இனநல்லுறவினை நிலைநிறுத்திய இலங்கையின் பொலநறுவை இராசதானி
கவிக்கோ வெல்லவூர்க் கோபால்
இலங்கை
(இவ்வாய்வுக் கட்டுரையானது பொலநறுவைக் கல்விமானும் ஆய்வாளருமான திரு.ஜயசிங்க பாலசூரிய அவர;களது ‘நட்பு ரீதியான தலைநகரம்- பொலநறுவை’ (Mithrathvaye Aganagaraya - Polonnaruwa) எனும் அறிமுக நூலினைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டதாகும்)
அறிமுகம்
இலங்கையின் மத்தியகால தலைநகரமாக வரலாற்றில் இடம் பெறுவது பொலநறுவையாகும். அனுராதபுரத்திற்கு அடுத்த இலங்கையின் இரண்டாவது பெரிய இராசதானி என்ற பெயரும் அதற்கு உரியது.

இராசராசன் எனப் புகழப்பட்ட அருண்மொழித்தேவன் கி.பி 985ல் சோழநாட்டின் வேந்தனாக முடிதரித்தான். அவன் பதவிக்கு வந்ததும் ஈழத்துடன் இறுக்கமான தொடர்பினைப் பேணிக் கொண்டிருந்த அமரபுயங்க பாண்டியனைத் தோற்கடித்து பாண்டி நாட்டைக் கைப்பற்றினான். அதன் பின்னர் தனது புதல்வனான இராசேந்திரன் தலைமையில் சேரத்தையும் இணைத்துக் கொண்டான். இக்காலத்தே அனுராதபுரத்தில் அரசிருக்கையைக் கொண்டிருந்த ஈழவேந்தன் 5ஆம் மகிந்தன் தனது ஒற்றர்களைப் பாண்டிய நாட்டுக்குள் ஊடுருவச் செய்து தனது ஆட்சிக்கு எதிராகச் செயல்படுவது இராசராசனுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. இதனைக் காரணப்படுத்தி இராசராசன் வடபகுதியூடாக அனுராதபுரத்தைக் கைப்பற்றினான். இலங்கையின் வடபகுதி முழுவதும் சோழரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் அது மும்முடிச் சோழ மண்டலம் எனும் பெயருடன் சோழப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. அதனைத் தொடர்ந்து போரினால் அழிபாடுற்ற பண்டைய நகரமான அனுராதபுரத்தைச் சோழர்கள் கைவிட்டு, அதன் தென்கிழக்காக அமைந்திருந்த பொலநறுவையைத் தங்களது தலைநகரமாக மாற்றி ‘ஜனநாதமங்கலம்’ எனப் பெயர் சூட்டினர். அதன் பின்னர் இராசராசனின் மகனான இராஜேந்திர சோழன் 1017ல் பெரும்படையுடன் ஈழம் நோக்கிய படையெடுப்பில் நாடு முழுவதையும் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். அதனைத் தொடர்ந்து இலங்கையில் சோழர் ஆட்சி சுமார் 70 ஆண்டுகள் வரை நீடித்தது.
இலங்கையைப் பொறுத்தவரை சோழர்கள் பெரும் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற தன்மையில் தங்களது ஆட்சியைக் காப்பாற்ற பாரிய கவனம் செலுத்த வேண்டியவர்களாகவே இருந்தார்கள். இதனால் பெருமளவு படையணியினையும் அதிகாரிகளையும் பணியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இலங்கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது.

மன்னன்பிட்டிப் பிரதேசமும் சோழர்கால தென்னிந்தியச் சமூகங்களும்
சோழர்களின் ஆட்சி மற்றும் நிருவாகச் செயல்பாடுகளுக்காகத் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் பொலநறுவையிலிருந்து விரிவுபட்டவர்களை மகாவலிகங்கைக்கு அப்பால் வளம்மிக்க பகுதியான மன்னம்பிட்டியிலும் சமூகக் கடமைகள் மற்றும் ஏனைய பணிகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களை மன்னன்பிட்டியை அடுத்த சமணன்பிட்டியிலும் குடியமர்த்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. எனினும் மட்டக்களப்பு பூர்வீக வரலாற்று ஆவணங்களின்படி சோழர் வரவுக்கு முன்னரேயே மட்டக்களப்பில் ஏழு இடங்களில் ஏற்பட்ட தமிழக வன்னியர் குடியேற்றத்தில் ஒன்றாக மன்னன்பிட்டியை அண்டிய முத்துக்கல் அமைவதைப் பார்க்கின்றோம். முத்துக்கல் வரலாற்றில் வன்னிமைகள் மற்றும் உடையார்கள் தொடர்பான தகவல்களையும் அவதானிக்க முடிகின்றது. இது சோழர்காலக் குடியேற்றமாகவும் அமையலாம். மிக நீண்டகாலமாக மட்டக்களப்புத் தேசத்துடன் இணைந்திருந்து ஆங்கிலேயர் ஆட்சியின் முடிவில் பொலநறுவையுடன் இணைக்கப்பட்ட மன்னன்பிட்டி, முத்துக்கல், சமணன்பிட்டி, தம்பன்கடவை, கருப்பளை. கண்டாக்காடு, சொரிவில், திரிகோணமடு, கல்லூர், பிள்ளையாரடி போன்ற கிராமங்கள் இன்று சிங்களப் பிரதேசமாக மாற்றமடைந்துள்ள நிலையில் அங்குள்ள வழிபாட்டுத் தலங்கள் தமிழரின் பண்டைய இருப்பை நிலைநிறுத்தவே செய்கின்றன.
1960 வரையான காலப்பகுதியில் இப்பிரதேச அரசுப்பதவிகள் பெரும்பாலும் தமிழர் வசமே இருந்துள்ளன. முத்துக்கல் குலசேகரம்பிள்ளை உடையார் மற்றும் முத்துக்கல் காத்தமுத்து உடையார் போன்றவர்களும் 1965வாக்கில் அப்பிரதேச உள்ளுராட்சி மன்றத்தின் தலைவராகக் கடமையாற்றிய கதிர்காமத்தம்பி போன்றவர்களையும் இதில் குறிப்பிடலாம்.
தளபதி குலசூரியத்தரையனின் சந்ததியினர்
சோழராட்சியின் இறுதிக்காலத்தே ‘வேளைக்காரர்’ எனக் குறிப்பிடப்படும் வன்னியப் படையணியின் தளபதியாகவிருந்தவன் குலசூரியன் என அழைக்கப்பட்ட குலசூரியத்தரையனாவான். அரையர் எனும் பதம் வன்னியரைக் குறிப்பதாகும். மன்னம்பிட்டிப் பிரதேசத்தின் சமூகக் கட்டமைப்பிலும் தமிழகத்தின் வேளைக்காரர் (வன்னியர்) மற்றும் அடப்பர் சமூகங்கள் மிகுந்த முன்னுரிமை பெறுபவை. இக்காலத்தே சோழப் பேரரசு அது ஆதிக்கம் செலுத்திய அனைத்து இடங்களிலுமே ஒரு தளம்பல் தன்மையையே எட்டியிருந்தது. இலங்கையில் மக்களுக்கு நிறைவான வாழ்க்கை கிட்டாத நிலையில் அரசுக்கெதிரான உள்ளுர்க் குழப்பங்களும் தோற்றம் பெறலாயின. இது 1ஆம் விஜயபாகுவுக்கு ஒரு சாதகமான சூழலாகவும் அமைந்தது. முதலில் ஈழத்தில் உரோகணத்தை இழந்துவிட்ட அவர்களுக்குத் தொடர்ந்து பொலநறுவையில் தாக்குப் பிடிக்கத்தக்க படைபலம் இருக்கவில்லை. இதனால் தோல்வியை அனுசரித்துச் செல்லவேண்டிய நிலையேக் காணப்பட்டது. இதன்போது வேளைக்காரர்கள் தங்கள் சண்டையைத் தொடரமுடியாமல் விஜயபாகுவுக்குத் தங்கள் ஆதரவினை வெளிப்படுத்த வேண்டியவர்களானார்கள்.
பொலநறுவையிலுள்ள வேளைக்காரர் (வன்னியப் படைகள்) கல்வெட்டு
அதனைத் தொடர்ந்து குலசூரியனின் படைநடாத்தும் திறமையிலும் வீரத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவனான விஜயபாகு அவனைத் தனது தலைமைத் தளபதியாக நியமித்தான். அதன்பின்னர் அவனது நீண்டகால ஆட்சிக்குப் பெரும்துணை புரிந்தவனாகக் குலசூரியன் வரலாற்றில் பேசப்படுபவனானான். தமிழகத்தின் திருமுக்கூடல் கல்வெட்டு இவனைச் சிறப்பிப்பதையும் இலங்கை பனாக்கடுவை செப்பேடு வன்னியப் படைகளை விஜயபாகு தன்னுடன் இணைத்துக் கொண்டமை பற்றிக் குறிப்பிடுவதையும் பார்க்கலாம். சூளவம்சத்தின் ஐம்பதாவது அத்தியாயமும் இதனை உறுதி செய்கின்றது. தொல்லியலாளர் பேராசிரியர் எஸ். பரணவிதானயும் தனது ஆய்வுக் குறிப்பில் சோழ மன்னர்களைப் போல் விஜயபாகுவும் வன்னியர்களது சேவையைப் பாராட்டி நிலக்கொடையளித்து அவர்களை இங்கேயேத் தங்க வைத்துள்ளமை பற்றிக் (The Polonnaruwa Inscription of Vijayabahu I EI XVIII P.337) குறிப்பிடுகின்றார்.
குலசூரியத்தரையனுக்கு விஜயபாகு அளித்த நிலக்கொடை

தனது நீண்டகால ஆட்சியில் பல தடவைகள் எதிரிகளின் படையெடுப்புகளை முறியடித்து உறுதுணை புரிந்த குலசூரியனது திறமையைப் பாராட்டி மன்னன் விஜயபாகு அவனுக்குக் கொடி, குடை, ஆலவட்டம் என்பன விருதளித்து தனது ஆளுகைக்கு உட்பட்டிருந்த மாத்தளைப் பிரதேசத்தின் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலபுலங்களைக் கொண்ட அம்பனை என்ற இடத்தை குலசூரியனுக்கும், அவனது சந்ததியினருக்கும் செப்புப் பட்டயம் எழுதிக் கையளித்ததாகவும், பின்னர் குலசூரியனின் சந்ததியினர் அம்பனையில் குடியேறியதாகவும் அதுமுதல் கொண்டு சிலநூறு ஆண்டுகள் அம்பனைக்கும் மன்னம்பிட்டிக்கும் திருமணத்தொடர்பு இருந்ததாகவும், இதுவே ‘வர்ணகுலசூரிய வம்சய’ எனும் சிங்கள சமூகத்தின் தோற்றுவாயாக அமைந்ததாகவும் நாம் மேற்கொண்ட களஆய்வுகளில் நிலைநிறுத்தப்பட்டன. இதனைச் சான்றுபடுத்தத்தக்கதாக12.06.1966ல் மாத்தளைக் கச்சேரியால் அரச அதிபர் சார்பில் ஒப்பமிடப்பட்ட ஆவணங்கள் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டன. கூடவே 1907ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி துணை நில அளவையாளர் நாயகத்தால் உறுதிசெய்யப்பட்ட அதற்குரிய நில அளவைப்படமும் கையளிக்கப்பட்டது. உரிய செப்புப் பட்டயம் இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதான தகவல்களும் பெறப்பட்டன. அதன் பின்னர் அம்பனையில் மன்னம்பிட்டி அடப்பனார் மகள் காளியம்மை என்பவர் பெயரில் பதியப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நிலமும் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்புச் சட்டத்தின்கீழ் சுவீகரிக்கப்பட்டு பொதுமக்களுக்குப் பங்கீடு செய்யப்பட்டன.
பொலநறுவையின் தமிழ் - இந்துப் பண்பாடு
இலங்கை வரலாற்றில் தொடக்ககாலம் முதலே சிங்கள தமிழ் உறவு நிலைபெற்றிருந்தமையை மகாவம்சம் மற்றும் சூளவம்சம் போன்ற வம்ச நூல்கள் மூலம் உணரமுடியும். சிங்கள மன்னர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களுடன் நட்புரிமை பாராட்டியுள்ளமையும், அவர்களுக்கிடையேயான யுத்தச் சூழலில் உதவி ஒத்தாசைகள் புரிவதும் வரலாற்றுப் பதிவாகவேயுள்ளது. இது குறித்து ஆய்வாளர் ஜயசிங்க பாலசூரிய தனது “நட்புரீதியான தலைநகரம் - பொலநறுவை” எனும் நூலில் ( பக்: 18, 19,20, 21, 22) குறிப்பிடும் கருத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபனவாகும். அவற்றைச் சுருக்கமாகப் பதிவிடுவது அவசியமாகின்றது.
“மகாவம்சத்தில் பெருமளவு சிங்கள தமிழ் யுத்தம் பற்றியே பொதுவாக வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள நட்புறவினால் ஏற்பட்ட நன்மைபற்றி மிகமிகக் குறைவாகவே கூறப்பட்டுள்ளமையினால் சிங்கள தமிழ் எதிர்ப்பே நமக்கு விளங்குகின்றது. எது எவ்வாறிருப்பினும் - யதார்த்தம் என்னவென்றால் சிங்கள தமிழ் மக்கள் தங்களது சுய கௌரவத்துடனும், கலாசாரப் பிணைப்புடனும், நட்புறவுடனும் வாழ்ந்திருந்த நிலையிலும் அவர்கள் தங்களது தனித்துவத்தை இழந்துவிடவில்லை என்பதாகும். தமிழரது செல்வாக்கு மேலோங்கிய காலம் பொலநறுவைக் காலமாகும். ஒரு நீண்டகாலம் பொலநறுவை சோழராட்சிக்கு உட்பட்டிருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சோழரிடமிருந்து பொலநறுவையை விஜயபாகு கைப்பற்றிய போதும் அவன் பௌத்த மதத்தைப் போலவே, இந்து மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தான். திருகோணமலை- கந்தளாயில் விஜயராஜ ஈஸ்வரம் கோவிலைக் கட்டியதோடு அரசு பரிபாலனத்தில் மூன்று மேல்நீபதிகளாக தமிழர்களை நியமித்தான். தனது சகோதரியைப் பாண்டிய குமாரனுக்கு மணம் செய்து கொடுத்தான். அரசுச் சின்னமான தலதாவின் பாதுகாப்பை வேளைக்காரப் படையினர் மீது (வன்னியர்) கொண்ட முழு நம்பிக்கை காரணமாக அவர்களிடம் கையளித்தான். இடையிடையே சமஸ்கிருதமும் சிங்களமும் கலந்த தமிழ்க் கல்வெட்டே இதற்குச் சான்றாகும்.
பிராமணர்களை அழைத்து வந்து மந்திரங்களை ஓதுவித்தான். தனது மனைவியரின் வழிபாட்டிற்காகப் பதின்மூன்று கோவில்களை அமைத்தான்.

பொலநறுவைக் காலத்தே சிங்கள் மொழியின் வளர்ச்சிக்கு தமிழ்மொழி பெரிதும் உதவியது. கற்கடிதங்கள் (கல் பொத்த) பலவும் தமிழில் எழுதப்பட்டன. தமிழ்மொழி கற்றோர் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் தமிழ்ச் சொற்கள் பலவும் சிங்கள மொழியில் கலந்தன. சிங்கள இலக்கியங்களில் தமிழ்மொழி ஆதிக்கம் செலுத்தியது. பொலநறுவை கலாசார பாரம்பரியத்தில் தமிழ்ப் பாரம்பரியம் செல்வாக்குச் செலுத்தியது. பராக்கிரமபாகுவினால் நிறுவப்பட்ட தெமல மகா சாய (தமிழ் மகா சபா) மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அனுராதபுர ஆட்சியில் பாதம் படத்தக்க சந்திர வட்டக்கல்லிருந்த சிவனின் வாகனமான எருது பொலநறுவைக் காலத்தில் நீக்கப்பட்டது. எந்தவொரு சிங்கள மன்னனும் கோவில்களையோ அன்றேல் சிலைகளையோ அழிக்கவில்லை. தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பிரிக்க முடியாத இணைப்பாக இந்து மதமே விளங்கியது. இன்றைய நவீன காலத்திலும் தங்களது கிராமங்களில் ஒரு பிள்ளையார் சிலையையாவது வைத்து வழிபடும் முறையை இங்கு வாழும் சிங்கள மக்கள் வழக்கப்படுத்தியுள்ளனர்.
பொலநறுவை மாவட்டத்தின் தமிழ்க் கிராமங்களான மன்னம்பிட்டி, சொருவில், கருப்பளை, செவணப்பிட்டி, முத்துக்கல், தீவுச்சேனை போன்றவற்றில் தமிழ் சிங்கள உறவை இன்றும் காணலாம். அதேபோல் பௌத்த - இந்துப் பண்பாடும் சிதையக்கூடியதல்ல” என்ற அவரது கருத்துக்கள் ஒரு பண்பட்ட வரலாற்று உண்மையை நிலை நிறுத்தவேச் செய்கின்றது.

பொலநறுவை (அழிபாடுற்ற) சிவாலயங்கள்
இதுவரை பொலநறுவையில் மேற்கொள்ளப்பட்ட ஆகழ்வாய்வுகளின்படி பதினாறு இந்துக் கோவில்கள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் பத்துச் சிவன் கோவில்களும் ஐந்து விஷ்னு கோவில்களும் ஒரு காளி கோவிலுமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை சோழர; காலத்திலும் பின்னரும் கட்டப்பட்டவையாகும். பொலநறுவை ஆட்சிக் காலத்தே அனைத்து இந்து ஆலயங்களிலும் சிறப்பான வழிபாடுகள் இடம்பெற்றுவந்துள்ளமையை அறியமுடிகின்றது. விஜயபாகுவின் ஆட்சிக் காலத்திலும் அதன்பின்னரான பராக்கிரமபாகு மற்றும் நிசங்கமல்லன் ஆட்சியிலும் அதன்பின்னர; கி.பி 1215ல் கலிங்க மாகோன் பொலநறுவையைக் கைப்பற்றி ஆட்சியமைத்த நிலையிலும் பொலநறுவை இந்து ஆலயங்கள் சிறப்பு நிலையிலேயே பேணப்பட்டன.
தொல்பொருள் துறையினr இவற்றை எண்கள் மூலமே அடையாளப்படுத்துகின்றனர். இதில் இராஜேந்திர சோழரால் அவரது அன்னை நினைவாகக் கட்டப்பட்ட வானவன் மாதேவி ஈச்சரம் இரண்டாம் சிவாலயமாக குறிப்பிடப்படுகின்றது. இது இன்றும் மக்களால் வழிபாடு செய்யப்படுகின்றது. இதுவும் ஐந்தாம் சிவாலயமும் ஓரளவு நல்ல நிலையிலுள்ளன.ஏனையவை பெரும்பாலும் அழிவுற்றே காணப்படுகின்றன. இச்சிவாலயங்களின் கட்டிடக்கலைப்பாணியை மையப்படுத்தியே இவை சோழர;காலக் கோவில்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
வானவன்மாதேவி ஈச்சரம்
வானவன்மாதேவி ஈச்வரம் இங்குள்ள ஆலயங்களின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகும். இங்கு கண்டெடுக்கப்பட்ட இராஜராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திர சோழனின் ஆரம்பகாலக் கல்வெட்டைச் சான்றுபடுத்தி, இது 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது. இராஜேந்திர சோழனின் தாயின் பெயர் வானவன்மாதேவி என்பதுவும், அவன் தனது தாயின் பெயராலேயே இக்கோவிலை அமைத்திருக்கக்கூடும் என்பதுவும் ஆய்வுகளின் வெளிப்பாடாகும்.
தமிழகச் சோழர்காலக் கோவில்களுடன் ஒப்பிடும் தன்மையில் அளவில் சிறியதான இக்கோவில் திராவிடக் கட்டடக் கலையின் சோழர் பாணியின் ஆரம்பகாலத்தைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.பொலநறுவை இராசதானி அழிவுற்ற நிலையிலும், இவ்வாலயத்தில் விசேட தினங்களில் பூசைகள் இடம்பெற்று வந்துள்ளமையும், மட்டக்களப்பு மக்கள் சார்பில் இங்கு சிவராத்திரி விழா மிக்க சிறப்பாக இடம் பெற்று வந்துள்ளமையும் அறியப்பட்டதாகும். தற்போதும் சிவராத்திரி தினத்தில் மக்கள் வழிபடவே செய்கின்றனர்.
பொலநறுவை ஆட்சியில் வளர்ச்சியுற்ற பரதக்கலை

கி.பி 11ஆம் நூற்றாண்டின் சோழராட்சிக் காலம் தொடக்கம் கி.பி 15ஆம் நூற்றாண்டு வரையான பொலநறுவை ஆட்சிக்காலத்தில் வழக்கிலிருந்த நடனமானது பரதக்கலையாகவே இருக்கமுடியும் என்பது ஆய்வாளர்களின் ஒத்த கருத்தாவவேயுள்ளது. சோழராட்சியில் வானவன்மாதேவி ஈச்சரத்தில் தேவதாசிகள் பணிபுரிந்ததைப் போல சோழராட்சியின் பின்னர் அவர்களது நிருவாகக் கட்டமைப்பையேப் பின்பற்றிய விஜயபாகு மற்றும் பராக்கிரமபாகு ஆட்சிக் காலத்திலும் அதனைத் தொடர்ந்தாற்போல் இங்கு நெருக்கமுற்றிருந்த பாண்டியப் பேரரசு மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்திலும் அவர்களால் ஆதரிக்கப்பட்டக் கலையாகவேப் பரதக்கலை கொள்ளப்படுகின்றது. அக்காலத்தே இந்து ஆலயங்களிலும் ஏனையப் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் ஆடப்பட்டு வந்த நடனங்களில் இலங்கையின் கண்டிய நடனங்களோ அன்றேல் கேரளத்துக் கதகளியோ ஆடப்பட்டமைக்கான சான்றுகள் எவையும் பெறப்படவில்லை என்பதனை தனது ஆய்வுகளில் (குழடம னுசயஅய ழக ஊநலடழn P:06 -1966) வெளிப்படுத்தும் பேராசிரியர் ஈ.ஆர். சரத்சந்திர பரத நாட்டியமே இங்கு இடம் பெற்றிருக்கமுடியும் எனக் கருதுவது இதில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக அமையும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “பரதநாட்டியமும் கண்டிய நடனமும் - ஒரு ஒப்பீட்டு ஆய்வு” எனும் தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்ட கலாநிதி தாக்ஷாயினி பரமதேவனும் இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளமை (பக்: 60) குறிப்பிடத்தக்கது.
பொலநறுவை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்
சிங்கள தமிழ் மக்களின் சக வாழ்வின் புனித பூமியான பொலநறுவை அகழ்வாய்வுகளின் போது பெருமளவு சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொலநறுவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டவை போக ஏனையவை கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளன. கொழும்பு அருங்காட்சியகத்திலும் பொலநறுவை அருங்காட்சியகத்தின் 7வது பிரிவில் இந்து மதம் சார்ந்த பல சிலைகளையும் சிற்பங்களையும் காணமுடிம். அவற்றில் சில இங்கு பதிவாகியுள்ளன.
பொதுவாகப் பார்க்குமிடத்து இலங்கையர் என்ற உன்னத நோக்கு பொலநறுவை ஆட்சிக் காலத்தில் ஒரு உயரிய நிலையை எட்டியிருந்தமை மறுக்க முடியாததாகும். அவ்வாறு கட்டியெழுப்பப்பட்ட இன நல்லுறவு பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தால் இனவாதத்திற்கு வித்திட்டுள்ளமை இன்றைய ஆய்வுகளில் புலப்படவேசெய்கின்றது.
களஆய்வுத் தகவல்களுடன் ஆதார நூல்கள்
01. Ancient City of Polonnaruwa -World Heritage Convention, UNESCO 21.05.2015
02. Balasooriya Jayasinghe - The Glory of Ancient Polonnaruwa, 2004
03. Balasooriya Jayasinghe - Mithrathvaye Aganagaraya Polonnaruwa (நட்புரீதியான தலைநகரம் பொலநறுவை) - 2014
04. Spencer,George W. - The politics of Plunder.The Chola in 11th Century Ceylon -1976
05.Paranavitana,S. Nicholas CW - A Concise History of Ceylon - 1961
06.Charath Chandra E.R, Folk Drama of Ceylon - 1966
07. தாக்ஷாயினி,பி. - பரதநாட்டியமும் கண்டிய நடனமும் (கலாநிதிப்பட்ட ஆய்வு பக்:60) - 2015
08. கொட்றின்றன், H.W. தமிழாக்கம் -இரத்தினம்.இ. இலங்கையின் சுருக்க வரலாறு- 1960
09. பத்மநாதன்,சி. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - 2006
10. இந்திரபாலா, கா. இலங்கையில் திராவிடக் கட்டிடக் கலை - 1976
11. வெல்லவூர்க் கோபால் - மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம்(திருத்திய பதிப்பு) -2011
12. வெல்லவூர்க் கோபால் - தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் -2003
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.