நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத ஞானச் செறுக்கு. எந்த நிலையிலும் பதவிக்கோ, பணத்திற்கோ அடிமையாகாமல் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் இறுதி மூச்சு வரை கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்று செயல்பட்டவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். தாம் கொண்ட கொள்கைக்காவே உயிர்மூச்சாக இருந்து வாழ்ந்தவர். "இன்பத் தமிழ் மொழிக்கென்றும் என் மூச்சும், இனியதமிழ் நாட்டைப்பற்றி என் பேச்சும், அன்பின் பிணைப்பினுக்கென்றன் கை வீச்சும், அடங்காமல் என்றும் இத்தரையில் நின்றோச்சும்! தமிழினம், தமிழ்நாடு, தமிழ்மொழி என்னும் மூன்றுமே பாவலரேறுவின் எண்ணம், ஏக்கம், எழுத்து, பேச்சு, இயக்கமாக இருந்தது. அதையே தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வரலாறாய்த் திகழ்ந்தவரின் அடிச்சுவட்டை அறிந்து கொள்ளும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது. பாவலரேறுவின் பன்முகத் தன்மையை ஆராய்ந்து வெளிக்கொணர்வதே நோக்கமாகவும் அமைகிறது.
எந்த சமரசத்திற்கும் ஆட்படாதவர்
மொழித்தூய்மை, தமிழின விழிப்பு, தமிழக விடுதலை இம்மூன்றையும் கொள்கையாக வாழ்ந்தும் செயல்படுத்தியும் வந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
“கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடுடைய தில்” (1021)
ஏதாவது ஒரு கொள்கையை மேற்கொண்டால், ஏற்றுக்கொண்டால், அதனுடைய செயல்பாடுகளுக்கு உன்னை உள்ளாக்கிக் கொண்டால், நீ எந்தச் சூழலிலும், எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும், உன்னுடைய கையை நெகிழ்த்துக் கொள்ளாது இருப்பதுதான் இன்றைய உலகத்திலே நிலைபெற்றது. பெருமைப்படக் கூடியது என்னும் திருக்குறள் விளக்கத்திற்கேற்ப தம்மை முழுமையாக ஈகம்செய்துகொண்டவர்.
அகச்சிந்தனை
பெற்றோர் இட்ட பெயர் அரசமாணிக்கம் ஆகும். (இராசமாணிக்கம்) இவ் அரசமாணிக்கமே மாணிக்கம் என்று சுருக்கப் பெயராகித் தந்தையார் பெயரின் முன்னோட்டோடு துரை.மாணிக்கம் என ஆயிற்று. பின்னாளில் பாவலரேறுவின் புலமைத்திறத்தையும் பேச்சு வன்மையையும் பாராட்டி “துரை மாணிக்கத்தின் உரை மாணிக்கம்” என்று வியந்தோதும் படி வன்மை பெற்றுத் திகழ்ந்தார். திருக்குறளில் ஆழ்ந்த புலமையும், விரிவான ஆராய்ச்சி நோக்குமுடைய தமிழாசிரியர் சேலம் நடேசனார், மறைமலை அடிகளார்பால் பேரன்பு கொண்டு தூய தமிழ்ப்பற்றை மாணவரிடையே ஊட்டியவர். தந்தை பெரியாரின் தன்மான இயக்க ஈடுபாடும் கொண்ட மற்றொரு தமிழாசிரியர் பொன்னம்பலனார். இவர்களின் சீரிய தமிழ்ப்பற்றானது பாவலரேறுவின் அகத்திலும் குடிகொண்டன.
1950-இல் பள்ளிப் படிப்பை முடித்து சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமது கல்லூரி வாழ்க்கையைத் துவக்கினார். தமிழுணர்வும் தமிழறிவும் நிறைந்த தமிழ்ப் பெருமக்களால் அக்கல்லூரி புகழ்பெற்று விளங்கியது. அக்கல்லூரியில் மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் பேராசிரியராக விளங்கியதால் அவரின் மாணவராகவும் சிறப்புப் பெற்றார். பின்னாளில் இறுதிமூச்சுவரை ஆசிரியர் மாணாக்கர் நட்பு தொடர்ந்தது. பாவலரேறுவின் தமிழ்ப்புலத்தால் பெரும் தமிழறிஞர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்பைவிட எதிர்காலத்தில் செய்ய வேண்டிய தமிழ்ப்பணி, பொது நலப்பணிகள், தனித்தமிழ் இயக்கச் செயல்பாடு குறித்த எண்ணங்களும் திட்டங்களுமே பாவலரேறுவின் சிந்தனையின் நினைவோட்டங்களாயிருந்தன.
“என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன்- வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன்- வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ளமாட்டேன்-இந்தப்
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன் ” (கனிச்சாறு, ஏழாம் தொகுதி, ப.38)
எனத் தன் எண்ணம், எழுத்து, செயல், இயக்கம் எல்லாமுமே தமிழுக்காக வாழ்ந்து காட்டியவர் பெருஞ்சித்திரனார் ஆவார். தாம் நடத்தி வந்த ‘தென்மொழி’ இதழுக்கு அரசுப்பணியால் இடையூறு நேரும் என்பதாலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாலும் அரசுப் பணியைத் துறந்தார். ‘தென்மொழி’ இதழின் வழி நாடு, மொழி, இனம் மீட்புக்காகவே தமது வாழ்நாளை முழுவதும் ஈகம் செய்து கொண்டார்.
புனைப்பெயர்கள்
துரை மாணிக்கனார், தாம் அரசுப்பணியில் இருந்தமையால் ‘தென்மொழி’ இதழுக்குப் பொறுப்பாசிரியர் என்ற நிலையில் தம் பெயரைப் ‘பெருஞ்சித்திரன்’ என்று புனைப்பெயராகப் பதிவு செய்தார். அருந்தமிழ்ப் புலமையிலும் வறுமையிலும் செம்மையான வாழ்க்கை நடத்தியதிலும் வன்மைக் குணத்திலும் நிகரற்று விளங்கிய சங்கப்புலவரான பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக அப்பெயரையேத் தமது புனைப்பெயராகத் தேர்ந்தெடுத்து வாழ்விலும் அக்குணத்தை மேற்கொண்டிருந்தார். அருணமணி, பாவுண்தும்பி, தாளாளன், மெய்மைப்பித்தன், அருணன், கௌளி, ஈட்டி என்னும் புனைப்பெயர்களில் தம் அரிய ஆக்கங்களைப் பதிவு செய்திருந்தார்.
தமிழ் உணர்வாளர்களுக்கெல்லாம் என்றென்றும் எழுச்சியூட்டி நிற்கும் ‘பாவலரேறு’ என்னும் சிறப்புப் பெயரை மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் பெருஞ்சித்திரனார்க்குச் சூட்டிப் பெருமை கொண்டார். கல்லூரி மாணவர்களால் ‘பாவலரேறு’ என அழைக்கப் பெற்றார். நாளடைவில் ‘பாவலரேறு பெருஞ்சித்திரனார்’ என்பதே வழக்காகிவிட்டது.
இதழியலாளராக
இதழ் நடத்துவதில் தமது பள்ளிப்பருவத்திலேயே ஆர்வம் கொண்டிருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், தூய தமிழைப் பல துறைகளில் வளர்த்தெடுக்கவும், இன, நல உணர்வைப் பரப்பி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த இதழ் தொடங்க வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தைச் செயல்படுத்த தம் நண்பர் பன்னீர்செல்வத்துடன் மொழிஞாயிறு பாவாணரைச் சந்தித்தார். இவரின் முயற்சியை வரவேற்றதோடு இதழுக்குத் ‘தென்மொழி’ எனும் பெயரையும் சூட்டி ஊக்கப்படுத்தினார். 1959 -இல் கடலூரிலிருந்து ‘தென்மொழி’ இதழ் திங்களுக்கு ஈரிதழாக வெளிவந்தது. தென்மொழி இதழாக மட்டுமல்லாமல் இயக்கமாகவும் செயல்பட்டது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் கருத்துகளைப் பரப்பிடும் களமாக இருந்த தென்மொழி தமிழ்த் தொண்டர்களையும் இணைக்கச் செய்தது.
“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை; உலகில் எவரும் எதிர்நின்றே! (தென்மொழி இதழ் 1)
எனும் வீரம் சொறிந்த உணர்வுப் பாடலை முதல் பக்கத்தில் தாங்கி தென்மொழி வெளிவந்தது. தொடர்ந்து இப்பாடலே தென்மொழி இதழின் முகப்புப் பாடலாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நல் வரவேற்பைப் பெற்று பல நல்ல தமிழறிஞர்களை உருவாக்கிய பெருமை தென்மொழிக்கு உண்டு.
தென்மொழியின் சிறப்பாசிரியர் பாவாணரும், பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரனாரும், ம. இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா), செம்பியன் (பன்னீர் செல்வம் அவர்களின் புனைப்பெயர்) ஆகியோர் உறுப்பாசிரியர்களாகவும் இருந்து செயல்பட்டனர்.
அண்ணாமலை மாணவர் நடேசன் - சேயோன் ஆனார்; சீனிவாசன்-கழராம்பன் ஆனார். குணசேகரன் - இரும்பொறை ஆனார். சுவாமிநாதன் -இறைக்குருவன் ஆனார். இப்படி தென்மொழியின் தொடர்பால் தனித்தமிழ் உணர்வு வாய்க்கப்பெற்றுத் தங்கள் பெயரைத் தனித்தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டவர்கள் பலர் .
கொள்கை நோக்கு
தமிழர் கலை, இலக்கியம், மொழி வளர்ச்சி, வரலாறு, அரசியல், மொழியாக்கம், சிறுகதை, நாடகம், அறிவியல், அறிவுத் துணுக்குகள் போன்றவற்றைத் தாங்கியிருந்து தென்மொழி தூயமொழித் தொண்டை இவ்விதழின் நோக்கமாக மேற்கொண்டிருந்தது. “மொழித்திருத்தமும் நாட்டு விடுதலையும், மக்கள் பண்பாட்டு வளர்ச்சியும் எங்கள் உயிரும் உணவும் நீரும் ஆகும். என்பதைத் துணிவோடும் கூறிக்கொள்கிறோம்!” எனத் தென்மொழியின் கோட்பாட்டைத் தெளிவாக்கியுள்ளார்.
இளைய தலைமுறையினரைப் பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழி மற்றும் தமிழினவுணர்வோடு வளர்க்க வேண்டும் என்னும் தொலைநோக்கோடு சிறுவர்களுக்கானக் கலை இதழாக 1965 -இல் ‘தமிழ்ச்சிட்டு’ தொடங்கினார்.
தமிழ்மொழி, இன, நாட்டுரிமை மீட்புக்காகப் பின்னாளில் அவர் தொடங்கிய தென்மொழி, தமிழ்ச்சிட்டு (1966) தமிழ் நிலம் (1982) ஆகியவை மூன்று இதழ்களையும் அவரின் இறுதி மூச்சுவரை எண்ணம், செயல், மூச்சாகக் கொண்டு செயல்பட்டார். பொதுவுடைமைக் கருத்துகளாலும், பெரியாரியக் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட பாவலரேறு சிவப்புச் சட்டையையும், கருப்புச் சட்டையையும் அணியத் தொடங்கினார்.
குயில், பகுத்தறிவு, தென்றல், முல்லை, தமிழ்நாடு, வானம்பாடி, தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி போன்ற பல்வேறு இதழ்களில் தம் படைப்புகளை எழுதி தமிழுணர்வுக்கும் இன முன்னேற்றத்திற்கும் நாட்டு விடுதலைக்கும் அரணாகச் செயல்பட்டார்.
உலகத் தமிழ்க் கழகம்
1967 -இல் மலேசியா - கோலாம்பூரிலும், 1968 -இல் சென்னையிலும் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் பாவாணர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். இச்செயலால் தென்மொழி அன்பர்கள் பெரிதும் மனம் வருந்தினர். ஆகவே, தமிழ் அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டும் என்ற முயற்சியில் உருவானதே ‘உலகத் தமிழ்க் கழகம்’ ஆகும். இப்பெயரைச் சூட்டுவதற்கு முழுக் காரணமாக இருந்தவர் பெருஞ்சித்திரனார் ஆவார்.
தமிழ்மொழி உரிமைக்காகவும், தமிழர் இன எழுச்சிமிக்க சிந்தனைக்காகவும் முழுமையாய்ச் செயலாற்றியது உலகத் தமிழ்க் கழகம். தமிழகமெங்கும் நூற்றுக்கும் மேலான கிளைகளை அமைத்தது.
தமிழைப் பிறமொழிக் கலப்பிலிருந்து விடுவிப்பதும், தமிழேத் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்துக்கு மூலமும் ஆகும், என்னும் உண்மையை நிலைநாட்டுவதும், தமிழை அனைத்துத் துறைகளிலும் வளர்த்து வளப்படுத்துவதுமே பாவாணரின் வாழ்க்கை நோக்கமாக இருந்தமையால் அதுவே உலகத் தமிழ்க் கழகத்தின் கொள்கைகளாக வகுக்கப்பட்டன. கழகத்தின் தலைவராகத் தேவநேயப்பாவாணரும், பொதுச்செயலாளராகப் பெருஞ்சித்திரனாரும் உலகத் தமிழ்க் கழகத்தை முனைப்புடன் செயல்படுத்தினர். பாவாணரின் மறைவுக்குப்பின் பாவலரேறின் சிந்தனைத் தளத்தின் அடிப்படையில் குமுகாயச் சீர்த்திருத்தத் துறையிலும், அரசியலிலும் செயற்பாடுகள் தொடங்கின. அதன் விளைவாக 1981-இல் ‘உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்’ என்னும் அமைப்பு நிறுவப்பெற்றது. இதன் வழியாக பல தமிழறிஞர்களைக் கூட்டிப் பல மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தினார். உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் இதழாக விளைந்ததுதான் 1982-இல் தொடங்கப்பெற்ற ‘தமிழ் நிலம்’ என்னும் இதழாகும். பாவலரேறுவின் பேச்சும் எழுத்தும் தமிழ் உள்ளங்களுக்கு மனவெழுச்சியைத் தந்தன.
ஆராய்ச்சியாளராக
திருக்குறளில் ஆழ்ந்த புலமையும், விரிவான ஆராய்ச்சி மனப்பாங்கும் உடையவர். திருக்குறளைப் பயிற்றுவித்தலிலும், பரப்புவதிலும் முதன்மை நோக்கமாகக் கொண்டு திகழ்ந்தவர். ‘திருக்குறள் திறவு’, ‘வாழ்வியல் முப்பது’ போன்ற நூல்கள் இவர் இயற்றியதாகும். அது திருக்குறள் பற்றிய பெருஞ்சித்திரனாரின் எண்ணங்களுக்குத் திறவுகோலாய் அமைந்ததுக்குச் சான்றுகளாகும். தந்தை பெரியாரிடமிருந்து பகுத்தறிவையும், பாவேந்தரிடமிருந்து தூய தமிழ்ப்பற்றையும், மறைமலையடிகளாரிடமிருந்து செந்தமிழ்ப் பற்றையும் பெற்றவர்.
“பாவேந்தரைப் பாடினால் பணம் வந்துசேராது!
ஆவல் அடங்கும்! அடிவயிறு தான்குளிறும்!
மேனியெலாம் நன்றியெனும் நல்லுணர்வால் மேல் சிலிர்க்கும்
தேனில் விழுந்ததுபோல் நாவெல்லாம் தித்திக்கும்
உள்ளம் கிளர்ச்சியுறும்! உயிரும் உவகைபெறும
குள்ள நினைவழியும்! கோபுரமாய் வாழ்வுயரும் !” (கனிச்சாறு, தொகுதி 8, ப.163)
எனப் பாவேந்தரின் பாத்திறத்தையும், பாவினால் கிடைக்கும் உணர்வு மேலீட்டையும் வெளிப்படுத்தியுள்ளார்.
1950 -இல் பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரி வாழ்க்கையில் நுழைகையில் மொழிஞாயிறு பாவாணர் பாவலரேறுவிற்குப் பேராசிரியராக விளங்கினார். அன்றிலிருந்து ஆசிரியர், மாணவர் தொடர்பு கல்லூரியோடு மட்டுமல்லாது இறுதிவரை தொடர்ந்தது. பாவாணர் பாவலரேறுவைத் தம் மாணவர் எனச்சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டார். 1959 -இல் ‘தென்மொழி’ இதழ் தொடக்கத்திற்கும் பெயரிடுவதற்கும் காரணமாக இருந்தார் பாவாணர். தென்மொழியின் சிறப்பாசிரியராகவும் பாவாணர் திகழ்ந்தார்.
மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் வாழ்நாள் பணியான ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி’யை உருவாக்கி வெளியிடுவதற்கு அரசோ, பல்கலைக்கழகங்களோ, வேறு அமைப்புகளோ முன்வராத நிலையில் பாவலரேறு அவர்களே தென்மொழித் திட்டமாக அவ் அகர முதலித் திட்டத்தைச் சிறப்பாக வகுத்தார். அது செயல்படத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசு அத்திட்டத்தை ஏற்று சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
மனிதநேய மாண்பாளராக
பாவாணரின் வாழ்வியல் சூழலில் பெரும் தேக்கத்தை அடைந்த போதும், அவர் துவண்ட பொழுதெல்லாம் தோளாகவும் துணையாகவும் நின்றவர் பாவலரேறு ஆவார். பாவாணரின் வாழ்வியல் தேவைக்கானப் பொருளைச் சேர்த்துத் தரவும், அவரின் அரிய ஆய்வு நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கான ஏற்பாட்டை உருவாக்கவும், உணர்வெழுச்சியுற்று பாவாணர்க்குப் பொருட்கொடை, பாவாணருக்குப் பணமுடிப்பு என்னும் தலைப்பில் தென்மொழி வாயிலாகத் தமிழன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பாவலரேறுவின் முயற்சியாலும், கடும் உழைப்பாலும், கனிவான வேண்டுகோளாலும், ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்டம்’ 1974 -இல் தொடங்கப்பெற்று அதற்குப் பாவாணரே இயக்குநராக அமர்த்தவும் பெற்றார்.
“தமிழ்க்கெனப் பிறந்து தமிழ்க்கென வளர்ந்து
தமிழ்க்கெனப் பயின்று தமிழ்க்கெனப் பயிற்றித்
தமிழ்க்கென ஓய்ந்து தமிழ்க்கென ஆய்ந்து
தமிழ்க்கென வாழுந் தமிழே வாழி” (கனிச்சாறு, தொகுதி 7, ப.128)
தமிழுக்கெனப் பிறந்து தமிழுக்கென வாழ்ந்தவர் பாவாணர் எனப் போற்றுகின்றார்.
பாவாணர் துயருரும் போது ‘பாவாணாரைத் தமிழ் மக்கள் இதுவரைப் புறக்கணித்ததும் இனியும் புரக்காமல் இருப்பதும் பெரும் குற்றமும் இழுக்கும் ஆகும். ஆதலின் தமிழ் அன்பர்களே! செந்தமிழ்ச் செல்வர்களே! பாவாணர்க்குப் பெருஞ்செல்வம் திரட்டித் தர, தென்மொழி வாயிலாகப் ‘பாவாணருக்குப் பொருட்கொடை’ என வேண்டுகோள் விடுத்து, தம் ஆசிரியப் பெருந்தகைக்கு நல்ல மாணவனாக மட்டுமல்லாமல் அவரின் இறுதி வாழ்வு வரை உற்ற துணையாகத் தந்தைக்கு மகன் ஆற்றும் உதவியாகவும் இருந்தார்.
போராளியாக
“எத்தனை முறை எனைச் சிறையிலிட்டாலுமே
என் கொள்கை மாறாது! - ஒரு
பித்தனை ஆண்டியைப் போல் என்றன் உள்ளமும்
பேதமை கூறாது”
(கனிச்சாறு, தொகுதி 7, ப.69)
என முழங்கியவாறே பல முறை சிறைசென்று மீண்டவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். சிறை வாழ்விலும் தமிழ் இயக்கக் கொள்கைகளையே எண்ணி எண்ணி வருந்தினார்.
“எவரெனைத் தடுக்கினும் எவரெனைக் கெடுக்கினும் என் கை வீசி நடப்பேன்” என்றும்,
“மலை குலுங்கினும் வானே இடியினும் மனங்குலையாமல் மேல் நடப்பேன்” என்றும்,
தமிழினம் ஆரியப் பார்ப்பனியச் சாதி, மத, மூடநம்பிக்கைச் சழக்குகளிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் எனும் உரிமை முழக்கத்திற்காகப் பல முறை சிறை சென்றார்.
1965 -இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. போராட்டம் வெடித்து நாடு முழுவதும் ஒரே கொந்தளிப்பாக இருந்தக் காலக்கட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டு பாவலரேறுவிற்கு இருநூறு உருபா தண்டத்தொகை அல்லது நான்கு மாதக் கடுங்காவல் எனத் தீர்ப்பளித்தது. பாவலரேறுவும் தண்டத் தொகைக் கட்ட மறுத்துச் சிறைத் தண்டனையை உவகையோடு ஏற்று வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். இக்காலத்தில்தான் தம் அஞ்சல் பணியை மொழி, நாட்டுக்காக உதறித் தள்ளினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அரியேற்றச் சிறைபுகுத்தின் அதன் முழக்கம்
அடங்கிடுமோ? அண்டமெல்லாம்
எரியேற்றும் பெரும்பிழம்பைச் சிறுநீர்தான்
அவித்திடுமோ? அறமில் சூழ்ச்சி
நரியேய்க்கும் சிறுமனத்தீர்! நல்லுணர்வைப்
புன்சிறையால் தெற நினைத்தீர்
விரைவேற்ற லானீர்நும் வீழ்ச்சிக்கே
தமிழகத்தின் விடுத லைக்கே!”
எனப் பெருஞ்சித்திரனாரைச் சிறையிலடைத்தக் கொடுமை தாங்காது, தென்மொழியின் உறுப்பாசிரியர் தங்கப்பா அவர்கள் எழுதிய வீறுபொங்கும் கருத்துக்கள் அடங்கிய பாடல் அடிகளாகும்.
“எச்சில் துப்பி எரிமலை அணைவதில்லை
குச்சியால் குத்தி வானம் கிழிவதில்லை
அண்டங்காக்கையால் ஆகாயம் அழுக்காவதில்லை”
எனும் தோழர் ஜீவாவின் வரிகளும், பெருஞ்சித்திரனாரின் சிந்தனையைப் போல நம்மை புடம்போட வைக்கின்றன.
“சிறை ஒரு சோம்பேறி மடம்! நமக்கிருக்கும் இடர்பாடுகளினின்று முற்றும் நீக்கி, நமக்குக் கட்டாய ஓய்வு கொடுத்து, நம் வினைப்பாடுகளையெல்லாம் மறக்கடிக்க முயலும் ஒரு சோற்றுமடம்” சிறையிலிருக்கும் நாள்கள் செல்லச்செல்ல உள்ளிருப்பது வீண் என எண்ணி தண்டத்தொகை 200 ரூபாயைக் கட்டி சிறையினின்று விடுவிக்கப்பட்டார்.
தமிழக விடுதலையை வலியுறுத்தி தென்மொழிக் கொள்கையுடன் 2-வது மாநாடு மதுரையில் 1973 -இல் நடைபெற்ற பொழுது அன்றைய ஆட்சியினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக ஒரு மாதம் சிறைப்படுத்தப்பட்டார். 1975 -இல் சென்னையில் மூன்றாவது தமிழகப் பிரிவினை மாநாட்டினை நடத்தி இரு திங்கள் சிறைப்படுத்தப்பட்டார்.
“எதுவரை எம்மூச் சியங்கு கின்றதோ,
எதுவரை எம்முடல் இம்மண் தோயுமோ
எதுவரை எம்மனம் நினைவலை எழுப்புமோ,
அதுவரை மொழி, இன ஆர்படங்காது”
(கனிச்சாறு, தொகுதி 7, ப.43)
இது உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தெளிவுபடுத்துகிறது.
தமிழ் நாட்டு விடுதலைக்காக எழுதியும் போராடியும் வந்த பாவலரேறு அவர்களை நெருக்கடிக் காலம் சிறையில் அடைத்தது. 5.02.1976 முதல் 1.12.1976 முடிய பத்துத் திங்கள் வரை சிறையிலிருந்து பின்பு விடுதலை பெற்றுத் தம் பணியைத் தொடர்ந்த போது,
“கதவு திறந்தது; கதிர்வான் எழுந்தது
கால்நடை கொண்டது, கடும்பணிக்கே !
உதவும் உளங்கள் ஒன்றின மீண்டும் !
உயிர்த்தேன் தமிழெனும் கண்மணிக்கே !
ஆண்டா நடந்தது? அணுச்சிதைவில்லை!
அடடா, உயிர் உளம் உடலினிலே
பூண்ட என் கோள்நலம்;
புதுமைத் தோள் நலம்
புதுப்புது விளைவுகள் நடையினிலே!”
தமிழுக்காக மறுபிறவி எடுத்ததாக உணர்கிறார்.
1993 -இல் கோரிக்கை எழுப்புதற்கே சிறையென்றால் இது என்ன ‘குடியரசு நாடா?’ என கேள்வி எழுப்பியும் “தமிழ் புகுந்த நெஞ்சிற்குத் தளர்வில்லை, உடலுக்கும் முதுமையில்லை”, என்று உள்ள உறுதியோடு எதற்கும் கலங்காதவராக உள்ளத் துணிவோடு ஏறுநடை போட்டார். சிறையென்பது எனக்குத் துன்பமில்லை, கொடுமையில்லை, சிறிதுமெனைச் சிதைப்பதில்லை! நிறைபணியால் சோர்வதில்லை சலிப்பதில்லை, நேர்மைநிலை குறைவதில்லை! எனக்கும் இன்பம், துன்பம், புகழ், பெருமை, இகழ், அத்தனையும் ஒன்றே என்கிறார்.
“என்னுடல் எனதில்லை;
தமிழ்விளை வயல்தான் !
என்னின்ற விளைவெல்லாம்
செந்தமிழ்ப் பயிர்தான் !
இன்னலும் இடர்ப்பாடும்
எனையேற்றும் ‘படி’தான் !
ஏற்றமோ இறக்கமோ
எதும் வெற்றிக் கொடிதான் !”
(கனிச்சாறு, தொகுதி 7, ப.36)
இன்னலும் இடர்ப்பாடும் என் முன்னேற்றத்திற்குரிய படி என்றும், அதுவே தமது மனவலிமை என்பதையும், ஏற்றமோ இறக்கமோ எல்லாமும் எனக்கு வெற்றிதான் எனவும், நான் என்றால் அது தமிழினம் தான் என அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
மொழியைப் பேசமுடியாத, பயனற்ற விடுதலையை விட, என் மொழியைப் பேச வாய்ப்பளிக்கும் சிறை வாழ்வே சிறந்தது எனும் அயர்லாந்து விடுதலை வீரன் டிவேலராவின் மொழி உணர்ச்சிப்பெருக்கு பெருஞ்சித்திரனாரிடம் இருந்தது. எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கின்றார்களோ, அங்கெல்லாம் தமிழுணர்வு ஏற்படுத்த என் அறிவும் உள்ளமும் உயிரும் இருக்க வேண்டுகிறேன் எனச் செந்தமிழை நோக்கி தமது உணர்வினைப் புலப்படுத்தியுள்ளார்.
பாவலருக்கு உரியவை
நுண்ணோக்கு, இயற்கை ஈடுபாடு, சொல்வன்மை, பாத்திறன், யாப்பறிவு, மொழியறிவு, கற்பனையாற்றல், மனவியல் அறிவு, நடுநிலைமை, துணிவு இவையாவும் பாவலருக்கு இருக்கவேண்டிய பத்துத் தகுதிகளாகப் பாவலரேறு பகுத்து அதன்வழி செயல்படுத்தியுள்ளார்.
பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டாலும் எதற்கும் இடங்கொடுக்காது உறுதியான நெஞ்சுரத்தோடு இறுதி மூச்சுவரைத் திகழ்ந்தார். எவருக்காகவும் எதற்காகவும் தம் கொள்கையினின்று விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாக இருந்தார். பல்வேறு தொல்லைகள் பல வகையில் வந்தாலும் எதையும் பொருட்படுத்தாது மிகுதியான வேகத்தோடு தமிழ்நலப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.
“சலுகை போனால் போகட்டும்
அலுவல் போனால் போகட்டும்
தலைமுறை ஒருகோடி கண்ட என்
தமிழ் விடுதலை யாகட்டும் !”
என்ற புரட்சிப் பாவலரின் பாடலில் தோய்ந்து போனவர் பெருஞ்சித்திரனார். அதன்படி வாழ்வையும் அமைத்துக் கொண்டவர்.
இத்தமிழகத்தை எப்படியாவது ஆரியப் பார்ப்பனியத்திடமிருந்து மீட்க வேண்டுமென மூச்சாக இருந்தார்.
“எப்படியேனும் இத்தமிழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும் - என்
மூச்சிதற் குதவிடல் வேண்டும்!”
என்பதை வாழ்நாள் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டார்.
கொள்கைச் செருக்கு
தமிழகத் தமிழர்களுக்காக மட்டுமின்றி ஈழத்தமிழர்களின் விடுதலை வேட்கையையும் நிறைவு செய்யும் பொருட்டு பல போராட்டங்கள், மாநாடுகள் நடத்தி பலமுறை சிறை சென்றதும், எதற்கும் அஞ்சாத துணிவுடையவராகவும் இருந்திருக்கிறார்.
“ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை, உள்ளடத்தே
அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை
எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்; மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று !”
(கனிச்சாறு, தொகுதி 3, ப.21)
எந்த நிலையிலும் மற்றைய இனத்தார்க்கு மண்டியிடாது பெருவாழ்வு கண்டவர் பெருஞ்சித்திரனார்.
முதலாவது தமிழ்மொழிக்கும், இரண்டாவது தமிழினம் நலம்பெற வேண்டியும், மூன்றாவது தமிழ் நிலம் விடுதலைக்கு உழைப்பதுவுமாக மூன்று கொள்கைகளை மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.
“எழுதி எழுதி செல்கின்றேன், நான் !
என்ன பயன், என எண்ணிப் பார்க்கிலேன் !
உழுது விதைத்தவை ஒருநாள் விளையுமோ?
ஊமை விதைகளாய்ச் சாவியாய் ஒழியுமோ?
புழுதியுள் மறையுமோ? பூக்களாய் மலருமோ?
அழுகியும் உலுத்தும் அமுங்கிப் போகுமோ ?
பழுதென் றுரைத்து, அவை பழித்திடப் படுமோ?
பயன்படா தென விலக்கிடப் படுமோ?”
எத்தனை மேடை போட்டு பேசினாலும், இதழ்களின் வழி கொள்கைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தினாலும், அதனால் தினையளவேனும் பயன் உண்டாக வேண்டும். ஆனால், பாவலரேறுவோ தாம் எழுதிய எழுத்தின் எண்ணங்கள் செயல் வடிவம் பெறுமோ? பெறாதோ? என்ற எண்ணத்துடனேயே வாழ்ந்தார்.
“அன்பிலே மழைத்தண்ணீர், அறிவிலே பெருநெருப்பு, ஆற்றலில் சூறைக் காற்று, உளத்தென்பிலே மாமலை, தெளிவிலே நீர்நிலை, திரிதலில் வானப்பறவை, என்பிலே நல்லுறுதி, இயல்பிலே தமிழுணர்வு, எண்ணத்தில் தமிழர் மேன்மை, வருந்துன்பிலே துணிந்த மனம், துயிலிலே விழித்த நிலை, துவளாத வாழ்வு - என் வாழ்வு !
(பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்க்கைச் சுவடுகள், ப. 660) எதற்கும் அஞ்சாத துவளாத வாழ்வை தம் வாழ்வின் நோக்கங்களாகக் கொண்டிருந்தார்.
“‘தடா’வும் ‘மிசா’வும் வீழ்த்தாத என்னை
அடாத காய்ச்சல் அடியோடு சாய்த்தது !
(பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்க்கைச் சுவடுகள், ப. 661)
எத்தனையோ துன்பங்களைச் சிறைக்குள் அனுபவித்திருக்கின்றேன். அப்போதெல்லாம் வருந்தாத என்னுடல், இக்காய்ச்சலுக்கு வருந்துகிறதே நான் என்ன செய்வேன் எனத் தம் உடல் வலியால் மனம் உளன்றதையும்,
“என்நலம் குன்றி இருந்த நாளெல்லாம்
தென்மொழித் தொண்டும் திருக்குறள் பணியும்
தொய்வுற்றுப் போயின! அலுவல்கள் தொய்ந்தன !”
என தன் உடல் நலத்தைவிடத் தென்மொழித் தொண்டும், திருக்குறள் பணியும் தொய்வுற்றுப் போனதை எண்ணியே இறுதிவரையிருந்தார்.
தமது மூச்சை நிறுத்திக் கொள்ளும் வேளையிலும், உடல் நோய்வாய்பட்டு நினைவற்ற நிலையிலும், பாவலரேறுவின் மனம், அம்மா, தாயே, கடவுளே என அரற்றாமல் ஐயோ! ‘தாயே தமிழே’, ‘தாயே தமிழே’ எனத் தமது இறுதி மூச்சுவரை தமிழையே உயிர் மூச்சாக உயிர்த்தவர்.
தமிழ்நாடு, மொழி, இனம், மட்டுமல்லாது, இயற்கையின் மீதும் ஆறாக் காதல் கொண்டு இயற்கையழகைப் பாடியுள்ளார். காதல், பொதுமை இயக்கம், இளைய தலைமுறையினருக்கென என்றில்லாமல் தம் குடும்பத்தாரும் தமதருமை நண்பர்களுக்கும் உலகத் தலைவர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் பாட்டரங்கப் பாடல்களைப் பாடியுள்ளார்.
பண்பு நலன்கள்
நெஞ்சில் தமிழ் நினைவு, நீங்காத மெய்யுணர்வு, செஞ்சொல் குமிழியிடும் சிதையாத பாட்டுயிர்ப்பு; துஞ்சா இருவிழிகள்; தொய்ந்து விழா நற்றோள்கள்; அஞ்சுதல் இன்றி அயர்வின்றி நின்றவுரம்; எஞ்சுகின்ற காலமெல்லாம் ஏற்ற நறுந்தொண்டு, நஞ்சு மனங்கொண்டார் நடுக்கமுறுஞ் செந்துணிவு, கொஞ்சமில்லை, நல்லிளைஞர் கூட்டமோ கோடி பெறும்! விஞ்சுகின்ற செந்தமிழே, வெற்றிக்கென் வேண்டுவதே? ( கனிச்சாறு, தொகுதி 1, ப.62) இவையாவும் பாவலரேறுவின் பண்பு நலன்களை எடுத்துரைக்கிறது.
நுண்ணோக்கு, இயற்கையீடுபாடு, சொல்வன்மை, பாத்திறன், யாப்பறிவு, மொழியறிவு, கற்பனையாற்றல், மனவியல், நடுவுநிலைமை, துணிவு இவையாவும் ஒரு பாவலனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாகும். இத்தகுதிக்கேற்பவே ஒவ்வொருவரின் பாடலும் ஒளிர்ந்து சுடரும், காலத்தைக் கடந்து நிற்கும். மக்கள் கருத்தினை ஆட்கொள்ளும்; அறிஞர் மதிப்பினைப் பெறும் எனும் நோக்குடனே பெருஞ்சித்திரனார் தமது ஒவ்வொரு படைப்பாக்கத்தையும் தந்துள்ளார்.
தமது இறுதிமூச்சு வரை எண்ணம் வேறு, செயல் வேறு என வாழாமல் எண்ணமே செயலாக வாழ்ந்து காட்டியவர். தமிழ் நெஞ்சங்களிலெல்லாம் என்றென்றும் குடிகொண்டிருப்பவர். இதழியலாளராக, பாவலரேறாக, சிந்தனையாளராக, மெய்யியலாளராக, பொழிவாளராக, இயக்கத்தவராக, களப்போராளியாக, பொதுமை நெஞ்சினராக, தனித்தமிழியக்கத் தூணாக எனப் பல்வகை நோக்குகளில் இயங்கியவர் பாவலரேறு.
பாவலரேறுவின் கொள்கைகளில் ஒருசிலவாவது இன்றைய தலைமுறைகளின் குருதியில் கலந்த உணர்வாக இருக்கவேண்டும் என்பதே அவரின் நினைவைப் போற்றுதலை உரியதாக்கும்.
பயன்பட்ட நூல்கள்
1. கனிச்சாறு தொகுதி, 1-8, 2012, பவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி பதிப்பகம், மேடவாக்கம், சென்னை - 100.
2. பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்க்கைச் சுவடுகள், மா.பொழிலன், மண்பதைப் பதிப்பகம், மேடவாக்கம், சென்னை - 100.
3. பெருஞ்சித்திரனார் நினைவு மலர், 1996.
4. பெருஞ்சித்திரனார் பாவேந்தர் பாடல்கள் ஓர் ஒப்பாய்வு, முனைவர் கடவூர் மணிமாறன்.
5. தமிழியக்கம். பாவேந்தர் பாரதிதாசன்.
6. தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கும் போக்கும், ஆய்வுக்கோவை முனைவர் கோ. விசயராகவன், முனைவர் நா. சுலோசனா, முனைவர் மா. பூங்குன்றன். (பதி.ஆ.,), உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, சென்னை, 2017.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.