பாவேந்தரின் தேசியச் சிந்தனை
முனைவர் ப. சு. மூவேந்தன்
உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
முன்னுரை
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு மிக நீண்ட வரலாற்றினை உடையது. இந்திய விடுதலைக்குத் தன்னலமில்லாத வகையில் தொண்டு செய்து புகழ்பெற்றோர் பலர். அவர்களில் தமிழர்களின் பங்களிப்பு வரலாற்றின் ஏடுகளில் பிறர் அறியப்படாத நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் இந்திய விடுதலை இயக்கச் சிந்தனை மகாத்மா காந்திக்கு முன்னர், திலகர் காலத்திலேயே வலுப்பெற்றுவிட்டது. இந்திய விடுதலை வேள்வியை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருமை வ.உ.சிதம்பரனா, பாரதியார், சுப்பிரமணியசிவா, வ.வே.சு. ஐயர் முதலானோரைச் சாரும். அவர்கள் பட்டம் பதவிகளைத் துறந்து, பல்வகைத் துன்பங்களுக்கு உள்ளாகித் தம் உயிரையும் பொருட்படுத்தாது நாட்டுப் பணியாற்றினர். அத்தகு உணர்வு அவர்களுக்குத் திலகரின் கொள்கை நெறியால் உருவானது என்பது வரலாற்று உண்மையாகும். இவர்கள் அனைவரும்; ஒவ்வொரு நிலைகளில் தமிழ் இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர்களாய் விளங்கியதோடு, தமிழ்ப்பணியோடு விடுதலை உணர்வினையும் ஊட்டி வளர்த்தனர். இருபதாம் நூற்றாண்டின் புதுமைக்கவி, புரட்சிக்கவி, பாவேந்தர் என்று சிறப்பித்து உரைக்கப்பெறும் பாரதிதாசனின் இந்தியத் தேசிய விடுதலை இயக்கப் பங்களிப்பினை எடுத்துரைப்பதாய் இக்கட்டுரை அமைகின்றது.
நோக்கம்
தமிழ் மொழி, இனம், நாட்டு வளர்ச்சியில் தனக்கெனத் தனித்த இடத்தினைப் பெற்றவர் பாவேந்தர். ஆயின், இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது என்பது பலர் அறியாத உண்மை ஆகும். பாரதியாரை அடியொற்றிப் பாவேந்தர் தன் எழுத்துப்பணியை வகுத்துக் கொண்டாலும், பாரதியார் தேசபக்திக்குத் தந்த சிறப்பு, பாவேந்தர் தரவில்லை என்பதும், தமிழ்நாட்டின் அரசியல், மொழி, இனச் சூழ்நிலை காரணமாக விடுதலைப் போருக்கு அன்னியராகவே பாவேந்தர் வாழ்ந்தார் என்பதும் பாவேந்தர் மீது வைக்கப்படும் கருத்தியலாகும். பாவேந்தர் மொழி, இனம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து இந்திய தேசியத்தில் ஈடுபாடு கொண்ட கவிஞராகத் திகழ்ந்தார் என்பதனை எடுகோளாகக் கொண்டு இக்கட்டுரை கட்டமைக்கப்படுகின்றது.
பாரதியாரும்-பாவேந்தரும்
பாவேந்தர் பிறந்தது புதுவை மாநிலத்தில். அது பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆதலால், தன்னை ஓர் இந்தியன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டிருந்தார் பாவேந்தர். பாரதியாரின் அறிமுகத்திற்கு முன்பாகவே அவரது நூல்களான இந்தியா இதழும் அவற்றில் வெளிவந்த ‘சுதேச கீதங்கள்’ என்னும் பாடல்களின் கருத்துக்களும் அவரை ஈர்த்திருந்தன. இதனைப் பின்வரும் அவரது கூற்றால் உணரலாம்.
“சுதேசகீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு முணுமுணுத்து வந்தேன். இந்தியா பத்திரிகையின் சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன் தரும ராஜாகோயில் தெருவின் விளக்கங்கள், குவளையின் கூச்சல் இவைகள் எல்லாம் சுதேச கீதத்தின் உட்பொருளை எனக்கு விளக்கின. அதன்பிறகு கொஞ்சம் விஷயமான உணர்வோடும், ‘நான் ஓர் இந்தியன்’ என்ற அகம்பாவத்தோடும் அப்பாடல்களை என்னால் பாடமுடிந்தது நாளடைவில்”
(பாவேந்தர் நினைவுகள், ப. 89)
பாரதியாரைத் தன் கவிதை ஆசானாக ஏற்றுக் கொண்ட பாவேந்தர், அவர் பின்பற்றிய இந்திய விடுதலை இயக்கத்தையும் பின்நாட்களில் முற்றாக ஏற்றுச் செயல்பட்டுள்ளார். காங்கிரசுக் கட்சியில் ஈடுபாடு கொண்டு பாடுபட்ட பாரதியாரின் கருத்துக்களை ஏற்று நடந்த பாரதிதாசன் அதனை வலுப்படுத்தும் விதத்தில் பல பாடல்களைப் புதுவையிலிருந்து வெளிவந்த தேசசேவகன், ஆத்மசக்தி முதலான இதழ்களில் எழுதி வெளியிட்டுள்ளார். பாரதநாட்டை, பாரதத்தாய் என உருவகித்துப் பல பாடல்கள் பாடியவர் பாரதியார். பாரதிதாசன் அவர்வழியைப் பின்பற்றிப் ‘பாரதத்தாய்’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள கவிதைகள் அவரது இந்திய விடுதலை உணர்வின் வெளிப்பாடாய் அமைந்துள்ளன.
பாரதத்தாய் அனைத்துப் பொருள்களிலும் தன் அழகைக் காட்டுகின்றாளாம். சின்னஞ்சிறு வண்டு, சித்திரத்தேன் பூக்கள், தென்னைமரத்தோப்பு, சீதத்தென்றற் காற்று, பாய்ந்திடும் வீரப்புலி, பாடிடும் சாந்தக்குயில் எனப் பலவற்றைக் கூறி, இறுதியில்
“முழுதும் அவள் ரூபம்-எனில் நாட்டின்
மோகத்தில் என்வாழ்வு-அவள்
எழிலுண்டு கண்ணேரில் இழிவென்ப தொன்றில்லை”
(ப. 219)
என்று புதுமை பொங்கப் பாடுகின்றார். எல்லாப் பொருள்களிலும் தன்னெழில்காட்டி நிற்கின்றாள் பாரதத்தாய் என்பது பாடலின் கருத்தாகும்.
நெஞ்சில் ஏறும் கனல் நிகர்த்த பாரதத்தேவி தனது ஆசையைப் பெருக வைக்கும் பாடல்களை அன்றாடம் பாடு என்று பாரதிதாசனை வேண்டுகின்றாளாம். அவரும் பாரதத்தாயை நோக்கித் துன்பங்களைக் கண்டு மலைக்க வேண்டாம் என்று கூறுகின்றார். இதனை,
“வாழ்விற் கலந்திருந்த இன்பம்-உங்கள்
வாய்க்குத் தவறிவிட்ட தென்றே-இந்தப்
போழ்தில் உரைக்கவரும் பேச்சில்-உள்ள
போக்கில் மலைத்துவிட வேண்டா
ஆழ்ந்து மிதந்து வரும் மீன்கள்-கடல்
ஆழ்ந்ததனை மலைப்ப துண்டோ…”
என வினவி,
“வெள்ளம் மடைதிறந்த வாறே-உங்கள்
வீரர் நிலத்தில் வைத்த மோகம்-அதற்
குள்ள மனவுறுதி யோடே-அச்சம்
ஓட்டிப் பணிபுரிந்து வாழ்வீர்”
(ப. 232)
என வாழும் வகையை விளக்குகிறார்.
தலைவர்களால் வளர்ந்த தேசியப் பற்று
புதுவைக்கு வந்த கோகலே, திலகர், சி.ஆர்.தாஸ், காந்தியடிகள் முதலான தேசியத் தலைவர்களைக் கண்டு மகிழ்ந்த பாரதிதாசன் பல ஆண்டுகள் பாரதியார், அரவிந்தர், வ.வே.சு. ஐயர் ஆகியோரிடம் நெருங்கிப் பழகியுள்ளார். அவர்களால் தன் உள்ளத்தில் தேசிய உணர்ச்சி எழுச்சி பெற்றதனை, “பள்ளி நேரம் போக ஓய்வு நேரங்களில் பாரதியாருடன் இருப்பேன். அரவிந்தர், வ.வே.சு. அய்யர், பாரதி ஆகியோர் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பர். அவர்கள் பேச்சில் அடிபடாத செய்தி எதுவுமில்லை. நான் அருகில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டு எவ்வளவோ தெரிந்து கொண்டேன். பாரதியார் எதைப் பேசினாலும் ஒரு கவிஞனுக்குரிய மிடுக்கோடு தான் பேசுவார். இப்புரட்சிக்காரரின் பேச்சைக் கேட்டு இளைஞனான என் உள்ளத்திலும் அப்போது தேசிய உணர்வும் புரட்சிக் கருத்துக்களும் வேர்விடத் தொடங்கின” என்று எடுத்துரைக்கின்றார்.
காந்தியடிகளைப் போற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார் பாரதிதாசன். 1923இல் ஏர்வாடா சிறையில் காந்தியடிகள் இருந்தபோது ‘மனிதரில் மிக்கோன் காந்தி மகாத்மா’, ‘தனக்கென அன்றிச் சகத்துக்கே வாழும் வீரன்’ என்றெல்லாம் போற்றிப் புகழந்து பாடல்கள் பாடியுள்ளார். உலகம் உய்வதற்காக இறைவன் அருளால் தோன்றியவர் காந்தியடிகள் என்றும் கூறியுள்ளார். இதனை,
“சிறிதுமேல் வலிது பாயும்
சின்னது வலிய தொன்றைப்
பிறிதொரு நாட்டைக் கூட்டிப்
பிடித்து நோக்கிடக் கிளம்பும்
குறுகிய செயலில் வையம்
குதித்தது கரைக்கு மீள
இறையவன் அருளின் காந்தி
எழுந்தது புவியில் நெஞ்சே”
(ப. 123)
என்று பாடிச் சிறப்பிக்கின்றார். இதேபோன்று இந்திய விடுதலையில் பங்கேற்ற இலாலாலசபதிராய், திலகர், பாபு அரவிந்தகோஷ் முதலானவர்களின் பங்கினை வெளிப்படுத்தும் விதத்திலும் பாடல்கள் பாடியுள்ளார்.
இவற்றோடு பாரதி புகழ்பாடும் கவிதைகள் பலவற்றைப் பாரதிதாசன் இயற்றி அளித்துள்ளார். இத்தகு சிறப்பினை, “இவ்வகையில் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோர் உட்பட எவரும் பாரதிதாசன் தொட்ட சிகரங்களைத் தொடவில்லை” என்கிறார் பெ.சு. மணி.
இந்திய விடுதலை இயக்கப் பாடல்கள்
“பாரதிதாசன் 1920ஆம் ஆண்டில் நடந்த சத்தியாகிரக இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அவற்றோடு விடுதலை இயக்கத்திற்குத் துணைபுரியும் நோக்கில் பாரதிதாசன் சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் படைப் பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு ஆகியவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் கதர் இராட்டினப் பாட்டே இன்று கிடைக்கின்றது. ஏனைய இருநூல்களும் கிடைக்கப் பெறவில்லை என்கிறார்” இரா. இளவரசு.
காந்தியடிகள் 1930ஆம் ஆண்டு ஆகஸ்டு 3ல் வாழ்நாள் முழுவதும் கதர் அணியப்போவதாக உறுதி எடுத்துக் கொள்கிறார். 1921இல் அயல்நாட்டுத் துணிகளை இறக்குமதி செய்யாதீர் என வணிகர்களுக்கும் அவற்றை அணியாதீர் என மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறார். பம்பாயிலும் பிற இடங்களிலும் அயலகத் துணி எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். இராட்டினத்தின் தேவையை வலியுறுத்துகிறார். பேராயக் கட்சியின் கொடியில் இராட்டினம் இடம்பெறுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் நூல் நூற்றால் ஓராண்டுக்குள் இந்தியா விடுதலை அடைந்துவிடும் எனக் குறிப்பிடுவதோடு ஒவ்வொரு நாளும் அரைமணி நேரம் நூற்கும் பழக்கத்தை மேற்கொள்கிறார் காந்தியடிகள். பின்னர் கதர் இயக்கம் மக்கள் இயக்கமாக மலர்கின்றது. கதரியக்கத்தோடு பாரதிதாசன் தன்னை இணைத்துக் கொள்கிறார். அதன் விளைவாக உருவானதே கதர் இராட்டினப் பாட்டு ஆகும். இதில் காந்தியடிகளும் கதரும், சுதந்திரதேவியும் கதரும், தேசத்தாரின் பிரதானவேலை, இராட்டினச் சிறப்பு, அன்னைக்கு ஆடை வளர்க என்னும் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
“அன்னியர் நூலைத் தொடோம் என்ற சேதி
அறைந்திட்டா புவி முற்றும்-எங்கள்
அறுபது கோடித் தடக்கைகள் ராட்டினம்
சுற்றும் சுற்றும் சுற்றும்…
விதி நமக்கு வாய்த்த துண்டோ
வேற்றுவர் கைபார்க்க-நாம்
வேற்றுவர் கைபார்க்க
விளையும் பஞ்சில் விரல்பொருந்த
விடுதலை நீர் காண்பீர்” (ப. 342)
என்பன இந்நூலின் பாடல்களாகும்.
ஆங்கில மோகம் அகற்றக் கோரல்
“தம்முடைய தாய் மொழியை விடச் சிறப்புடையதாக ஆங்கில மொழியைக் கருதி வந்திருக்கிறோம். இதன் பயனாய், கல்வி கற்று அரசியல் உணர்ச்சி படைத்த மக்களுக்கும் பாமர மக்களுக்குமிடையே பெருத்த பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கேட்டை அகற்றினாலொழிய பாமர மக்களின் உள்ளம் வளர வகையின்றிச் சிறைப்பட்டே இருக்க நேரும் என்பதை எளிதில் உணரலாம். சுயராஜ்ஜியத்தை நிர்மாணம் செய்வதில் பாமர மக்கள் எந்தப் பங்கும் கொள்ளமுடியாது” என்று மிகுமக்கள் நலனுக்கு எதிரான ஆங்கில மோகத்தைச் சாடினார் காந்தியடிகள். இதனை உணர்ந்தறிந்த பாவேந்தர் மக்களிடையே மிகுந்து வரும் ஆங்கில மோகத்தைக் கடிந்துரைக்கும் விதத்தில் பாரததேவி தனது மாணவர்களுக்குக் கூறுவது என்னும் தலைப்பில் பாடல்களைப் படைத்தார். அதில்,
“சாங்கால மட்டும்
சலித்துப் புடைத்தாலும்
ஆங்கிலத்தில் உம்நிலைமை
ஆய்வதுண்டோ மாணவரே?
அயலார் வெறும் பாஷை
ஆய்வதனால் உங்களின் சாண்
வயிறு நிறையுமென்ற
வார்த்தையில்தான் உண்மையுண்டோ?”
என்று ஆங்கிலக் கல்வியின் பயனின்மையைச் சுட்டிக்காட்டி,
“பாழக்கி வரும் கல்வியிலே
பாரதத்துக் காவதுண்டா?” (ப. 423)
என்று தெளிவுபடுத்துகின்றார். இதில், ஆங்கில மயக்கத்தை மனத்திலிருந்து மாய்த்துப் பாரதக் குலத்தை ஈடேற்றும் பார்வையினைப் பெற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தவும் செய்கின்றார்.
மதுவிலக்கில் பாரதிதாசன்
இந்திய விடுதலை இயக்கத்தின் பன்முகப்பட்ட பணிகளில் மதுவிலக்குக் கொள்கையும் ஒன்றாகும். 1920ல் ஒத்துழையாமை இயக்கத்தோடு மதுவிலக்கும் பணியினையும் மேற்கொள்ளுமாறு காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று, ஈ.வெ.ரா. பெரியார் தலைமையில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் நடைபெற்றது. கள்ளை அகற்றுதல் தேசக்கலை என்று கருதிப் பாரதிதாசன் மதுவிலக்குப் பணியிலும் தன்னை முற்றாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதனை வலியுறுத்தும் விதத்தில் மதியைக் கலக்குவது, நிதியனைத்தும் வீணாக்குவது, நிதம் நலிய வைப்பது என மதுவின் தீமைகளைச் சுட்டிக்காட்டி அதனை விலக்கச் சொல்லி மதுவிலக்குப் பாட்டு (1922) பாடியுள்ளார்.
“மதுவிலக்கு மதுவிலக்கு மனிதவாழ்வில் மேன்மைகொள்
முகிதலத்தில் உனதுநாட்டை வடுவகற்ற நோன்புகொள்
நிறைகுளத்தைப் பாசிமூடி நிலைகெடுக்கும் வாறுபோல
நின்மனத்தில் தெளியவிக்கும் நீசமதுவை நீக்குவாய்
திறனிழந்து செயலிழந்து தெருவிலெங்கும் சிறியனாய்த்
திரியவைக்கும் குடியை விட்டு தேசசேவை செய்குவாய்!” (ப. 299)
என்பது மதுவிலக்குக்கெதிரான பாவேந்தரின் பாடலாகும்.
பாரதிதாசன் கவிதைகள் முதற்தொகுதியில் முதற்பாடலாக உள்ள சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 1930ல் தனிநூலாக வெளிவந்துள்ளது. இப்பாடலில் அந்நாளையத் தமிழகத்தில் மூடப்பழக்கங்கள் எந்த அளவுக்கு அழுத்தமாகப் பதிந்திருந்தன என்பதனை இங்கிலாந்து நாட்டிலிருந்து ஆங்கிலேயன் ஒருவன் பேசுவதாகப் படைத்துக் காட்டுகின்றார்.
“ஓ! என் சகோதரரே ஒன்றுக்கும் அஞ்சாதீர்
நாவலந் தீவு நமைவிட்டுப் போகாது
வாழ்கின்றார் முப்பத்துமுக்கோடி மக்களென்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்
ஆகையால் எல்லோரும் அங்கே தனித்தனிதான்
ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே?
மூடப்பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே
ஓடச்செய்தால் நமையும் ஓடச்செய்வார் என்பேன்” (ப. 40)
இதன்மூலம் நம்மிடையே அழுத்தமாகப் பதிந்து கிடக்கின்ற மூடப்பழக்கங்கள் நமக்குள் வேற்றுமையினை விளைப்பதனையும் அவையே நமது விடுதலைக்கு முட்டுக்கட்டையிடுவதனையும் உணர்த்துகின்றார்.
சீனப்போர் எதிர்ப்பில் பாரதிதாசன்
சீனப்போர் நிகழ்ந்தபோது, இந்திய எல்லையில் சீனப்படைகளின் அட்டூழியத்தைக் கண்டு உள்ளம் நொந்ததோடு அவர்கள் மீதான தன் எதிர்ப்புணர்வினை ‘அழைப்பு’, ‘உலகின் அமைதியைக் கெடுக்காதே’, ‘ஏன் நாட்டில் கை வைத்தாய் சீனா?’, ‘சீனாக்காரன் தொலைந்தான்’, ‘சீனாவை எதிர்ப்பது தமிழர் கடன்’, ‘சூயென்லாய் சீனரின் நோய்’, ‘தேசத்தைக் காத்தல் செய்’, ‘முனையிலே முகந்து நில்’, ‘வருக போரே’ முதலான தலைப்புகளில் பாடல்களைப் படைத்து அதன் மூலம் சீனத்திற்கெதிரான தன் கருத்துக்களையும், இந்திய நாட்டின் சிறப்புக்களையும் எடுத்துரைத்துள்ளார்.
“வீரர் நாடு வீரம் மறந்ததேன்?
பாரதநாடு போரை மறந்ததேன்?
கோயிலைக் கட்டுவதொன்றையே செய்தோம்.
தாயினைக் காப்பதைச் சற்றும் மறந்தோம்
பக்தியை வளர்த்தோம்; பாரதம் காக்கும்
கத்தியை ஒடித்தோம்; என்ன கண்டோம்
நாம்அடைந்த இந்நன்றிலா நிலையில்
சீனன் எதிர்த்ததில் சிறிதும் வியப்பேது” (ப. 246)
என்று தன் குரலினைப் பதிவு செய்துள்ளார்.
முடிவுரை
இந்திய விடுதலை இயக்கத்தில் செயலாற்றிய தலைவர்களின் போக்கினைக் கண்டு சாடவும் செய்துள்ளார் பாவேந்தர். தான் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவன் அல்லன் என்று அவர் தம்முடைய இறுதிக்காலத்தில் தெரிவித்திருக்கிறார். எனினும் அவர் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார் என்பதனையே அவரது பாடல்கள் மூலம் அறியமுடிகின்றது.
தன்னை ஓர் இந்தியன் என்று கருதிச் செயலாற்றிய பாரதிதாசன், காங்கிரசுக் கட்சியில் இணைந்து பாரதநாட்டைப் பலவாறு போற்றி, விடுதலையின் மேன்மையினை வெளிப்படுத்தி, தெய்வங்களிடம் விடுதலைக்குக் குரல் கொடுத்து, தலைவர்களின் தொண்டைப் புகழ்ந்து, விடுதலை மறவர்களைப் பாராட்டி, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு, கதரியக்கம், மதுவிலக்கு ஆகியனவற்றைச் சிறப்பித்துப்பாடி, பண்பாடு, ஒற்றுமைச் சீர்குலைவுகளைக் கண்டு, தாயின் மணிக்கொடியை வணங்கி, தன்மான இயக்கம் சார்ந்த நிலையிலும் நாட்டு விடுதலையில் நாட்டம் குறையாமல் காந்தியடிகளின் திட்டங்கள் பலவற்றைப் புகழந்துபாடி, காந்தியடிகளின் சிறப்புக்களை எடுத்துரைத்துப் பலவகையாலும் இந்திய விடுதலைக்குத் துணைநின்றுள்ளார் என்பது இக்கட்டுரையின்வழி தெளிவாகின்றது.
கருவிநூல்
1. பாரதிதாசன் கவிதைகள் (முழுமையும்), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1990.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.