ஆண்டுக் கணக்கு
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
ஆண்டு என்பது சூரியன், சந்திரனை மையப்படுத்தியே முதலில் தோன்றிற்று. சௌரமானம், சாந்திரமானம், சாலிவாகன சகாப்தம் - சாலிவாகன வருடம் ஆகியவற்றினைப் பற்றிக் காண்போம்.
மானம், மாணம் எனும் சொல்லின் பொருள் ‘அளவு’ என்பதாகும். பிரமாணம் - அளவு. சௌரியன் - சூரியனை மையப்படுத்திய அளவு ஆதலின் சௌரமானம், சந்திரனை மையப்படுத்திய அளவு ஆதலின் சந்திரமானம் என்று அழைக்கப்பெறுகின்றது.
சவுமிய - சௌமிய வருடம், சவுரமான தினம், சவுரமானம் - சவுரமானம், சௌரமானம், சௌரமானம் மாதங்கள், சவுரமான வருடம், சாவனம், சாந்திர மாசம், சாந்திர மாதம், சாந்திரமான மாதம், சாந்திரமானம், சாந்திரமான தினம், சாந்திரமான வருடம், சாலிவாகன சகாப்தம் - சாலிவாகன வருடம், சாலிவாகனன் ஆண்டு பெயர்க்காரணம் ஆகியவற்றினைப் பற்றிக் காண்போம்.
சவுமிய - சௌமிய வருடம்
சவுரமான தினம்
அறுபது நாழிகை கொண்ட ஒரு நாள். இது தற்காலம் மூன்று வகையாகக் கணிக்கப் பெற்று வருகிறது.
1.இந்துக்களால் சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை ஒரு நாள் என்றும்,
2.முகம்மதியர்களால் சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் சூரிய அஸ்தமனம் வரை என்றும்,
3.இங்கிலீஷ் முறைப்படி இரவு பன்னிரண்டு மணி முதல் மறுநாள் இரவு பன்னிரண்டு மணி வரை ஒரு நாள் என்றும் கணிப்பர்.
சவுரமான தினம் ஆரம்பிக்கும் போது கிழமையும் ஆரம்பமாகும்.
சவுரமானம் - சவுரமானம், சௌரமானம்
சூரிய மாதம், சூரியனை முதலாகக் கொண்டு கணிக்கும் முறை. இது - சூரியன் ஒரு ராசியில் பிரவேசித்தது முதல், மேற்படி இராசியை விட்டு நீங்கும் வரை உள்ள காலம். இதில் மாதம் ஒன்றுக்கு இருபத்தொன்பது தேதி முதல் முப்பத்திரண்டு தேதிக்கு அதிகப்படாமல் சூரியகதியை அனுசரித்து வித்தியாசப்பட்டு வரும்.
சௌரமானம் மாதங்கள்
சௌரமானம் மாதங்கள் என்பது மேடம் முதல் மீனம் கடைசி வரை சூரியனை வைத்து கணிப்பதாகும். மேடம், இரிடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக 12 மாதங்களில் சூரியன் பயணிக்கின்ற காலம் சௌரமான காலம் எனப்படும். எனவே அவற்றின் பெயரிலேயே அம்மாதங்கள் அழைக்கப் பெறுகின்றன.
சவுரமான வருடம்
பன்னிரண்டு சவுரமான மாதம் கொண்டது. அவை பரகிதப்படி முன்னூற்று அறுபத்தைந்து தினம். பதினைந்து நாழிகை, முப்பத்தொரு வினாடி, பதினைந்து தர்ப்பரை ஆகிய இவைகள் கொண்டதுமாகும்.
சாவனம்
சாவனம் என்பது முன்னூற்று அறுபத்தாறு நாள் கொண்டதாகும். முந்நூற்று முப்பத்தாறு நாட்கள் கொண்டது.
சாந்திரமான வருடம்
சாந்திர மாசம், சாந்திர மாதம், சாந்திரமான மாதம்
சந்திரன் சுற்றி வருவதினால் உண்டான மாதம். சாந்திர மாதங்களால் வரும் வருடம். சந்திரன் சுற்றி வருவதைக் கொண்டு கணிக்கப்படும் மாதம், அவை - சுக்கில வளர்பிறை பட்சம் பிரதமை முதல் கிருஷ்ண தேய்பிறை பட்சம் அமாவாசை முடிய மேட ராசி முதற் கொண்டு ஒவ்வொரு ராசியிலும் சூரியன் இருக்கும் பொழுது கணிக்கப்படுவது. அன்றியும், அந்தந்த சாந்திரமான மாதத்தின் பூரணையன்று சந்திக்கும் நட்சத்திரத்தின் பெயரை ஒட்டியே மேற்படி மாதங்கள் பெயரிடப் பெற்று வழங்குவது.
சாந்திரமானம்
சந்திரனை முதலாகக் கொண்டு கணிக்கும் கணிதம். சாந்திர மாதங்களால் வரும் வருடம். சாந்திர மாதங்களால் வரும் வருடம். சித்திரை மாதம் சுக்கிலப்பட்சப் பிரதமை முதல், பங்குனி மாதம் பௌரணை வரை சந்திரனை வைத்துக் கணிப்பதாகும். 12 தமிழ் மாதங்கள் சாந்திரமான மாதங்கள் எனப்படும்.
சாந்திரமான தினம்
சந்திரன், சூரியனில் நின்றும், பன்னிரண்டு பாகைகள் பிரிவதற்கு வேண்டிய காலம். இதுவே திதி.
சாந்திரமான வருடம்
சாந்திரமான மாதங்களால் வரும் வருடம் இது சவுரமான வருடத்தைப் பார்க்கிலும் சிறிது குறைந்தது. சாதாரணமாய் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று சாந்திரமான மாதத்துடனும் வரும்.
சாலிவாகன வருடம்
சாலிவாகனன் விக்கிர மார்க்கனோடு போர் புரிந்து, நருமதா நதிக்கு வடக்கில் முறியடித்து ஓட்டி தன் அரசாட்சியை நிலை நாட்டிய வருடம் ஆனதால் நருமதா நதிக்கு வடக்கில் உள்ளோர் விக்கிரகமார்க்க சகாப்தத்தையும், மேற்படி நதிக்குத் தெற்கில் உள்ளோர் சாலி வாகன சகாப்தத்தையும் ஆதியாய் அனுஷ்டித்து வருகின்றனர்.
இவ்வரசாட்சி கலியுகாதி வருடம் மூவாயிரத்து நூற்று எழுபத்தொன்பதில் தொடங்கிற்று. இவன் அரசு பூண்ட முன்னூற்று ஐம்பதாம் வருடத் துவக்கத்தில் கணித சாஸ்திரிகளால் வரையறுத்து, இதன் முன் சென்ற முன்னூற்று நாற்பத்தொன்பது கணக்கையே கணிதத்திற்குத் துருவமாக வகுத்து வைத்திருக்கின்றனர்.
அவ்விதம் முன்னூற்று நாற்பத்து ஒன்பதாம் வருடத்துடன் அட்சயம் முடிந்த படியால் பிரபவ முதல் அட்சயம் கடைசியாக வரும் ஒரு சுற்றைப் பரிவிர்த்தியாகக் கொண்டு கணிக்கப் பெற்று வருகின்றது. அதன் படி நிகழ்ந்தும் இங்கிலீஷ் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்து நாலாவது வருடமானது, இருபத்து மூன்றாவது பரிவிர்த்தியாகும்.
சாலிவாகனன் ஆண்டு பெயர்க்காரணம்
பைடணபுரியில் சுலோசனன் என்னும் வேதியன் இருந்தான். அவனுக்குச் சுமித்திரை என்னும் கன்னிகை இருந்தாள். இவள் தன் கலியாணத்திற்கு முன் பருவத்தை அடைந்து யாரும் அறியாமல் நாகராசனால் கருவடைந்தனள். இதை அறிந்து சுற்றத்தவர் வெறுக்க, குமரி தன்னிடம் களவிற் புணர்ந்து வரும் நாகராசனிடங் கூறி முறையிட்டனள். இதைக் கேட்ட நாகராசன் நான் மனிதனல்லேன் ஆதிசேடன் என்னால் உனக்குப் பெயர் பெற்ற புத்திரன் பிறப்பான். அஞ்சாதே உனக்கும் உன் தந்தைக்கும் அபாயம் நேரிடுங் காலத்தில் என்னை நினைக்க எனக் கூறி நீங்கினன். இதைக் குமரி தந்தைக்குக் கூற, தந்தை தெய்வச்செயலை யாரால் தடுக்க முடியும். வந்ததை எல்லாம் அனுபவித்தே நீக்க வேண்டும் என்று இருந்தனன். இந்தக் குமரி கலியாணத்திற்கு முன் கருவடைந்த செய்தியைச் சுற்றத்தவர் கேட்டு அரசனுக்கு அறிவித்து ஊரை விட்டு அவள் தந்தையுடன் அகற்றினர். தந்தையுடன் ஊரை விட்டு நீங்கின சுமித்திரை அந்நாட்டுக்கு அருகிலுள்ள குயவன் ஒருவன் வீட்டில் குடி புகுந்து சுபமுகூர்த்தத்தில் சாலிவாகனனைப் பெற்றாள். சாலிவாகனன் இளமைப் பருவத்தில் தன்னோடு ஒத்த சிறுவருடன் கூடி விளையாடுகையில் தான் அரசனாகவும் மற்றச் சிறுவர்களை மந்திரி முதலிய அரச காரியக்காரராகவும் எண்பித்து விளையாடி வருவன். இவ்வகை சாலிவாகனன் இருக்கையில் வேதியன் ஒருவன் அவ்வழி வரச் சாலிவாகனன் அவனை நோக்கி ஐயரே நம் இராச்சியத்திற்கு யோகம் எப்படி இருக்கின்றது என வேதியன் யோகமாகவே இருக்கிறது என்றனன். அதனால் களித்த சாலிவாகனன் வேதியனுக்கு ஒரு சாலைத் தர அது பொன்னாயிற்று. இதனால் இவன் சுவர்ண தானஞ் செய்பவன் என்ப பெயர் உண்டாயிற்று. அரசன் இவன் சுவர்ண தானஞ் செய்பவன் எனப் பெயர் உண்டாயிற்று. அரசன் இவனைக் காண ஆவல் கொண்டு இவனை அழைப்பிக்க இவன் அரசனிடம் போதல் மறுத்து இருந்தான். சாலிவாகனன் அங்கிருக்கும் குயவரிடம் யுத்தத்திற்கு வேண்டிய இரதம், கஜம், துரகம், பதாதி முதலிய மண்ணால் செய்வித்து இருந்தனன். இவ்வகை இருக்கையில் புரந்தரபுரத்து இருந்த தனஞ்செயன் என்னும் வணிகன் தனது மரண திசையில் தன் நான்கு பிள்ளைகளை அழைத்து இந்தக் கட்டில் அடியில் உங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பாகித்து வைத்திருக்கிறேன். நான் இறந்த பிறகு நான் பாகித்து இருக்கிற படி எடுத்துக் கொள்ளுங்கள் என்று மரணமடைந்தான். தந்தை இறந்த பிறகு புத்திரர் தகனக் கிரியை முடித்து மஞ்சத்து அடியைச் சோதித்துப் பார்க்கையில் ஒரு கும்பல் மண், ஒரு குவை உமி, ஒரு கூட்டம் கரி, ஒரு குவை எலும்பு இருக்கக் கண்டு இவைகளைப் பங்கிட்டுக் கொள்ளும் விதம் தோன்றாமல் அரச அதிகாரிகளிடத்தும் அரசனிடத்துங் கூறி நியாயந் தோன்றாமல் திரும்பிச் சாலிவாகனன் இருக்கும் குசப்பாளய வழியாய் வருகையில் சாலிவாகனன் இவர்கள் வழக்கை விசாரித்து இவைகள் நியாயமாகவே விளங்குகின்றன. உங்கள் தந்தை மேற் சொன்ன பொருள்களை மூத்த கனிஷ்டக் கிரமமாகப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வகை செய்தனர். அதாவது மண்ணை வைத்தது, மூத்தவனாகையால் பூமி முதலிய அவனைச் சேர வேண்டும் எனவும், இரண்டாமவனுக்கு உமி வைத்ததனால் அவன் தன தானியங்களைப் பெறவும், மூன்றாமவனுக்குக் கரியைக் கொடுத்ததால் அவன் பொன், வௌ்ளி முதலியவைகளைப் அபறுக எனவும், நான்காமவனுக்கு எலும்பைக் கொடுத்ததால் பசு முதலியவைகளைப் பெறுக எனவும் பகுத்து வைத்தனன் எனத் தீர்மானித்தனன். இதைக் கேட்ட அந்த வழக்கினர் இது நியாயத் தீர்ப்பென்று களித்துப் போயினர். இத்தீர்ப்பையும் அவன் அஞ்சாத நிலையையுங் கேள்விப் பட்ட விக்கிரமார்க்கன் இவன் நம் நாட்டில் இருக்கின் நமது புகழ் தலை எடுக்காது என்று எண்ணி இவனை ஊரை விட்டு ஓட்டச் சேனைகளுடன் சாலிவாகனனிடம் யுத்தத்திற்கு வந்தனன், சாலிவாகனன் தான் முன் மண்ணாற் செய்த வைத்திருந்த சதுரங்க பலத்தை நாகராசன் அருளால் உயிர்ப்பித்து அரசனை நருமதை நதிக்கு வடக்கில் ஓட்டினன். அக்காலம் முதல் நருமதா நதிக்கு வடக்கிலுள்ளார் விக்கிரமார்க்க சகத்தையும், அந்நதிக்குத் தெற்கிலுள்ளார் சாலி வாகன சகத்தையும் கைக்கொண்டு வருகின்றனர். இவன் பெயரால் சாலிவாகன சகம் வழங்கி வருகிறது. இவன் பிறகு மகாகவியாய் அலங்காரம். வைத்தியம், அஸ்வ பரீட்சை முதலிய சாத்திரங்கள் செய்து அரசளித்து வந்தனன்.
இவ்விதம் ஆண்டுகள் கணிக்கப்பெற்றன
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.