புதுமைப்பித்தன் படைப்புகளில் ஆண்பாத்திரங்கள்
சு. விமல்ராஜ்
உதவிப்பேராசிரியர்,
ஏ. வி. சி. கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை.
பகுதி - 4
13. சிற்பியின் நரகம் சாத்தன்
ஒவ்வொரு படைப்பாளியின் குறிக்கோளும், கனவும் அவனது படைப்பு உணர்ச்சியோட்டம் நிரம்பிய மாபெரும் தத்துவார்த்தப் பிழம்பாக இருக்க வேண்டும் என்பதாகும். அறிவிற் சிறந்த படைப்பாளிதான் அவனது படைப்பின் மேன்மை எப்படிப்பட்டது என்ற உண்மையை உணரமுடியும். படைப்பின் தத்துவம் அவனது உழைப்பை மட்டுமல்லாது, நெடுங்கால அனுபவத்தைப் பிரதிபலிக்கும். படைப்பாளன் தன் ஆன்மாவில் சுமந்த ஆன்மாவை வடிவப்படுத்துவதுதான் அவனுடைய படைப்பு. எந்த ஒரு படைப்பும் படைப்பாளனது அர்ப்பணிப்பு இல்லாமல் முழுமையடையாது.
இக்கதையில் வரும் ‘சாத்தன்’ ஒரு சிற்பி. சாத்தன் தான் உருவாக்கிய சிலை தன் படைப்பின் உச்சம், அதை மக்கள் கசிந்துருகி அனுபவிப்பார்கள் என்று நினைக்கிறான். அவனது மனநிலைதான் ஒவ்வொருவரின் மனநிலைப்பாடும்.
இக்கதை நிகழும் காலம் பூம்புகார் வாழ்ந்திருந்த காலமாதலின் யவனன் பைலார்க்ஸ் என்பவனும் இக்கதையுள் உலவுகிறான். கலையாற்றல் மிக்க சாத்தனின் நண்பன் அவன். இந்நாட்டில் உலவும் மதக் கருத்துக்களை ஏற்காதவன்; கடவுள் நம்பிக்கையற்றவன்; மனித நேயம் கொண்டவன். அவனை அழைத்துத் தன்னுடைய படைப்பின் முழுமையைக் காட்டுகிறான் சாத்தன். அவன் அமைந்திருந்த அழகான நடராஜர் சிலையை அவனிடம் காட்டுகிறான். அவர்களுடன் வந்திருந்த சிவனடியார் ஒருவர் அச்சிலையைக் கண்டவுடன் கசிந்துருகி வழிபடத் தொடங்கிவிட்டார். அரசன் கோவிலுக்கு இச்சிலையை அனுப்பப் போகிறேன் என்று சாத்தன் கூறியதும்,
“என்ன! இந்த அசட்டுத்தனத்தை விட்டுத்தள்ளு. அரசனுடைய அந்தப்புர நிர்வாண உருவங்களின் பக்கலில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு. இதை உடைத்துக் குன்றின்மேல் எறிந்தாலும் அந்தத் துண்டுகளுக்கு அர்த்தமுண்டு. ஜீவன் உண்டு…என்று வெறிபிடித்தவன் போல் பேசினான் பைலார்க்ஸ்” (60) என்று புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார்.
சிலையை மக்கள் எவ்வாறு ரசிக்கப் போகிறார்கள்? மக்களின் கண்களுக்கு இது எப்படித் தெரியும்? இது மிக முக்கியக்கேள்வி. ஒன்றைப் பார்ப்பவரின் கண்ணோட்டத்தில்தான் அதனுடைய பிரதிபிம்பம் வெளிப்படும். கலைப்பொருளை பார்க்கும் கண்ணோட்டம், மக்கள் பார்வையில் அது அவர்களின் எண்ணவோட்டத்தின்படி அமையும். கலையைக் கலையாகப் பார்ப்பது, அறிவியல் நோக்கு கொண்டு பார்ப்பது, பொருளாதார நோக்கில் பார்ப்பது, ஆன்மீக நோக்கில் பார்ப்பது என்று பல கோணங்கள் உள்ளன.
முனைவர் சீ. குமரேசன் அவர்கள், “எனினும் சிலை கோவிலுக்குள்தான் கடவுளாகப் போகிறது. முதல் நாள் இரவில் சாத்தன் கனவு காண்கிறான். சாத்தனது கனவின் வழியே புதுமைப்பித்தன் நிலைமையைச் செதுக்கி விடுகிறார்” (61) என்று புதுமைப்பித்தனின் எண்ணவோட்டத்தைப் பதிவு செய்கிறார்.
பைலார்க்ஸ் சிலையை கலையாகப் பார்க்கிறான். சாமியார் அதே சிலையைக் கடவுளாகப் பார்க்கிறான். மக்கள் எப்படிப் பார்க்கப் போகிறார்கள்? இதைச் சூசகமாக புதுமைப்பித்தன் காட்டுகிறார். “அந்தகார வாசலில் சாயைகள் போல் உருவங்கள் குனிந்தபடி வருகின்றன; குனிந்தபடி வணங்குகின்றன. எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்! என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிகணக்கான சாயைகளின் கூட்டத்தில், ஒருவரது சிலையை ஏறிட்டுப் பார்க்கவிலை! இப்படியே தினமும்…” (62) என்று ஊடாடிச் சொல்கிறார்.
சிலையை மக்கள் கலை உணர்வு கொண்டும் பார்க்கப் போகிறார்கள் என்பது சாத்தனின் எண்ணம். மக்கள், “எனக்கு மோட்சம்! இதுதான் பல்லவி, பாட்டு, எல்லாம்” (63) என்ற இடத்தைச் சுட்டுவதன் மூலம் மக்கள் தங்கள் வழிபாட்டு உணர்வில் சிலையில் உள்ள கலையுணர்வை மறந்து விடுவார்கள் என்பதை அழகாக உணர்த்துகிறார்.
சாத்தனின் கனவில், “ எத்தனை யுகங்கள்! அவனுக்கு வெறிபிடிக்கிறது, உயிரற்ற மோட்சச் சிலையே! உன்னை உடைக்கிறேன். போடு! உடை! ஐயோ, தெய்வமே! உடைய மாட்டாயா! உடைத்து விடு! நீ உடைந்து போ! ... அல்லது உன் மமு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற கூத்து… இடி இடித்த மாதிரி, சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங்கனத்தில், அவன் ரத்தத்தில், அது தோய்கிறது… ரத்தம் அவ்வளவு புனிதமா! பழைய புன்னகை!.” (64)
என்று மக்கள் காலங்காலமாக சிலையை ரசிக்கப் போவதில்லை என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். காலம் காலத்திற்கு அச்சிலை கவனிப்பாரற்றுப் போகப் போகிறது என்பதை எவ்வளவு அழகாகக் காட்டி விடுகிறார். வழிபாட்டுப் பொருட்கள் வடிவத்தை மறைக்கப் போகின்றன; வழிபடுவோர் பக்தியுணர்வு சிலை செய்தவனின் கைவண்ணத்தைக் கவனிக்கப் போவதில்லை; ஆண்டவனின் கனிவையே எதிர்நோக்கும் சிலை நிலை பெறுகிறது; சிற்பி அடையாளத்தை இழந்து விடுகிறான். அடையாளத்தை இழந்த கலைவடிவம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நிலை பெறுவதைவிட, அடையாளத்துடன் அரைநொடி வாழ்ந்துவிட்டு மறையலாம் என்னும் செய்தியே இக்கதையுள் தெளிவாகிறது.
சாத்தன் என்னும் ஒரு சிற்பிப் பாத்திரத்தின் வழியே கலை பொருட்படுத்தப்பட வேண்டும்; கலை விலையாகி விடக்கூடாது; கலை அடையாளத்தை இழந்து விடக்கூடாது என்னும் செய்திகளை ஆசிரியர் சிறப்பாக உணர்த்தியுள்ளார்.
14. காஞ்சனை ஆண்பாத்திரம்
இந்தச் சிறுகதையில் வரும் பாத்திரம் தாமே கதையை சொல்லும் தோரணையில் இருப்பதால் அப்பாத்திரத்தின் பெயர் இடப்பெறவில்லை. இவரும் ஒரு எழுத்தாளரே. அவர் கதை எழுதுவதைப் பற்றி அவரே தரும் கருத்துருவாக புதுமைப்பித்தன் அவர்கள், “ அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க! எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால், என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடு விட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடைய அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது, கடவுள், தர்மம் என்று பல நாம ரூபங்களுடன், உலக மெஜாரிட்டியின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனாலோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள்” (65) என்று அறிமுகப்படுத்துகிறார்.
இந்த எழுத்தாளர் கற்பனை உலகுக்கு சொந்தக்காரர். இயல்பு வாழ்வில் நடக்கும் பலவற்றை கற்பனைக் கண் கொண்டு காண்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பும் விதமாக அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. அவரது செயல்பாடுகளின் முதற்படியாய்,
“விளக்கை அணைத்தேன். லேசாக வாசனை இருந்து கொண்டுதான் இருந்தது. ஜன்னலருகில் சென்று எட்டிப் பார்த்தேன். நட்சத்திர வெளிச்சந்தான். லேசாக வீட்டிலிருந்து ஜன்னல், வாசல், கதவுகள் எல்லாம் படபடவென்று அடித்துக் கொண்டன. ஒரு விநாடிதான் அப்புறம் நிச்சப்தம். பூகம்பமோ? நட்சத்திர வெளிச்சத்தில் பழந்தின்னி வெளவால் ஒன்று தன் அகன்ற தோல் சிறகுகளை விரித்துக்கொண்டு பறந்து சென்று எதிரில் உள்ள சோலைகளுக்கு அப்பால் மறைந்தது. துர்நாற்றமும் வாசனையும் அடியோடு மறைந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன்” (66) என்பதைக் காட்டுகிறார். அவரின் மற்றுமொரு பண்பிற்குச் சான்றாக,
“அப்போது, ஒரு பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி, ‘அம்மா தாயே’! என்று சொல்லிக் கொண்டு வாசற்படி யண்டை வந்து நின்றாள்.
நான் ஏறிட்டுப் பார்த்துவிட்டு, இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியதென்று நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்” (67) என்ற இடத்தைச் சுட்டலாம்.
“நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்கு மேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப்பிரமையா?” (68)
ஒரு குன்றிமணி அளவு அவளது பாதம் தரைக்கு மேலே இருக்கிறது போன்ற எண்ணவோட்டத்தில் காணும் அவனை எப்படி எண்ணுவது? சிலரது மனம் அதுவாக எதையாவது நினைத்துக் கொள்ளும். அந்த மனம் என்ன நினைக்கிறது என்று அதற்கேத் தெரியாது. தாழ்வு மனநிலை, உயர்வு மனநிலை, கஞ்ச மனநிலை, வள்ளல் மனநிலை என்று பல்வேறு மனநிலை உள்ளம் உள்ளது, அவரவர்களும் இவ்வாறான மனநிலைக்குத் தகுந்தாற்போல தம்மைச் சார்ந்து நிகழும் நிகழ்வுகளை எண்ணிப் பார்ப்பர். இதுதான் இயல்பு. சிலர் எதை எடுத்தாலும் சந்தேகப்படுவர். இது இவ்வாறாக இருக்குமோ? இது அந்த வகையாக இருக்குமோ? இந்தக் காட்சியைப் பார்க்கிற போது இது, அவை போன்றல்லவா இருக்கிறது? இப்படிக் குழப்பமான மனநிலையுடையவர்கள் அவர்கள்.
இவருக்கு, வந்திருக்கும் பிச்சைக்காரி பெண்ணா? பேயா? என்கிற சந்தேகம். முதலில் இங்கு வந்தவளுக்கு கால் தரையில் படவில்லை என்கிற நினைப்பு; கால் படாமல்தானே பேய்கள் நடக்கும் என்ற கற்பனை. வெளியிலிருந்து வருகிற ஒருவரை ஏற்றுக்கொள்கிற மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
பிச்சைக்காரி நல்லவளா? திருடியா? வேறு ஏதாவது திட்டத்துடன் நம் வீட்டிற்கு வந்திருப்பாளா? என்ற சந்தேகம் வராமல், இவருக்கு வந்தவள் மோகினிப்பிசாசாக இருப்பாளோ என்ற சந்தேக உணர்வு மேலோங்கி இருக்கிறது.
நடுநிசியை உணர்த்துகிற பன்னிரண்டு மணி அடித்து விட்டால், இவருக்கு கற்பனையின் உச்சம் தொட்டுவிடுகிறது. “எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும் வேலையை ஆரம்பித்தது” (69)
வேறொரு இடத்தில் புதுமைப்பித்தன் அவரின் குணநலனை எடுத்தியம்பும் விதமாக ஒரு காட்சியைப் பதிவு செய்கிறார்.
“உடனே விளக்கை அணைத்தேன். எனக்கு எப்போதும் இருட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. இருட்டோடு இருட்டாய், நாமும் இருட்டும் ஐக்கியமாய், பிறர் பார்வையில் விழாமல் இருந்து விடலாம் அல்லவா? நாமும் நம் இருட்டுக் கோட்டைக்குள் இருந்து கொண்டு தம் இஷ்டம்போல் மனது என்ற கட்டை வண்டியை ஓட்டிக்கொண்டு போகலாம் அல்லவா?” (70) என்று இருட்டை நேசித்து, இருட்டுக்குள் ஒளிந்துகொள்ள நினைக்கிற ஒரு பாத்திரமாக இருக்கிறார்.
மனைவியின் கைகள் தன் மீது விழுவதை, “பேய்ப்பெண்ணின் நகக்கைகள் விழுவதாக” (71) நினைத்துக் கற்பனை செய்கிறார்.
தான் படித்துக் கொண்டிருக்கும் கதையினை அவள் சொல்லுவது போன்ற பிரமையை உணர்கிறார். விதிர்விதிர்க்கிறார், வேர்த்துக் கொட்டுகிறார்.
மனைவியின் கனவுப்பிரமையை காஞ்சானை என்னும் பெண்பேயின் மீது ஏற்றிப் பார்க்கிறார். குண்டூசி நுணி மாதிரியான ரத்தத்துளியைக் காண்கிறார். மனைவிக்கு அந்தப் பேயால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் அவருக்கு மேலோங்கி இருக்கிறது. மசக்கையாக இருக்கும் பென்ணைத் தீயக்காற்றுகள் தீண்டும் என்ற நம்பிக்கை கிராமங்களில் உண்டு. அது போன்று இவர் தன் மனைவி மீது அதீத சிரத்தை எடுத்து பேய்க்கட்டு கட்டுகிறார்.
இறுதியாய்க் கதையை முடிக்கும் போது, “இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்! என்றாள் மனைவி. இற்கு நான் என்ன பதில்சொல்ல?” (72) என்று முடித்து விடுகிறார். இந்த இறுதி வாசகம்தான் கதை நடந்தது உண்மையா? கற்பனையா? என்ற கூற்றைத் தெளிவுபடுத்துகிறது.
15. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
இந்தச் சிறுகதையில் கடவுளும் ஒரு பாத்திரமாக தெருவுக்கு வந்துவிடுகிறார். கந்தசாமிப்பிள்ளை அவர்களோடு உரையாடி வருவதன் மூலம் இரண்டு ஆண் பாத்திரமாகி விடுகிறது. ஏனெனில் வந்த கடவுள் ஆண்வடிவில்தான் வந்திருக்கிறார். கடவுள் ஆணா? பெண்ணா? என்பது வெறு ஆய்வு. இங்கே கடவுள் ஆண் வடிவில் வந்திருக்கிறார்.
இதில், கடவுளைக் கந்தசாமிப்பிள்ளை எப்படி எதிர் கொள்கிறார், கந்தசாமிப் பிள்ளையின் வழியேக் கடவுள் இந்த உலகவாழ்வை எப்படி எதிர்கொள்கிறார் என்பது சிந்திக்க வேண்டியது.
கடவுளைப் பொருத்தவரை அவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொண்டால் மக்கள் அவரை நம்புவது எளிதானது அல்ல. மக்கள் எல்லவற்றையும்; சந்தேகக்கண் கொண்டு பார்ப்பார்கள். உண்மையானதை விடுத்து, பொய்யைச் சந்தேகமேயில்லாமல் ஏற்றுக் கொள்ளுவார்கள். மக்களை அத்தனை எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
இச்சிறுகதை போராடியே வாழ்வைத் தள்ளிக்கொண்டு வரும் மக்கள் ‘ஆண்டவன் இருக்கிறான். உறுதியாக ஒரு வழியைக் காட்டுவான்’ என்னும் நம்பிக்கையிலேயேக் காலத்தை ஓட்டிக்கொண்டு வருகிறார்கள். கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கும் கடவுள், நமக்கு மட்டும் வழி காட்டாமலா போய்விடுவார் என்ற நம்பிக்கை, மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்து கிடக்கிறது.
இந்நம்பிக்கை காரணமாகத் தங்கள் நிலைமை சீரடையத் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைக்கூட மனிதர் மேற்கொள்வதில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதம் என்னும் நிறுவனத்தின் வழியே வளர்க்கப்பட்டுவிட்ட கடவுள் நம்பிக்கையை அகற்றுவதென்பது இயலாத செயல் என்பதனை அவர் அறிந்தவர்தான். மதம் பற்றியும், கடவுள் பற்றியும் அவர் ஆங்காங்குக் குறிப்பிடும் செய்திகளின்று அவர் மதம் பற்றியும் கடவுள் பற்றியும் கொண்டிருந்த எண்ணத்தை அறிந்து கொள்ளமுடியும். மனிதனின் கண்டுபிடிப்புகளில், படைப்புகளில், மிகச்சிறப்பானது ‘கடவுள்’ என்றே அவர் கருதுகிறார். எனவே, அவர் கடவுளை நேரடியாக மறுக்கவில்லை.
இக்கதையில் காட்டப்படுகிற கடவுளை முனைவர் சீ. குமரேசன் அவர்கள்,
“கடவுளும் எல்லைகளுக்கு உட்பட்டவர் என்று காட்டுகிறார். அண்ட சராசரங்களையும் அடக்கியாளும் பரம்பொருளை, உலகியல் கட்டுப்பட்டிற்குள் அடக்கிவிடுகிறார். இந்நிலவுலகிற்குவரின் கடவுளும் துன்பப்படுவார் என்றே காட்டுகிறார். இன்றைய துடிப்பிற்கும் தேவைக்கும் கடவுள் பதில் சொல்லமுடியாமல் திணறிப் போவார் என்றே காட்டுகிறார். இங்கு உழன்று கொண்டிருக்கும் மனிதர் ‘கடவுள் நம்மை காப்பாற்றுவார்’ என்றும் நம்பிக்கையுடன்தான் உழன்று கொண்டிருக்கின்றனர் என்பதை அவர் அறிவார். எனினும் ‘கடவுள் வந்து உங்களை காப்பாற்றப் போவதில்லை’ என்று நேரடியாகச் சொல்லவில்லை. இவ்வுலகிற்கு வந்தால் கடவுளே, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது போராடுவார் என்பதை விளக்குகிறார்” (73) என்று பதிவு செய்கிறார்.
கடவுள், கந்தசாமிப்பிள்ளையிடம்;
“ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப்போகிறது?” (74) என்று அறிமுகம் ஆகிறார்.
“டிராமிலும் போகலாம், பஸ்சிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே என்றார் கந்தசாமிப்பிள்ளை” (75)
“நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன். எப்படிப் போனால் சுருக்க வழி? என்றார் கடவுள். இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்” (76)
என்று கடவுளும் கந்தசாமிப்ப்பிள்ளையும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
அறிமுக நாளின் முதல் நிகழ்வு
கடவுள் வந்த முதல் நாள் நிகழ்விலே, ரிக்சாவண்டி ஓட்டுகிற தொழிலாளி ஒருவர் கடவுளிடமும் கந்தசாமிப்பிள்ளையிடமும் உலகம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறார்.
“கடவுள் அந்த ரிக்சாக்காரனுக்கு பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.
“நல்லா இருக்கனும் சாமி” என்று உள்ளம் குளிரச் சொன்னான் அந்த ரிக்சாக்காரன்.
கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!
“என்னடா, பெரியவரைப் பார்த்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது? என்று அதட்டினார் கந்தசாமிப்பிள்ளை.
“அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளாக் காது குளிர, மனசு குளிர இந்த மாதிரி வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன?” என்றார் கடவுள்.
“அவன்கிட்ட இரண்டனா கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் தெரியும்!” என்றார் கந்தசாமிப்பிள்ளை.
“எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ, சாமி! நான் எப்பவும் அன்னா அந்த லேக்கிலேதான் குந்திட்டு இருப்பேன்; வந்தா பாக்கனும்” என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்சாக்காரன்.
“மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவந்தான்! தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்குக் கட்டுப்பட்டவன்” என்றார் கந்தசாமிப்பிள்ளை.
“வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும், உன்னை என்ன சொல்ல? கடவுளுக்குக் கண்ணில்லே; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான்” என்று சொல்லிக்கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.
கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.
“இதுதான் பூலோகம்” என்றார் கந்தசாமிப்பிள்ளை.
“இவ்வளவுதான!” என்றார் கடவுள். (77)
இந்த உரையாடல்களின் வழியே இந்த உலகம், மக்கள், அவர்களது வாழ்க்கைச் சூழல் அது எத்தகையதாக இருக்கிறது; கடவுளே வந்தாலும் அவரும் வாழ்வதற்கு எத்தனை சிக்கலை அவரும் அனுபவிக்க அல்லது சமாளிக்க வேண்டியிருக்கிறது என்ற சிந்தனையைக் கொடுக்கிறது. கடவுள் மனிதனாகி வந்தால்தான் மனிதன் படும் வேதனை தெரியும் என்று பழைய வாசகம் ஒன்று உண்டு. அத்தகைய எண்ணத்தின்பாற்பட்ட கருத்துருவின் வெளிப்பாடாய் இந்தக் காட்சி அமைந்திருக்கிறது. கடவுளுக்குக் கண் இல்லை; உன்னைச் சொல்ல வைத்தான் என்னைக் கேட்க வைத்தான் என்று பதிவு செய்து விடுகிறார் புதுமைப்பித்தன். அத்தோடு நில்லாமல் இறுதியாக இதுதான் பூலோகம் என்று முடித்து விடுகிறார்.
கடவுள் கடவுளாக வெளிப்படவும் சற்று சிந்திக்கவேண்டியுள்ளது. உலக வாழ்வு அப்படிப்பட்ட ஒரு சூழலில் உள்ளது. இறைவனின் புலித்தோல், திரிசூலம், பாம்பு, கங்கையும் சடையும் ஆகிய தோற்றம் நடனக்கலைக்கு ஒத்துவராது என்று ஒதுக்கித் தள்ளிவிட்டனர். இறைவன் இறைவனாகவே இருந்தாலும் இங்கே மக்கள் மத்தியில் அதை அவ்வளவு எளிதில் இயல்பு வாழ்வோடு அவர் ஒன்றினைத்து விட முடியாது. அப்படிப்பட்ட நிலைப்பாடு இங்குள்ளது.
திவான் பகதூர்,
“ஓய்! கலைன்ன என்னனு தெரியுமாங்காணூம்? புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டீரே. பாம்புன்ன பாம்பையா புடிச்சிக்கொண்டு வரவ? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக்கொள்ள வேணும். கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும்! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்திற்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலெ. முதலிலே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சிக் கூடையிலே போட்டு வச்சிப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை!” (78)
என்று கடவுளையே சில மணித்துளிகளில் வாயடைத்துப் போகச் செய்துவிட்டார்.
இறுதியாய், “அதுக்குள்ளே பூலோகம் புளிச்சிப்போச்சா?” (79) என்ற கேள்வி எழுப்பி கடவுளின் பூலோக வாழ்வின் சலிப்பை உறுதிப்படுத்தினார் கந்தசாமிப்பிள்ளை.
“உம்மைப்பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்” என்றார் கடவுள்.
“உங்களைப் பார்த்தாலோ?” என்று சிரித்தார் கந்தசாமிப்பிள்ளை.
“உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழமுடியாது” என்றார் கடவுள்.
“உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு” என்றார் கந்தசாமிப்பிள்ளை (80)
இந்த உரையாடல்களின் வழியேக் கடவுள் இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியற்றவராய்க் காட்டப்படுகிறார். கடவுள் உலகைப் படைத்திருக்கலாம். மக்களை, மக்கள் போன்ற வேறு உயிர்களை படைத்ததோடு சரி; அவர்களோடு ஒன்றினைந்து வாழ்வதற்கு கடவுள் சரியில்லாதவராய் இருக்கிறார். மக்கள் வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளும் அப்படிப்பட்டதாய் இருக்கிறது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.