்திருக்கின்றன என்றாலும், கண்ணாடிகள் இருக்கும் இடத்திற்கு வாஸ்து சாஸ்திரப்படி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டினுள்ளே நேர்மறை சக்தியையும், எதிர்மறை சக்தியையும் கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மூலம் கட்டுப்படுத்தமுடியும் என்று நம்பப்படுகிறது.
எங்கெங்கே கண்ணாடி?
* கண்ணாடிகளையும், கண்ணாடியால் ஆன அலங்காரப் பொருட்களையும் வடக்குப் பாகத்தில் அல்லது கிழக்குப் பாகத்தில் மட்டுமே சுவர்களில் மாட்ட வேண்டும்.
* தரையில் இருந்து குறைந்தபட்சம் நான்கைந்து அடி உயரத்தில் அவை அமைக்கப்பட வேண்டும்.
* தொலைக்காட்சிப் பெட்டிகள் உட்பட பிரதிபலிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் அறையின் தென்கிழக்குப் பகுதியில் மட்டுமே வைக்கவேண்டும்.
* கண்ணாடியில் பிம்பங்களைத் தெளிவாகக் காணக்கூடிய விதத்தில், அதை, தூசுக்கள் இல்லாமல் எப்போதும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.
* முன்னோக்கிச் சாய்ந்தது போல இல்லாமல் முழுமையாகச் சுவருடன் சேர்ந்து இருக்கும்படி மாட்டவேண்டும்.
செய்யக்கூடாதது என்ன?
* மாடிப்படிகளுக்கு அருகில் கண்ணாடிகளை வைக்கக்கூடாது.
* இரண்டு கண்ணாடிகள் நேருக்குநேர் இருக்கக்கூடாது.
* வட்ட அல்லது நீள்வட்ட வடிவில் உள்ள கண்ணாடிகளைப் பயன்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக சதுர அல்லது நீள்சதுர வடிவத்தில் இருப்பவற்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
* இரும்பு மேசைக்கு அருகில் மாட்டக்கூடாது.
* தென்கிழக்கு மூலை அக்னி மூலை என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியை நோக்கியிருக்கும்படி கண்ணாடி வைத்தால் வீட்டில் கலகம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
* கண்ணாடிகளை ஒன்றுடன் ஒன்று நேருக்குநேர் இருக்கும்படி வைத்தால், அது வீட்டில் மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தும்.
* நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வடபகுதியில் இருந்து கிழக்குப்பகுதியை நோக்கி வருகிறது. இதனால் இந்தத் திசைகளை நோக்கியிருக்கும்படி கண்ணாடிகளை வைத்தால் அந்த ஆற்றல் வீட்டினுள் நுழைவதை கண்ணாடியின் பிரதிபலிப்பு குணம் தடை செய்துவிடும்.
* கட்டிலுக்கு நேராக வைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.