மோடி ஆவணத்தொகுப்பிலுள்ள தமிழ் ஆவணங்கள்
(ஆவண எண்: CR88/001/(1), (2))
முனைவர் த. கண்ணன்
பேராசிரியர் மற்றும் தலைவர், அரிய கையெழுத்துச்சுவடித்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 010.
வரலாற்று நிகழ்வுகள் பதிவுகளாகின்ற பொழுது வரலாற்றுச் சான்றுகள் தோற்றம் பெறுகின்றன. வரலாற்றுச் சான்றுகளின் வழி அறியப்படும் வரலாறுகள் ஏற்புடைய வரலாறாகின்றன. வரலாற்றுச் சான்றுகளில் ஆவணங்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மக்கள் வாழ்வியலை உண்மைத்தன்மையுடன் அறிவதற்கு வரலாற்று ஆவணங்கள் பெரிதும் துணைநிற்கின்றன. மோடி ஆவணத் தொகுப்பில் உள்ள ஆவணங்கள் (எண் : CR88/001/(1), (2)) இங்கு ஆராயப்படுகின்றன.
மோடி ஆவணங்கள் - அறிமுகம்
1676 முதல் 1855 வரை தஞ்சாவூரை அரசாண்ட மராத்திய மன்னர்கள் அரசு நடைமுறைகள், கணக்கு விவரங்கள், கடிதங்கள், அரசியல் குறிப்புகள், ஆணைகள், மக்கள் கோரிக்கைகள் முதலியவற்றை மராத்திய மொழியில் மோடி எழுத்துருவில் எழுதினர். மராத்திய மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களுக்கு இடையில் அதன் விளக்கங்கள் சுருங்கிய குறிப்புகளாகத் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டன. அத்தமிழ் மொழிப்பதிவுகள் மோடிப் பலகணி என்றழைக்கப்படுகிறது. மோடிப் பலகணி அன்றி, மோடி ஆவணத் தொகுப்பில் தமிழில் எழுதப்பட்ட ஆவணங்களையும் காணமுடிகிறது.
மோடி எழுத்துருக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் மோடி ஆவணங்கள் என்றழைக்கப்படுகின்றன. மராத்தி மொழியை எழுதுவதற்கு தேவநாகரி எழுத்துருவில் இருந்து மோடி என்ற எழுத்துருவை ஹேமாட்பந்த் என்பார் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் உருவாக்கினார் என்பர். (1) கைகளை எடுக்காமலும் விரைவாகவும் எழுதுவதற்கு ஏற்ப இந்த எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. (2)
ஆவண எண்: CR88/001/(1), (2)
மோடி ஆவணத்தொகுப்பிற்கான அட்டவணை உருவாக்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில் ஆவண என் : CR88/001/(1), (2) என்பது ஒரு ஆவணகத்தின் இரண்டு பக்கங்களைக் குறிக்கிறது. இந்த ஆவணம் சொத்துக் கிரயம் தொடர்பாக 1861 இல் தாசில்தார் விசாரணை செய்தளித்துள்ள அறிக்கையாக அமைகிறது.


அரசு அம்பலத்தை அனுபவித்து வரும் நபர் அதனை விற்பனை செய்துவிட்ட நிலையில் இவ்விசாரணை நடைபெற்றுள்ளது.
இளையாங்குடி தாலூகா அரியாண்டிபுரத்தில்1 பழனியாண்டி, காளையர் எனும் சகோதரர்கள் வாழ்ந்துவந்துள்ளனர். பழனியாண்டியின் மனைவி நாகு, காளையரின் மனைவி சுந்தரம். இவர்களிடம் இருந்த அரசு அம்பலத்தை இவ்விரு சகோதரர்களும் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் மூத்த சகோதரர் பழனியாண்டி இறந்த பிறகு அந்த அம்பலத்தை இளையவர் காளையர் பார்த்து வந்தார். பிறகு காளையரும் இறந்துவிடுகிறார். காளையர் இறக்கின்ற பொழுது, அவருக்கு மூன்று பெண்குழுந்தைகளும் ஒரு வயதில் 1 ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். நான்கு குழந்தைகளுடன் இருந்த நாகு கடன் வாங்கித் தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். நாகு பெற்ற கடனுக்காக அரசு அம்பலம் விற்கப்பட்டுள்ளது. இவ்விற்பனையில் மூத்த சகோதரர் பழனியாண்டியின் மனைவி சுந்தரத்தின் அனுமதி பெறப்படவில்லை. எனவே இவ்விற்பனை குறித்த விசாரணையாக இந்த ஆவணம் அமைகிறது.
ஆவணத்தின் அமைப்பு
ஆவணத்தை விளக்கும் முகமாக அதன் அமைப்பு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன,
1. தொடக்கப் பகுதி
2. இடைப்பகுதி
3. இறுதிப் பகுதி
என்பனவாகும்.
ஆவணத்தின் தொடக்கப் பகுதி
ஆவணத்தின் தொடக்கப் பகுதி இரண்டு பத்திகளாக அமைகின்றது. முதற்பத்தியில் ஆண்டு, மாதம், நாள், இடம், யார் முன்பாக என்ற விவரங்களும் இரண்டாம் பத்தியில் மேற்படி இடம், விசாரிக்கப்பட்ட நபரின் பெயர் என்பவும் எழுதப்பட்டுள்ளன.
“1864 (வருடம்) டிசமபற (மாதம்) 31 (நாள்) இளையா
ஙகுடி தாலூகா தாசிலதார சரமறாயறவற
கள் முனபாக
(மேற்படி) யிலாகா அரியாணடிபுரத்திலிருககும் காளைலறாயவரகள
பெண்சாதீ நாகுவை விசாரணை”
”1864 வருடம் திசம்பர் மாதம் இளையாங்குடி தாலூகா தாசில்தார் சரமராயர் அவர்கள் முன்பாக” என்பது தொடக்கத்தின் முதற்பத்தியாகவும் ”மேற்படி யிலாகா அரியாண்டிபுரத்திலிருக்கும் காளையர் அவர்கள் பெண்சாதி நாகுவை விசாரணை” (செய்தளித்த அறிக்கை) என்பது தொடக்கப் பகுதியின் இரண்டாம் பத்தியாகவும் அமைகிறது. இதன் வழி ஆவணங்களைத் தொடங்கும் முறை அறியப்படுகிறது.
ஆவணத்தின் இடைப்பகுதி
ஆவணத்தின் இடைப்பகுதி விசாரணையில் கேட்கப்பெற்ற கேள்விகள், அக்கேள்விகளுக்குப் பெறப்பட்ட பதில்கள் என்றமைகின்றது.
இதில் மூன்று கேள்விகளும் அதற்குரிய பதில்களும் இடம்பெறுகின்றன. முதல் கேள்வியானது. ”மேற்படி (தாலூகாவைச் சேர்ந்த) அரியாண்டிபுரம் கிராமம் காரணம்பலம் அரைப்பங்கு பழனியாண்டியவர்கள் பெயரில் தாக்கலாகி வந்ததையும் அதைச் சேர்ந்த நிலமைகளையும் மேற்படி ஊர் பொன்ன அவர்களுக்கு கிரயம் செய்து கொடுத்திருப்பதாய்த் தெரியவருகிறதே. அப்படிக் கிரயம் செய்தது உண்மைதான் என்று பழனியாண்டி அவர்களுடைய அம்பலத்தை நீ கிரயம் செய்ய வேண்டியதென்று (கூறப்படுகிறது)” என்றமைகிறது. இக்கேள்வியானது இளையாங்குடித் தாலூகாவைச் சேர்ந்த அரியாண்டிபுரம் எனும் கிராமத்தில், பழனியாண்டி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த அரைப்பங்கு அம்பலத்தை மேற்படி ஊரைச் சேர்ந்த பொன்னன் என்பவருக்கு விற்கப்பட்டதாக அறியப்படுகிறது. அவ்வாறு விற்கப்பட்டது உண்மைதான் என்றும் எஞ்சிய அரைப்பங்கு அம்பலத்தை நாகுவாகிய நீ விற்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து நீ சொல்லும் பதில் என்ன? என்றவாறு இக்கேள்வி அமைகிறது. இதற்கு விடையளிக்கும் நாகுவின் பதிலானது,
“(மேற்படி) பழனியாணடி யரவர்கள யெனனுடைய புருஷனுடை
ன் கூடபிரந்த முத்த சகொதிறன் (மேற்படி) பழனியா
யரவகள யிரந்து பொனதாள பெரில யென்னுடைய புருஷன்
காளைலறாய யரவரகள யென்பவன் அமபலம பாரதது வந்து
ஒ-து- (வருடம்) மாசசுது (மேற்படி) யென்புருஷன் யிரந்து பொகும்
பொது (மேற்படி) அமபலததை ஒததரகாரன் பாரதது வநதான்
இபபொது 1861 (வருடம்) மாரசகி (மாதம்) 1 (நாள)யில (மேற்படி) அரியாணடிபுற
ததிலிருக்கு பொன்னயரவரகளுககி ரூ ௩௱௪௰௩ ககு கீரயம
செயதிருபபது நிஜமதான்”
என்றமைகிறது. இதில் மேலே குறிப்பிட்ட பழனியாண்டி என்பவர் என்னுடைய கணவனுடன் கூடப் பிறந்த மூத் சகோதரர் ஆவார். இப்பழனியாண்டி அவர்கள் இறந்து போனதால் என்னுடைய கணவனான காளையர் அவர்கள் அம்பலத்தைப் பார்த்து வந்தார். தற்பொழுது எனது கணவர் இறந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. என் கணவன் இறந்து போகும் பொழுது மேற்படி அம்பலத்தை ஒத்தரகாரன் பார்த்து வந்தான். 1861 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 1 ஆம் நாளில் மேற்படி அம்பலத்தை அரியாண்டிபுரத்திலிருக்கும் பொன்ன அவர்களுக்கு ரூபாய் 343க்கு விற்பனை செய்திருப்பது உண்மைதான். என்று நாகு அளித்த பதில் இடம் பெறுகிறது.
இரண்டாவது கேள்வியானது ,
”சரககார பாததியமான அமபலத்தை நீ யெவவிதமா
யி கீரயம செயயலாமயினு (மேற்படி) அமபலததுக்கு பாததிய
னதியான பழனியாண்டி யரவரகள பெணஒ சாததி சுநதறம
யெனமபவனுடைய அனுமதியினனாயிலு கீரயம செ
யயவெண்டியதெனறு“
என்று இடம்பெறுகிறது. இதில் அரசிற்குரிய அம்பலத்தை நீ (நாகு) எவ்விதம் பழனியாண்டி மனைவி சுந்தரத்தின் அனுமதியும் இன்றி விற்கலாம் என்று கேட்கப்படுகிறது. இதற்கான பதில்,
”யெனக்கு கடனுடன் தணடாலாகயிருந்ததுநாலு
நான பெண்யரவகளயாகசசே (மேற்படி) அமபல
ததை விதது கடனுடன் தணடாலைத்திகளுயிருக்குறென்
சரககார அமபலத்தை விரகர கூடாதென்குரவிபரம யெனக்கு
தெரியாது அதுநால் வித்துபொடென் அபபடிவித்ததைகுரிதது
சர்ககாரில உத்திரவாகுரபடி நடநது கொள்குறென் (மேற்படி) பழனி
யாண்டியரவகள் பெஞசாதி சுநதறம யென்பவள் உளரிய யிமைம
லிருநதது நால சுல ஒடய அனுமதி பெற கூடாடது.”
என்று எழுதப்பட்டுள்ளது.
இதில் நான் கடன்பட்டிருந்ததின் காரணமாக அம்பலம் விற்கப்பட்டு கடன் தீர்க்கப்பட்டது. அரசு அம்பலத்தை விற்கக் கூடாது என்ற விவரம் எனக்குத் தெரியாது. அதனால் நான் அதை விற்றுவிட்டேன். அதற்க அரசு விதிக்கும் விதிப்படி நடந்துகொள்கிறேன். என்ற விவரம் குறிக்கப்படுகிறது. மூன்றாவது கேள்வியானது,
“ஒனக்கு ஆண் சநததி யுண்டா”
என்று கேட்கப்படுகிறது. இதில் நாகுவிற்கு ஆண் வாரிசுகள் உண்டா என்று கேட்கப்படுகிறது.
இதற்கு நாகு அளித்துள்ள பதிலாவது,
“பெணகுழநதை 3 பெரு 10 வயசில ஒரு ஆண் குழ
நதையும யெனக்கு யிருக்குது”
என்றமைகிறது. இதில் பெண்குழந்தைகள் 3 பேரும் 10வயதில் ஒரு ஆண்குழந்தையும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆவணத்தின் முடிவுப் பகுதி
ஆவணத்தின் முடிவுப் பகுதி, விசாரிக்கப்பட்டவரின் ஒப்பம், விசாரணை செய்தவரின் ஒப்பம் எனும் இவற்றுடன் இவ்விசாரணையில் சாட்சியாக இருந்த நபர்களின் ஒப்பம் என அமைகிறது.
“--- யிநத இரவநாகு
சாடசிஅரிவெனமஙகலுகணககுசமையமுத்துபிள்ளை
சாடசிஅரிவெனஇளையாங்குடிளளைபபெருமாசெட்டி
ராமறாயர
தாசிலதார”
இதில் நாகு கையெழுத்துக்குறியீடு, முதற்சாட்சியான கணக்கு சமையமுத்துப் பிள்ளை, இரண்டாம் சாட்சியான இளையாங்குடி இளையபொருமாள் செட்டி, ராமராயர் தாசில்தார் என்போர் கையொப்பக் குறியீடு உள்ளது.
சமூக வாழ்வியல்
இந்த விசாரணையில் விசாரிக்கப்படும் நாகு, அரச அம்பலத்தை விற்கக்கூடாது என்ற விவரம் அறியாமல் இருக்கும் குடும்பத்தலைவியாக, சகோதரர்கள் இருவர் என்ற நிலையில் ஒருவரின் வாரிசுக்குத் தெரியப்படுத்தாமலே அம்பலத்தை விற்பனை செய்திருக்கும் அறியாப் பெண்ணாக, தனது தவறு சுட்டிக்காட்டப்படும் பொழுது அதனை உடன்பட்டு அதற்கு கட்டுப்படும் நேர்மைக் குணவதியாகக் காணப்படுகிறார்.
மூன்று பெண்குழந்தைகளுடன் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையையும் விட்டுவிட்டு கணவன் இறந்தவிட்டநிலையில் கடன்பட்டுத் தன் குடும்பத்தை நடத்தி வந்திருக்கும் ஒரு பெண்ணின் வறுமைப் போராட்டப் பின்னணியையுடையதாக இந்த ஆவணம் அமைகிறது.
மொழிநிலை
பெரும்பான்மையாக ஆவணங்களில் காணப்படும் குறில் நெடில் வேறுபாடின்மை, புள்ளியின்மை, ரகர றகர மாற்றங்கள் முதலிய பிழைகள் காணப்படுகின்றன. எண் 343 என்பது தமிழ் எண்களாக ௩௱௪௰௩ எழுதப்பட்டுள்ளது. இங்கு நூறு, பத்து என்பதற்குரிய எண்கள் பயன்படுத்தப்பட்டு வந்த வழக்கத்தைக் காணமுடிகிறது. தமிழ் எண் ரூபாயைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் குழந்தைகளின் வயதைச் சுட்டுமிடத்து 3, 10 என்ற எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது கவனத்திற்குரியதாகும். ஒன்பது என்பது சுருக்கமாக ஒ-து என்று எழுதப்பட்டிருப்பது இந்த ஆவணத்தின் தனித்தன்மையாக அமைகிறது.
முடிவுரை
மோடி ஆவணத்தொகுப்பில் காணப்படும் தமிழ் ஆவணங்களில் ஆவண எண் CR88/001/(1), (2) என்பது ஒரு ஆவணத்தின் இரண்டு பக்கங்களாக உள்ளன. அரசு அம்பலம் விற்கப்பட்டதை விசாரணை செய்தளித்த தாசில்தாரின் அறிக்கையாக இது உள்ளது. இவ்வறிக்கையின் வழியாக விசாரணை அறிக்கை எழுதுவதற்கான நெறி, சமுதாயநிலை, மொழிநிலை முதலியவற்றை அறியமுடிகிறது. மொழிநிலையில் தமிழ் ரூபாயைக் குறிக்கத் தமிழ் எண்களும் குழந்தைகளில் எண்ணிக்கை மற்றும் வயதைக் குறிக்க அரசு எண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் எண்களில் நூறு, பத்து என்பதற்கான எழுத்துவடிவங்களைக் காணமுடிகிறது.
சான்றெண் விளக்கம்
1. D. N. Besekar, R. J. Ramteke, Study for Theoretical Analysis of Handwritten MODI Script - A Recognition Perspective, International Journal of Computer Applications (0975 - 8887) Volume 64- No.3, February 2013.
2. Solley Joseph, Jossy George, Feature Extraction and Classification Techniques of MODI Script Character Recognition Pertanika J. Sci. & Technol. 27 (4): 1649 - 1669 (2019).
3. சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி வட்டத்தில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்ட ஓர் ஊராட்சி அரியாண்டிபுரம்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.