உரைநடையினும் உயர்ந்தவை கவிதைகள். சமுதாயச் சோலை தளிர்க்க போடப்படும் விதை கவிதை. நகரங்களின் நாகரிகத்தை நவின்று வந்த கவிதை, இன்று கிராமங்களின் உண்மைகளுக்கும் உரு கொடுக்கின்றன. பாடுபொருட்கள் பொதுவானவையாக இருந்தாலும், வாழ்வையும் வாழ்வோரையும் பொறுத்து கவிதைத் தன்மை மாறுபடுகிறது.
சமுதாயத்தில் நடக்கும் சமூகச் சீா்கேடுகளைப் படம்பிடித்துக் காட்டும் எளிய சாதனமாக புதுக்கவிதை அமைகின்றது என்கின்றனா் பேரா இரா. தெய்வம், க. சிராஜீதீன். (1)
கவிஞர் பச்சியப்பனின் ‘மழை பூத்த முந்தானை’ கவிதைகள் தலைக்கு மேல் பட்டங்கள் இருந்தாலும், தலைக்குள் கிராமமே சுழன்று கொண்டிருப்பதை உணர்த்துகின்றன. மனிதனை இன்னும் மனிதனாகவே நிலை நிறுத்திக் கொண்டிருப்பது காதல். தீப்பந்தத்தை தீபமாக மாற்றுவது காதல்.
‘ஓட்டைப்பானையில் கந்தல் சொருகி
தெருக்குழாயில் தண்ணீர்பிடிக்க
உன்னையன்றி
யாருக்கு மனசு வரும்’
(மழை பூத்த முந்தானை)
என்று காதலை தத்தவமாக கூறுகிறார்.
பெண்வாசம் வீசும் வரை பயனற்று ஒதுங்கிக் கிடந்த வாழ்வைத் தட்டித் தேற்றிப் பயன்படுத்திய பக்குவம் அவளுக்குதான் உண்டாம்.
காதலில் விழுந்தால் கவிதையில் எழலாம். வார்த்தைகளே வரிசையாக வராத மனதில் கூட, கணக்கற்ற கவிதையை விதைப்பது காதல்.
‘காதலிக்கும்
காலத்தில்
பாகற்காயும்
பஞ்சாமிர்தம்தான்’
என்ற உ. கிருஷ்ணமூா்த்தியின் கவிதை இங்கு பொருத்தமாகிறது. (2)
காதலி தன்னிடம் கவிதை வரிகள் கால் முளைத்த கவிதையாய்க் கொட்டிக் கிடக்க, அதை ஏன் ஏட்டில் நீ எழுதக்கூடாது? என வினவுகிறாள்.
காதலன் கூறுகிறான்,
‘ஒரு காவியம் குறித்து
கவிதை எழுத முடியுமா?
வேண்டுமானால்
அதை அழகாக வாசிக்கிறேனே!’
(ஆசை தூங்கும் தொட்டில்)
காதலன் குறும்பானவன்தான்.
ஆண்களின் காதல் அம்பலம் ஏறும். பெண்களின் காதல் பூட்டி வைத்தே புழுங்கிப் போகும். குழந்தைகளின் விளைச்சலாய் வீடு வந்து சேராத காதலுக்காய் காதலன் உயிரைவிட, காதலி தன் காதலை விட்டுவிடாமல் பூத உடலாய் மட்டும் புதுக்கணவனோடு வாழ்கிறாள். சாவில் நிரூபணமாகும் ஆண்களின் காதல். சாகும் வரையும் நினைவில் நிரூபணமாகிறது இந்தப் பெண்களின் காதல்.
‘வேணான்டா
இது வெங்கடேசன் ஒடிச்சி குடுத்தது
என்னிடம் எரியாமல்
இதுதான் இருக்கு என்றாய்’
(மன்னித்தேன் என்று சொல்)
எரிந்தும் எரியாமல் இருப்பது அழகான படிமம். எரிந்தது காதலன் உடல், எரியாமல் இருப்பது அவன் நினைவும் அவன் ஒடித்துக் கொடுத்த காட்டுக் கிச்சிலி விறகும்தான்.
“மற்ற கலைகள் போல கவிதையும் அற்புதங்கள் நிறைந்த ஒரு பிரதேசமே” எனும் ஜீ. முருகன் கூற்று இதனை ஒத்தது. (3)
கிராமமெனும் சொர்க்கத்தில் வாழ்ந்தவர்களுக்கு எதைத் தின்றாலும் மண்ணோடே தின்று பழக்கம். மண்ணையும் சத்தாய் தின்றவன்
‘மரம்தோறும்
உலுக்கிய கையை
எது தடுக்கிறது
நகரத் தெருவில்
உதிர்ந்து கிடக்கும்
நாவல் பழத்தை
குனிந்து பொறுக்க’
என்று கூசிக் கிடக்கிறான்.
கிராமத்தில் மண் மண்ணாக இருக்கிறது. நகரத்தில் ஒவ்வாத பொருளாய் மாறி, மிதிக்கவும் அஞ்சி, காலுறைக்குள் காவலில் இருக்கின்றன மனித பாதங்கள். இதுதான் நகர மண்ணின் நிலை.
‘நகரத்தின் முட்டுச் சந்துகளில்
நெருக்கடிகளில் சிக்குண்டு
பிதுங்கி கசங்கி
வாழ்பவனை
சொல்கிறார்கள்
டவுனுல சொகுசா வாழ்றவன்’
என்ற சோலை மாயவனின் கவிதை ப.18 நம் மனதில் நிழலாடுகிறது. (4)
ஆற்றங்கரையில் ஆனந்த குளியல், கிணற்றில் குதி போடும் குதூகலக் குளியல், மாடுகளோடு நீந்தி போடும் மகிழ்ச்சி குளியல், இவையெல்லாம் நகர வாழ்வில் தொலைந்து போனதை
‘நீச்சல் பழகிய
கிணறு விற்று
படிக்க வைத்தார் அப்பா
பாத்ரூமில் குளிக்கும்
பாழாய்ப்போன வாழ்வுக்காக’
(கேட்டது ஒன்று)
என்று வெறுத்து வாழ்கிறார்.
நகரங்கள் இயந்தரத்தனமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. தந்தை தாயின் அரவணைப்பும், தாய்ப்பாலும் தாலாட்டும் இழந்த குழந்தைகள் எத்தனையோ உள்ளன. பக்கத்துத் தெருவில் இழவு என்றாலும் பட்டினி கிடக்கும் பக்குவம் நகரத்திற்கு வந்த பின்னும் மனதை விட்டு நகராமல் இருக்கிறதாம். சவ ஊர்வலம் போவதை பார்த்து;
‘எவர் மரணமென்றாலும்
இடுகாடுவரை
போன பழக்கம்
இத்தனை நெரிசலிலும்
ஜன்னல் வழியே
எட்டிப்பார்க்க
கிடந்து தவிக்கிறது’
(மேலது)
என்று பரிதவிக்கிறார்.
வெட்டவெளியில், கயிற்றுக் கட்டிலில், நிலவும் நட்சத்திரங்களும் இலவச ஒளி வழங்க, தென்றல் சாமரம் வீச, உலகமே தனக்கு சொந்தமென வாழ்ந்த கிராமவாசி நகரத்திற்கு நகர்கிறான்.
புறாக்கூடுகளாய், பூசையறையும் கழிவறையும் உள்ளுக்குள்ளேயே அமைத்த வாடகை வீட்டில் வாழ்கிறவன் தன் மழலை தன்னார்வமாய், கிறுக்கலாய் தீட்டும் ஓவியத்தை ரசிக்க மனமிருந்தும் அந்த சின்ன ‘மருது’ வின் கைகளைக் கட்டிப் போடுகிறான்.
ஹவுஸ் ஓனர் திட்டுவாரும்மா என்றவுடன்
‘சுவரில் இசைக்க வரும்
குழந்தையின் விரல்கள்
மூச்சுமுட்டி தளறுமாறு
எது அவனை வீடற்றவனாக ஆக்கியது?’
(வாடகை வாழ்வு)
நம் வீடு எனும் உணர்வு வாடகை வீட்டில் அந்நியமாகிப் போகிறது.
கிராமத்தில் கல்வி பெற எது எதுவோ தடையாகிறது. சிலர் ஆரம்பத்திலேயேப் படிப்பை விட்டு நிற்க, சிலர் உயர்நிலையில் சிலர் மேனிலையில்.
வறுமை, வாத்தியார் அடி, வயதுக்கு வந்தது, வீட்டைக் காக்க வேண்டிய சூழல் என எத்தனையோ காரணங்களுக்கு மத்தியிலும், படித்துவிட்டு அரசு வேலை கிடைக்கும் வேண்டுதல்கள் வீணாகிப்போய், தனியாரிடம் தஞ்சம் புகுந்தால் வல்லான் வகுத்ததே விதியாய் மாற, மனித நேயம் மறத்துப் போய், கட்டுப்பட்டு நடப்பதே விதியாய் வாழ்பவன், தான் செய்த சிறு தவறுக்காய் எஜமானரிடம் கண்கலங்கி இந்த வேலையும் போய்விடுமோ என கதிகலங்கி நிற்பதை;
‘நோய் வந்த கோழிகளாய்
ஓவ்வொன்றாய் சுருண்டு விழ
வேலய விட்டு
எடுத்துராதீங்கய்யாவென
உன்னிடம் கண்கலங்கி நிற்க
தப்பி வந்தேன் நான்”
(நீ என்னவோ ஆகனும்னு)
கிராம சுதந்திரம் நகரத்தில் நசுக்கப்படுகிறது.
வழிபோக்கனுக்கும் தாகம் என்று வந்தால் மோர் கொடுக்கும் கிராமம். நகரம் தண்ணீருக்கும் தனிவரி போடுகிறது. தண்ணீர் பிளாஸ்டிக்குகளில் தஞ்சம் புகுந்துவிட்டது.
“புதுவீட்டின்
ஆழத்திலிருந்து வீசுகிறது
மீன்வாசம்!”
என்ற பாவலா் சொல்லினியனின் கவிதை கிராமங்களை அழித்து நகரங்களை உருவாக்கி வதைபடுவதை விளக்குகிறது. (5)
‘பாக்கெட் தண்ணீர்
பருகும்தோறும்
அடிக்கிறது அதனின்
பிணவாடை’
(கானல் நீர்)
வெல்லமாய் இனிக்கும் வெட்டுக்கிணற்று நீர். பாக்கெட்டில் பிணவாடை அடிக்கிறதாம்.
சமுதாயத்தில் இருக்கும் பல்வேறு கைகளின் மத்தியில் வயிற்றுப்பசிக்காய் கையேந்தும் இந்தக் குழந்தையின் கையும் உள்ளதே எனப் பரிதாபப்படுகிறார்.
‘இத்தனை கைகளுக்கிடையேதான்
இந்த குழந்தை
கையேந்துகிறது’
(கைவீசம்மா கைவீசு)
விவசாயிகளின் நிலையை;
‘அஞ்சாஸ்பவரு
காயல்கட்ட
மூவாயிரத்துக்குகிட்ட ஆகும்ன்பாங்க
ஆதனாலதா இந்த ஜதைய
சந்தைக்கு ஓட்டி வந்தேன்
இந்த எருதுங்கள வாங்கி
அறப்புக்காரனுக்கு மட்டும் தள்ளிராதய்யா’
(கோடை)
வறுமையால் காளைகளை விற்றாலும் அறுப்புக்கு போகக்கூடாதே என்கிற ஆதங்கம் அவனுக்கு மட்டும்தான் வரும்.
கிராமம் இயற்கையானது, இயல்பானது, சொர்க்கமானது. கூடவே வறுமை, வஞ்சனை, வன்முறை கலந்தது என்பதை இவர் அம்பலப்படுத்த அஞ்சவில்லை.
‘செத்தால் சிரிக்கின்ற
பங்காளி சுற்றியிருக்க
பயிர்த்தொழில் ஒன்றும்
லேசுப்பட்ட காரியமில்லை’
(நிலவரம்)
இயற்கை அழகுகளை காணும்போதெல்லாம் இன்பமடைகிறேன். மனிதா்களைக் காணும்போது மட்டுமே பெரும்பாலும் ஏற்படுகிறது
காட்சிப் பிழை! என்ற பாவலா் வையவனின் கவிதை எதிரொளிக்கிறது. (6) (ப.21 சொல்வெளி)
வாழ்வின் சுமைகளை வேறொருவர் மீது இறக்காமல் வாழவேண்டும் என்பதை,
‘அவரவர் சுமை
அவரவர் வீடு
அடைவதென்பது
அது நம்பாடு’
(முடியாத வெள்ளம்)
என்று சித்தர்களுக்கு மட்டுந்தானா தத்துவம் தெரியும், இந்தச் சுமை தூக்குபவனுக்கும் தெரியும் என இக்கவிதையில் நிரூபிக்கிறார்.
இப்படி மழை பூத்த முந்தானை கிராமத்தைக் கண்முன் நிறுத்துவதோடு, காதல், உறவு,மோசம், துரோகம், தத்துவம் என கவிதைகளுக்குரிய அத்தனை உணர்வுகளோடும் உத்திகளோடும் விரிந்திருந்து விருந்து படைக்கின்றன.
கவிஞர் பச்சியப்பனின்- மழை பூத்த முந்தானை -கவிதை, கற்பகம் புத்தகாலயம், 14 முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம் சென்னை-600 024. பதிப்பு 1996.
1. முனைவா் இரா.தெய்வம், முனைவா் க.சிராஜீதீன், தமிழ் இலக்கிய வரலாறு - புதுக்கவிதை -ப.228, மணிவாசகா் பதிப்பகம், 31, சிங்கா் தெரு, பாரிமுனை,சென்னை-600108. மூன்றாம் பதிப்பு-ஜீன் 2013.
2. உ.கிருஷ்ணமூா்த்தி-, நிராகரிப்பின் வலி ப.16 (ஏக்கம்), விளிம்பு -அடையாளம், திருச்சி. பதிப்பு 2008.
3. ஜீ.முருகன், காட்டோவியம்-கவிதைகளும் நானும் ப.4, யாவரும் பப்ளிஷா்ஸ், முதல்பதிப்பு - நவம்பா் 2017.
4. சோலை மாயவன், விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி- ப.18, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், பில் சின்னாம்பாளையம், சமத்துார் அஞ்சல், பொள்ளாச்சி. முதல்பதிப்பு - 2017.
5. பாலா் சொல்லினியன், இனிப்பு சுற்றிய காகிதம் ப.16, அகநி வெளியீடு, எண் 3, பாடசாலை தெரு, அம்மையப்பட்டு, வந்தவாசி - 604 408. முதல்பதிப்பு - ஜீலை-2017
6. பாவலா் வையவன், சொல்வெளி ப.21, நெசவுக்குடில், 54, பிள்ளையார் கோவில் தெரு, தமிழ் மின் நகா், திருவண்ணாமலை - 606601. முதல் பதிப்பு - நவம்பா் 2017.