தொண்டை மண்டலத்தில் சமண சமயம்
முனைவர் சு. அ. அன்னையப்பன்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620 002.
முன்னுரை
தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நிலங்களில் வாழ்ந்த மக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அந்நிலங்களுக்கு ஏற்ப அந்நிலக்கடவுள்களை வழிபட்டு வந்தனர். திருமால் உறையும் முல்லை நிலம், முருகன் உறையும் குறிஞ்சி நிலம், இந்திரன் உறையும் மருத நிலம், வருணன் உறையும் நெய்தல் நிலம் எனக் கூறப்படுகின்ற முதற்பொருளாகிய நிலங்கள் முன்னோர் கூறியபடி இவ்வாறு கூறப்படும். இந்நூற்பாவில் பண்டையத்தமிழரின் தொன்மையான வழிபாட்டுமுறை காணப்படுகிறது. இதில் அனைத்துப்பகுதி மக்களின் வழிபாட்டு முறைகளையும், வழிபாட்டுக் கடவுள்களையும் முறையாகக் காட்டப்படுகின்றது. இவ்வழக்குப் பெருவழக்காக இருந்துள்ளது என்பதைப் பின்வரும் தொல்காப்பிய நூற்பா உணர்த்துகின்றது.
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே" (தொல்.அகம்.951)
சமணசமயம்
வடநாட்டிலிருந்து வந்த சமணர்கள் காஞ்சிமாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு, சமணசமயத்தைப் பண்டைநாள் முதற்கொண்டே தமிழகத்தில் பரவலாகப் பரப்பி வந்தனர். அவர்கள் சமணசமயக் கொள்கைகள் பரப்புவதற்கும், நிலைநிறுத்துவதற்கும், தொண்டை நாட்டை முதன்மையிடமாகக் கொண்டு, அந்நாட்டு மக்களை அச்சமயத்தில் இணைத்தனர். அவர்கள் தமிழ் நிலங்களிலும், உலகெங்கிலும் உள்ள மக்களிடத்தில் சமணசமயத்தைப் பரப்பி வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும்.
சமணசமயம் தோன்றிய வரலாறு
சமண சமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன. சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக்கூறி துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர், இந்த மதத்திற்குச் சிறப்புப்பெயராக வழங்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர் (வென்றவர்) ஆகலின் தீர்த்தங் கரருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைனமதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர், ஆருகதர் எனும் பொருளில் ஆருகதமதம் என்றும் கூறப்படுகிறது. சமணக்கடவுள் பற்றற்றவர் ஆதலின் நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். எனவே, சமணசமயம் நிகண்டமதம் எனப் பெயர் பெற்றது. மதங்கள் ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகையாகும். சமணம் ஒழிந்த ஏனைய மதங்கள் எல்லாம் ஏகாந்தவாத மதங்கள். சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது. ஆகவே, இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் என்று ஒரு பெயர் உண்டாயிற்று. ஸியாத்வாதம் என்றாலும் அநேகாந்தவாதம் என்றாலும் ஒன்றே. அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமண வழக்கமாதலின் சமணருக்குப் பிண்டியர் என்னும் பெயர் கூறப்படுகிறது. சமணசமயக் கொள்கைகளை, அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் என்னும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகின்றார்கள் என்பது சமணசமயக் கொள்கையாகும். இதுவரை இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும் இனியும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகின்றார்கள் என்பதும் இந்த மதக் கொள்கையாகும். இதுவரை தோன்றியுள்ள இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. விருஷபதேவர் (ஆதிநாதர்)
2. அஜிதநாதர்
3. சம்பவநாதர்
4. அபிநந்தர்
5. சுமதிநாதர்
6. பதுமநாபர்
7. சுபார்சவநாதர்
8. சந்திரப்பிரபர்
9. புஷ்பதந்தர் (சுவிதிநாதர்)
12.வாசபூஜ்யர்
13. விமலநாதர்
14. அநந்தநாதர் (அநந்த ஜித் பட்டராகர்)
15. தருமநாதர்
16. சாந்திநாதர்
17. குந்துநாதர் (குந்துபட்டாரகர்)
18. அரநாதர்
19. மல்லிநாதர்
20. முனிசுவர்த்தர்
21. நமிநாதார் (நமிபட்டாரகர்)
22. நேமிநாதர் (அரிஷ்டநேமி)
23. பார்சுவநாதர்
24. வர்த்தமான மகாவீரர் (வேங்கடசாமி, 2003 : 43 - 44)
இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு.8 நூற்றாண்டில் இருந்தவர். அதாவது கி.மு. 817 முதல் கி.மு. 717 வரையில் இருந்தவர். இவருக்குப் பின்னர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தமான மகாவீரர் தோன்றி 72 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார். இவர் கி.மு. 599 முதல் கி.மு. 527 வரையில் இருந்தவர். வர்த்தமான மகாவீரர் காலத்தில் பெளத்த மதத்தை உண்டாக்கிய கெளதமபுத்தரும் ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் வாழ்ந்தார்கள். இவர்களில் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலியும் மகாவீரருடன் ஆறு ஆண்டு ஒருங்கிருந்தார். பிறகு மகாவீரருடன் மாறுபட்டு ஆசீவகமதம் என்னும் புதிய மதத்தையுண்டாக்கினார். இதனால், பெளத்த மதமும், ஆசீவகமதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விரு மதங்களுக்கு முற்பட்டது சமண மதம் என்பதும் விளங்குகிறது. சமணசமயம் பிற்காலத்தில் மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிவுண்டது. அவை சுவேதாம்பரசமணம், திகம்பரசமணம், ஸ்தானசுவாசிசமணம் என்பன. சுவே தாம்பரசமணத் துறவிகள் வெண்ணிறஆடை அணிவர். இவரின் ஆலயங்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கும் வெண்ணிறஆடை உடுத்துவர். சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிறஆடை என்பது பொருள். திகம்பர சமணத்துறவிகள் ஆடை அணியமாட்டார்கள், கெளபீனமும் உடுத்தமாட்டார்கள். திகம்பரர் என்றால் திசைகளை ஆடையாக உடுத்துவர் என்பது பொருள். (திக்+அம்பரம்+திகம்பரம்) அதாவது உடையின்றி இருப்பவர். இவரின் கோவில்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களும் ஆடையுடுத்தப் பெறாமல் திகம்பரமாகவே (அம்மணமாகவே) இருக்கும். சுவேதாம்பரசமணரும் திகம்பரசமணரும் உருவ வழிபாட்டினர். ஸ்தானசுவாசி சமணருக்கு உருவவழிபாடு உடன்பாடு அன்று. அவர்கள் தம் கோவில்களில் சமண ஆகமநூல்களை வைத்து அவற்றையே தீர்த்தங்கரராகவும் அருகக்கடவுளாகவும் பாவித்து வணங்குவார்கள். சுவேதாம்பர, ஸ்தானகவாசி சமணர்கள் வடஇந்தியாவில் காணப்படுகின்றனர். திகம்பரசமணர் பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டிலே பெரும்தொகையினராக இருந்தனர். இப்போதும் தமிழ்நாட்டில் உள்ள சமணர் திகம்பரசமணர் ஆவர். தமிழ் நூல்களில் ஜைனர் என்றும் சமணர் என்றும் அமணர் என்றும் ஆருகதர் என்றும் கூறப்படுகிறவர் திகம்பரசமணரே ஆவர். (வேங்கடசாமி,2003:48-49)
சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு
சமணர்களின் கடைசித் தீர்த்தங்கரராகிய வர்த்தமன மகாவீரர் தமது 72ஆவது வயதிலே கி.மு. 527-இல் மோட்சம் அடைந்தார். மகாவீரரின் சீடர்களில் ஒன்பதின்மர், கேவலஞானம் வாய்க்கப்பெற்று மகாவீரர் காலத்திலேயே இராசக்கிருக நகரில் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனை நோன் பிருந்து வீடுபேறடைந்தனர். கெளதம இந்திரபூதி, சுதர்மர் என்னும் இரண்டு கணாதரர்கள் மகாவீரர் வீடுபேறடைந்த பின்னரும் உயிர் வாழ்ந்திருந்தார்கள். மகாவீரர் வீடுபேறடையும் வரையில் தாமே சமணசமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர், அவரது சீடர் கெளதம இந்திரபூபதி என்பவர் சமயக்குரவராக இருந்தார். அவருக்குப் பிறகு மகாவீரரின் மற்றொரு சீடராகிய சுதர்மர் என்பவர் சமயக்குரவராக இருந்தார். அவருக்குப் பின்னர் அவரின் (சுதர்மாது) சீடராகிய சம்புசுவமி சமயக்குரவராக இருந்தார். அவருக்குப் பிறகு விட்ணுநந்தி என்னும் விட்ணுதேவர் சமயத்தலைவர் ஆனார். அவருக்குப் பிறகு நந்திமித்திரரும் அவருக்கும் பின்னர் அபராசிதரும் அவருக்குப் பிறகு கோவர்த்தனரும் அவருக்குப் பின்னர்ப் பத்திரபாகு முனிவரும் சமயக்குரவராக இருந்தனர். பத்திரபாகு முனிவர் காலத்திலேதான் சமணசமயம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி.மு. 317 முதல் கி.மு. 397 வரையில் சமணசமயத் தலைவராக இருந்தவர். இவர், சந்திரகுப்தன் (கி.மு.322-298) என்னும் மெளரிய அரசனுக்கு மதகுருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மெளரியன் கிரேக்க அரசனாகிய அலெக்சாந்தர் காலத்தவன், வடஇந்தியாவை அரசாண்ட சக்கரவர்த்தி, அசோகச் சக்கரவர்த்தியின் பாட்டன்
(வேங்கடசாமி,2003:72)அப்போது தமிழ் கூறும் நிலங்களைத் தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரகுப்த அரசனுக்குச் சமயகுருவாக இருந்த பத்திரபாகு முனிவர், மகதநாட்டில் பன்னிரண்டு ஆண்டு வற்கடம் வரப்போவதையறிந்து, அச்செய்தியை அரசனுக்கு அறிவித்து வரப்போகும் வற்கடக் கொடுமையினின்றும் தப்பிக் கக்கருதித் தம்மைச்சார்ந்திருந்த பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக் கொண்டு, தென்திசை நோக்கிப்புறப்பட்டு வந்தார். சந்திரகுப்த அரசனும் அரசைத்துறந்து துறவு பூண்டு பத்திரபாகு முனிவரின் சீடனாகி அவருடன் வந்தார். தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர், மைசூர் நாட்டில் சமணர் வெள்ளைக்குளம் என்னும் பொருள்படும் சிரவண பெளகொள என்று இப்போது பெயர் வழங்கப்படுகின்ற இடத்தில் தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார். தங்கின பிறகு, இவர் தம் சீடர்களில் ஒருவரான விசாகமுனிவர் என்பவரை அனுப்பிச் சோழ, பாண்டிய நாடுகளில் சமணசமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். பின்னர், இவர் கி.மு. 297-இல் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனையிருந்து வீடு பெற்றார். இவர் சீடராக இருந்த சந்திரகுப்தரும், அவ்விடத்திலேயே சல்லேகனை நோன்பிருந்து உயிர் நீத்தார். இச்செய்திகளைச் சமணசமய வரலாறுகளினால் அறியப்படும். அரிசேனர் என்பவர் (கி.பி.931-இல்) இயற்றிய பிருகத் சுதா கோசம் என்னும் நூலிலும் தேவ சந்திரர் கன்னட மொழியில் (கி.பி.1838-இல்) இயற்றிய ராஜா வளி கதெ என்னும் நூலிலும் சமணர்களின் கர்ண பரம்பரைச் செய்திகளிலும் இவ்வரலாறுகள் கூறப்படுகின்றன. அன்றியும் மைசூரில் உள்ள சந்திரகிரி மலையில் பத்திரபாகு குகை என்னும் குகையும், சந்திரகுப்த பஸ்தி என்னும் சமாதிக்கட்டிடமும் இன்னும் உள்ளன. சந்திரகுப்த பஸ்தியில், சந்திரகுப்த பத்திர பாகு வரலாறுகள் சிற்ப உருவங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அங்குள்ள சாசன எழுத்துக்களும் இச்செய்திகளை உறுதிப்படுத்துகின்றன. எனவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ்நாட்டில் சமண சமயம் பரவச் செய்யப்பட்டது என்று அறிகிறோம். பாண்டிய நாட்டிலே மதுரை மாவட்டத்தில் காணப்படுகின்ற பிராமி கல்வெட்டெழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை என்றும், அவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும், அரசாங்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கூறுகிறபடியால், சமணசமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்திருக்க வேண்டும் என்று துணியப்படும். இவர்கள் கூறும்காலமும் பத்திரபாகு முனிவர் தென்திசை நோக்கிவந்தகாலமும் ஒத்திருப்பதும் கருதத்தக்கது. வடநாட்டினின்றும் தென்னாடு வந்த பன்னீராயிரம் சமணத்துறவிகளும் மைசூரில் தங்கி வாளா காலம் கழித்திருக்க மாட்டார்கள். தமது மதக்கொள்கையைப் பரப்புவதையேத் தமது நோக்கமாகக் கொண்ட அவர்கள், மைசூருக்கு அடுத்திருக்கும் தமிழ்நாட்டிலும் வந்து தமது சமணசமயத்தைப் பரவச் செய்திருப்பர் என்பது தவறாகாது. இன்னொரு சான்றினாலும் இச்செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது. மகாவம்சம் என்னும் பெளத்த மதநூலில் இலங்கையிலே கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே, சமணசமயம் இருந்ததாகக்கூறப்படுகிறது. கி.மு.377 முதல் 307 வரையில் இலங்கைத்தீவை அரசாண்ட பாண்டுகாபயன் என்னும் அரசன், அநுராதபுரம் என்னும் நகரத்திலே சோதியன், கிரியன், கும்பண்டன் என்னும் நிகண்ட (சமண) மதக்குருமாருக்குப் பள்ளிகள் கட்டிக்கொடுத்தான் என்று மகாவம்சம் கூறுகிறது. வடஇந்தியாவை அரசாண்ட சந்திரகுப்த அரசனும் இலங்கைத் தீவை அரசாண்ட இந்தப் பாண்டுகாபய அரசனும் ஏறத்தாழ ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தவர்கள் என்பது கருதத்தக்கது. பாண்டுகாபய அரசன் காலத்தில் சமணசமயத்தவர் இலங்கையில் இருந்தார்கள் என்றால், அவர்கள் தமிழ் நாட்டிலிருந்துதான் சென்றிருக்க வேண்டும்; வடஇந்தியாவில் இருந்து கப்பல் ஏறிக் கடல் வழியாக நேரே இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது. ஏனென்றால், சமணசமயத்துறவிகள் ஆறு முதலிய சிறு நீர்ப்பரப்புகளைக் கடந்து செல்லலாமே தவிர கடலில் பயணம் செய்யக்கூடது என்பது அந்த மதக்கொள்கை. ஆகவே, வடஇந்தியாவிலிருந்து சமணர் கப்பலேறி நேரே இலங்கைக்குச் சென்றார்கள் என்று நம்புவதற்கில்லை. அவர்கள் தமிழ்நாட்டிலிருந்தே இலங்கைக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடையில் உள்ள மன்னார் குடாக்கடல் வழியாக இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும். அக்காலத்தில் மன்னார் குடாக்கடல் மிகக்குறுகி அண்மையில் இருந்தது என்பது நினைவுக் கூரத்தக்கது. ஆகவே, கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிலும் இலங்கைத் தீவிலும் சமணர் இருந்தனர் என்று துணிந்து கூறலாம். இன்னும் ஊன்றி ஆராயப்புகுந்தால் கி.மு. மூன்றாம் நூற்றண்டாண்டிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமணசமயம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கவேண்டும் என்று தெரியவருகிறது. மகாபாரதக் காலத்திலே, அதாவது கண்ணபிரானுடைய காலத்திலே சமணர் தமிழ்நாட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. 22ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாத சுவாமி கண்ணபிரானுடைய நெருங்கிய உறவினர் என்றும் கண்ணபிரான் எதிர்காலத்திலே சமணசமய தீர்த்தங்கரராகப் பிறந்து சமணசமயத்தை நிலைநாட்டப் போகிறார் என்றும் சமண நூல்கள் கூறுகின்றன. இக்காலத்துச் சமணருடைய நம்பிக்கையும் இதுவே. கண்ணபிரானும் அவரைச் சேர்ந்தவர்களும் சமணசமயத்தவர் என்று சமணநூல்கள் கூறுகின்றன.
(வேங்கடசாமி, 2003:74-76)
கண்ணபிரானிடத்தில் அகத்தியர் சென்று அவர் இனத்தவராகிய பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து குடியேற்றினார் என்று தொல்காப்பிய உரையிலே நச்சினார்க்கினியர் கூறுகிறார். அகத்தியர் தென்னாடு போதுகின்றவர் ‘துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டுபோந்து’ காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் என்று கூறுகிறார் (தொல்.எழுத்து.பாயிரம் உரை). ‘இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதி னெண்வகைக் குடிபிறந்த வேளிர்க்கும் வேந்தந்தொழில் உரித் தென்கிறது’ (தொல்.பொருள்.அகத்திணை.32- சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை). மலயமாதவனாகிய அகத்தியர், நிலங்கடந்த நெடிமுடியண்ணலாகிய கண்ணபிரானிடமிருந்து பதினெட்டுக்குடியைச் சேர்ந்த வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து குடியேற்றிய செய்தி இதனால் அறியப்படும். அகத்தியர் என்னும் பெயருடையவர் பலர் இருந்தனர். அவர்களுள் ஓர் அகத்தியர் வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டில் குடியேற்றிய செய்தியை நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவது இவர் காலத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவந்த வரலாறாக இருக்கவேண்டும். கண்ணபிரான் சமணராக இருந்தால் அவர் வழியினராகிய அகத்தியரால் அழைத்து வரப்பட்ட பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணராக இருந்திருக்க வேண்டும். பதினெண்குடி வேளிர் தமிழ்நாட்டில் குடியேறியபின் சேர, சோழ, பாண்டிய அரசர்களுக்குப் பெண் கொடுக்கும் உரிமையுடையவராக வாழ்ந்து வந்தனர் என்று சங்க நூல்களினால் அறிகிறோம். அன்றியும் அவர்கள் அக்காலத்தில் சமண மதத்தவராக இருந்தனர் என்பதும் ஆராய்ச்சியினால் விளங்குகிறது. அகத்தியருடன் வந்த அருவாளர் தொண்டை நாட்டில் குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய பிறகு தொண்டை நாட்டிற்கு அருவாநாடு (அருவாளர் நாடு) என்று பெயர் உண்டாயிற்று. அருவாளரும் அக்காலத்தில் சமணமதத்தவராக இருந்தனர் என்று கருதப்படுகின்றனர். நெல்லூர் மாவட்டம் கண்டகூர் வட்டத்தைச் சேர்ந்த மாலகொண்டா என்னும் மலைமேல் உள்ள ஒரு குகையில் கி.மு.8- நூற்றாண்டில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று காணப்படுகிறது. இது பிராகிருத மொழியிலே பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருந்தது. ‘அருவாஹிள குலத்து நந்த செட்டிமகன் சிறிவீரி செட்டி செய்வித்த குகை’ என்று இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. இதில் கருத வேண்டியது என்னவென்றால், தமிழ் நூல்களில் அருவாளர் என்று கூறப்படுபவர் தாம் இச்சாசனத்தில் அருவாஹிள குலம் என்று கூறப்படுகின்றனர் என்பதும் இந்தக் குகை சமணத் துறவிகளுக்காக அமைக்கப்பட்டது என்பதும் அருவாளர் பண்டைக்காலத்தில் சமணராக இருந்தனர் என்பதும் ஆகும். இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்தச் சாசனம் காணப்படுகிற இடம் பண்டைக்காலத்தில் தமிழ்நாடாக (தமிழ்நாட்டின் வடஎல்லையாக) இருந்தது என்பதே ஆகும். கி.பி.2- நூற்றாண்டில் இருந்த டாலமி என்னும் யவன ஆசிரியர் அருவார்னொய் (Aruvarnoi) என்னும் இனத்தார் இந்தப் பகுதியில் (தொண்டைநாட்டில்) வாழ்ந்தனர் என்று கூறுவது இந்த அருவாளரைத்தாம் போலும். கண்ணபிரான் மரபினராகிய பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமண சமயத்தவராக இருந்ததோடு அவர்கள் தென்னாட்டிற்கு வந்த பிறகு கண்ணன் பலராமன் என்னும் இருவரையும் வழிபடும் வழக்கத்தைத் தமிழ் நாட்டில் நிலைநாட்டினார்கள் என்றும் தெரிகிறது. கண்ணன் பலராமன் வணக்கம் சங்ககாலத்திலே சிறப்புற்றிருந்தது என்பதைச் சங்க நூல்கள் பல இடங்களில் கூறுகின்றன. வைணவமதம் தலையெடுத்த பிற்காலத்திலே பலராமன் வணக்கம் மறக்கப்பட்டுக் கண்ணபிரான் வணக்கம் மட்டும் (கண்ணன் திருமாலின் அவதாரம் என்னும் முறையில்) கைக்கொள்ளப்பட்டது. கண்ணபிரான் தொடர்புடைய பாரதப்போர் நிகழ்ச்சியை, வரலாற்று நிகழ்ச்சியாக இந்திய வரலாற்று நூல்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறபடியினால், கண்ணபிரான் காலத்தில் இருந்த அவர் உறவினரான நேமிநாத தீர்த்தங்கரரும் வரலாற்றுக் காலத்தவர் ஆவார். ஆகவே, நேமிநாத தீர்த்தங்கரர் காலத்திலே கண்ணபிரான் பாரதப்போர் செய்த அந்தக்காலத்திலே அகத்திய முனிவருடன் தமிழ்நாடு வந்த பதினெண்குடி வேளிர் அருவளார் ஆகிய இவர்கள் மூலமாகச் சமணசமயம் தமிழ்நாட்டிற்கு வந்திருத்தல் கூடும். சமரச நோக்கமுடைய மிகப்பழைய காலத்தில் எல்லா மதங்களும் சகோதர பாவத்துடன் இருந்தன. தமிழ்நாட்டிலிருந்த மதங்களில் மிகப் பழமையானது சமணமதம் என்பதில் யாதோர் ஐயமும் இல்லை.
(வேங்கடசாமி,2003:76-78)
சமணசமயம் சிறப்படைந்த வரலாறு
பண்டைக்காலத்திலே சமண சமயம் தமிழ்நாடு முழுதும் பரவி நிலைபெற்றிருந்தது; பரவியிருந்தது மட்டுமல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ்நாட்டிலே வேரூன்றித் தழைத்துத் தளிர்த்து இருந்ததைத் தேவராம், நாலாயிரப்பிரபந்தம், பெரியபுரணம், திருவிளையாடற்புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும் மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலே ஆங்காங்குக் காணப்படுகின்ற கல்வெட்டுச் சாசனங்களும் அழிந்தும் அழியாமலும் காணப்படுகிற சமணக் கோவில்களும் காடுமேடுகளில் ஆங்காங்கே காணப்படுகிற சமண சமயத் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் சான்று கூறுகின்றன. பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை, பண்டைக்காலத்தில் சமண சமயத்தில் இல்லை. எக்குலத்தவரும் தமது சமயக் கொள்கையைப் பின்பற்றுவராயின் அவரைச் சமணர் போற்றி வந்தனர். அவருடைய அருங்கலச்செப்பு என்னும் நூலில், பறையன் மகனெனினும் காட்சியுடையான், இறைவன் எனஉணரற் பாற்று என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, பண்டைக்காலத்திலே சாதி பேதம் பாராட்டாத சமண சமயம் தமிழகத்தில் பரவியதில் வியப்பில்லை. மேலும் உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கினையும் அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். உணவு இல்லாத ஏழைமக்களுக்கு உண்டி கொடுத்துப் பசிநோயைப் போக்குவது தலைசிறந்த அறமாகும். ஆகவே, சமணர் அன்னதானத்தை முதல் தானமாகச் செய்துவந்தனர். இரண்டாவதாகிய அடைக்கலதானத்தையும் சமணர் பொன்போல் போற்றிவந்தனர். அச்சங்கொண்டு அடைக்கலம் என்று புகல் அடைந்தவருக்கு அபயமளித்துக் காப்பது அபயதானம் என்பதாகும். இதற்கென்று குறிப்பிட்ட சில இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் அஞ்சினான் புகலிடம் என்பது பெயர். இந்த இடங்களில் புகல் அடைந்தவரைச் சமணர் காத்துப் போற்றினார்கள். சாசனங்களிலும் இந்தச் செய்தி கூறப்படுகிறது. தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் பள்ளிச்சந்தல் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் கிராமத்து வயலில் இச்செய்தியைக் கூறுகிற சாசனம் ஒன்று காணப்படுகிறது. ஜம்பை என்னும் கிராமத்துக்கு வீரராசேந்திரபுரம் என்று பெயர் இருந்ததென்றும், இங்கு கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் சமணக்கோவில் இருந்ததென்றும், அங்கு சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம் என்று பெயர் உள்ள ஒரு புகலிடம் இருந்ததென்றும், அப்புகலிடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தவரைக் காப்பற்றவேண்டும் என்பது கண்டராதித்தப் பெரும்பள்ளியில் எழுந்தருளியிருந்த நேமிநாதசுவாமி ஆணை என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது. முந்தைய வடார்க்காடு மாவட்டம் வந்தவாசி வட்டம் தெள்ளாறு என்னும் ஊரிலே திருமுனிஸ்வரர் கோவில் முன் மண்டபத்தின் தரையில் ஒரு சாசனம் காணப்படுகிறது. மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய தேவரின் 5ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம் அஞ்சினான் புகலிடம் ஒன்றைக் குறிப்பிடுகிறது. முந்தைய வடார்க்காடு மாவட்டம் வாலாஜப்பேட்டை வட்டம் கீழ்மின்னல் என்னும் ஊரில் உள்ள ஒரு சாசனம் சகல லோக சக்கரவர்த்தி வென்று மண்கொண்டார் என்னும் சாம்புவராயர் அரசருடைய 16ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. அக்காலத்தில் இந்த ஊர் அஞ்சினான் புகலிடமாக இருந்த செய்தியை இச்சாசனம் (அரசாணை) கூறுகிறது. (வேங்கடசாமி, 2003:80-81)
முந்தைய வடார்க்காடு மாவட்டம், போளூர் வட்டம், வடமகாதேவிமங்கலம் என்னும் ஊரில் உள்ள சாசனம் (அரசாணை), சாசம்புவராயர் சகலலோக சக்கரவர்த்தி ராஜநாராயணனுடைய 19ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இது மகாதேவிமங்கலத்தைச் சேர்ந்த தனிநின்று வென்றான் நல்லூர் என்னும் இடம் அஞ்சினான் புகலிடமாக இருந்தது என்று கூறுகிறது. இதனால் அபயதானத்தைப் பண்டைக்காலத்தில் சமணர் நடைமுறையில் செய்துவந்தனர் என்பது ஐயமற விளங்குகிறது. மூன்றாவதாகிய ஒளடத தானத்தையும் சமணர் செய்து வந்தனர். பெளத்தர்களைப்போலவே, சமணப்பெரியார்களும், மருத்துவம் பயின்று நோயாளிகளுக்கு மருந்துகொடுத்து நோயைத் தீர்த்து வந்தனர். சமணர் தம் மடங்களில் இலவசமாக மருந்து கொடுத்து மக்களின் நோயைத் தீர்த்து, அம்மதத்தின் ஆக்கத்திற்கு உதவியாக இருந்தனர். சமணர்கள் மருத்துவம் பயின்று மருந்து கொடுத்து நோய் நீக்கியசெய்தி, அவர்கள் இயற்றிய நூல்கள் சிலவற்றிற்குத் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் என்று மருந்துகளின் பெயரிட்டிருப்பதனாலும் அறியப்படும். நான்காவதாகிய சாத்திர (கல்வி) தானத்தையும் சமணர் பொன்னேபோல் போற்றிவந்தனர். சமணப்பெரியோர், (பெளத்தர்களும் கூட) தம் பள்ளிகளிலே ஊர்ச்சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்தனர். இதனாலேயேப் பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று. பள்ளி என்றால் சமணப்பள்ளி அல்லது பெளத்தப்பள்ளி என்பது பொருள். சமணர்களின் சாத்திர (கல்வி) தானம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும் தம் சமய நூல்களைப் பல பிரதிகள் (படிகள்) எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம்செய்தார்கள். அச்சுப்புத்தகம் இல்லாத அந்தக்காலத்திலேயேப் பனை ஏடுகளில் நூல்களை எழுதி வந்தார்கள். ஒரு சுவடி எழுதுவதற்குப் பலநாட்கள் செல்லும். பொருட்செலவு (எழுத்துக்கூலி) அதிகம். ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் எழுதி வைத்துக் கொள்ள முடிந்தது. பொருள் அற்றவர் புத்தகம்பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமய நூலைப் பலபிரதிகள் (படிகள்) எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள். கி.பி.10-ஆம் நூற்றாண்டிலே கன்னடநாட்டில் இருந்த, சமணசமயத்தைச் சார்ந்த அத்திமுப்பே என்னும் அம்மையார் தமது சொந்தச் செலவிலே சாந்தி புராணம் என்னும் சமணசமய நூலை ஆயிரம் பிரதிகள் (படிகள்) எழுதுவித்துத் தானம் செய்தார் என்பர். சமணசமயம் செழித்து வளர்வதற்கு மற் றொரு காரணமாயிருந்தது யாதெனின் அவர்கள் மேற் கொண்டிருந்த தாய்மொழிப் பரப்புரையாகும். சமண சமயத்தார், பெளத்த சமயத்தாரைப் போலவே, தாங்கள் எந்தெந்த நாட்டிற்குப் போகிறார்களோ அந்தந்த நாடுகளில் வழங்குகிற தாய்மொழியிலே தங்கள் மதநூல்களை எழுதினார்கள். இதனால் அந்தந்த நாட்டுமக்கள் எளிதிலே இந்த மதக்கொள்கைகளை அறிந்து கொண்டு அவற்றைக் கைக்கொள்ள முடிந்தது. (வேங்கடசாமி,2003:82-83)
துணைநூல் பட்டியல்
1. இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
2. இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் சொல்லதிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
3. இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
4. கருணாநிதி,ந., 2008, தொல்காப்பியம், சென்னை: வசந்தா பதிப்பகம்.
5. மாணிக்கவாசகன், ஞா., 2006, தொல்காப்பியம், சென்னை: உமா பதிப்பகம்.
6. வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி - 6, சென்னை: மக்கள் வெளியீடு.
7. வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி - 1, சென்னை: மக்கள் வெளியீடு.
8. வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி - 4, சென்னை: மக்கள் வெளியீடு.
9. வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி-3, சென்னை: மக்கள் வெளியீடு.
10. வேங்கடசாமி, மயிலை சீனி., 2002, சமயங்கள் வளர்த்த தமிழ், சென்னை: எம். வெற்றியரசி.
11. வேங்கடசாமி, மயிலை சீனி., 2002, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி - 5, சென்னை: மக்கள் வெளியீடு.
12. வேங்கடசாமி, மயிலை சீனி., 2003, சமணமும் தமிழும், சென்னை: வசந்தா பதிப்பகம்.
13. வேங்கடசாமி, மயிலை சீனி., 2003, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி - 2, சென்னை: மக்கள் வெளியீடு.
14. வேங்கடசாமி, மயிலை சீனி., 2004, பெளத்தமும் தமிழும், சென்னை: நாம் தமிழர் பதிப்பகம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.