புதுமைப்பித்தன் படைப்புகளில் ஆண்பாத்திரங்கள்
சு. விமல்ராஜ்
உதவிப்பேராசிரியர்,
ஏ. வி. சி. கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை.
பகுதி - 2
4. ஞானக்குகை தலைமைக்காரத்தேவர்
இந்தச் சிறுகதையில் ஒவ்வொரு ஆணும் சமூகத்தின் மிக முக்கிய பங்கு என்னும் ஒன்றில் மிக்க அல்லாதியாய் இருக்கிறான். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்னும் எண்ணவோட்டம் பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும்தான். தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவனது தலைமையைத் தாங்குவதற்கு அவன் குடும்பத்தின் அங்கத்தினன் அல்லது அவனது மகந்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு மன நிலையைச் சமூகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலருக்கு இருக்கிறது என்னும் பல சிந்தனைகளை எடுத்துக் காட்டுகிறது.
‘அப்பா’, ‘அம்மா’ என்னும் இரண்டு சொற்களை மட்டும் உதிர்க்கும் ஒரு குழந்தை, அதன் மீது அந்த ஊர்ப்பொறுப்பைத் தூக்கி வைக்கிற ஆவல் இன்னும் அந்த தலைமைக்காரத் தேவருக்கு இருக்கிறது. அவன் அந்தப் பொறுப்பைச் சரிவர செய்ய முடிந்தவனா? அவன் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியை விட அவரது மகன் அந்தப் பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதுதான் அவரது எண்ணம்.
கல்வியே வராத அவனுக்கு மாடு மேய்க்கும் பொறுப்பு வருகிறது. பேசமுடியாதவன், மாடு மேய்க்கிறான், ஆனால் அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால் அவன் பேச முடிந்தவனாக மாறிவிடுவான், மிகப்பெரிய ஞானம் பொருந்தியவனாக மாறிவிடுவான் என்கிற மிகப்பெரிய சமூகக்கனவு வந்துவிடுகிறது. இந்த ஆசை இதைப் போன்ற பலருக்கு உண்டு. இது தலைமைக்காரத் தேவரைப் போன்றவருக்கு மட்டும் இல்லை. சாமான்யனுக்கும் உண்டு. நம்பிள்ளை, அதன் நிலையை மாற்ற வேண்டும். இப்படித்தான் சமூகத்தில் மதுப்பழக்கம் நிரம்பியவனை, இன்னும் பல கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையான ஒருவனைத் திருமணம் என்னும் உறவில் ஈடுபடுத்தி ஒரு பெண்ணை அவனுடைய சுகதுக்கங்களுக்கு ஈடு கொடுப்பவளாக, அதைச் சகித்துக் கொள்ளுபவளாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
“குழந்தை அப்பா! அம்மா! என்று சொல்லும் சமயத்தில்தான் அதன் கண்களில் அறிவின் சுடர் சிறிது பிரகாசிக்கும். ஊர்க்காரர்கள் கூட அசட்டுத்தனம் என்று பரிகாசிக்கும்படி தகப்பனார் நடந்து கொண்டார். அவருடைய அசட்டுத்தனத்தின் சிகரம் என்னவென்றால், பிள்ளையை உள்ளுர்த் திண்ணைப்பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் சென்றதுதான். ’ஒத்தை கொரு பிள்ளை என்றால் புத்திவடக் கட்டையாப் போகுமா?’ என்று ஊர்க்காரர்கள் கூடச் சிரித்தார்கள்” (25)
திருமணத்திற்குப் பிறகு அவன் என்ன உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் சொல்லி ஆச்சரியப்படுத்தப் போகிறானா? இல்லை. ஆனால் தேவரின் ஆசை அதுவானால் என்ன செய்யமுடியும். இப்படித்தான் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கிறது.
5. உபதேசம் விசுவநாதன்
இந்தச் சிறுகதையில் விசுவநாதன் என்னும் பாத்திரமும் வில்கின்ஸன் என்னும் பாத்திரமும் இடம் பெறுகிறது. விசுவநாதன் ஒரு இந்திய மருத்துவர். வில்கின்ஸன் மேலை நாட்டவர். இவர்கள் இருவரும் மருத்துவ நண்பர்கள். புதுமைப்பித்தனின் இந்த இந்திய மருத்துவர், மேலைநாட்டு மருத்துவர் என்ற இந்த இணைப்புக்குள் என்ன சொல்ல நுழைகிறார்? என்பது சிந்திக்கத்தக்கதாய் இருக்கிறது.
இந்தியா என்பது ஆன்மீகத்தின் அடித்தளம் பொருந்திய ஒரு வேத தேசமாகக் கருதப்படுகிறது. இங்கே பல மதத்தவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் இந்து மதம் இங்கே தன் வேரை ஆழ ஊன்றியிருக்கிறது. ஒரு மனிதன் எந்தத் துறையில் இருந்தாலும் அது அறிவியல் தொடர்புடைய துறையாகவும் இருக்கலாம் அல்லது கலைத்துறையாகாவும் இருக்கலாம். ஆன்மீகம் தொடர்புடைய ஒரு தாக்கம் ஏற்படுவது சொல்லமுடியாததாக இருக்கிறது.
இந்தச் சிறுகதையின் ஓரிடத்தில் “எப்படியானாலும் இந்தியர்கள் இந்தியர்கள்தான்” (26) என்று பதிவு செய்கிறார். இதை எப்படிப் பார்ப்பது, எந்தக் கோணத்தில் நோக்குவது. கைதேர்ந்த ஒரு மருத்துவர். அவர் இந்தியராக இருக்கட்டும், மேலை நாட்டவராக இருக்கட்டும் மனமும் லயமும் எல்லாருக்கும் பொதுதான். லயித்துப் போவதில் வேறுபாடு ஏதும் இல்லை. ஆனல் இந்திய தேசத்து மூளைக்காரரிடமும் கடவுள் குறித்த தாக்கம், அதன் அதீத உணர்ச்சி, அது சார்ந்த நம்பிக்கை, அதன் வழியாக அவர்கள் அடைய முனையும் புதியதோர் உலகம் என்ற ஒரு வித்து விதைக்கப்படுகிறது.
விசுவநாதன் எப்படிப்பட்ட மருத்துவர் என்னும் போது, “சென்ற ஜெர்மன் சண்டையில் பேஸ்காம்புகளில் உழைத்ததினால், ஆப்ரேஷன் கத்தியை வைத்துக் கொண்டு யமன் வரவைத் தடுக்க, டாக்டர்கள் தப்பு வழி என்று சொல்லக்கூடிய முறைகளில் எல்லாம் பரிசீலனை செய்ய இவருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது… விசுவநாத்துக்குப் பல மேல் நாட்டுச் சர்வகலா சாலைகளின் பட்டம். நிறபேதம் பாராட்டும் பிரிட்டிஷ் வைத்தியக் கெளன்சில், இந்திய வைத்தியக் கெளன்சில்கள் இவரது அபாரமான கற்பனை முறைகளைக் கண்டு பிரமிக்கும். ரண சிகிச்சை என்றால் டாக்டர் விசுவநாத் என்று அர்த்தம்” (27)
விசுவநாதனின் கூற்று, “நண்பன் வில்கின்ஸனுக்கு, நீ இங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும். நான் சாகவில்லை; நீ என்னை எந்த நிலையில் பார்த்தாலும் சாகவில்லை என்று நம்பு. நமது உயிர் நூல் சாஸ்திரங்களைக் கிழித்தெரிந்துவிட்டு வேறு மாதிரியாக எழுதவேண்டும். அஸ்திவாரமே தப்பு” (28)
விசுவநாதன் உயிர் நூல் கூறும் உண்மைகள் பல உண்மையல்ல, அது பொய்த்தோற்றம் நிரம்பியது. உண்மையிலேயே உயிர் நூல் எப்படி இருக்கவேண்டுமோ அப்படித் திருத்தி எழுதப்பட வேண்டும் என்னும் கருத்தை எடுத்துரைக்கிறார்.
விசுவநாதனின் மற்றுமொரு கருத்து, “இப்பொழுது வெளியில் சொல்லாதே. நீ பைத்தியக்காரனாக்கப்படுவாய்… அந்தச் சாமியார் லேசான ஆசாமி அல்ல…” (29)
பின்னர், வில்கின்ஸனும், ஜேக்கும் கிளம்பி விடுகிறார்கள்.
”பின், வேறு என்ன செய்வது?” (30) என்ற கூற்றை முன் வைக்கிறார் ஜேக். இந்த இடத்தில் அவர்கள் விசுவநாதனின் சிந்தனை வேரில் நுழையவில்லை, ஆமோதிக்கிறார்கள். எண்ணமும், வெளிப்பாடும் அவரவர்களின் ஆவலையும் நுண்மான் நுழைபுலத்தையும் பொருத்தது. ஒருவன் ஒரு கோணத்தில் பார்க்கும் ஒன்றை மற்றொருவன் வேறு பரிணாமத்தின் கண்ணோட்டத்தில் காண்பான். இது காண்பவனின் எண்ணவோட்டத்தைப் பொருத்தது.
விசுவநாதன் என்னும் பாத்திரம் முதன்மைப்பாத்திரம். இப்பாத்திரம் இந்திய மருத்துவர் என்னும் குறியீடு. அவர் மருத்துவராக இருந்தாலும் அவர் இந்தியர் என்பது அவரது பிம்பம். கலைத்துறையில், மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு நாடு, மொழி, இனம் என்பதெல்லாம் கிடையாது. இது எல்லாவற்றையும் கடந்து உலக மக்களின் நலனுக்காகத் தங்களை அர்பணிப்பவர்கள் என்றுதான் பொருள்.
யார் எந்தத்துறையில் இருந்தாலும் அவர்கள் எந்த நாட்டை, மதத்தை, மொழியை சார்ந்திருக்கிறார்களோ அதன் அடிப்படை தாக்கம் இருக்கத்தான் செய்யும். இது இயல்பு. அப்படித்தான் விசுவநாதன் என்னும் பாத்திரம் மருத்துவத்துறையில் இருந்தாலும் ஆன்மீகத்தின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலையைத் தந்தது. வில்கின்ஸன் என்னும் பாத்திரம் துணைமைப் பாத்திரமே, அப்பாத்திரம் வெளிநாட்டவர் என்பதினும் அவரும் ஒரு மருத்துவரே, ஆனால் புதுமைப்பித்தன் விசுவநாதன் மனமாற்றம் ஏற்பட்டுச் சந்நியாச நிலைக்குச் சென்று அதை முழுவதும் அனுபவித்து ஆராயும் ஒரு நிலையை ஏற்றுக்கொண்டதாகக் காட்டுகிறார். வில்கின்ஸம் விசுவநாதனின் முயற்சியை ஏற்றுக்கொள்ளுகிறாரேயொழிய அவர் அந்த நிலைக்கு மாறவில்லை.
6. உபதேசம் வாதவூரார் (தொன்மம்)
மாணிக்கவாசகரின் ‘நரி பரியான’ ஒரு கதையைப் புதுமைப்பித்தன் தன் மொழி நடையில் கற்பனையில் புதுமை எண்ணவோட்டத்தில் சொல்லுகிறார். அரி மர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருக்கும் மாணிக்கவாசகர், அரசின் பணத்தை எடுத்துச் சிவனுக்குத் திருப்பெருந்துறையில் கோயில் எழுப்பி விடுகிறார். அந்தப் பணம் அரசுக்கு குதிரை வாங்குவதற்காக உள்ளது. குதிரை வாங்கும் பணத்தை வைத்துக் கோயில் கட்டிவிடுகிறார் மாணிக்கவாசகர். இக்கதை புதுமைப்பித்தனின் புதுமைப் பார்வையில் அகப்பட்ட கதை. நரியைப் பரியாக்கிய மாணிக்கவாசகரும் அவருடன் தொடர்பு கொண்டவர்களும் தம் எண்ணப் போக்கையே மாற்றிக்கொண்டனர். மனிதன் எழுத்தாளன் என எவரும் எழுத்தாளனின் எழுதுகோலுக்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்பதற்கு, சாபவிமோசனம், அகல்யை என்னும் கதைகளைத் தொடர்ந்து அன்று இரவு கதையும் அமைகிறது. எனினும் அக்கதையில் இருந்த சமூக நோக்கம் வேறு; இக்கதையில் இருந்த சமூக நோக்கம் வேறு.
அரிமர்த்தன பாண்டியன், வாதவூரர், ஈசனே பிட்டுக்கு மண்சுமக்கும் பாத்திரம், கிழவி, இந்த பாத்திரங்கள் மிகமுக்கியமாய் கருதப்படுகிற பாத்திரங்கள். இதில் வாதவூரன் என்னும் மாணிக்கவாசகன், பிட்டுக்கு மண்சுமக்கும் ஈசன் இவர்கள்தான் ஆண்பாத்திரங்களில் முதலானவர்கள்.
காட்சியமைப்பில் புதுமைப்பித்தன் 1. அரிமர்த்தன பாண்டியன், 2. வாதவூரர், 3. சொக்கன் (ஈசன்), 4. அங்கயற்கண்ணி (ஈசன் துணைவி) என்ற வரிசை அமைப்பில் வைத்திருக்கிறார்.
பாண்டிய நாட்டு அவையில் நடக்கும் குதிரை பரியான பிரச்சனை, மாணிக்கவாசகரின் நிலை, குதிரை பரியானதன் விளைவில் சொக்கன் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி படுவது, பிரம்படி வாங்கிய ஈசன் துணைவியிடம் சென்று சேர்வது என்ற கோர்வையில் அமைத்திருக்கிறார்.
இச்சிறுகதையின் ஆண்பாத்திரம் என்பது வாதவூரார் என்னும் மாணிக்கவாசகரே முதன்மை பாத்திரம் ஆவார். புதுமைப்பித்தன் இந்த பழந்தமிழ் இலக்கிய தேவாரக்கால கதையினை எடுத்து மொழிந்திருக்கிறார்.
வாதவூரார் அரிமர்த்தன அவையில் நிற்கவைக்கப்பட்ட ஒரு பொழுதில், “அமாத்தியன் திருவாதவூரன், பகல் முழுவதும் கால்கடுக்க நடுவெயிலில் நின்று கல்சுமந்து கசையடிபட்ட தன் சோர்வு சற்றும் காட்டாமல், வந்தபோது பூத்து அலர்ந்த புன்சிரிப்போடு நிற்கிறான். அரசன் அரிமர்த்தன பாண்டியன் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறான்.
அமாத்தியரே, குதிரைகளுக்குக் கொடுத்தனுப்பிய தொகை எங்கே?
அவனைத் தவிர இவ்வுலகில் கொடுப்பவர் யார்? கொள்பவர் யார்?
வாதவூரரே! அப்படியானால் பணம் வாங்கவில்லை என்று மறுக்கிறேரா?
குதிரை வரும் என்று சொல்லுகிறேன்.
குதிரையைப் பற்றி நீர் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். பணத்தை என்ன செய்தீர், சொல்லிவிடும்; உம்மை மன்னித்து விடுகிறேன்” (31)
அவையில் மாணிக்கவாசகர் பேசுவது, மன்னனுக்குப் புதுமையாக இருக்கிறது, “வாதவூரரே, என்ன சொல்கிறீர்? சித்தர்கள் போல் பரிபாஷையில் பேசி ராஜாங்க நேரத்தைக் கழிக்க வேண்டாம். குதிரைகள் வரும் என்கிறீரே, எப்போது வரும்?” (32) என்ற கேள்வியை மன்னன் முன் வைக்கிறான்.
7. சொக்கேசன்
சொக்கேசன் என்னும் பாத்திரம் காட்சியின் முதலிலேயெ அறிமுகம் செய்யப்படுகிறது. “நான்மாடக்கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை. அதில் ஒருவன் சொக்கேசன். மனிதனுடன் மனிதாக நடமாடி, அவர்களுடைய சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு, வளையல் விற்று, சாட்சி சொல்லி, சங்கப்புலவர்கள் கர்வம் அடக்கி, வாழையடி வாழையாக ஆண்டு வரும் பாண்டியர்களுக்கு மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய்க் கைகொடுத்து வரும் சொக்கேசன், அவன் உறங்கவில்லை” (33)
பாண்டிய மன்னன் அரிமர்த்தனின் மந்திரியை இவ்வாறு அறிமுகம் செய்கிறார்.
8. சொக்கன்
சொக்கன் கடவுளின் வடிவம். ஈசனே சொக்கனாக வந்து வாதவூரர் பெற்ற துயர்களை எல்லாம் ஒரு சேர பெறவேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வைகையின் வெள்ளத்தை அடைக்காமல் பிட்டு விற்கும் கிழவியின் பங்காய் வந்து நின்று பிட்டை உண்டுவிட்டு பங்குக்கு உண்டான வேலையைச் செய்யாமல் அரசனிடம் பிரம்பால் அடிவாங்கி அடியவனின் துன்பத்தைத் தானும் அனுபவிப்பதாய்ச் செய்கிறார்.
“வாதவூரன் நெஞ்சிலே வேதனை பிறந்தது. சொக்கன் திடுக்கிட்டான். விளையாட்டு விபரீதமாயிற்றே. அவன் மனசையும் அந்த வேதனை கவ்வியது. அங்கயற்கண்ணியின் கண்கள் வாளையைப்போல புரண்டு சிரித்தன. கன்னங்கள் குழிவுற்றன. கோவைக்கனிக்கு நிறமும் மென்மையும் கற்பிக்கும் அவள அதரங்கள் மலர்ந்தன. கொங்கைகள் பூரித்தன.
ஈசன் மனதிலே வேதனை. ஈசன் வாதவூரனாகி விட்டான். அவன் துயரம் இவன் துயரமாகியது. ஜீவனுடைய பொறுப்புக்குள் உட்பட்டு, அதன் அற்பத்திலும் அற்பமான கொடுக்கல் வாங்கல் பேரங்களின் சிக்கலை நன்குணர்ந்து அதன் சுமைகளைத் தாங்கலானான். ஈசன் கழுத்துத் தள்ளாடியது. என்ன சுமை! என்ன பாரம்! கண்கள் ஏறச் செருகின” (34)
சொக்கன் இப்படி வேதனைப்படுகிறான். இவன் உறும் துயர், மாணிக்கவாசகனின் துயர். அவன் உற்ற துயரைச் சொக்கன் நினைத்து நினைத்து வேதனைப்படுகிறான்.
திருவிளையாடல் புராணம் இறைவனின் செயலைப் பெருமைப்படுத்துகிறது. இறைவன் அடியவர்களிடம் காட்டும் அருளைப் பாராட்டிப் பேசுகிறது. புதுமைப்பித்தன் இறைவனுடைய செயலை விதிமுறைகளுக்குள் அடக்கிப் பார்க்கிறார். இறைவனையே சிந்திக்க வைக்கிறார். செய்த தவற்றிற்காக
இறைவனை உணரவைக்கிறார். வாதவூரனும் பாண்டியனும் ஒருவரையொருவர் புரிந்து வைத்துள்ளனர். இறைவன்தான் தவறான செயல் புரிந்து விட்டான் என்னும் குறிப்பினைக் கதை காட்டி நிற்கிறது. உலகியல் கட்டுக்குள் இறைவனை உட்படுத்த வேண்டும் என்னும் புதுமைப்பித்தனின் வேட்கை புலனாகிறது.
9. கருச்சிதைவு சுந்தரம்பிள்ளை
இச்சிறுகதை கலையுணர்வை வணிகநோக்கு எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதை மையமாகக்கொண்டது. கதை எழுதுவது ஒரு புறமிருந்தாலும் அதை வணிக நிறுவனங்கள் கேட்கும் கால அவகாசங்களில் கொடுப்பதற்காகப் படைப்பாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை அழகாக எடுத்துக்காட்டுகிறார் புதுமைப்பித்தன். கருச்சிதைவு சுந்தரம்பிள்ளை அவர்கள் ஒரு கதை எழுதுகிற கதாசிரியர். சுந்தரம்பிள்ளை போன்ற ஒரு கதை எழுதுகிற ஆசிரியர், எழுதுகிற கதைக்கு கருச்சிதைவு என்று தலைப்பு வைத்திருக்கிறார் புதுமைப்பித்தன். கதையின் கருவைச் சிதைத்து விடுகிற ஒரு கதை ஆசிரியராகச் சுந்தரம்பிள்ளை இருக்கிறார். காட்சிப்படுத்துதலில், சுந்தரம்பிள்ளை ஒரு கதையை எழுதி முடிப்பதற்குள் என்னென்ன செய்கிறார் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் புதுமைப்பித்தன்.
அவர் அன்று பார்த்த வேலை வேறு, “ ஸ்ரீமான் சுந்தரம் பிள்ளை அவர்கள் மின்சாரத்திட்ட அறிக்கையில் மூன்றாவது பக்கத்தில் நான்காவது பாராவை மொழிபெயர்த்து எழுதி, ‘இருக்கிறது’ என்று போட்டு முடித்தார்” (35)
பம்பாயின் மின்சாரத்திட்டம் தொடர்பான கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த சுந்தரம்பிள்ளை, “என்ன டெலிபோனா? என்று ரிசீவரை வாங்கிக் கொண்டு யாரது? ஓஹோ நீங்களா? என்ன இரண்டு மூன்று நாளா ஆளயே காணோம்... அப்படியா? என்ன, கதையா? அதுக்கென்ன? இன்னிக்கு சாயங்காலமா? ரெடின்னு வச்சிங்க்கோங்க! என்று சொல்லிவிட்டு பம்பாய் மாகாண மின்சாரத்திட்டத்தில் ஈடுபட்டார். மும்முரமாக” (36) என்று பல வேலைகளைத் தலையில் சுமந்து கொண்டிருப்பவராகத் தன்னை நினைத்துக் கொள்கிற சுந்தரம்பிள்ளை மின்சாரத்திட்டக் கட்டுரை, அவர் எழுதப்போகிற கதை என்று ஒவ்வொன்றையும் அவர் சரியாகத் திட்டமிட்டு அழகுபட செய்து முடிக்கிறாரா? என்று சிந்திக்க வேண்டியது மிக முக்கியம்.
இதில் மொழிபெயர்ப்பு தொடர்பான பணியைத் தலையில் சுமக்கும் இப்பாத்திரம்; கதையை எழுதுவதற்காக வாக்கு கொடுத்திருப்பது எந்த வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பதன் வெளிப்பாடு என்ற கேள்வியை எழுப்பும்.
சுந்தரம்பிள்ளையின் வேலைகளுக்கு மத்தியில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் எதன் குறியீடு என்று சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
“ வடிவேலு புரூப்! என்று காய்தாப் பண்ணிவிட்டு, மேஜைக்குள் இருந்த வெற்றிலைச் செல்லத்தை, வர்ணம் போன மசாலா டின்னுக்கு, அவர் செல்லமாக இட்டிருக்கும் பெயர்- எடுத்துச் சாவதானமாக வெற்றிலை போட ஆரம்பித்தார்” (37)
“மறுபடியும் பேனாவை மூடிவைத்து விட்டு, மோட்டுவளையைப் பார்த்து யோசனையில் ஆழ்ந்தார் ஸ்ரீபிள்ளை” (38)
“கொஞ்சம் இருங்க, வெற்றிலை போட்டுக்கொண்டு வருகிறேன்” என்று உட்கார்ந்து கொண்டார் ஸ்ரீபிள்ளை
வெற்றிலை போட்டு முடிந்தது.
ஸார் ஒரு நிமிஷம்! என்று சொல்லிக் கடைசி வரியை எழுதினார், பிள்ளை.
தான் படித்த அத்தனைக் கதைகளையும் படிக்க வேண்டும் என்று ராஜா அந்த மந்திரிக்குத் தண்டனை அளித்தான், என்று எழுதி, ‘இப்படி முடித்து விடலாமா?’ என்றார்” (39)
இப்படி சுந்தரம்பிள்ளை அவர்கள் ஒரு கதையை எழுதி முடிப்பதற்குள் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டுகிறார். சிந்திக்கிறார், வெற்றிலைப் போடுகிறார். இப்படி நிறைய உண்டு.
சுந்தரம்பிள்ளை எப்படிப்பட்ட பாத்திரத்தின் தன்மை என்று அனுமானிப்பது மிக முக்கியம். சமூகத்தில் இவரைப்போன்றவர்கள் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்ற எண்ணவோட்டத்திலும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சுந்தரம்பிள்ளை சொன்ன கதை ராஜாவின் கதை. “தான் படித்த அத்தனைக் கதைகளையும் படிக்க வேண்டும் என்று ராஜா அந்த மந்திரிக்குத் தண்டனை அளித்தான்” என்று எழுதி இப்படி முடித்துவிடலாமா? என்றார்” (40)
இந்தக் கதையைக் கேட்டவர் குப்பைக்கூடை நிறைய வைத்திருக்கிறேன் என்ற ஒரு குறியீட்டைத் தந்து முடித்து விடுகிறார். பலவகைப் பாத்திரங்களைக் கொண்டது இந்த உலகம். சுந்தரம்பிள்ளை எப்போதும் கடின உழைப்பாளி மாதிரியான சூழலில் இருப்பதாக இருக்கிறார். அவர் திறமையான எழுத்தாளரா? அல்லது திறமையற்றவரா? திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல், வெளிப்படுத்தும் வழிவகை இல்லாமல் இருக்கும் ஒரு சூழலில் உள்ளவரா? என்றால் அவர் அவருக்கு திறமையானவராகத்தான் தெரிகிறார். முதலில் தன்னைத் திறமையானவனாக உணர்ந்து கொண்டால்தான் நாம் செய்கிற செயலைச் சிறப்பாக செய்தது முடிக்க முடியும். அந்த வகையில் அந்தச் செயல் ஒரு தன்னம்பிக்கை மிகுந்த செயல் எனலாம். ஆனால் நம்முடைய அந்த தன்னம்ம்பிக்கை மிகுந்த செயலால் விளையும் நன்மை உண்மையான கலை வெளிப்பாட்டுத்தன்மை மிகுந்ததாக இருக்க வேண்டும், அல்லது யாரேனும் ஒருவருக்கு பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தன்னம்பிக்கைதான் உண்மையானது.
தொடக்கத்தில் சுந்தரம்பிள்ளை கதை எழுதுவதை அறிமுகம் செய்யும் போது, “ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான்… என்று எழுதிவிட்டுப் பேனாவை மூடி மேஜைமீது வைத்துவிட்டார்.
சிறிது நேரம் பேந்தப் பெந்தச் சுற்றும்முற்றும் பார்த்து விழித்துக்கொண்டிருந்தார்” (41) என்று அவர் கதை எழுதும் தொனியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எடுத்தாளுகிறார். வேறொரு இடத்தில், “இந்தச் சமயத்தில் நெடுமரம்போல நின்றான்…”
நெடுமரம் போல நி……..” என்று மறுபடியும் அடித்துவிட்டு எழுதினார் சுந்தரம் பிள்ளை.
கதை தானகவே, தன்னிஷ்டம்போல பின்னிக்கொண்டு போவதைக் கண்டு பயந்துபோன சுந்தரம்பிள்ளை, இந்த நெடுமரம் என்ற மதில் சுவர் வந்ததும் நிம்மதியுடன் பெருமூச்செறிந்தார்.
கதை வண்டியை தமக்குப் புரியும் வழியில் திருப்புவதற்காக, அந்த அழாத பிரதம மந்திரியைச் சிரச்சேதம் செய்தார்.
அந்தவேலை முடிந்த பின் கதைக்கு உயிர் சந்தேகமின்றி அகன்று விட்டது என்பதை நாடிபிடித்துப் பார்த்தவர்போல நிச்சயப்படுத்திக் கொண்டு அவனை உயிர்ப்பிக்கப் பரமசிவனைக் கூப்பிடலாமா, அல்லது வெறும் மந்திரவாதியைத் தருவித்து அவனுக்கு ராஜாமகளைக் கட்டிக்கொடுத்துக் கதையை மேளதாளத்துடன் மங்களமாக முடித்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில்….” (42) என்று புதுமைப்பித்தன் அவர்கள் சுந்தரம்பிள்ளையின் கதை எழுதும் தன்மையைக் குறித்துக் காட்டுகையில் ‘கதை வண்டியைத் தமக்குப் புரியும் வழியில் திருப்புவதற்காக, அந்த அழாத பிரதம மந்திரியை சிரச்சேதம் செய்தார்’ (43) என்று கருச்சிதைவு செய்கிற சுந்தரம்பிள்ளையின் கதை உத்தியை விரிவாகக் காட்டுகிறார் புதுமைப்பித்தன்.
இறுதியாகச் சுந்தரம்பிள்ளை எழுதிய சிறுகதையானது குப்பைத்தொட்டிக்கு போனது. “எப்படியாவது முடிந்தால் போதும், என்னிடம் குப்பைக்கூடை இருக்கிறதை மறந்துவிட்டீரா? என்றார் நண்பர்” (44) என்று முடிக்கிறார். வணிக உணர்வு கலைக்கு அடிக்கும் சாவுமணியை இக்கதை தெளிவாக விளக்குகிறது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.