சோழர்கால இசைக் கருவிகள்
மு. கயல்விழி
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.
முன்னுரை
இசை நுட்பமான கலைவடிவமாகும். இதற்கு உருவம் கிடையாது. இது அனுபவித்து அறியக்கூடியது. காற்றின் உராய்வே ஓசையாக எழுகின்றது. இனிய ஓசையே இசையாகின்றது. இசை நாடு, மொழி, மதம், இனம் கடந்தது. கேட்போர் அனைவரையும் பிணைக்கக்கூடியது. இசையை மீட்ட இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டன. பழந்தமிழர்கள் பலவிதமான இசைக்கருவிகளை உருவாக்கிப் போந்தனர். சங்ககாலத்தில் குழல், முழவு, தண்ணும்மை, முரசு, யாழ், பதலை, தொண்டகப்பறை, குளி, தடாரி போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அதன் பின் வந்த பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் பலவித இசைக்கருவிகள் இசைவாணர்களால் உருவாக்கப்பட்டன. உருவமற்ற கானத்தை உருவமுடைய இசைக்கருவிகள் உருவாக்கிப் போந்தன.
சோழர் கால இசைக் கருவிகளின் வகைகள்
தமிழிசையின் பொற்காலமாகக் கருதப்பட்ட சோழர் காலத்தில் பலவித இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அவை இயல்புக்கேற்ப பல வகையாக வகைப்படுத்தப்பட்டன. அவை வருமாறு;
1. தோல்கருவி
2. நரம்புக்கருவி
3. கஞ்சக்கருவி
4. துளைக்கருவி
5. மிடற்றுக்கருவி
அக்காலத்தில் காணப்பட்ட பக்கவாத்தியங்கள் வருமாறு;
1. சித்தமத்தளம்
2. எலத்தாளம்
3. கொம்பு
4. திமில்
சோழர்கால இசைக்கருவிகள்
காளம்
இது ஒரு வகை துளைக்கருவியாகும். கங்கில், குழல், மோதிரம் போன்ற பகுதிகளை உடையது. கங்கிலையும், குழலையும் இணைக்கும் திருகுச்சுறையே மோதிரமாகும்.
இவை ஒற்றைக் குழலுடையவை, இரட்டைக் குழலுடையவை என்று இரு வகைப்படும். குறிப்பாக கோயில் திருப்பலி நிகழ்வின் போதும்,கோயில் வழிபாட்டின் பொழுதும், திருவிழாக்களிலும் காளம் ஊதப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலில் காளம் சிறப்புடன் ஊதப்பட்டது. (1)
வங்கியம்
இது குழல் போன்ற இசைக்கருவியாகும்.இராகத்தையும் வர்ண மெட்டையும் குரலிசை போன்று இசைக்கச் செய்யும் திறனுடையது. மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி போன்ற மரத்தால் இது செய்யப்பட்டது. இது ஆடற்கலையில் பக்கவாத்தியமாகப் பயன்பட்டது. நிர்ணயிக்கப்படும் இசை ஸ்வரங்களைக் கொண்டு இதில் ஸ்ருதி சேர்க்கப்பட்டது.
சங்கு
சங்கு ஆடற்கலைக்குப் பக்கவத்தியமாகப் பயன்படுத்தப்பட்டது. பலவிதமான சங்குகள் கோயில்களில் ஊதப்பட்டாலும் வலம்புரிச்சங்கு தனித்தன்மை வாய்ந்தது. இது திருவாரூர் தியாகேசர் சிவாலயத்தில் சிறப்பாக ஊதப்பட்டது. (2)
சேகண்டிகை
இது வெண்கலத்தட்டை வளைத்து செய்யப்படும் தட்டு போன்ற கருவியாகும். இதைத் தொங்கவிட்டுக் கொண்டு அடிப்பர். திருமணஞ்சேரி கோயிலில் சேகண்டிகை இசைக்கப்பட்டது. (3)
குடமுழா / பஞ்சமுகவாத்தியம்
இது பித்தளை அல்லது செம்பினால் செய்யப்பட்டது. இதன் மேற்புரத்தில் ஐந்து முகங்கள் காணப்படும். இது அகமுழவு, புறமுழவு, நான்முழவு, காலைமுழவு, பண்ணமை முழவு என்று ஐந்து வகைப்படுத்தப்பட்டன. இது பாடற்துறையிலும், ஆடற்துறையிலும் பயன்படுத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டி கோயிலில் 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குடமுழாக் கருவி இன்றுமுள்ளது. இது சிவனது ஆட்டத்துக்கு சிறப்புடன் இசைக்கப்பட்டது.
கரடிகை
இது கரடி கத்துவது போல் ஓசையெழுப்பும் இசைக்கருவியாகும். இது அகமுழவு வகையைச் சார்ந்த கருவியாகும். நிறுத்த வகையிலான ஆடற்கலைக்கு இதைப் பயன்படுத்தினர். சிவபெருமான் திருநடனத்தின் பொழுது இது இசைக்கக் கூடியது. திருவான்மியூர் வேதபுரீஸ்வரர் கோயிலில் இது இசைக்கப்பட்டது. (4)
திமிலை
இது பம்பை போன்ற தோல் கருவியாகும். இது உருளை வடிவமுள்ள இரு பறைகளைச் சேர்த்துக் கட்டி வாசிக்கப்படும். இதனை இடுப்பருகேக் கட்டிக்கொண்டு வளைந்த கோல் கொண்டு இசைப்பர். இதை மரத்தினால் அல்லது பித்தளையால் செய்தனர். இது பண்ணமை முழவு, வீரமுழவு என்று இருவகைப்படும். திருக்கோயில் உவச்சு கொட்டும் பொழுது இதை இசைப்பர். திமிலையும், பம்பையும் ஒன்றே என்று சில ஆய்வாளர்கள் கருதுவர். திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயிலில் இது இசைக்கப்பட்டது. (5)
தண்ணுமை
இது மத்தளம் போன்ற இசைக்கருவியாகும். இதைக் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு இடுப்பருகே இரு கைகளைக் கொண்டு கொட்டி முழக்குவர். இதை பறையாகவும், உடுக்கையாகவும் சிலர் கருதுவர். சிலப்பதிகார நூலில் தண்ணுமை பற்றிய குறிப்புகள் உள.
செண்டை
இது உருளை வடிவிலான பறைக்கருவியாகும். இதனைப் பலா மரத்தினால் செய்வர். இதன் உருண்டை வடிவப் பறையின் இருபுறமும் தோல் போர்த்தப்பட்டிருக்கும். ஆனால் ஒரு புறம் மட்டுமே வாசிக்கப்படும். இது நேராகத் தொங்கவிட்டுக் கொண்டு மேல் தோலை இரு கோல் கொண்டு அடிப்பர். திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் இது இசைக்கப்பட்டது.(6) இன்றும் கேரளாவில் இது சிறப்புடன் இசைக்கப்படுகின்றது.
வீணை
யாழ் என்ற இசைக்கருவி வழக்கொழிந்து அதனிடத்தை வீணை பிடித்தது. இது பல இசை வடிவங்களை இசைக்கக் கூடிய சிறப்பு வாய்ந்தது. வீணையின் இசையை “இன்னிசை” என்று கருதுவர். கர்நாடக சங்கீதத்துக்கு வீணையே ஆணி வேர். இது மனிதனைப் போன்று உயிர்த்துடிப்புள்ள இசைக் கருவியாகும். சிவன் வீணாதரமூர்த்தியாய் பல ஆலயங்களில் காட்சியளிக்கின்றார். திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இது சிறப்புடன் இசைக்கப்பட்டது. (7)
உடுக்கை / டமரு / தமருகம்
இது பறை வகையைச் சார்ந்த இசைக்கருவியாகும். இது இடைச் சுருக்கும் பறை என்பர். சிவனின் அசபா நடனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. கோயில்களில் திருப்பதிகம் வாசிக்கும் பொழுது இது இசைக்கப்பட்டது. திருவிடைமருதூர் கோயிலில் இது சிறப்புடன் இசைக்கப்பட்டது. (8)
துடி
துடி பழங்கால இசைக்கருவியாகும். இது உடுக்கை, பறை ஆகியவற்றின் இசைநயங்களை ஒருங்கேக் கொண்டது. இதற்கு வலக்கண், இடக்கண் இரண்டும் உண்டு. ஆனால் வலது பக்கம் மட்டுமே இசைக்கப்படும். இதை இடது தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, இடது கையால் பிடித்துக் கொண்டு, வலது கையால் ஜதிக்கோவைகளைக் கொண்டு இசைப்பர். இது நடனக்கலைக்குப் பக்க வாத்தியமாகப் பயன்பட்டது.
தாளம்
இது பித்தளை மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை இரு கைகள் கொண்டு இசைப்பர். இது மிருதங்கத்துக்கு இணையாக இசைக்கப்பட்டது. இதற்கு ஜால்ரா, ஜல்லரி, கரதாளம், தாலி, எலத்தாளம், குழித்தாளம், ஜஞ்ஜ், பிரத்தாளம், பிரம்மதாளம், போர்த்தால் என்று பல பெயர்கள் உண்டு. இது சச்சச்புடத்தாளம், துகம்தாளம், விமடத்தாளம், சமதாளம், கும்பதாளம், வர்மத்தாளம், சதுரசுரதிரிபுடைத்தாளம், அனுமத்தும்பதாளம் என்று பல வகைப்படும். அரையர் சேவைகளில் தாளம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டது.
பாடவியம்
இது ஆடலுக்கு மட்டும் பக்கவாத்தியமாக இசைக்கக் கூடிய இசைக்கருவியாகும். இதை இசைப்பது மிகவும் கடினமானது. இதைப் பல பேர் ஒன்று சேர்ந்து இசைப்பர். இதை இசைத்தவர்கள் “வாத்தியமாரார்” என்று அழைக்கப்பட்டனர். திருவிடைமருதூர் கோயிலில் இது இசைக்கப்பட்டது. (9)
மேராவியம் / மேர்வியம் / மெரவியம் / மோர்வியம்
இது துளையிட்டு இசைக்கக்கூடிய இசைக்கருவியாகும். இதை முகவீணை என்றும் அழைப்பர். இது நாட்டியத்திற்குப் பக்கவாத்தியமாக இசைக்கப்பட்டது. இது தொழில்நுட்பத்தில் மேம்பட்டக் கருவியாகத் திகழ்ந்தது. திருக்கண்டியூர் கோயிலில் இது இசைக்கப்பட்டது. (10)
பூரகம் / பெருவடகம்
இது தோல் வகையைச் சார்ந்த இசைக்கருவியாகும். இதை பாடகம் என்றும் அழைப்பர். இது அகமுழவு வகைக் கருவியாகும். கோயில் திருப்பள்ளியெழுச்சியின் பொழுது இது இசைக்கப்படும். சிவனின் ஆடவல்லான் நாட்டியத்திற்கு இசைக்கும் சிறப்பு வாய்ந்தது. கல்வெட்டுகள் இதை பெருவடகம் என்று அழைக்கின்றன.
முடிவுரை
இசை என்ற உயிருக்கு உடல் போன்றது இசைக்கருவிகள். இசையையும், இசைக் கருவிகளையும் பிரிக்கவியலாது. தமிழர்கள் இசைக்கருவிகளை மீட்டி இன்னிசையால் இறைவனை வழிபட்டனர். சோழர்கால இசைவாணர்கள் சிறந்த இசைக்கருவிகளை உருவாக்கி கான இன்பத்தை மக்களுக்கு வாரி வழங்கினர். அக்காலக் கோயில்களிலும், அரண்மனைகளிலும், அந்தப்புரங்களிலும், கூத்துமேடைகளிலும், திருவிழாக் கூட்டங்களிலும் இசைக்கருவிகள் முழங்கின. சோழர்காலத் தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகள் அவர்கள் உருவாக்கிய சிற்பங்களிலும், ஓவியங்களிலும் காணக் கிடக்கின்றன.
தம் கால இசைக்கருவிகளைப் பின்வரும் தலைமுறையினர் அறியவேண்டும் என்பதற்காக அவற்றை உருவங்களாக உருவாக்கிப் போந்த நம் முன்னோர்கள் போற்றுதற்குரியவர்கள். தமிழர்கள் நுண்கலை வித்தகர்கள் என்பதற்கு அவர்கள் உருவாக்கியளித்த இசைக்கருவிகளே சாலச்சிறந்த சான்றுகளாகும்.
விரிவாக்கம் (Abbrevations)
SII-South Indian Inscriptions
ARE-Annual Report on Indian Epigraphy
சான்றெண்விளக்கம் (Foot Notes)
1. SII VOL:2 NO:1
2. SII VOL:7 NO:485
3. SII VOL:13 NO:14
4. SII VOL:24 NO:86
5. SII VOL:23 NO:258
6. SII VOL:19 NO:30
7. ARE NO:54/1906
8. SII VOL:5 NO:721
9. SII VOL:23 NO:264
10. SII VOL:5 NO:579
பார்வை நூற்பட்டியல்
1. சீனி வெங்கடசாமி. மயிலை, தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், சென்னை, 1989.
2.நாகசாமி.இரா & சத்தியமூர்த்தி.மா, தமிழகக் கோயிற்கலைகள், சென்னை, 1976.
3. ஞானகுலேந்திரன், பழந்தமிழர் ஆடலில் இசை, தஞ்சாவூர், 1990.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.