ஒரு நாள் ரமண மகரிஷி ஆசிரமத்தின் சமையல் அறைக்குள் நுழைந்தார். அங்கே தரையில் அரிசி இறைந்து கிடப்பதைக் கண்டார்.
கீழே அமர்ந்த அவர் ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்க ஆரம்பித்தார்.
அங்கு வந்த அவருடைய பக்தர்கள் இந்தக் காட்சியைக் கண்டார்கள்.
ஆத்மஞானம் பெறுவதற்காகத் தன் வீட்டையும் உறவினர்களையும் துறந்து வந்து பெருந்துறவியான ரமண மகரிஷி, அரிசியைப் பொறுக்குவதைப் பார்த்த பக்தர்கள் வியப்படைந்தார்கள். ‘இறைந்து கிடக்கும் சில அரிசிக்கு ரமண பகவான் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா?’ என்று நினைத்தார்கள்.
தங்கள் ஆர்வத்தை அடக்க முடியாத அவர்கள், ‘‘சுவாமி! நமது சமையல் அறையில் பல அரிசி மூட்டைகள் இருக்கின்றன. சில அரிசிகளைப் பொறுக்குவதற்காகத் தாங்கள் இவ்வளவு துன்பப்படலாமா?’’ என்று கேட்டார்கள்.
அதற்கு ரமணர், "நீங்கள் இவற்றை வெறும் அரிசியாகப் பார்க்கிறீர்கள். இந்த அரிசிக்குள் என்ன இருக்கிறது என்று பாருங்கள்? உழவர்களின் கடும் உழைப்பு இல்லையா? மழை, நீர், சூரியனின் ஒளி இல்லையா? இனிமையான காற்று, மென்மையான மண் இருப்பதை நீங்கள் உணரவில்லையா? இவற்றை எல்லாம் நீங்கள் உணர்ந்தால் ஒவ்வொரு தானியத்திற்குள்ளும் இறைவனின் அருள் இருப்பதை உணர்வீர்கள். அதனால் உங்கள் கால்களால் அவற்றை மிதித்து வீணாக்கமாட்டீர்கள். நீங்கள் உண்ண விரும்பாத தானியத்தைப் பறவைகளுக்குத் தாருங்கள்’’ என்றார்.
இதைக் கேட்ட பக்தர்கள் அமைதி ஆனார்கள்.