அண்ணாவின் நாடகங்களில் சமூகச் சிந்தனைகள்
முனைவர். ந. உமாதேவி
செம்மொழித் தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரறிஞர் அண்ணா. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்லவர். நாடகத் தமிழ் அண்ணாவின் கைகளில் தவழும் போதுதான் அதன் தரம் உயர்ந்தது. பழங்கதைகளையும் புராணங்களையும் பேசி வந்த நாடகங்களுக்கு அண்ணாவின் கைகள் புத்துயிர் ஊட்டின. பழமை மோகத்திலிருந்த நாடக மேடையைப் புரட்சிப் பாதைக்குத் திருப்பியதில் அண்ணாவிற்குப் பெரும்பங்கு உண்டு. பிற கலைகளைக் காட்டிலும் நாடகம் மக்களுக்கு விரைவான அறிவுணர்ச்சியை ஊட்டக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார்
“கண்ணைச் செவியைக் கருத்தைக் கவர்ந்து நமக்கு
எண்ணரிய போதனைகள் ஈவதற்கு - நண்ணுமந்த
நாடகசாலை யொத்த நற்கலா சாலையொன்று
நீடுலகில் உண்டோ நிகழ்த்து”
என்கிறார் கவிமணி. இவ்வாறு எண்ணரிய போதனைகள் செய்யும் வகையில் நாடகத்தின் கருத்தை, உள்ளடக்கத்தை மாற்றியவர் அண்ணா அவர்களே என்றால் மிகையாகாது.
பெரியார் பாராட்டு
திராவிட இயக்கச் சிந்தனைகளை நாடகத்தின் மூலம் வெளிப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். அண்ணாவின் ‘சந்திரோதயம்’ நாடகத்தைக் கண்ட பெரியார்,
“இதை நாம் சுமார் 10,15 வருட காலமாகவேச் சிந்தித்துச் சிந்தித்து ஒன்றும் கைகூடாமல் இப்போது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு, மேடையேறிப் பாவலாப் போடவும், அதை ஒரு சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும்படியான நிலை ஏற்பட்டிருப்பதையும் பார்த்து நாம் பெருமை அடையாமல் இருக்க முடியவில்லை. நாடகம் பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சியாகவும், அறிவுக்கு நல் விருந்தாகவும், மானத்திற்கு உயர்தர வழிகாட்டியாகவும் தொடக்கம் முதல் முடிவு வரை விளங்கியது என்பது சிறிதும் மிகைப்படக் கூறியதாக ஆகாது. சமய சஞ்சீவிகளுடன் அரசியல் சேற்றில் புரண்டு அல்லல் படாமல், இம்மாதிரியான தொண்டு உண்மையும் பயனளிக்கக் கூடியதாகும் என்று தெரிவித்துக் கொண்டு அண்ணாதுரையையும் காஞ்சி திராவிட நடிகர் கழகத்தாரையும் மனமார வாயாரப் பாராட்டி ஆசி கூறுகிறோம்.”
என்று நாடக மேடையிலேயேப் பாராட்டியதுடன், இச்செய்தியினை 27-11-1943 ஆம் தேதியிட்ட குடியரசு இதழில் தலையங்கமாகவும் எழுதினார்.
பாராட்டுக் கவிதை
அண்ணாவின் பன்முக நாடகம் ஒன்றிற்கு தலைமை வகித்துச் சிறப்புரையாற்றிய நாடக ஆசிரியர் கவிஞர் எஸ். டி. சுந்தரம்,
“ஓரிரவு நாடகத்தில் ஓங்கிச் சிரித்திடலாம்
நூரிரவு நடந்தாலும் நுணுக்கங்கள் பார்த்திடலாம்
பேரிரவு நேரத்தில் பிரிந்தறியாத் தம்பதிகள்
கோரிவந்து நாடகத்தில் கொண்டாடிக் களிப்பார்கள்!
ஆறறிவைச் சீராக்கும் ஆற்றல் உள்ள நாடகங்கள்
ஆறாகப் பெருகி வரும் அத்தனையும் புது வெள்ளம்!
வீரசிவாஜி மன்னன் வெற்றிமிகு நாடகத்தில்
யாரிவர் போல் நடிப்பார்கள், இணையில்லாக் கலைமன்னன்!
வேலைக்காரி என்னும் வியப்பான நாடகத்தை
வேலை மறந்துவிட்டு விருப்பாகப் பார்த்து விடலாம்!
மாலைச் சந்திரோதயத்தில் மங்காத நல் ஒளியில்
மலர்ச்சி பெறும் மனக்குமுதம் மணமாகும் எழுத்துக்கள்!
பால் போன்ற நகைச்சுவைக்கு பர்னாட்ஷா என்பார்கள்
மேலான அறிவியலில் எம்.என்.ராய் என்பார்கள்
கோலக்குளிர் நடைக்கு கோல்ட்ஸ்மித்தே என்பார்கள்
அவரெல்லாம் உரைகல்தான்! அண்ணா ஓர் அசல் தங்கம்!”
- என்று அண்ணாவின் நாடகத்திற்குக் கவிதை வழியிலான பாராட்டுரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
பகுத்தறிவுக் கருத்துகள்
சமூக அக்கறை கொண்ட அண்ணா அவர்கள், நம்மிடையே பலகாலமாகக் குடிகொண்டிருந்த சாதி, மதம் மற்றும் பல மூடநம்பிக்கைகளைப் போக்க எண்ணினார். சமூக அநீதிகளைக் கண்ணுற்று சீர்திருத்தவாதியான அண்ணா சமயத்தைக் கடுமையாக எதிர்த்தார். சமயம் மனிதனுக்கான வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதாக அமைய வேண்டும் என்று கருதினார். ‘மதம் ஒரு மாபெரும் நச்சுக்கோப்பை அதில் விழுந்த துகள்களாக மக்கள் இருக்கக் கூடாது’ என்று திராவிட இதழில் அண்ணா கூறுவது குறிப்பிடத்தக்கது.
கடவுளின் பெயரால் ஏற்பட்ட மூடநம்பிக்கைகளையும், அவற்றின் உண்மையான தன்மைகளையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்த நாடகம் ‘சந்திரோதயம்’. இந்நாடகத்தில் வரும் துரைராஜ் எனும் கதாபாத்திரத்தின் வாயிலாக மூடநம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறார். புரோகிதர்கள் சுவர்க்கம், நரகம் என்று கூறி மக்களை ஏமாற்றுவதனையும், திதி என்ற பெயரால் அரிசி, பருப்பு, வேட்டி முதலியவற்றை அவர்கள் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்வதனையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார். இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் தம்முடைய பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்புகின்றார்.
சாதி ஒழிப்பு
மதத்திற்கு அடுத்தபடியாக மக்களிடையே மண்டிக் கிடக்கும் பிரச்சனைகளுள் ஒன்று ‘சாதி’, சாதியத் தாக்கம் நம் சமூக அமைப்பைக் கிழித்துச் சின்னாபின்னமாக்கி விட்டது. மிகச் சுலபத்தில் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கி விட்டது. ஒருவனது பிறப்பிலேயே சாதி நிர்ணயிக்கப்படுகிறது. அவனது சமூக நிலை, பொருளாதார நிலை, தொழில் செய்யும் நிலை முதலியவற்றைச் சாதியே நிர்ணயிக்கிறது. எனவேதான் அண்ணா அவர்கள் “பேதமற்ற சமுதாயத்தை, சமத்துவத்தை, சமதர்மத்தை நாம் காணவேண்டும் என்றால் முதலில் சாதி தொலைந்தாக வேண்டும்” என்கிறார். அதனைத் தம் படைப்புகளிலும் முன்வைக்கின்றார்.
நாட்டு மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தும் முதல் சாதனம் சாதி என்பதைக் ‘காதல்ஜோதி’ என்னும் நாடகத்தில் வலியுறுத்துகின்றார். மக்களின் இரத்தத்திலே கலக்கப்பட்டிருக்கும் கடும் விஷம் சாதி. எனவே பேதமற்ற சமுதாயத்தை நாம் காண வேண்டுமானால் முதலில் சாதியைத் தொலைத்தாக வேண்டும். மேலும் சாதியை அழிப்பதற்கான கருவியாகக் ‘காதல்மணம்’ அமையும் என்கிறார். ‘காதலினால் சாதி மறையும்’ என்று கூறி கலப்பு மணத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றார். விதவை மறுமணத்தின் அவசியத்தையும் இந்நாடகத்தில் வலியுறுத்துகின்றார். விதவைப் பெண்களுக்கு மறுமணம் மறுக்கப்படும்போது, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதையும், பெண்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடுவதையும் இந்நாடகத்தில் பதிவு செய்திருக்கின்றார்.
பெண் விடுதலை
அண்ணாவின் காலத்தில் சமூக அமைப்பில் இருந்த மற்றுமொரு பிரச்சினை ‘பெண்ணடிமைத்தனம்’. அக்காலத்தில் பெண்கள் பல்வேறு வகையான துன்பங்களை அடைந்தனர். அக்காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. அண்ணா தாம் படைத்த பெண்களைப் படித்த பெண்களாக, துணிச்சல் மிக்க பெண்களாக, சீர்திருத்தக் குணம் படைத்தவராகக் காட்டுகின்றார். ஓரிரவு நாடகத்தில் சுசீலா என்ற பெண்ணைப் படித்த பெண்ணாகவும், முற்போக்குச் சிந்தனையுடைய பெண்ணாகவும் படைத்துக் காட்டுகின்றார். வேலைக்காரி நாடகத்தில் வேலைக்காரப் பெண்ணாக வரும் அமிர்தத்தை மதிநுட்பம் நிறைந்த பெண்ணாகப் படைத்திருக்கின்றார். தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகச் சந்திக்கும் பெண்ணாகப் படைத்துக் காட்டுகின்றார். பெண்களுக்கு வாழ்க்கையானது எவ்வளவு பயங்கரமானது என்பதையும், சமுதாயத்தில் பெண்கள் படும் துயரினையும் ‘பாவையின் பயணம்’ எனும் நாடகத்தின் மூலம் புலப்படுத்துகின்றார். சமயத்தின் பெயரால் செய்யப்பட்ட பெண்ணடிமைத்தனத்தினை மாற்றிட பெண் விடுதலைக்குத் தன் நாடகங்கள் வழியாகக் குரல் கொடுத்திருக்கின்றார்.
முடிவுரை
அண்ணாவின் நாடகங்கள், அன்றைய சூழலில் இளைஞர் சமுதாயத்தால் பெரிதும் வரவேற்கப்பட்டன. தமிழகத்தில் புரையோடிக் கிடந்த மூடப்பழக்க வழக்கங்கள், பொருந்தாமணம், கைம்மை நோன்பு, முதலாளி-தொழிலாளி என்கிற பேதம் போன்றவற்றை மையமாகக் கொண்ட கருத்துச் செறிவு மிக்க நாடகங்களைப் படைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சமுதாயத்தைப் பண்படுத்த வேண்டும், படிப்பறிவற்றவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும், போலிச் சாமியார்களை இனம் காண வேண்டும், கட்டுக் கதைகளை அகற்ற வேண்டும், தன்மானத்தை உயர்த்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களைத் தனது நாடகங்கள் வழியாக எடுத்துக் கூறினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட முனைந்தார். பேரறிஞர் அண்ணா சிறுகதை, புதினம், அரசியல் கட்டுரைகள் எழுதுதல், மேடைகளில் பேசுதல் போன்ற பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் எனினும், அவருடைய நாடகப் படைப்புகள் அவையனைத்திலும் தலைசிறந்ததாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.