நாட்டார் வழக்காற்றியலில் நம்பிக்கை குறித்த கருத்துருவாக்கம்
இரா. மனோஜ் குமார்
ஆய்வியல் நிறைஞர், தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்.
முன்னுரை
மனிதன் தன் வாழ்நாளில் நன்கறிந்த பல்வேறு செயல்பாடுகளை இயல்பாக எதிர்கொள்கிறான். அவற்றிற்கான காரண காரியத்தையும் விளங்கிக் கொள்கிறான். காரணம் கற்பிக்க முடியாத பலவற்றைச் சடங்குகள் என்ற கட்டமைப்பிற்குள் அடக்கிவிடுகிறான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் சில கட்டுப்பாடுகளை மரபார்ந்த முறையில் கடைப்பிடித்து வருவதுடன், அதனை அடுத்த தலைமுறைக்கும் கடத்தி வருகிறான். பழமையில் நம்பிக்கை கொண்ட ஒருவன், சடங்குகள் செய்வதன் வாயிலாக மனநிறைவு அடைவதால், அதற்குரிய காரணகாரியத் தொடர்பை அறிய முற்படுவதில்லை. தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களையும், அவர்களது செயல்களையும் பின்பற்ற முற்படுவது மனித இயல்பாகும். இந்த அடிப்படையான மனித இயல்பே குழு வாழ்க்கை தொடங்கிய காலம் முதல் சடங்குகளின் தோற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முறையில் இவ்வாறான சடங்குகள், நம்பிக்கைகள் குறித்து அறிஞர்கள் தத்தம் சிந்தனையை எடுத்துரைத்துள்ளனர். தமிழ்ச்சமூக வரலாற்றில் தவிர்க்க முடியாத நாட்டார் வழக்காற்றியல் நம்பிக்கையையும் மூடநம்பிக்கையையும் குறித்து இந்த ஆய்வுக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
சடங்குகள்
நம்பிக்கைகளையும் இலட்சியங்களையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான சடங்குகள் நாட்டுப்புறவியலில் முக்கிய இடம் வகிக்கிறது. (1). நல்லவை நடக்க வேண்டும் என்ற ஆவலும், தீமைகள் நடக்காமல் தவிர்க்க வேண்டும்” என்ற அச்சமுமே சடங்குகள் நடத்தப்படுவதன் அடிப்படைகளாக அமைகின்றன. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு இனக்குழு சமுதாயமும் தங்களது பண்பாட்டு நம்பிக்கைகளின் அடிப்படையில் இவ்வாறுதான் சடங்குகளைப் பின்பற்றி வருகின்றன.
மனித வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சடங்குகள் நடத்துவது என்பது தவிர்க்க முடியாத நடைமுறையாகிவிட்டது. சடங்குகள் நடத்தப்படும் முறையில் சமுதாயங்களுக்கிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும், சடங்குகள் நடத்தப்பட வேண்டும் என்ற மனப்பாங்கு மட்டும் அனைத்து சமுதாயங்களுக்கிடையேயும் உள்ள மாபெரும் ஒற்றுமையாகத் திகழ்கின்றன. உலக மதங்கள் ஒவ்வொன்றும் சடங்குகள் குறித்த மரபைப் பின்பற்றுவதில் மிகுந்த கட்டுப்பாடுகளை வலியுறுத்துகின்றன. இந்நிலைப்பாட்டில் இந்து மதம் சார்ந்தவர்களுக்கு சாத்திரங்களும் சடங்குகளும் மிகுதியெனலாம். “இவை இவை இப்படி நடைபெற வேண்டும் என்ற நெறிமுறைகளைக் கூறுவது சாத்திரமாகும். சாத்திரத்தின் செயற்பாடுகள் அல்லது வழிமுறைகள் சடங்குகள் ஆகின்றன” (2)
ஒரு வரைமுறையின்றி மக்களால் அவரவர் விருப்பப்படிச் செயல்கள் நடத்தப்படும் போது அவை பழக்க வழக்கங்கள் எனவும், அச்செயல்களே ஒரு வரைமுறையோடு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும் போது சடங்குகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
* பிறப்புச் சடங்கு
* திருமணச் சடங்கு
* பூப்புச் சடங்கு
* இறப்புச் சடங்கு
என இச்சடங்கு முறைகளை பகுத்துக் கொள்ளலாம்.
சடங்குகளும் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்
சடங்குகள் குறித்த சிந்தனை ஆரம்ப காலத்தில், சடங்குகளின் செயல்பாட்டுத் தன்மையை முதன்மைப்படுத்தியும், மற்றொன்று சடங்குகளில் ‘அமைப்பு’ முறையிலான பண்புகளை முதன்மைப்படுத்தியும் பிரிக்கப்பட்டிருக்கிறது. சடங்குகளைச் செயல்பாட்டு தன்மையில் ஆராய்ந்தவர்களுள் ‘மாலினோவ்ஸ்கி’ முக்கியமானவராவார். இவர், “செயல் என்பது தேவைகளின் அடிப்படையில் நிகழ்வதாகவும் அனைத்து பண்பாட்டுக் கூறுகளும்; செயல் தன்மை வாய்ந்தவையாகவும் உள்ளன” என்றும் கூறுகிறார்.
எந்த ஒரு பண்பாட்டிலும் அதன் வழக்கங்கள் பயன்படும் பொருள்கள் கருத்துக்கள் நம்பிக்கைகள் போன்ற அனைத்துக் கூறுகளும் மனிதனின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டே அமைந்துள்ளன. பின்னாளில் அவை சமூக நிறுவனத்தின் ஓர் அங்கமாகவும்; பிரிக்க முடியாத கூறாகவும் விளங்கி நிற்கின்றன. தேவைகளின் மறுவடிவமே பண்பாட்டில் சட்டென ஏற்பட்டு உடன் மறைந்து விடுவதில்லை. பண்பாட்டில் வழக்காறுகளை நெறிமுறைகளை காலம் காலமாகச் சுமந்து செல்கின்றன. ‘ராட்கிளிஃப் பிரௌன்’ செயற்பாட்டியற் கொள்கையை விவரிக்கும் பொழுது, “செயலை விட அமைப்பிற்கு முக்கியத்துவம் தருகின்றார். சமுதாயத்தில் ஒரு செயல் திரும்பத்திரும்ப நடைபெறுவதை இவர் ஒவ்வொரு அலகும் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும் தொடர்ச்சியான செயல்கள் அச்சமுதாயம் என்னும் முழுமையை நிலைப்படுத்த நடைபெறும் பராமரிப்புச் செயலாகும்” என்கிறார். ஒரு செயல் நன்மை விளைவிக்கின்றது என்று மக்கள் உணரும் நிலையில் அது பழக்கமாக மாறுகின்றது. காலப்போக்கில் அறிவியல், கல்வி ஆகியவற்றின் காரணமாகச் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் போது, அது சடங்காக மட்டும் நிற்கின்றது. இந்நிலையில் மக்களால் சடங்குகள் அரைகுறையாகவே நடத்தப்பட்டன. பொதுவாக, பிறர் செய்வதைப் போலத் தானும் செய்து இன்புற வேண்டும் என்னும் பண்பு மனிதனுக்கு மேலோங்கி நிற்கிறது. (3)
சடங்குகளில் தெய்வமும், சமயமும் நுழைந்த போது சடங்குகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டன. சடங்குகள் அனைத்தும் தனிமனிதனாக இருந்து செய்யப்படுவன அல்ல. உற்றாரும் உறவினரும் சேர்ந்து சிறப்பாகச் செய்யப்படுவன ஆகும். (4)
இன்றும் நம்மிடையே இரு குடும்பங்களுக்கு இடையே மோதல்கள் இருப்பினும் பகையை மறந்து இறப்புச் சடங்கில் கலந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. சடங்குகள் மக்களின் வாழ்க்கை மீதான நம்பிக்கையைக் கூட்டுகின்றன. மனிதன் சடங்குகள் வழி பழக்கவழக்கங்களையும் அவற்றுடன் உறைந்து கிடக்கும் நம்பிக்கைகளையும் அனைத்துச் சமுதாயங்களிலும் காணமுடிகிறது. நம்பிக்கைகள் சமுதாயப் பழக்க வழக்கங்களோடு மிகுந்த தொடர்பு உடையனவாகக் காணப்படுகின்றன. வாய்மொழி இலக்கியத்திற்கும், கருப்பொருள் சார்ந்த பண்பாட்டிற்குமிடையே மரபு வழி வாழ்க்கையில் பல கூறுகள் இருபுறமும் நோக்கியவாறு அமைந்து கிடக்கின்றன. அத்தகைய ஒரு கூறு “சமுதாய நாட்டுப்புற வழக்கங்கள்” என்கிறார் ரிச்சர்ட். எம். டார்சன். (5) மனிதனின் தன்னிலை உணர்வும், சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்கின்றன. பய உணர்வுகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலும் தற்காப்பு முயற்சியும், நன்மை விளைய வேண்டுமென்ற விருப்பமும் நம்பிக்கைகளை நிலைநிறுத்துகின்றன. இவ்வாறு பிறப்பு முதல் இறப்பு வரையிலான நம்பிக்கைகளில் சிலவற்றை அறியலாம்.
* வீட்டிலோ (அ) வீட்டின் சுற்றுப்புறங்களிலோ குளவி கூடு கட்டியிருந்தால், அவ்வீட்டில் யாராவது தாய்மை அடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்தக் குளவிக் கூட்டை யாரும் கலைப்பதில்லை.
* பிறந்த குழந்தையின் பின் பக்கவாட்டில் ஏதேனும் மச்சம் இருப்பின், அக்குழந்தை ராசியான குழந்தை எனவும் நம்புகின்றனர்.
* யாரேனும் தீக்குளித்தாலோ, ஏதோ ஒரு இடம் தீப்பற்றி எரிந்தாலோ, தீ எரிவது போன்ற காட்சிகளை கனவில் கண்டாலோ உறவினர்களில் யாராவது ஒரு பெண் பூப்படைவாள் என்று நம்புகின்றனர்.
* அவள் பூப்படைந்த முதல் நாள் கணவன் இல்லாத பெண்ணையோ, முதியவர்களையோ முதல் முதலில் பார்த்தால் திருமணம் தாமதமாகும் எனவும், தான் பூப்படைந்ததைத் தானே கண்டறிந்தால் அப்பெண் வருங்காலத்தில் துன்பத்தை அணுபவிப்பாள் எனவும் கூறுகின்றனர்.
* எவரேனும் இறந்து போவது போல் கனவு கண்டால் திருமணம் நடக்கும் எனவும் நம்புகின்றனர்.
* திருமணம் நடப்பது போலவும், முருங்கைக் கீரை அவிப்பது போலவும் கனவு வந்தால் எவருக்காவது இறப்பு நேரிடும் என்று நம்புகின்றனர்.
இவ்வாறு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்க்கை நிகழ்வுச் சடங்குகளை இம்மாதிரியான நம்பிக்கையின் மூலம் அறிந்துகொண்டு, அதனிடம் இருந்து தன்னைக் காக்கவும், மகிழ்ச்சி அடையவும் முயற்சி செய்கிறான்.
கால மாற்றத்தில் நம்பிக்கை, மூடநம்பிக்கையானது
படிப்பறிவில்லாத பாமர மக்களிடையே வழங்கிவரும் நம்பிக்கையானது படிப்பாற்றல் நிறைந்த நகரமயமாதல் சூழலில் வாழும் மக்களிடையே மூட நம்பிக்கைகளாகக் கருதப்படுகின்றன. நம்பிக்கைகளுக்குச் சில அடிப்படைக் காரணங்கள் உண்டு. ஆனால், மூட நம்பிக்கைகளுக்கு அடிப்படைக் காரணம் இருப்பதில்லை. இருப்பினும் நம்பிக்கைகளையும் மூட நம்பிக்கைகளையும் பிரித்துக் காண்பது மிகவும் கடினமான ஒன்று. “மக்களின் எண்ணங்களும் கருத்துக்களும் உண்மை என்று நம்பும் நேரத்தில் நம்பிக்கை என்கிறோம். அதே மக்களின் எண்ணங்களும் கருத்துக்களும் உண்மையில்லை என்று நம்பும் போது மூடநம்பிக்கையாகத் தோற்றமளிக்கும் என்கிறார். (6)
மேலை நாட்டுக் கிறிஸ்தவர்கள் தம் கோயிலுக்குள் செல்லும் போது தொப்பியை எடுத்து வெளியேயுள்ள ஆணிகளில் மாட்டிவிட்டு உள்ளே செல்வர். அதுபோல் இங்குள்ள மக்கள் தங்கள் மூளையைக் சுழற்றி வைத்துவிட்டு கோவிலுக்குள் செல்கிறார்கள் என அமெரிக்க அறிஞர் நம் நாட்டுக் கோயில்களில் நடத்தப்பெறும் சமயச் சடங்குகளின் பொருள் புரியாமல் நகைச் சுவையாகக் குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்தல் பொருந்தும் என சரஸ்வதி வேணுகோபால் அவர்கள் நாட்டுப்புறப் பாடல்கள். சமூக ஒப்பாய்வு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சடங்கு என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வரைமுறை ஆகும். மனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒழுக்கம் என்று கூட சொல்லலாம். புனிதத் தன்மையின் பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைக் கோலங்களின் தொகுப்பே சடங்கு என்றும், புனிதச் செயல்பாடுகளே சடங்குகள் எனவும் சடங்குகள் குறித்து கூறப்பட்ட விளக்கங்களில் இருந்து அறிய முடிகிறது. சமுதாய வாழ்வில் சடங்குகள் பெரும் பங்காற்றுகின்றன. சடங்குகள் அடிப்படையிலான சமய வாழ்வின் மூலம் இப்பிரபஞ்ச ஒழுங்கு காக்கப்பட்டு இருக்கின்றன. ஒழுங்கமைவானது அகப்புறச் சூழல்களால் அச்சுறுத்தப்படும் போது மீள் சமன் செய்யப்பட்டு மறு ஒழுங்கு செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் ஒழுங்கு நிலை நிறுத்தப்படுகிறது. சடங்கானது “கூட்டு நனவிலிமனம்” அதாவது அனைவரையும் ஒன்றுபட வைக்கிறது என்கிறார் எமிலி தர்க்கைம்.
இவ்வாறு சடங்கானது வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், நம்பிக்கையின் வளர்ச்சியாகவே விளங்குகின்றன என்றும், எக்காரியத்தைச் செய்தாலும் அவற்றை இன்னின்ன நிகழ்ச்சிகளைக் கொண்டு செய்வதும். அவற்றை செய்யவில்லையென்றால் தீங்கு நேரும், வாழ்வு நலமாக அமையாது என்றும் கருதுவதினால் சில செயல்களைக் காலம் காலமாகச் செய்து வருகின்றனர். கடவுளிடம் உள்ள அச்சமும் முன்னோர் வழக்கத்தை மீறாமல் நடந்து கொண்டால்தான் வாழ்க்கை வசதியானதாய், கவலையில்லாததாய் அமையும் என்ற நம்பிக்கையும் சேர்ந்து இந்தச் சடங்குகளை விடாமல் செய்ய மக்களைத் தூண்டுகின்றன என சோமலே கூறுகிறார்.
முடிவுரை
தெய்வம் குறித்த மக்களின் அச்சம். சடங்குகளைப் பயபக்தியோடு நடத்தத் தூண்டுகின்றன. அதனால் சடங்குகள் காலப்போக்கில் கட்டாயமாக்கப்பட்டு, ஏன் எதனால் என்ற கேள்விகள் தவிர்க்கப்பட்டது. சடங்குகள் நடத்தப்படுவதன் காரணம், அவற்றின் நன்மைகள், தீமைகள் குறித்து ஒன்றும் அறியாமலேயே மக்கள் சடங்குகளை நடத்தத் தலைப்பட்டனர். அதன் காரணங்கள் புரியாமல், அவற்றை விளக்க முடியாமல் மக்களால் பின்பற்றப்படும் சில சடங்கு முறைகள் “மூட நம்பிக்கைகள்’’ என அறிஞர்களால் ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் அறிவியல் நிலையிலான காரணங்கள் இயல்பாக சிலவற்றில் அமைந்திருக்கின்றன. அச்சம் காரணமாக வழங்கி வருகின்ற மரபார்ந்த பல்வேறு செயல்களில் காரணகாரியங்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அமைந்திருக்கவில்லை என்ற கருத்தியலில் தான் இன்றைய தொடுதிரை உலகம் மூடநம்பிக்கை என்று அவற்றை ஒதுக்குகின்றன. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலம்தோறும் நிலவி வந்தாலும், நாட்டார் வழக்காற்றில் நம்பிக்கைகள் மனிதமனங்களில் தவிர்க்கமுடியாத இடத்தில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனைக் கல்வியாளர்களும் ஒப்புக்கொள்ளுகின்றனர். எனவே, சடங்குகள் நம்பிக்கைகள் குறித்த ஆய்வுகள் காலந்தோறும் முன்னெடுக்கப்படுவது அவசியமானதாகவே கருதப்படும்.
அடிக்குறிப்புகள்
1. சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு. ப.154
2. மு.பாலகிருட்டிணன், கண்ணேறு கழித்தல், ப.183-184
3. மு.பாலகிருட்டிணன், கண்ணேறு கழித்தல், ப.183-184
4. தே. லூர்து, நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம். ப.56
5. Richard M. Dorson, Folklore and Folklife, pg 3.
6. சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் ப. 155.
பார்வை நூல்கள்
1. நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம், சு. சக்திவேல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-17. (முதற்பதிப்பு, 1993)
2. கண்ணேறு கழித்தல், மு.பாலகிருட்டிணன், பூங்கொடி பதிப்பகம், சென்னை – 4. (முதற்பதிப்பு, 2010)
3. நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம், தே. லூர்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியீடு, தூய சவேரியர் (தன்னாட்சி) கல்லூரி, பாளையங்கோட்டை – 627002. (இரண்டாம் பதிப்பு, 2000)
4. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு நூல் தே.லூர்து, முல்லை நிலையம், சென்னை – 17. (முதற்பதிப்பு, 2011)
5. நாட்டுப்புறப் பாடல்கள். சமூக ஒப்பாய்வு, சரஸ்வதி வேணுகோபால், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியீடு, மதுரை. (முதற்பதிப்பு, 1982).
6. நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புற வாழ்க்கை ஒரு அறிமுகம் (Folklore and Folklife), ரிச்சர்ட்.எம்.டார்சன் (Richard M.Dorson), சிகாகோ பல்கலைக்கழகம், சிகாகோ (1972).
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.