நெல் விளைச்சலுக்கு ஜோதிடக் குறிப்புகள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
நெல் இது ஓர் பயிர் வகை. இவற்றில் பல வகைகள் உள்ளன. செந்நெல் இது குறித்து தமிழ் சங்க இலக்கிய நுால்கள் பல செய்திகளைத் தெரிவித்துள்ளது. இந்நெல்லின் வளர்ச்சி மிக நீண்டு வளரக்கூடிய அமைப்பு உடையது. இந்நெல்லினைச் சுற்றி வேலி போல் வளரும் கரும்பினை யானை ஒடித்து உண்டாலும் தெரியாத அளவிற்கான மிக அதிக உயரம் வளரக்கூடியது என சீவக சிந்தாமணி பதிவிட்டுள்ளது.
மேலும் நாட்டுப்புற இலக்கியப் பாடல்;
“ மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடிக்கும்
அழகான தென்மதுரை ”
என்று மதுரையில் இந்நெல் விளைவினைப் பற்றியும், நெற்களத்தில் நெற்போரடித்தல் பற்றியும் தெரிவிக்கின்றது. இங்கு இதற்கான கோள்நிலைகளை ஆய்வு நோக்கினில் காண்போம்.
தை மாதப்பௌரணை அதிக மழை - நெல் அளவு கோல்
தை மாதம் பௌரணையன்று சாயந்திரம் ஒரு பலம் பஞ்செடுத்து வெளியில் வைத்து இருந்து மறுநாட்காலையில் அப்பஞ்சைப் பிழிந்து பார்க்கையில் நெல்லிடை சுத்தமாகிய பனி நீர் இருந்தால் அவ்வருடத்தில் உலகத்தில் அதிகமாக மழை பெய்யும்.
“ஆமே மகர மதிபவ்வத் தன்று சந்தி காலமதிற்
றாமே பஞ்சதொருபலத்தைத் தனியேவைத்து மறுநாளில்
நாமே பிழிய நெல்லிடைதா னல்ல சலம திருக்குமெனிற்
பூமே லந்த வருடமதிற் பொழியு முதக மதிகமதே” (மழை, செ.எ.94, ப.32.)
என்றும் குறிப்பிடுகின்றது. ஆலம், ஆலி என்பன மழையைக் குறிக்கும்.
நெல் அதிக விளைவு
மழை நுால் ஆவணி மாதம் முதல் தேதியன்று மேகங் குமுறினும், மின்னினும், ஐப்பசி மாதம் கடைசி வரை அதிகமாக மழை பெய்யும். அன்றியும் இம்மாதம் முதல் தேதி முதல் ஐந்தாந் தேதி வரைக்கும் நித்தமும் குமுறல், மின்னல் உண்டாகில் மேற்குறிப்பிட்டபடி அதிகமாக மழை பெய்யும். அந்நாளில் நெல் பெருகும் என்று தெரிவிக்கின்றது.
“நெல்லும் பெருகுஞ்சிம்மமதி நிகழுமுதலாந்தினத்தன்று
புல்லு மேகக் கற்சிதமும் பொருந்து மின்னலுண்டாகில்
வல்லக் கோலின் மதிமட்டும் மழையும் பெய்யு மொன்றஞ்சு
செல்லும் வரைக்கு மின்னலிடி சேரின்மேற் சொற்பலனாமே” (மழை, செ.எ.82, ப.28.)
என்றும் குறிப்பிடுகின்றது.
பல்வேறு நெல்லினம் விளைவு - வியாழன் ஆட்சி - தனுசு
வியாழன் தனுசு ராசியில் இருக்கும் காலத்தின் போது ஆனி என்னும் ஆண்டு அவ்வாண்டில் மழை பெய்து வற்றிப் போன குளம், கிணறு கண்வாய் முதலானவைகளில் நீர் நிறைந்து அனைத்து விதத் தானியங்களும் விளைந்து, மக்கள் நீதி தப்பாமல் வாழ்வார்கள். ஆகினும் அரசர்களுக்குள் பகை மூண்டு போர்க்களத்தில் யுத்தம் புரிவார்கள். கரும்பு, நெல்லின் இனம் (பல வகை) முதலியன விளைந்து மக்கள் நல்ல நெறியுடன் வாழ்வர்.
“வில்லினிற் குருவு மேவ மிதுனவாண் டவ்வாண் டத்தில்
புல்லிடு முதகம் பெய்துப் பொய்கைநீர் நிறைந்து கன்னல்
நெல்லினம் விளைந்து மாந்தர் நெறிதவ றாமல் வாழ்வர்
சொல்லிடு மரச ருக்குட் சூழ்ந்திடும் பகையென் றோதே” (மழை, செ.எ.178, ப. 63.)
என்றும் குறிப்பிடுகின்றது. (பொய்கை - குளம். ஏரி, தடாகம், எனினும் ஒன்றே)
செந்நெல் விளைவு - சாம்பிராணிப்புகை ஈசானியத்திசை
சாம்பிராணிப்புகை வடமேற்குத் திசையிற் செல்லுமாகில் அவ்வருடத்தில் விட்டில், கிளி, கொசுக்களால் விளையும் பயிர்கள் சேதத்தையடையும். வடக்குத் திசையில் செல்லுமெனில் புவியில் நன்மை பொருந்தி வாழ்வார். ஈசானியத் திசையில் செல்லுமாகில் வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய பெண்ணே! நல்ல மழை பெய்து செந்நெல் மிகச் செழிப்பாக விளையும்.
“உண்டாம் வாயு திக்கதனி லோங்கும் விட்டிற் கிளிகொசுவாற்
பண்டாம் பயிர்கள் சேதமுறும் பகரு மளகைப் பதிதிக்கிற்
கண்டாங் கெய்திற் சுபிட்சமுறுங் கருதி யீசா னியத் திசையில்
வண்டார் குழலே சென்றாக்கால் மழைபெய்தோங்குஞ் செந்நெல்லே” (மே, செ.எண்.81, ப.28.)
என்றும் மழைநூல் சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இவ்விதம் அக்காலத்தில் சோதிடர்கள் பலன்கள் பார்த்துக் குறிப்பிட்டதை இந்நுால் ஆதாரம் தெரிவிக்கின்றது. ஈசானியத்திசையே சிறப்பு.
சூரியனுக்கு முன்பாக பாவக்கிரகங்கள் செல்லல்
தினமணியாகிய சூரியனுக்கு முன்பாக பாவக்கிரகங்களாகிய செவ்வாய், சனி, இராகு, கேது, அமர பட்சச் சந்திரனும், இராகுவுடன் கூடிய குருவும், செல்வார்களாகில் உலகத்தில் மழையின்றி விளைவு குன்றி மானிடர்கள் பல விதத்திலும் வருத்தம் அடைவார்கள்.
சூரியனுக்கு முன்பாக சுபக்கிரகங்கள் செல்லல்
செந்நெல் உலகம் முழுவதும் செழித்து விளையும்
அவ்வாறின்றிச் சுபக்கிரகங்களாகிய பூரணச்சந்திரன், வியாழன், சுக்கிரன், சுபரோடு கூடிய புதன் இவர்கள் செல்வாராகில் தேயம் எங்கும் பூரணமான மழை பெய்து, சகல தானியங்களுஞ் செழிப்பாக விளைந்து, மனிதர்கள் சகல பாக்கியங்களையும் பெற்று வாழ்ந்திருப்பார்கள் என்றும் செந்நெல் உலகம் முழுவதும் செழித்து விளையும் என்பதனை,
“கண்டிடும் பாபக்கோட்கட் கதிர்க்குமுன் நிற்பா ராகி
லெண்டிசை விளைவ தின்றி யேக்கமுற் றிருப்பர் மாந்தர்
சண்டன்முன் சுபர்க ளேகிற் றான்மகிழ் வுறுவர் மாக்கள்
கொண்டற்பெய் தோங்கிச் செந்நெற் குவலயஞ் செழிக்குஞ்சொல்லே” (மழை, செ.எ.129, ப.44.)
பாடல் குறிப்பிடுகின்றது.
கரும்பு, நெல் சமமாக விளைவு உண்டாதல்
கார்த்திகை மாதப் பவரணையன்று அசுபதி, பரணி, கார்த்திகை ஆகிய இந்த நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து வருமாகில், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய இந்த நான்கு மாதங்களிலும் சமரசமாக மழை பெய்து பூமியில் புஞ்சை, நஞ்சைகளில் இட்டிருக்கும் தானியங்களும் கரும்பும் சமமாக விளைவு உண்டாகும்.
“என்னக் கீட மதிபவ்வத் திவுளிபா கெரியுஞ் சேரில்
மின்னிடைச் சிம்மந் தொட்டு விருட்சிக மதிவ ரைக்கும்
நன்னய நாட்டிற் புஞ்சை நஞ்சையி லிட்டி ருக்குங்
கன்னலுஞ் செந்நெற் பாதி கண்டிடும் விளைவென் றோதே” (ம, செ.எ.113, ப.39.)
என்றும் மழைநூல் தெரிவிக்கின்றது.
செந்நெல் குறைந்த விளைவு
வியாழன் நட்பு வீடுகளில் அத்தமனமாயின் பலன், பகை வீடுகளில் நீசத்தில் வக்கரித்து நின்ற பலன்
வியாழன் நட்பாகிய இடபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், கும்பத்தில் இருந்து அத்தமனமாகில் தங்கம், முத்து, வஸ்திரம் முதலான பொருட்கள் குறைந்து போகும்.
வியாழன் பகையாகிய மேட, விருச்சிகத்திலும், நீசமாகிய மகரத்திலும் இருந்து வக்கரிக்கில் கரும்பு, செந்நெல் முதலிய தானியங்களும் விளைவு குறையும். அதனால் நாலாப்பக்கத்திலும் களவு போகும். இதனை,
“இன்னமும் வேந்த னட்பி லிசைந் துடன் மறைவானாகிற்
சொன்னமுந் தாள மாடை தோற்றமுங் குறைந்து காணும்
பொன்னவன் பகை நீசத்திற் புக்கிவக் கரமு மாகில்
கன்னலுஞ் செந்நெ லற்பங் களவுநாற் றிசையு மாமே” (மே, செ.எண்.146, ப.51.)
என்றும் குறிப்பிடுகின்றது.
சாலி நெல் விளைவு
செவ்வாய் நட்பு, வீடுகளில் நின்ற பலன் சுபம் (வக்ரம்)
செவ்வாய் நட்பாகிய இடபம், மிதுனம், கன்னி, துலாத்தில் இருக்கும் போது நன்றாக மழை பெய்து குன்றாமற் அனைத்து விதத் தானியங்களும் விளைந்து சுபமாக விளங்கும். செவ்வாய் மேற்படி ராசிகளில் வக்கரகதியானால் மனிதர்களுக்கு நன்மையும் பாற்பசு பாக்கிய வளர்ச்சியும் உண்டாகும்.
“என்றபின் செவ்வாய் நட்பி லியல்புட னிருப்பா னாகில்
நன்றுபின் சாலி யௌ்ளும் நாடெலாம் விளைந்து நல்கும்
நின்றுபின் வக்க ரித்தால் நீணில மனிதர்க் கெல்லாம்
கன்றுபின் கறவை சேருங் காசினி விளங்கும் மென்னே” (ம, செ.எண்.135, ப. 47.)
என்றும் குறிப்பிடுகின்றது. (சாலி என்பது நெல்லின் வகைகளில் ஒன்று)
சாலி மிக ஓங்கும் மீனச்சந்திரன்
மீனத்தில் சந்திரனிருக்க, இடபத்தில் சுக்கிரனிருக்க, மிதுனத்தில் புதனிருக்க மழை அதிகமாகப் பெய்து தீய்ந்து போகும் தருவாயிலிருந்த பயிர்களும் செழித்து விளையும், கருகுந் கதியிலிருந்த தருக்களாகிய மரங்கள் செழித்து வளர்ந்து அதன் பலனாகியக் கனிகளைத் தரும்.
“பெருகச் சேலிற்சசியிருக்கப் பிறங்கும் விடையிற் கவியிருக்க
வருகத் தண்டின் மதிமகனு மழையும் பெய்யு மதிக மதாய்
சருகொத் திருக்கும் பயிர்களெலாந் தழைக்குஞ் சாலிமிகவோங்கும்
கருகுந் தருக்கள் நீருண்டு காயுங் கனியுந் தந்திடுமே” (மழை, செ.எ.56, ப.20.)
என்றும் குறிப்பிடுகின்றது.
இவ்விதம் நெல்லின் விளைவு குறித்த கோள்நிலைகளை அறிந்து அதன் வழி பயன் பெறலாம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.