அழகான ஒரு ஏரியின் கரையில், அதிசயமான ஒரு பறவை வாழ்ந்து வந்தது. அதற்கு ஒரு உடல், இரண்டு தலைகள் இருந்தன. அதன் இரண்டு தலைகளும் ஒற்றுமையாக நேசம் கொண்டு ஒன்றாக இருந்தன.
ஒரு நாள் , அமுதம் போன்ற ருசியான ஒரு பழத்தை ஒரு தலை கண்டது. அதனை எடுத்து ருசித்ததும், "ஆகா, என்ன சுவை" என்றது மற்றொரு தலையிடம். அதைக் கேட்டு மற்றொரு தலை "எனக்கும் அந்தக் கனியைத் தா" என்றது கனிவாய்.
பழத்தின் சுவையில் மயங்கிய அந்தத் தலையோ, "நம் இருவருக்கும் உடல் ஒன்று தானே, நான் தின்றால் என்ன? நீ தின்றால் என்ன?" என்றது.
இது நாள் வரை அனைத்தையும் பகிர்ந்து உண்டு வந்த அந்த இரு தலைகளுக்குள் பகை மூண்டது.
ஏமாந்த தலை, ஏமாற்றிய தலையைப் பழி வாங்கும் தருணம் பார்த்துக் காத்து இருந்தது.
ஒரு நாள், விசக்கனி ஒன்று அதன் கண்ணில் பட்டது. அதை அந்த தலை உண்ணப் போவதைப் பார்த்ததும், பதறிப் போய் கத்தியது மற்றொரு தலை "உண்டு விடாதே , இருவருக்கும் ஆபத்து" என்றது.
ஆனால் பழிவாங்கும் உணர்ச்சியில், அதைக் கேட்காமல் ஏமாந்த தலை உண்டு விட்டது.
விசத்தின் கொடூரத்தால் அந்தப் பறவை இறக்க, இரு தலைகளும் கவிழ்ந்தன.
"அமுதமே ஆனாலும் அதை பகிர்ந்து உண்ண வேண்டும்"
"துணை என்பது அவசியம். ஒருவருக்கு ஒருவர் பகை இல்லாமல் இருத்தலும் அவசியம்"
என்பதே இக்கதையின் அடிப்படை கருத்து என்றாலும், ஒவ்வொருவரும் தங்கள் புரிந்து கொள்ளல் மற்றும் அனுபவங்களுக்கு ஏற்பத் தங்கள் வாழ்வின் பல நிகழ்ச்சிகளுக்கு வேறு வேறு கோணங்களில் பொருத்திப் பார்க்க முடியும்.