வீட்டின் முதன்மை வாசல் கதவிற்கு மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் காட்சி தெளிவாகத் தெரியும் இடத்தில்தான் வீட்டு வாசல் கதவு வைக்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி நிர்மானிக்கப்பட்ட வீட்டில் முதன்மை வாசல் கதவு, வீட்டில் இருக்கும் மற்ற வாசல்களை விட அளவில் பெரியதாக இருக்கும். ஏனென்றால் இந்த வாசலே வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் நுழையும் முக்கியப்பகுதி.
* வீட்டின் முதன்மை வாசல் கதவை வைக்கும் நிகழ்ச்சிக்குப் புது வீட்டின் கட்டுமானத்தின் போது மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தச் சடங்கே அருகால் நடுதல் என்றும் அழைக்கப்படுகிறது.
* சில இடங்களில் நிலை வாசல் கதவு பொருத்தும் சடங்காகக் கொண்டாடப்படுகிறது. இந்த வாசலின் முக்கியத்துவம் கருதியே “நல்ல காற்றும் சூரிய வெளிச்சமும் நுழையும் வீட்டிற்குள் வைத்தியன் நுழையமாட்டான்” என்று ஒரு பழமொழியே உள்ளது.
* ஒரு வீட்டின் மிக அதிகமான ஆற்றல் ஓட்டம் நுழைந்து வருவது இந்த வழியாகவே. இந்த வாசல் எப்போதும் மூடிக்கிடப்பது வீட்டுக்குள் நுழையும் அனுகூல ஆற்றலைத் தடுத்து நிறுத்தும். இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு உடம் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதுடன் பணக்கஷ்டம், சண்டை சச்சரவுகள், துன்பம் போன்றவை ஏற்படும்.
* இந்த முதன்மை வாசலை எப்போதும் திறந்து வைக்க முடியாதவர்கள் காலை நேரத்திலாவது இதைத் திறந்து வைக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போது காலைக் கதிரவனின் வெளிச்சக்கீற்றுகள் வீட்டிற்குள் நுழையும். இதன் மூலம் வீட்டினுள் நுழைந்து வரும் சாதகமான ஆற்றல் அதிகரிக்கும். வீட்டின் முன்பகுதியில் அமைக்கப்படும் இந்தப் பகுதி வீட்டின் நுரையீரல் என்றே அழைக்கப்படுகிறது.
* பண்டிகை நாட்களில் இந்த வாசல் கதவுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டு கதவின் எல்லா இடங்களிலும் சந்தனம், திருநீறு, குங்குமம் போன்ற மங்களப்பொருட்கள் இடப்படுகின்றன. வீட்டில் நுழையும் இடத்தில் இருக்கும் இந்த கதவு மங்களகரமாக இருந்தால் வீடே மங்களகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.
* வீட்டில் வசிப்பவர்கள் உட்காரும்போது கூட வாசல் படியில் வழியை மறித்து உட்காரக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவர். இதனாலேயே இந்த வாசல் கதவு எப்போதும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
* நம் முன்னோர் காலைக்கடன்களை முடித்து வீட்டை விட்டு வேலைக்கு வெளியில் கிளம்பும் போது, வாசல் கதவில் இருக்கும் நிலைகால்படியைத் தொட்டு வணங்கிவிட்டுச் செல்லும் வழக்கத்தைப் பின்பற்றினார்கள்.
* அனுகூல ஆற்றல் வருவதால் இந்த வாசலில் தடைகளை ஏற்படுத்துவது வீட்டுக்கு நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. எதிர்மறையான ஆற்றலை வெளிவிடும் செருப்பு அலமாரியோ, செருப்புகளோ இந்த வாசலுக்கு பக்கத்தில் இருப்பது நல்லது இல்லை.