மழலை மாறாத சிறுவன் ஒருவன் கடைத் தெருவில், ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தான்.
கடையில் இருப்பவர்களிடம் ஏதோ கேட்கிறான். அவர்கள் இல்லை என்றதும் திரும்பி வருகிறான்.
அப்படி என்ன கேட்டிருப்பான்? அவன் கடையில், எந்தப் பொருளைக் கடைக்காரர்கள் இல்லை என்கிறார்கள்? அவனது கையில் இருந்தது ஒரு ரூபாய்.
அதைக் காட்டி, இந்த ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா? என்றுதான் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
அனைவரும் அவனை விரட்டி அடித்தனர்.
கடைசியாக மகா கஞ்சனான ஒருவனின் கடைக்கும் சென்று இதையே கேட்டான் சிறுவன்.
அந்தக் கஞ்சனோ கோபமாகி, சிறுவனைத் துரத்தவேத் தொடங்கி விட்டார். அவனும் ஓடுகிறான்.
ஒரு காஸ்ட்லியான காரின் முன் அந்தச் சிறுவன் தவறி விழுந்து விட்டான்.
அந்தக் காரில் இருந்து இறங்கி வந்த ஒரு பெரும் பணக்காரர், " ஏனப்பா, இப்படி ஓடி வருகிறாய்? அவர் ஏன் உன்னைத் துரத்துகிறார்? ஏதாவது பொருளைத் திருடி விட்டாயா?" எனக் கேட்கிறார்.
அதற்கு அந்தச் சிறுவன் ஒரு ரூபாய்க்கு இறைவனைக் கேட்டேன் அதற்காகத்தான் என்னைத் துரத்துகிறார் என்றான்.
அதைக் கேட்டு கொஞ்சம் குழப்பமான அந்தப் பணக்காரர், "சரி, ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கி என்ன செய்யப் போகிறாய்?"என்றார்.
அதற்கு அந்தச் சிறுவன், இந்த உலகில் எனக்கு ஆதரவாக இருப்பது எனது தாய் மட்டும் தான். அவரும் உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் உள்ளார். அவரைக் குணப்படுத்த நிறையப் பணம் வேண்டுமாம். எங்களிடம் வசதி இல்லை. அதனால் டாக்டர்கள் அனைவரும், உன் அம்மாவை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறி விட்டனர். என்னிடம் இருப்பது இந்த ஒரு ரூபாய்தான். அதனால்தான் இந்த ஒரு ரூபாயை வைத்து இறைவனை வாங்கி, எனது தாயைக் காப்பாற்றுவதற்காக எந்தக் கடையில் இறைவன் கிடைப்பார் என தேடிக் கொண்டிருக்கிறேன் என்றான் மழலைக் குரலில்.
அதைக் கேட்ட அந்தப் பணக்காரர், அந்தச் சிறுவனின் தாயின் மருத்துவச் செலவிற்கு உதவி, அவர் உயிர் பிழைக்க உதவுகிறார்.
அதில் கடைசியாக அந்தச் சிறுவனின் நம்பிக்கையே வென்றது.
நெருக்கடியான சூழலில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் ஒவ்வொருவரும் இறைவனுக்குச் சமமே. ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பார் என அப்பழுக்கற்ற தூய எண்ணத்துடன், ஒரு துளியும் சந்தேகம் இல்லாமல் அந்தச் சிறுவன் வைத்த நம்பிக்கைதானே இறைவன் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்ப்பது?