இலங்கையின் மட்டக்களப்புத் தேசமும் கலிங்கத் தொடர்புகளும்
கவிக்கோ வெல்லவூர்க் கோபால்
இலங்கை
கலிங்கம்
பண்டைய கலிங்கம் பரந்த ஒரு திராவிட பூமியாக விரிவுபட்டிருந்தது. மட்டக்களப்பு பூர்வீக வரலாற்றில் சிங்கர், வங்கர், கலிங்கர் எனக் குறிப்பிடப்படுவோரும் கலிங்கத்திலிருந்தே ஈழம் வந்தவர்களாகின்றனர். இன்றைய ஒரிசாவில் (கலிங்கத்தின் ஒருபகுதி) ஆதிவாசிகளின் பட்டியலில் குறிப்பிடப்படுகின்ற பதிநான்கு இனக் குழுக்கள் பேசுகின்ற மொழி தமிழ் மொழியின் வேர்களைக் கொண்டிருக்கின்றதென்பது மொழியியல் வல்லுனர்களும் சமூகவியல் ஆய்வாளர்களும் ஒப்புக் கொள்ளப்பட்டவையாகும். தொல்காப்பியர் குறிப்பிடும் பன்னிரெண்டு தமிழ்வழங்கு நாடுகளில் ஒன்றாகவும் திராவிடரின் தாயகமாகவும் மிளிர்ந்த கலிங்கம் தக்கணத்தின் கிழக்குக் கரையில் கோதாவிரிக்கும் மகேந்திர மலைத் தொடருக்கும் இடைப்பட்டதென சில ஆய்வாளர்கள் குறிப்பிடினும் உண்மையில் கி.மு. 10ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 1ஆம் நூற்றாண்டு வரை குறிப்பிடப்படும் வடகலிங்கம் ஒரிசாவின் வடமேல் பகுதியுடன் வங்கத்தின் கொல்கொத்தா (கல்கத்தா) வரை பரவியும் தென்கலிங்கம் ஒரிசாவின் தென்கிழக்குப் பகுதிகளுடன் ஆந்திராவின் வடகிழக்கு வரை நீண்டிருந்ததாகவும் தெளிவுபடுத்தப்படுகின்றது. இதுவே மேற்குக் கலிங்கம் எனவும், கிழக்குக் கலிங்கம் எனவும் அழைக்கப்பட்டதெனப் புவனேஸ்வர் வரலாற்று ஆவணக் காப்பகத்தில் (Ancient Historical Records of Kalinga) பத்திரப்படுத்தப்பட்டுள்ள தகவல்களால் கண்டறிய முடியும்.

சிங்கபுரம் என்பது வடகலிங்கத்தின் பெருநகராகவும், பாடலி தென்கலிங்கத்தின் பொன்கொழிக்கும் எழில் நகராகவும் சிறந்து விளங்கியதென்பதைப் பல வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் பயணக் குறிப்புக்களில் வெளிப்படுத்தியுள்ளனர். கி.மு. 4ம் நூற்றாண்டில் பாடலிபுரத்திலிருந்து ஆட்சி செய்த திராவிட மன்னர்கள், நீண்ட மரபுவழிச் சிறப்பு மிக்கவர்களாக விளங்கினர் என்பதோடு தொல்லாய்வுக்குரியதான தமிழ் பிராமி எழுத்து முறை ஆதாரங்கள், தமிழ் மொழிப் பாரம்பரியம், வரலாற்றிடைப்பட்ட காலத்து (Proto Historic Period) நீண்ட வரலாற்று மரபுகள் போன்றவை பற்றியும் மெகஸ்தனிஸ் தனது குறிப்புகளில் சான்றளிக்கின்றார். கி.பி 1ம் நூற்றாண்டில் கலிங்கம் வந்த பிளிமியும் தாலமியும் பாடலி பற்றிக் குறிப்பிடும்போது, அன்று அது பெரும் தலைநகராக விளங்கியதால் (பெருந்தலை - Pertalai) என்றே அதனைக் குறிப்பிட்டுள்ளனர். மேல்நாட்டவர் பலரும் பாடலியை, Pertalai என்றே எழுதியுள்ளனர். கலிங்க வரலாற்றுக் குறிப்புகளின்படி பண்டைய கலிங்கமானது, வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து கோதாவரி வரையிலும், கிழக்கு மேற்காக வங்காள விரிகுடாவிலிருந்து அமர்கந்தாக் மலைத்தொடர்வரையிலும் பரந்திருந்ததெனவும் மிக வளம் பொருந்தியதான இந்நாடு தென்கிழக்காசியாவிலேயே மிகப் பலம் பொருந்திய கடற்படையைக் கொண்ட பேரரசாக விளங்கியதெனவும், கலிங்கத்தின் கப்பல்கள், இலங்கை, இந்தியா, சீனா, வியட்னாம், பர்மா, யாவா, சுமத்திரா, போர்ணியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பாலித் தீவுகள் என வாணிபத்தில் ஈடுபட்டிருந்தததுடன் கலிங்க மக்கள் இலங்கை, பர்மா, மலேசியா (கடாரம்) மற்றும் இந்தோனேசியத் தீவுகளிலும் குடியேறி ஆதிக்கம் மிக்கவர்களாக வாழ்ந்தனர் எனவும் அறியமுடிகின்றது.
மட்டக்களப்புத் தேசத்தில் கலிங்கக் குடியேற்றங்கள்
கிடைக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் சுமார் 2200 ஆண்டு கால (கி.மு 3ம் நூற்றண்டு முதல்) மட்டக்களப்புத் தேசத்தின் வரலாற்றினைப் பார்க்கின்ற போது, இங்கு குடியேறிய மக்கள், காலத்திற்கு காலம் பண்டைய கலிங்கமான ஒரிசா, வங்கத்தின் தென்கிழக்கு, ஆந்திராவின் கிழக்குப்பகுதி மற்றும் பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு, தொண்டை நாடு ஆகிய பண்டையத் தமிழ் நாட்டிலிருந்து கடற்பயணம், இடப்பெயர்வு, குடியேற்றம், போர் நடவடிக்கைகள், ஆட்சி அதிகாரம் ஆகிய காரணங்களால் வந்துற்ற திராவிடப் பழங்குடிகளே என்பது புலனாகின்றது. இவர்கள், இங்கு ஏற்கனவே மட்டக்களப்பில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளுடன் இணைப்புற்றுப் புதிய சமூகக் கட்டமைப்புக்கு வித்திட்டனர். ஈழத்தின் இதர பகுதிகளில் ஏற்பட்டக் குடியேற்றங்களும், பெரும்பாலும் இத்தன்மையதே. எனினும், ஈழத்தின் மேற்குக் கரைப்பிரதேசங்களான சிலாபம், புத்தளம் பகுதிகளில் சேரநாட்டின் கரையோர மக்கள் பெருமளவில் குடியேறியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எவ்வாறாயினும் கலிங்கமே மட்டக்களப்புக் குடியேற்றத்தின் முக்கியத்தளம் எனக் குறிப்பிடலாம். அதனோடு தொடர்புடையதாகவே இதரத் தென்னிந்தியக் குடியேற்றங்கள் அமைகின்றன.

கலிங்கரின் கடல்வழிப் பயணம்
கி.மு. 500 வாக்கில் யாழ்ப்பாணத்தில் உசுமன் தலைமையில் வாழ்ந்த மீன் பிடிச் சமூகம் ஒன்று பாண்டுவசுவால் வெளியேற்றப்பட்டு, பாணகையில் வந்து குடியேறியதாக யாழ்ப்பாண வரலாற்றுக் குறிப்புக்களால் அறியப்பட்டாலும், மட்டக்களப்பில் இது குறித்த தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை. எனினும், இம்மீன்பிடிச் சமூகமானது கலிங்கத்தின் குக வம்சத்தினரின் வரவுக்கு முற்பட்டு வாழ்ந்த திமிலர் சமூகத்தை அடையாளப்படுத்துவதாக அமையலாம். கி.மு.3ம் நூற்றாண்டில் மட்டக்களப்பில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கலிங்க குக மரபுக் குடியேற்றம் பற்றிய தகவல்களே இங்கு கிடைக்கின்றன. மட்டக்களப்பு பூர்வ வரலாறு இதனை கலிங்கனான இரஞ்சலன் வந்த காலத்தோடு இணைத்து கி.மு.234 என குறிப்பிடுகின்றது. திரு.ஞா. சிவசண்முகம் எழுதிய மட்டக்களப்பு குகன் குல முக்குகர் வரலாறும் மரபுகளும் என்ற நூலில் திருக்கோயில் பகுதியில் பெறப்பட்ட கல்வெட்டுப் பாடல் ஒன்றினைச் சான்றுபடுத்தி, இதனை கி.மு 261 எனக் கூறுவார். அக்கரைப்பற்று வரலாற்றினை எழுதிய ஏ.ஆர்.எம். சலீம் அவர்கள் தனக்குக் கிடைத்த பல்வேறு சான்றுகளை ஆதாரப்படுத்தி கி.மு.301 எனக் குறிப்பிடுவார். ஈழத்தின் தொன்மை மிக்கத் திருக்கோவில் ஆலயச் சாசனங்களையும் அதனோடு தொடர்புபட்டதான ஓலைச்சுவடித் தகவல்களையும் சான்றாகப் பெறும் இவர், முதன் முதலில் இம்மக்கள் கருங்கொடித்தீவு (அக்கரைப்பற்று) பகுதியில் குடியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் கிடைக்கும் கலிங்க அரசர் கார்வேலரின் (கி.மு.165) அதி கும்பாக் கல்வெட்டுத் தகவல்களின் படி தக்கணப்பிரதேசத்தில் திரவிட சங்கார்த்தம் தோன்றி 113 வருடங்கள் ஆகிவிட்டன எனக் குறிப்பிடப்படுகின்றது. இதில் தாம்பிரபண்ணையும் (ஈழம்) உள்ளடங்கும். இதன்படி பார்த்தால் இக்காலம் கி.மு 278 ஐ குறிப்பதாக உள்ளது. தாம்பிரபண்ணை என்பது இலங்கையை குறிப்பதாகும். அசோகனின் பாறைக்கல்வெட்டும், இலங்கையை தாம்பிரபண்ணை என்றேக் குறிப்பிடுகின்றது. இத்தகவல்களை ஒட்டுமொத்தமாக பார்க்குமிடத்து, பொதுவாக கலிங்கக் குடியேற்றத்தின் தொடக்கத்தினை கி.மு. 3ம் நூற்றாண்டாகக் கொள்வதே பொருத்தமானதாக அமையும்.
அடுத்து நிகழ்ந்த முக்கிய கலிங்கக் குடியேற்றமாகக் கொள்ளப்படுவது மண்முனைக் குடியேற்றமாகும். இக்காலத்தைப் பெரும்பாலும், கி.பி 4ம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கொள்ளப் போதிய சான்றுகள் உள்ளன. மண்முனைச் சிற்றரசு உருவாக்கப்பட்டு, கலிங்க நாட்டிலிருந்து வந்த இளவரசி உலகநாச்சிக்கு அவ் அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டது. இக்காலத்தே முதலில் குகக் குடும்பம் நூற்றாறும், இன்னும் சில சமூகப்பிரிவினரும் அழைத்து வரப்பட்டமை தெரிகின்றது. அவளது ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும், இதே போன்ற ஒரு குடியேற்றம் இடம்பெற்றமைக்கான தகவல்கள் கிடைக்கின்றன.
மண்முனைக் குடியேற்றத்தில் கோவில் குளமும் அதனைத் தொடர்ந்து தாழங்குடா, ஆரையம்பதி மற்றும் புதுக்குடியிருப்பும் முக்கியத் தளங்களாக அறியப்படுகின்றன. மட்டக்களப்புப் பிரதேசத்தில் பரந்துள்ள சிறைக்குடிகள் எனக் கொள்ளப்பட்ட சில சமூகங்கள் மண்முனைக் குடியேற்றத்தின்போது தாழங்குடாவைத் தொடக்க வதிவிடமாக்கியமையும் தெரிகின்றது. உலகநாச்சியால் எடுத்துவரப்பட்ட காசிலிங்கம் கோவில் குளத்தில் அமைக்கப்பட்ட ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டதாகவும், இளவரசியின் அரண்மனை தாழங்குடாவில் அமைக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத கள ஆய்வுத் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. அங்குள்ள மாளிகையடித் தெரு இதற்குச் சான்றாகச் சொல்லப்படுகின்றது. அத்தோடு இன்று இப்பிரதேசத்தே வாழுகின்ற தொழிற் பிரிவுச் சமூகத்தினர் வரலாற்று ரீதியாகத் தங்களை வெளிப்படுத்தும் போது தாழங்குடாவை மையப்படுத்தியேத் தங்களை அடையாளப்படுத்துகின்றனர் என்பது மிக முக்கியப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.
இக்காலகட்டத்தே கலிங்கத்தின் வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள முற்படுவது நன்மை பயப்பதாகும். காரவேலரின் சந்ததி ஆட்சி முடிவுற்ற பின்னர் கி.பி 2ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் கலிங்கத்தில் வேற்றார் படையெடுப்புக்களும், ஆட்சிப் பறிப்புகளும் அடிக்கடி இடம்பெறலாயின. களப்பார், பல்லவர் போன்றவர்கள் ஆதிக்க நிலைக்குள் வந்ததோடு தமிழகம்வரை பரந்து நின்றனர். இக்காலத்தே சிற்றரசுகளில் நிலைகொண்டிருந்த கங்கர்கள் வேகமாகத் தலையெடுக்கலாயினர். கங்கர்கள் என்போர் கங்கைவெளியைச் சார்ந்த திராவிட இனத்தவராகக் கொள்ளப்படுபவர்கள். இராமாயணக்கதையில் இடம்பெறும் குகனும் இதே இனத்தைச் சார்ந்தவனாக அடையாளப்படுத்தப்படுகின்றான். கங்கைக் கரைப்பிரதேசத்தில் வங்கம் சார்ந்திருந்த பிரிவினர் வங்கர் எனப் பின்னர் அழைக்கப்பட்டாலும், கங்கரும், வங்கரும் ஒரே திராவிட சமூகப்பிரிவினர் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலகநாச்சியின் காலம் பற்றியும், அவள் தந்தையான குகசேனனது ஆட்சிக்காலம் தொடர்பாகவும் பார்க்கின்ற போது, குகசேனன் கலிங்கத்தின் ஒரு சிற்றரசனாகவும் கங்கர் சமூகத்தை சேர்ந்தவனாகவும் கொள்ளவே அதிக வாய்ப்புத் தென்படுகின்றது. உலகநாச்சியும் அவளால் அழைத்து வரப்பட்டவர்களும் கலிங்க நாட்டினராக இருப்பினும், மட்டக்களப்பின் கலிங்கக் குடியிலிருந்து இவர்கள் உலகநாச்சி குடியெனப் பிரிவுற இது ஒரு காரணமாக அமையலாம்.
கலிங்க அரசர்கள்
ஈழத்தினதும், குறிப்பாக மட்டக்களப்பினதும் வரலாறானது பெரும்பாலும் கலிங்கத்தையேப் பின்னிக் கிடப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே இவ்வரலாற்றுக் காலத் தேடலை கலிங்கத்தில் தொடங்குவதே மிகப் பொருத்தமானதாக அமையும். கலிங்கத்தில் அசோகரின் பாறைக் கல்வெட்டு, புவனேஸ்வரத்திலுள்ள காரவேலரின் அதிகும்பா பாறைக் கல்வெட்டு மற்றும் சம்பைக் கல்வெட்டு போன்ற கிறிஸ்துவுக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் தாம்பிரபண்ணே (தாமிரபண்ணை) நாடான ஈழத்தையும் தொட்டு நிற்கின்றன. இவை கலிங்கத்தின் அப்போதைய ஆட்சி நிலையினையும் சமூகங்களின் சிறப்பியல்புகளையும் குறிப்பிடுகின்றன. மாமூலனார், மோசிகீரனார் போன்ற சங்ககாலத்துப் புலவர்கள், அப்போதிருந்த கலிங்க மன்னர்களைத் தங்கள் பாடல்களில் பெருமைப்படுத்தியிருப்பதுவும், தமிழ்நாட்டு மன்னர்களும், கலிங்க மன்னர்களும் நெருக்கமுறக் கலந்திருந்தமையைப் பண்டைய கலிங்க - தமிழக வரலாற்று ஆவணங்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஒரிசாத் தலைநகர் புவனேஸ்வரின் ஆவணக் காப்பகத்தில் பெறப்படுகின்ற பல தகவல்களால் யாவா, சுமத்ரா, ஈழம் போன்ற நாடுகளில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கலிங்கரின் ஆதிக்கத் தன்மை அறியப்படுகின்றது.

புவனேஸ்வரிலுள்ள காரவேலரின் அதிகும்பா கல்வெட்டு (கி.மு 2ஆம் நூற்றாண்டு)
கௌதம புத்தரின் ஆன்மீகப் புரட்சி கி.மு. 5ம் நூற்றாண்டினை மையப்படுத்தியதாக அமைந்தது. கி.மு 4ம் நூற்றாண்டில் தன நந்தரின் கலிங்கப் பேரரசு தக்காணத்தின் ஆட்சித் தளத்தே முதன்மை நிலைக்கு அடி வைத்தது. தலைநகரான பாடலி அப்போது புகழ்பெற்ற வாணிப நகராக தலையெடுத்திருந்தது. தொடாந்து வந்த காலத்தே தனநந்தர்களும், சேரர்களும் கொண்டிருந்த வலுவான உறவு முறைகளை அங்கு தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. அதேபோல கலிங்கரான காரவேலரின் ஆட்சிக்குறிப்புகள் கலிங்கத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றன. மட்டக்களப்பிலும் கலிங்கத் தமிழகத் தொடர்புகள் வலுப்பெற இவையும் ஒரு காரணம் என்றே கொள்ளவேண்டும்.

மட்டக்களப்புத் தேசத்தில் சேரநாட்டின் கூத்திகன் - சேனன் ஆட்சி முடிவுற்ற பின்னர் கி.மு. 77 வரை மட்டக்களப்பு அனுராதபுர அரசின் ஒரு சிற்றரசாக நிருவகிக்கப்படுகின்றது. இதன்பின் அனுராதபுரம் நாகமன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர மட்டக்களப்பும் அவர்களின் கீழ் செல்கின்றது. மகாகுல நாகன், சோர நாகன் என்போர் ஆட்சியிலிருக்கின்றனர். இது குறித்து பூர்வீக வரலாறும் விளக்குகின்றது. விண்டு அணையை (விந்தனை) இருக்கையாக்கி, மட்டக்களப்பு அரசினை இயக்கர், நாகர் பொறுப்பேற்றதாகவும், கலிங்கரால் முன்னெடுக்கப்பட்ட சிவ வழிபாட்டினை ஒதுக்கி விட்டுத் தங்களது சிறுதெய்வ வழிபாட்டினையே இவர்கள் முன்னெடுத்தாகவும், முப்பது ஆண்டுகள் நீடித்த இவர்களது ஆட்சிபற்றி கலிங்க மன்னர் மதிவாகுகுணனுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன்பின் கலிங்கர் படையெடுப்பால் நாகராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், மட்டக்களப்பில் கலிங்கர் மீண்டும் ஆதிக்கம் பெற்றதாகவும், மட்டக்களப்பு வரலாறு குறிப்பிடுவதோடு, ஆட்சிக்காலத்தை கி.மு. 82 எனவும் அது குறிப்பிடும். இலங்கை வரலாற்றாய்வாளர்களின் கணிப்பின்படி அனுராதபுர ஆட்சி மாற்றம் கி.மு.51ல் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுவதால் இக்காலக் கணிப்பு பெரும்பாலும் நெருங்கி வருவது தெரிகிறது.
இக்காலத்தே ஈழம் நோக்கிய கலிங்கப்படையெடுப்பு ஒன்றினை அவதானிக்க முடிகின்றது. இரஞ்சலன் என்பவனே இதற்குப் பொறுப்பேற்று வந்தவனாக பூர்வீக வரலாறு விபரிப்பதோடு, கலிங்கத்தில் அப்போது மதிவாகுகுணனின் ஆட்சி இருந்ததாக அது கோடிடுகின்றது. கலிங்கத்தைப் பொறுத்தவரையில், கலிங்கரான தனதந்தர்களுடைய ஆட்சி கி.மு. 318 ல் சந்திரகுப்த மோரியரால் பறிக்கப்பட்ட பின்னர் 150 ஆண்டுகளுக்கு மேலாக கலிங்கம் பல உள்நாட்டுக் குழப்பங்களுக்கு ஈடுகொடுத்தமை தெரிகின்றது. அதன்பின், கி.மு 160 தொடக்கம் கலிங்கரான காரவேலரும், அவருடைய வாரிசுகளும் கி.பி 1ம் நூற்றாண்டு வரை பேரரசாகவும் சிற்றரரசுகளாகவும் நீடிக்கின்றனர். இதனால் மட்டக்களப்பு வரலாறு குறிப்பிடும் மதிவாகுகுணன் ஒரு கலிங்கனாக இருக்கவே வாய்ப்பாகின்றது. மேலும், மட்டக்களப்பின் விந்தனையில் இடம்பெற்ற போரில் இரு பக்கமும் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதன் பின் நாகர், கலிங்கருக்கு உதவியதாகவும், தொடர்ந்து இயக்கருடைய ஆட்சிகள் பறிக்கப்பட்டு அவர்கள் விந்தனை, மையங்கணை, லக்கலை, கதிர்காமம் போன்ற இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டதாகவும் தெரிகின்றது.
இதன் பின் கலிங்க குமாரன் புவனேகபாகு, தனது மனைவியும் திருச்சோழனின் (திருமாச்சோழன்) புதல்வியுமாகிய தம்பதி நல்லாளுடன் மட்டக்களப்பிற்கு யாத்திரை வந்ததாகக் கூறப்படுகின்றது. கலிங்கத்தில் காரவேலரின் ஆட்சிக்கு முன்னர் ஆட்சியாளர்களாக இருந்த மோரியர்கள், கலிங்கத்திலிருந்து தமிழ்நாட்டுக்குள் நுழைய முற்பட்டபோது, சோழர்கள் அவர்களை விரட்டி அடித்தனர். கி.பி 1ம் நூற்றாண்டில் திருமாமளவன் 2ம் கரிகால் சோழன் பரந்த ஆட்சியாளனாக தமிழகத்தில் விளங்கியவனாகின்றான். கலிங்கர்களுடன் நெருக்கமான நட்புக் கொண்டவனாக தக்காணப் பிரதேசம் எங்கும் திராவிட சங்கார்த்தம் நிலை நிறுத்தப்பட இவன் பெரும் பங்காற்றியவன். இவனைத் திருமாச்சோழன் எனவும் வரலாற்றில் கூறப்படுகின்றது.
“கரிபரி காலாட் பொருதளற் சென்னி
விரி தரு கருவூர்த் திருமாச் சோழ…”
என வரும் கருவூர்ச் சிறப்புப் பாடலடிகள் திருமாமளவனை திருமாச் சோழன் என்றே குறிப்பிடுகின்றன. இவன்புகழ் ஈழம் வரை பரவியிருந்தது. ஈழம் புகுந்து அனுராதபுர ஆட்சியை வெற்றிகொண்ட இவன் சோழப்படைகளால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஈழத்துப் போர் வீரர்களையும் இன்னும் பலரையும் சிறைப்பிடித்து தமிழகம் கொண்டுவந்து காவேரிக்குக் கல்லணை கட்டியதோடு அவர்களை வைத்து களனி திருத்தி பாசனம் செய்து வளம் பெருக்கியவனாகப் புகழப்படுகின்றான்.
நமக்குக் கிடைக்கின்ற மட்டக்களப்பின் தகவல்களும், காலமும் தமிழக - கலிங்க வரலாற்றுக் குறிப்புகளுடன், குறிப்பாக கலிங்கமும் சோழமும் கொண்டிருந்த நெருக்கத்தின்பால் பெருமளவு இணைந்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மட்டக்களப்பு பூர்வீக வரலாறு குறிப்பிடும் திருச் சோழனே கருவூர் வரலாற்றில் சொல்லப்படுகின்ற திருமாச்சோழனாகக் கொள்ளப் போதிய காரணம் தென்படுவதாக அமைகின்றது. திருமாச் சோழனே திருமாமளவனென்றும் 2ம் கரிகால் சோழன் என்றும் குறிப்பிடப்படுபவனாகின்றான்.
கலிங்க இளவரசி உலகநாச்சி வரவு
மட்டக்களப்பின் ஆட்சியாளன் குணசிங்கனின் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பில் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக கலிங்க இளவரசி உலகநாச்சியின் வரவைக் குறிப்பிடலாம். இவள் கலிங்க அரசன் குகசேனனின் புதல்வி எனத் தகவல்கள் கூறும். இவள் தனது தம்பி இளவரசன் உலகநாதனுடன் அனுராதபுரத்தை வந்தடைந்ததாகவும் அங்கு ஆட்சியிலிருந்த கீர்த்திசிறி மேகவண்ணனிடம் (கி.பி 296 -324) தான் கொண்டுவந்த புத்தரின் தசனத்தைக் கையளித்த பின்னர் மட்டக்களப்புக்கு வந்ததாகவும், மட்டக்களப்பு சரித்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன. இவள் கலிங்கத்திலிருந்து வந்த நோக்கம் சரியாகத் தெளிவாக்கப்படவில்லை. இவள் புத்தரின் தசனத்துடன் சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இக்காலமானது கலிங்கத்திலும், தமிழகத்திலும் பௌத்தம் வளர்ச்சி கண்டதோடு இலங்கையிலும் மிக வேகமாக பரவத் தொடங்கிய காலம். இது போன்ற வரலாறு சிங்கள மக்களிடையேயும் பேசப்படுகின்றது. கீர்த்தி சிறி மேகவர்ணனின் ஆட்சிக் காலத்தே (கி.பி 296 - 324) கலிங்க நாட்டிலிருந்து இளவரசி ஹேமமாலாவும், இளவரசன் தந்தாவும் புத்தரின் தசனத்தைக் கொண்டு வந்து மேகவர்ணனிடம் கையளித்ததாக அதில் சொல்லப்படுகின்றது. இதில் புத்தரின் தசனத்தை அனுராதபுர அரசிடம் கையளிப்பதைக் காரணப்படுத்தி குக வம்சத்தவரின் ஆட்சிப் பிரதேசமான மட்டக்களப்பில் சிவ வழிபாடு மேலோங்கப்படுவதன் அவசியம் உணரப்பட்டதா?என்பது மேலும் தெளிவாக்கப் படவேண்டியதாகிறது.

மேகவர்ணனிடம் தசனத்தை கையளித்த உலகநாச்சியின் விருப்பின் பேரில் அவளுக்கான வாழிடம் ஒன்றினைக் கோரி மட்டக்களப்பு அரசன் குணசிங்கனிடம் மேக வண்ணன் அவளை அனுப்புகின்றான். குணசிங்கனின் ஆட்சி இருக்கை அப்போது தென்கிழக்கிலங்கையின் பாணமையில் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. அவள் ஒரு கலிங்க இளவரசி என்பதனால், அவள் விருப்பத்தின் பேரில் தனியான சிற்றரசு ஒன்றினை மண்முனை என்ற பெயரில் உருவாக்கி, குணசிங்கன் கையளித்தான் எனப் பூர்வீக வரலாறு மேலும் தகவல்படுத்துகின்றது.
இன்றைய கோவில்குளம் பகுதியில் உலகநாச்சியின் இருக்கை அமைந்ததோடு அங்கு ஒரு சிவாலயமும், அவளால் உருவாக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் அதில் வைத்துப் பூசிக்கப்பட்டது. அவளது மாளிகை இன்றுள்ள தாழங்குடா கிறஸ்தவத் தேவாலயத்திற்கு பின்புறம் அமைந்திருந்தாகவும் கூறப்படுகின்றது. அவ்விடம் இன்றும் மாளிகையடித்தெரு என அழைக்கப்படுவதை இதற்குச் சான்றாக கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து, கலிங்கத்திலிருந்து அவளால் அழைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குகக்குடிகளும், சிறைக்குடிகளும், புதுக்குடியிருப்பு உட்பட வாவியின் இரு பக்கமும் இரு வேறு தடவைகளில் குடியேற்றப்பட்டதையும் முனைக்காட்டுப்பகுதி உருவாக்கப்பட்டபோது, காடுகளை அழிக்கையில் பண்டைய வேடர்களின் வழிபாட்டினைத் தொடர்ந்து, கொக்கட்டிமர அடியில் மறைந்து போன சிவலிங்கம் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு தான்தோன்றீச்சரம் அவளால் அமைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இக்காலம் குறித்துக் கலிங்க நாட்டில் நமது பார்வையைச் செலுத்துவது மிகுந்த பயனுள்ளதாக அமையும். மகதநாட்டு பேரரசின் மோரியரான சந்திரகுப்தரும் மகன் பிந்துசாரனும் மேற்கொண்ட அகன்ற போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிந்துசாரனின் மகன் அசோகன் அரச கட்டில் ஏறியதும், தக்காணப் பிரதேசத்தில் பரந்த பேரரசு ஒன்றினை நிலை நிறுத்தும் செயலில் ஈடுபட்டான். கலிங்கத்தின் மீது மேற்கொண்ட போர் மிகக் கொடூரமாய் அமைந்ததோடு, பல நாட்கள் இது நீடித்தது. ஆயிரக்கணக்கில் வீரர்கள் மடிந்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் விதவைகளாயினர். அசோகன் இதில் தன் முதல் புதல்வனையும் இழந்தான். இந்நிகழ்வின் தொடர் பாதிப்பே அசோகனைச் சாந்தி வழிக்கு இட்டுச் செல்கின்றது. கலிங்கம் பௌத்தத்தில் சங்கமித்தது. கலிங்கத் தொடர்பு கொண்ட ஈழத்திற்கும், ஆந்திரா மற்றும் தமிழகத்திற்கும் பௌத்தம் அமைதி வழியில் உள்நுழைந்தது. பின்னர் கலிங்கரான காரவேலரின் எழுச்சி மோரியரிடமிருந்து கலிங்கத்தை மீட்டெடுத்தது. காரவேலரின் வாரிசு ஆட்சியின் பின்னர், சாதவாகனர்களின் ஆட்சி கி.பி 2ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நீடித்தது. அதன் பின் களப்பாளர்களும் கங்கர்களும் தலையெடுக்கலாயினர். கலிங்கத்தில் தங்களது ஆட்சியை கங்கர்கள் சிற்றரசு நிலைகளில் மேலும் வலுப்படுத்தலாயினர்.
கங்கர்கள் கங்கைப் பிரதேசத்தே வாழ்ந்த திராவிடப் பழங்குடியினர் என்பது தெளிவுபடுத்தப்பட்டதாகும். இதன் அடிப்படையில் கங்கைக்கரைத் தலைவனான குகனோடும் சம்பந்தப்படுத்துவர். கங்கர்களது சோழருடனான உறவே சோழகங்கர்கள் உருவாகக் காரணமாயிற்று என்பர். உலகநாச்சியின் தந்தையாகச் சொல்லப்படும் குகசேனனுடைய ஆட்சிக்காலம், கலிங்கத்தே கங்கர்களது ஆட்சிக்காலமாகும். குகன் என்ற முற்பெயரும் இவனுக்கு அமைந்திருப்பது கவனத்தை ஈர்ப்பதாகும். உலகநாச்சி கலிங்கநாட்டுப் பெண்ணாக இருப்பினும், இவளைக் கங்கர் வமிசத்தினுள் வைத்து பார்க்கப் போதிய ஆதாரம் தென்படுகின்றது.
கலிங்க மாகோன் காலம்
கி.பி 1215 ல் மாகோன் இலங்கையின் பெரும்பகுதியைக் கைப்பற்றி தோப்பாவையில் (பொலநறுவை) தனது ஆட்சியை நிறுவினான். இவனது ஈழப்படையெடுப்பு தொடர்பாக மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஆவணங்கள் கூறும் கருத்துக்களையே வரலாற்று ஆசிரியர்களும் பெரும்பாலும்முன் வைக்கின்றனர். இலங்கையில் கலிங்கர்களின் மேலாண்மையை நிலை நிறுத்துவதோடு, பிற்பட்ட சோழராட்சிக் காலத்திலும் அதைத் தொடர்ந்து பொலநறுவை ஆட்சியிலும் சிவ மதத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களைக் களைவதுமே அவனது படையெடுப்புக்கு காரணமாய் அமைந்தது என்பதே பொதுவான கருத்தாகும். மாகோன் பெரும்படையுடன் வந்து இலங்கையின் இராசரட்டை மற்றும் உறுகுணையின் பெரும்பகுதியைக் கைப்பற்றினான். இவனிடம் இருபத்தினாலாயிரம் படைவீரர்கள் இருந்ததாக சூளவம்சம் குறிப்பிடும். இவனது பாரிய படையணியில் கலிங்கருடன் தமிழக வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண வரலாற்று ஆவணங்கள் இவனது ஆட்சியை (கி.பி. 1215 - 1255) பெருமைப்படுத்திப் பேசும் நிலையில், சிங்கள பௌத்த வரலாற்று நூல்கள் இவனை ஒரு கொடுங்கோலனாகச் சித்தரிக்கின்றன. வீரசைவனான மாகோன் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கும், பௌத்த மேலாதிக்கத்திற்கும் எதிராகச் செயல்பட்டமையே இதற்குக் காரணமாகும். எனினும் பிற்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் பலர் அவனது ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட நீதியான அரசியலமைப்பையும் கட்டுக்கோப்பு மிக்க நிருவாகத் திறனையும் வியந்து நோக்கவே செய்கின்றன.

யாழ்ப்பாண வரலாறுகள் கலிங்க மாகோன் மற்றும் ஜெயபாகு (இவனே குளக்கோட்டன் ஆவான் ) என்னும் இரு அரசர்கள் கலிங்க தேசத்திலிருந்து பெரும்படையுடன் வந்து இலங்கையை ஆண்டனர் எனவும், ஜயபாகு யாழ்ப்பாண நாட்டை அரசாள மாகோன் புலத்தி நகரில் (பொலநறுவை) வீற்றிருந்து, தென்னிலங்கை முழுவதையும் தனிக்குடையின் கீழ் அடக்கி செங்கோலோச்சினான் எனவும் குறிப்பிடுகின்றன. சிங்கள நூலான நிக்காய சங்கிரகாயவும், யாழ்ப்பாண வைபவமாலையும் இவனைக் காலிங்க விஜயபாகு எனக் குறிப்பிடுவதைப் பார்க்கின்றோம். மட்டக்களப்பின் திருக்கோவில் கல்வெட்டு இவனை திரிபுவன சக்கரவர்த்தி விஜயபாகு தேவர் என விளம்புகின்றது.
கலிங்கமாகோன், சோழப் பேரரசின் மட்டக்களப்பு நிருவாகப் பிரதிநிதி புலியன் இருந்த இடத்தில் செங்கல்லால் சிறிய கோட்டை அமைத்து, அதில் தனது சிற்றரரசனாக கலிங்க குலத்தைச் சேர்ந்த சுகதிரனை அமர்த்தியிருந்தான். இந்த இடமே புளியந்தீவில் தற்போதைய நீதிமன்றம் அமைந்துள்ள இடமாகக் கருதப்படுகின்றது. தனது ஆட்சிப் பிரிவுகளின் நிர்வாக அலகுகளை ஏழேழு வன்னிமைகளாக வகைப்படுத்தி சோழராட்சியிலும் அதைத் தொடர்ந்து வந்த பொலநறுவை ஆட்சியிலும், சிறந்த நிருவாகிகளாக விளங்கிய பூபாலகோத்திர படையாட்சி, வன்னியப் பரம்பரையினருக்குப் பொறுப்பளித்தான். மாணிக்க கங்கை தொடக்கம் வெருகலாறு வரையான மட்டக்களப்புப் பிரதேசம் நாடுகாடுப்பற்று, பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, சம்மாந்துறைப்பற்று, கரைவாகுப்பற்று, மண்முனைப்பற்று, ஏறாவூர்ப்பற்று என ஏழு பிரிவுகளாக அவனது ஆட்சியில் வகுக்கப்பட்டிருந்தது. மகாவலி கங்கையின் கீழ்ப்பால் விளங்கிய, சோழராட்சிக் காலத்தில் அவர்களால் குடியமர்த்தப்பட்ட ஆட்சிப் பணியாளர்களின் இருப்பிடங்களான மன்னன்பிட்டி, சமணன்பிட்டி, முத்துக்கல், திரிகோணமடுப்பகுதிகளை ஒருங்கிணைந்து முத்துக்கல் வன்னமையாக்கி ஏற்கனவே படையாட்சித் (வேளைக்காரர்) தலைவர் ஒருவரின் பொறுப்பில் அப்பகுதி இருந்தமையால் அவனோடு கலிங்கன் ஒருத்தனையும் சேர்த்து அதில் நிருவாக பொறுப்பளித்தான். இவனது ஆட்சிக் காலத்தே சோழராட்சியின் பிற்காலம் முதல் செல்லரித்துக் கிடந்த மட்டக்களப்புத் தமிழகம் உத்வேகத்துடன் தலைநிமிரத் தொடங்கியது. தமிழ் மொழியும் தமிழ் மதமும் (சைவம்) சமூக நெறி முறைப் பண்பாடுகளும் உன்னத இடத்திற்கு உயர்ந்தன. ஆலய நடைமுறைகள் மற்றும் தொழில்சார் கருமங்கள் யாவும் சிறப்புற்றன. கதிர்காமக் கந்தன் ஆலயம், திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், கோவில் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம், மண்டூர் கந்தசுவாமி ஆலயம், வெருகல் சித்திரவேலயுதர் ஆலயம் போன்ற வழிபாட்டுத் தலங்கள் ஊடாக, அவை சார்ந்து வாழ்ந்த சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. அச்சமூகங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களும் கடமைகளும் சமூகத் தேவையாக விரிந்து பிரதேச ஒருமைப்பாட்டினுக்கு வழி கோலின. இப்பிரதேசத்தின் ஒரே சிவாலயமாகவும், தேரோடும் கோவிலாகவும் விளங்கிய கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் சகல நிலையிலும் முன்னிறுத்தப்படலாயிற்று. இக்காலத்தே மட்டக்களப்பின் தலைமையானது கலிங்கர்களான சுகதிரனிடமும், பின்னர் அவனது மகன் சமூகதிரனிடம் இருந்ததாக மட்டக்களப்பு வரலாறு விளம்புகின்றது.
கலிங்க மாகோனின் ஆட்சிப் பறிப்புக்கு பாண்டியர் அடிக்கடி உதவி புரிந்தமை வரலாற்று ரீதியாக உணரப்பட்டதாகும். அவனது ஆட்சிக் காலத்தின் கி.பி 1223 ல் 1ம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும், கி.பி 1250 ல் 2ம் மாறவர்மனும், 1255 ல் ஜடாவர்மன் வீர பாண்டியனுமாக மும்முறை ஈழத்துக்குப் படைகளை அனுப்பியமை தெரிகின்றது. கி.பி 1255 ல் மாகோன் பொலநறுவையை விட்டுச் செல்ல வேண்டி ஏற்பட்டமைக்கு அவனுடைய வயோதிபத்தன்மையும் ஒரு காரணம் என்றேக் கொள்ள வேண்டும்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தில் கலிங்கச் செல்வாக்கு
மட்டக்களப்புத் தேசத்தின் நீண்டகால வரலாற்றுடன் பிணைந்திருப்பது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரமாகும். கி.பி 4ம் நூற்றாண்டில் கலிங்க இளவரசி உலகநாச்சியால் இவ்வாலயம் மீளுருவாக்கம் பெற்றதாக இதுவரை அறியப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. அத்துடன் இவ்வாலயத்தில் தொண்டூழியம் புரிவதற்காகச் சிறைக்குடிகளையும் அவள் கொணர்ந்ததாகவும்அறியமுடிகின்றது.
கலிங்கத்தில் வீரசைவ வழிபாட்டினை முன்னெடுத்த சிவாலயமாக கலிங்கத்தின் (ஒரிசா) புவனேஸ்வரிலுள்ள லிங்கராச ஆலயம் கருதப்படுகின்றது. இன்று பிரமாண்டமாக காட்சிதரும் இவ்வாலயம் கி.பி 11ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த கலிங்க மன்னன் ஜெயாதி கேசரியால் கட்டப்பட்டதாகும். இதனை ஏகாம்பர ஷேத்திரம் என பிரம்ம புராணம் குறிப்பிடும். இவ்வாலயத்தை அமைத்த பின்னர், அவன் தனது தலைநகரை புவனேஸ்வருக்கு மாற்றிக்கொண்டான். இவ்வாலய வழிபாடு தொடர்பான தகவல்களில் இங்குள்ள லிங்கமானது மிக நீண்டகாலத் தொன்மைக்குரியதாகவும் கி.பி 5ம் நூற்றாண்டு முதல்கொண்டு இதன் வழிபாடு முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் புவனேஸ்வரி எனும் இவ்வாலய அம்மனின் பெயரைக்கொண்டே இன்று ஒரிசாத் தலைநகர் புவனேஸ்வர் என அழைக்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாலய வழிபாட்டியலோடு தான்தோன்றீச்சரத்தையும் பொருத்திப் பார்க்க நம்மால் முடிகின்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம்
புவனேஸ்வரர் லிங்கராசா ஆலயம்
கலிங்க மாகோனின் ஆட்சிக்காலம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தோடு பெருமளவு நெருக்கமுற்றிருந்தமை வரலாற்றுப் பதிவாகவேயுள்ளது. இவ்வாலயத்தோடு தொடர்புபட்டதான சமூகக் கட்டமைப்பு முறைமைகளிலும், வழிபாட்டியலிலும் மாகோனின் செயல்பாடு மிகமுக்கியத்தவம் பெற்றதாகும். மட்டக்களப்புத் தேசத்தின் வன்னிமை முறைகளையும் குலவிருதுகளையும், சாதியாசாரங்களையும் கோயில் ஊழியங்களையும், வீர சைவர்களான சங்கமரின் செல்வாக்கினையும் உருவாக்கி, இங்கு வீரசைவத்தை நிலைநாட்ட தான்தோன்றீச்சரம் அவனுக்குக் களமாக அமைந்தது. தான்தோன்றீச்சரத்தின் முன்னைய கட்டிட விமான அமைப்பானது கி.பி 13ம் நூற்றாண்டுக்குரியதாக ஆய்வுகள் வெளிப்படுத்தும் நிலையில் ஆலய புனரமைப்புப் பணிகளிலும் அவன் ஈடுபாடு கொண்டிருந்தமை புலனாகின்றது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேரோட்டம்
புவனேஸ்வர் பூரி ஜெகந்நாதர் தேரோட்டம்
பூரி ஜெகந்நாதர் ஆலயத்தைக் கலிங்க அரசன் அனந்தவர்மன் எனும் சோடகங்க தேவன் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1198) ஆரம்பித்து 13ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறைவுசெய்தான் என்பது வரலாறு. இலங்கையில் மாகோனின் ஆட்சிக்காலம் கி.பி 1215 - 1255 என்பது பொதுவான கணிப்பாகும். எனினும், அண்மைய ஆய்வுகள் இக்காலத்தை 13 ஆண்டுகள் முன்னெடுப்பதையும் பார்க்கின்றோம். இதன்படிப் பார்த்தால் கலிங்கத்தில் அனந்தவர்மனின் ஆட்சிக்காலத்தில் இலங்கை வந்த மாகோன் அவனது செயற்பாடுகளை பின்பற்றியமை ஏற்புடைத்தாகவேயுள்ளது. இந்தியாவிலேயே முதன்மையும் முக்கியத்துவமும் பெற்ற பூரி ஜெகந்நாதரின் தேரோட்ட (ரத யாத்ரா) நிகழ்வினைப் போன்றே இலங்கையில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சர தேரோட்ட நிகழ்வும் முதன்மையும் முக்கியத்துவமும் பெறுகின்றது. இலங்கையில் தேரோட்டம் கண்ட முதல் ஆலயமாகவும் தான்தோன்றீச்சரம் திகழ்கின்றது.
பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் மூன்று சிற்பத் தேர்களைப்போன்றே தான்தோன்றீச்சரத்திலும் மூன்று சிற்பத் தேர்கள் அமைக்கப்பட்டிருந்தமையும் அனந்தவர்மனால் முதன்முதலில் தேரோட்ட நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதைப் போன்றே, இங்கு மாகோனால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் அங்கு மாகாப்பிரசாதம் எனும் கறியமுது வழங்கப்படுவதைப் போன்றே இங்கு கஞ்சிமுட்டி வழங்கப்பட்டமையும் கலிங்கச் செல்வாக்கை நிலைநிறுத்துவதாக அமையும்.
மட்டக்களப்புத் தேசத்தில் நிலவும் போடிப் பெயர்களில் கலிங்கச் செல்வாக்கு
மட்டக்களப்பில் நிலவும் போடிப் பெயர்களும் பொதுவாக ஒவ்வொரு அர்த்தப்பாட்டினைக் கொண்டிருப்பதைக் காணமுடியும். இதில் குறிப்பிடத்தக்க சில பெயர்கள் கலிங்கத் தொடர்பினை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். பண்டையக் கலிங்கத்தின் ஆதிச்சமூகங்களான இனக்குழுமங்களில் முண்டா, சம்பா, பண்டாரி, பாலி, போரா போன்ற சமூகங்கள் அக்காலகட்டத்தே முக்கியம் பெற்றவையாக விளங்கியுள்ளன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் மட்டக்களப்புத் தேசத்தில் கலிங்கரின் வரவு படிப்படியாக இடம்பெற்றுள்ளமையை வரலாறு குறிப்பிடும். ஆதிக்கச் செயல்பாட்டிலும் நிருவாக முறைகளிலும் அவர்களது செயல்பாடே இங்கு முதன்மை பெற்றிருந்தது. இங்கு வந்துற்ற கலிங்கத்தின் ஆதிச்சமூக எச்சங்களை இங்கு நிலவும் போடிப் பெயர்களைக் கொண்டு உறுதி செய்ய முடிகின்றது. மட்டக்களப்புப் போடிப் பெயர்களுள் முண்டாப் போடி, சம்பாப் போடி, பண்டாரிப் போடி, பாலிப்போடி, போராப்போடி என்பனவும் அடங்கும்.
சான்றாவணங்கள்
01. Bhavan,B.V. Vedic Age,( pp 163 -68) - 1966
02. Chattterji S.K, Dravidan -1968
03. Gangatharan T.K, Evolution of Kerala History and Culture - 2001
04. Gopalan.R, History of Pallavas of Kanchi - 1928
05. Sharma R.S, Proceedings IHC Bhuvaneswar
06. Srinivasan, K.R, Some Aspects of Religion etc. p:32
07. Pillai Dr.R.M, Kalinga – Culture and it Diffusion -1986
08. Mathew K.S, Society of Medival Malabar - 1992
09. World Heritage Sites of Sri Lanka – Hand Book (Saranga Prakasakayo- 2012)
10. கந்தையா, வி.சி. மட்டக்களப்புத் தமிழகம் - 1964
11. கோபால், வெல்லவூர் - கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் - 1992
12. கோபால், வெல்லவூர் - மட்டக்களப்புத் தேசம் வரலாறும் வழக்காறும் -2016
13. கோபால், வெல்லவூர் - வெல்லாவெளி வரலாறும் பண்பாடும் - 2012
14. கோபால் வெல்லவூர் - மலையாளநாடும் மட்டக்களப்பும் - 2007
15. செல்லம், வே.தி. தமிழக வரலாறும் பண்பாடும் - 3ம் பதிப்பு - 2000
16. பத்மநாதன், சி. ஈழமும் தமிழரும் புராதன காலக் குடிகளும் மட்டக்களப்புத் தேசமும் (சுவாமி விபலானந்தர் நினைவுப் பேருரை - 2002)
17. பத்மநாதன், சி. இலங்கை தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் - 1984
18. நடராசா எவ்.எக்ஸ்.சி, மட்டக்களப்பு மான்மியம் - 1962
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.