ஆத்திச்சூடி: ஒளைவையார் - பாரதியார் ஓர் ஒப்பீடு
மு. பூங்கோதை
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
முன்னுரை
இலக்கியம் என்பது காலத்தின் இயல்புகளை பதிவுசெய்யும் களமாகவே செயல்படுகின்றன. படைப்புக்களம் என்பது படைப்பாளர்கள் வாழ்கின்ற சூழல் அனுபவ மதிப்பீடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. படைப்பினைக் கொண்டு படைப்பாளர்களின் ஆளுமைத்திறன் மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இருவேறு காலகட்டத்தில் தோன்றிய படைப்பாளர்களின் படைப்புக்களை ஒப்பிடும் பொழுது படைப்பாளர்களது ஆளுமைத்திறன் மட்டுமின்றி மொழியறிவும் இங்கு ஆய்ந்தறியப்படுகிறது. இவ்வாய்வே தற்போது ஒப்பிலக்கியம் என வழங்கப்படலாயிற்று. இருவேறு மொழிகளுக்கிடையே ஒரே மொழியில் தோன்றிய இருவேறு படைப்பாளிகளுக்கிடையே என ஒப்பிலக்கியத் துறை பரிமாணம் பெற்றிருக்கிறது. தடம் பதித்து வளமான ஆய்வுகளுக்குக் களமாகவும் செயல்படுகின்றது. ஒத்த கூறுகள், தாக்கங்கள், அடிக்கருத்து, சிக்கல் போன்றவற்றை அடையாளம் காணக்கூடிய ஒப்பற்ற துறை ஒப்பிலக்கியம் ஆகும். அதனடிப்படையில் ஒளவையார், பாரதியார் ஆகியோர் எழுதிய ஆத்திச்சூடியின் கருத்துக்களை ஒப்பிட்டுக் கூறுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
காலம்
இரண்டடியில் வாழ்வியல் தத்துவங்களை வகைமையாக எடுத்துரைத்தார் வள்ளுவர். ஒரு வரியில் உலகிற்கு உன்னத கருத்துக்களை கொடுத்த தமிழ் மூதாட்டி ஒளவையார். இவர் பிற்கால சோழர்கள் காலமான கிபி12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை போன்ற அறநூல்களை எழுதிப் புகழ்பெற்றவர். இவர் கூறிய அற கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய கருத்துக்களாகும். ஒளவையாரின் ஆத்திசூடியின் அமைப்பினாலும் கருத்தினாலும் ஈர்க்கப்பட்டு அதனை அடியொற்றி அவரது காலச்சூழலுக்கு ஏற்ப வீரத்தையும் மடமைத்தனத்தையும் போக்கி, வீறுகொண்டு மனிதன் எழுகின்ற வகையில் பாரதியார் தனது ஆத்திச்சூடியினை 1908 முதல் 1918 வரை புதுச்சேரியில் வாழ்ந்து கொண்டிருந்தபோது எழுதுகின்றார். ஒளவையாரின் ஆத்திச்சூடி தென்றலாய் அறிவுறுத்த, பாரதியாரின் ஆத்திச்சூடி சூறாவளியாய், புயற்காற்றாய் அடிமைத்தனத்தில் மண்டிக்கிடந்த மக்களுக்கு வீரவுணர்வு ஏற்படுத்தும்; வகையில் அமைகின்றது. இவ்விருவரின் எழுத்தாளுமை முடக்குவாதம் கண்டு முடங்கிக்கிடக்கும் மானுட சமூகத்தை வீறுகொண்டு அக்னிக் குஞ்சாய் கிளர்ந்தெழச்செய்தது.
எண்ணிக்கையும் வரிசை முறையும்
ஒளவை எழுதிய ஆத்திச்சூடியானது, மகாகவி பாரதியார் புதிய ஆத்திச்சூடி எழுதுவதற்கு முன்னோடியாக இருந்தது. ‘சுருங்கக்கூறி விளங்கவைத்தல் உத்தி’பிடித்;ததால் பாரதி ஒளவையை அடியொற்றி மக்களுக்கு அறநெறியைக் கூற முற்பட்டார். குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் முறையில் ‘அ’கரவரிசைப்படி ஆத்திச்சூடி அமையப்பெற்றுள்ளது. ஒளவையார் ஆத்திசூடியில் 109 அடிகள் இடம்பெற்றுள்ளன. மகாகவி பாரதி புதிய ஆத்திச்சூடியில் 110 அடிகளில் வரிசைபடுத்தியுள்ளார்.
வ. எண் |
தமிழ் எழுத்துக்கள் |
ஒளவையார் |
பாரதியார் |
1 |
உயிர் எழுத்துக்கள் |
12 (அ,ஆ,இ,ஈ,உ,ஊ, எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) |
12 (அ,ஆ,இ,ஈ,உ,ஊ, எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) |
2 |
ஆய்தம் |
1 (ஃ) |
--- |
3 |
அகரம் ஏறிய மெய்யெழுத்து |
18 (க,ங,ச,ஞ,ட,ண,த, ந, ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன) |
--- |
|
உயிர்மெய் எழுத்து வரிசை |
|
|
4 |
‘க’கர வரிசை |
12 (க.கா,கி,கீ,கு,கூ,கெ,கே, கை,கொ,கோ,கௌ) |
12 (க.கா,கி,கீ,கு,கூ,கெ,கே, கை,கொ,கோ,கௌ) |
5 |
‘ச’கர வரிசை |
11 (ச,சா,சி,சீ,சு,சூ, செ,சே,சை,சொ,சோ) |
12 (ச,சா,சி,சீ,சு,சூ, செ,சே,சை,சொ,சோ,சௌ) |
6 |
‘ஞ’கர வரிசை |
--- |
5 (ஞ,ஞா,ஞி,ஞெ,ஞே) |
7 |
‘த’கர வரிசை |
11 (த,தா,தி,தீ,து,தூ, தெ,தே,தை,தொ,தோ) |
11 (த,தா,தி,தீ,து,தூ, தெ,தே,தை,தொ,தோ) |
8 |
‘ந’கர வரிசை |
11 (ந,நா,நி,நீ,நு,நூ, நெ,நே,நை,நொ,நோ) |
11 (ந,நா,நி,நீ,நு,நூ, நெ,நே,நை,நொ,நோ) |
9 |
‘ப’கர வரிசை |
11 (ப.பா,பி,பீ,பு,பூ, பெ,பே,பை,பொ,போ) |
10 (ப.பா,பி,பீ,பு,பூ, பெ,பே,பொ,போ) |
10 |
‘ம’கர வரிசை |
11 (ம,மா,மி,மீ,மு,மூ, மெ,மே,மை,மொ,மோ) |
11 (ம,மா,மி,மீ,மு,மூ, மெ,மே,மொ,மோ,மௌ) |
11 |
‘ய’கர வரிசை |
--- |
3 (ய,யா,யௌ) |
12 |
‘ர’கர வரிசை |
--- |
8 (ர,ரா,ரீ,ரு,ரூ, ரே,ரோ,ரேள) |
13 |
‘ல’கர வரிசை |
--- |
6 (ல,லா,லீ,(உ)லு, (உ)லோ,லௌ |
14 |
‘வ’கர வரிசை |
11 (வ,வா,வி,வீ,வு(உ),வூ (ஊ), வெ,வே,வை,வொ(ஒ),வோ(ஓ) |
8 (வ,வா,வி,வீ,வெ,வே, வை,வெள) |
|
மொத்த வரிகளின் எண்ணிக்கை |
109 |
110 |
‘ங,ட,ண,ழ,ள,ற,ன’ ஆகிய எழுத்துக்களின் உயிர்மெய் வரிசையை ஒளவை, பாரதி இருவருமே பயன்படுத்தவில்லை. ஓளவை பாடிய ஆய்த எழுத்தை பாரதி பாடவில்லை. மேலும் ஒளவை சேர்த்துக்கொள்ளாத ‘ஞ,ய,ர,ல’ போன்ற எழுத்துக்களின் வரிசையில் சில எழுத்துக்களைப் பாரதி தமது ஆத்திச்சூடியில் சேர்த்துக் கொண்டுள்ளார்.
கடவுள் வாழ்த்து
ஒவ்வொரு நூலிலும் ‘கடவுள் வாழ்த்து’ முதன்மையாக அமைகின்றது. நூலாசிரியர்கள் தான் சார்ந்த சமயம் அல்லது தனக்குப் பிடித்த தெய்வத்தைச் சிந்தையில் கொண்டு கடவுள் வாழ்த்தினை அமைக்கின்றனர். ஒளவையார் ஆத்திமாலை அணிந்து அன்பர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கக் கூடிய சிவபெருமானை வணங்குவோம் என்று தனது கடவுள்வாழ்த்துச் செய்யுளினை அமைக்கின்றார்.
“ஆத்தி ஆடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே” (ஒள.ஆத் - கடவுள்.வா)
என்று இறைவனை வாழ்த்தி எழுதத் தொடங்குகின்றார். ஆனால் பாரதியோ கம்பர், வள்ளுவர், ஒளவை இவர்கள் யாரும் அளித்திடாத கடவுள் வாழ்த்தினைப் பாடுகின்றார். சிவபெருமான், திருமால், அல்லா, இயேசு கிறிஸ்து என்று பல மதத்தைத் சார்ந்தவர்கள் இறைவனை உணர்ந்தும் உணராமலும் வழிபடக்கூடிய கடவுள் ஒன்றே என்று பரம்பொருளைப் பாடி வணங்குகின்றார், பாரதியார்.
“ஆத்திசூடி யிளம்பிறை யணிந்து
மோனத்திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை யெனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறு மறிவோம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் யெத்துவோம்” (பா.ஆத் - கடவுள்.வா)
என்ற வரிகளின் மூலமாக பாரதியார் ஒளவையாரிலிருந்து சற்றுமாறாக கடவுள் வாழ்த்தினை அமைத்திருப்பதை அறியமுடிகின்றது.
ஒற்றுமைகள்
ஒளவையார் பாரதியார் இருவரும் வேறுபட்ட காலங்களில் வாழ்ந்தாலும் இருவரின் ஆத்திச்சூடியிலும் பல ஒற்றுமைகள் காணக்கிடைக்கின்றன.
கல்வி
மூடத்தனத்திலிருந்து ஒரு சமூகத்தை மீட்டு எடுக்க உதவும் கருவி ‘கல்வி’ ஆகும். . ‘கற்க கசடற’ என்று வள்ளுவர் உலகிற்கு வழிகாட்டுகின்றார். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று கர்வம் கொள்கின்றார், பாரதி. இளைய சமுதாயம் கல்வி கற்றால், எதிர்கால சமுதாயம் வளமையாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ஒளவையார், இளமையிலேயே கல்வி கற்க வேண்டும் என்கிறார்.. எண், எழுத்தை ஒதுக்கக்கூடாது, தெய்வீக பாடங்களைப் பயில வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார். இதனை,
‘எண்எழுத்து இகழேல்’ (ஒள.ஆத்.7)
‘ஓதுவது ஒழியேல்’ (ஒள.ஆத்.11)
‘இளமையில் கல்’ (ஒள.ஆத்.29)
என்ற அடிகளின் வாயிலாக அறியமுடிகின்றது. ஒளவையின் அடியொற்றியே பாரதியும் நன்றாக கற்க வேண்டும்; கற்றபடி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதனை,
‘கற்றதொழுகு’ (பா.ஆத்- 13)
‘நீதிநூல் பயில்’ (பா.ஆத் - 104)
‘நூலினைப் படித்துணர்’ (பா.ஆத்- 59)
என்ற வரியின் வாயிலாக அறியமுடிகின்றது. பாரதி பல கலைகள், பல மொழிசார்ந்த நூல்களையும் கற்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று உரக்க முழக்கமிட்டவர், பாரதி. அவர் வாழ்ந்த காலத்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டு நவீன முறையில் தொழில்கள், கல்வி முறைகள் தோன்ற ஆரம்பித்தன. அதனால் ஒளவை சொல்லாத பல கருத்துக்களை பாரதி முன் வைக்கின்றார். வரலாறு, புவியியல், வானியல் போன்ற பாடங்களையும் கற்றுத்தேர வேண்டும் என்று பாரதி வலியுறுத்துகின்றார். அதனை,
‘சரித்திரத் தேர்ச்சிகொள்’ (பா.ஆத்-25)
‘ரேகையில் களிகொள்’ (பா.ஆத்- 94)
‘வானநூற் பயிற்சிகொள்’ (பா.ஆத்- 104)
என்ற வரிகளின் வாயிலாக அறிய முடிகின்றது. கல்வி குறித்து ஆய்கையில் ஒளவையும் பாரதியும் பல இடங்களில் ஒன்றுபடுவதை மேற்கண்ட தரவுகளின் வாயிலாக அறிய முடிகின்றது.
ஈகை
ஈகை என்பதற்கு வேண்டுவோருக்கு கொடுப்பது என்பது பொருள் ஆகும். ‘வறியார்க் கொன்றீவதே ஈகை’ என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். தர்மகாரியங்களை செய்வதற்கு விரும்பு என இருவருமே தனது கருத்துக்களில் ஒன்றுபடுகின்றனர். இதனை,
‘அறம் செய விரும்பு’ (ஒள.ஆத் - 1)
‘ஈகை திறன்’ (பா.ஆத் - 4)
என்பதிலிருந்து அறியமுடிகின்றது. உன்னால் பிறருக்கு கொடுக்க இயன்ற பொருளைக் கொடுக்காமல் மறைத்து வைக்காதே எனவும் ஒருவன் இன்னொருவனுக்கு கொடுக்கும் கொடையை இடையிற் புகுந்து தடுக்காதே எனவும் ஒளவையார் ஈகைக்குணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை,
‘இயல்வது கரவேல்’ (ஒள.ஆத்- 3)
‘ஈவது விலக்கேல்’ (ஒள.ஆத்- 4)
என்ற வரிகளின் மூலமாக அறியமுடிகின்றது. ஈகை என்பது மனித நற்பண்களில் ஒன்று. அக்குணம் அனைத்து மனிதரிடமும் இருக்க வேண்டும் என பாரதியும் ஒளவையும் வலியுறுத்துகின்றனர்.
நட்பு
உன் நண்பனைப் பற்றி சொல் உன்னைப் பற்றி சொல்கின்றேன் என்பது மூத்தோர் மொழி. ‘முகநக நட்பது நட்பன்று’ என்பது ஐயன் வள்ளுவன் வாக்கு. நம்முடைய குணநலன்கள், நடத்தை போன்றவற்றை அடையாளம் காண நட்பே துணை நிற்கின்றது. சேரத் தகுதியான நண்பணை ஆராய்ந்து சேர வேண்டும் என ஒளவை கூறுவதை,
‘சேரிடம் அறிந்து சேர்’ (ஒள.ஆத் - 51)
‘இணக்கம் அறிந்து இணங்கு’ (ஒள.ஆத் - 19)
‘சான்றோர் இனத்து இரு’ (ஒள.ஆத் - 45)
வரிகளின் வாயிலாக அறிய முடிகின்றது. மேலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து நட்பு கொண்டபின் அவரைவிட்டு நீங்குதல் கூடாது என ஒளவையும், மனிதனுக்கு மனிதன் நட்பை வளர்க்க வேண்டும், அந்நட்பை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் காக்க வேண்டும் என பாரதியும் கூறுவதனை,
‘கூடிப் பிரியேல்’ (ஒள.ஆத் - 37)
‘ஞேயங் காத்தல் செய்’ (பா.ஆத் - 41)
வரிகளின் வாயிலாக அறிய முடிகின்றது.
சோர்வினையகற்று
எப்போதும் உற்சாகத்துடனும் செயல் ஊக்கத்துடனும் இருக்க வேண்டும். அதிகநேரம் தூங்கக்கூடாது, உருப்படியான செயல்கள் செய்யமால் அலைந்து கொண்டிருக்கக் கூடாது, சோம்பல் மனிதனை உடனிருந்து கொள்ளும் உயிர்க்கொல்லி என்று ஒளவை அறிவுரை கூறுவதை,
‘அனந்தல் ஆடேல்’ (ஒள.ஆத்-31)
‘சோம்பித் திரியேல்’(ஒள.ஆத்-54)
என்ற வரிகள் வழி புலனாகின்றது. ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்பது பாரதியின் புகழ்மிக்க வாசகங்களாகும். ஆங்கிலேயரிடமிருந்து நாட்டைக்காக்க சோம்பலோடு இருந்தால் முடியாது. நல்ல ஆக்கமான செயல்கள் செய்வதற்கு தூக்கம், சோர்வு போன்றவற்றை விடுத்து சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என பாரதி வலியுறுத்துவதை,
‘கெடுப்பது சோர்வு’ (பா.ஆத்- 19)
‘நாளெல்லாம் வினைசெய்’ (பா.ஆத்-55)
ஏன்ற வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. சோர்வு என்பதை பாரதி ஒளவை இருவருமே வெறுக்கின்றனர்.
ஆரோக்கியம்
மனிதன் பூமியில் வாழ்வதற்கு உணவு, உடை, உறைவிடம் மிகவும் இன்றியமையாதது. இவையோடு உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் நலமாக வாழ முடியும். உடலினை பிணிகளுக்கு இடங்கொடுக்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டு என்று ஒளவையும்,
‘நோய்க்கு இடங்கொடேல்’ (ஒள.ஆத் - 76)
உடலினை உறுதியாக வைக்க வேண்டும் என்று,
‘உடலினை உறுதிசெய்’ (பா.ஆத் - 5)
‘வீரியம் பெருக்கு’ (பா.ஆத் - 106)
பாரதியும் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தச் சொல்கின்றனர்.. அந்நிய ஆட்சியிலிருந்து இந்தியத்தாயை மீட்க உடலினை உறுதியாகவும், வலிமையாகவும், ஆரோக்கியத்தோடும் வைத்திருந்தால் மட்டுமே முடியும். ஆதலால் பாரதி உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஆத்திசூடியில் கூறியிருக்கலாம்.
செயல்
எச்செயலை செய்தபோதிலும் அதில் ஓர் ஒழுங்கமைப்பு இருக்கவேண்டும். சிறு செயலாயிருந்தாலும் சரி, பெருங்காரியமாக இருந்தாலும் சரி செய்யும் செயலில் குறை ஏதும் நேராமல் திருத்தமுறச் செய்து முடிக்கவேண்டும். அவ்வாறு செய்யக்கூடிய செயல் ஆராய்ந்து செய்ய வேண்டும் என ஒளவை உரைப்பதை,
‘சீர்மை மறவேல்’ (ஒள.ஆத் - 47)
‘செய்வன திருந்தச்செய்’ (ஒள.ஆத் - 50)
“தூக்கி வினை செய்’ (ஒள.ஆத் - 60)
என்ற வரிகளின் வாயிலாக அறிய முடிகின்றது. எண்ணத்துணிக கருமம் என்பது வள்ளுவர் வாக்கு. ஒரு செயலைச் செய்ய முனைந்துவிட்டால், அதில் எத்தனை இடையூறுகளும் கஷ்டங்களும் நேர்ந்தாலும் நாம் துணிவுடன் அக்காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்று பாரதி கூறுவதை,
‘செய்வது துணிந்து செய்’ (பா.ஆத் - 31)
என்ற வரியின் வாயிலாக அறிய முடிகின்றது.
விவசாயமும் கைத்தொழிலும்
இந்தியாவின் மிக முக்கியமான தொழில் விவசாயமும் கைத்தொழிலும் ஆகும். அந்நியமயமாக்கல், தொழில்நுட்பவளர்ச்சி காரணமாக இவ்விரண்டும் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. விவசாய நிலத்தினைப் பண்படுத்தி உழவு மேற்கொண்டு உண்ண வேண்டும் என ஒளவையும், உழவுக்கருவிகளை போற்றிடவேண்டும் என பாரதியும் கூறுவதை,
‘பூமி திருத்தி உண்’ (ஒள.ஆத்- 82)
‘மேழி போற்று’ (பா.ஆத் - 82)
வரிகளின் வாயிலாக அறியமுடிகின்றது. ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்;’ என்பது பழமொழி. கற்றத்தேர்ந்த கைத்தொழிலை மற்றவர்க்கு கற்றுக்கொடுத்து போற்றி பாதுகாக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்துவதை,
‘கைவினை கரவேல்’ (ஒள.ஆத் - 40)
‘கைத்தொழில் போற்று’ (பா.ஆத் - 21)
வரிகளின் வாயிலாக அறிய முடிகின்றது.
தேசம்
மன்னராட்சியில் வாழந்த ஒளவையும், விடுதலை போராட்ட காலத்தைச் சேர்ந்த பாரதியும் தேசத்தை காக்கவேண்டும், தேசத்தோடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை வலியுத்துவதை,
‘தேசத்தோடு ஒத்து வாழ்’ (ஒள.ஆத் - 62)
‘தேசத்தை காத்தல் செய்’ (பா.ஆத் - 49)
ஏன்ற வரிகளின் வாயிலாக அறியமுடிகின்றது. நாட்டுமக்களிடையே ஒற்றுமை இருந்தால் தான் நாட்டை அந்நியரிடமிருந்து காக்க இயலும் என இருவருமே வலியுறுத்துகின்றனர்.
வேற்றுமைகள்
சினம்
ஒருவன் கொள்ளும் சினமென்பது அவனையும் அவனது சுற்றத்தையும் கொள்ளும் தன்மையுடையது. ஒளவையார் பிறரைக் கடிந்து கொள்ளக்கூடிய கோபமாகிய குணத்தை வேண்டாம் என்று கூறுவதை,‘ஆறுவது சினம்’ (ஒள.ஆத் - 2), ‘கடிவது மற’ (ஒள.ஆத் - 32) என்ற அடிகளின் வாயிலாக அறிய முடிகின்றது. ஆனால் பாரதியோ கொடுமைகளை எதிர்த்து மக்களையும் உலகையும் காக்க கோபமாகிய குணத்தை பழகு என்றுரைப்பதை,‘ரௌத்திரம் பழகு’ (பா.ஆத் - 96) என்ற அடிகளின் வாயிலாக அறியமுடிகின்றது. அந்நியரை எதிர்க்க, தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க, தண்டனை அளிக்க கோபம் வேண்டும் என பாரதி அறிவுறுத்துகின்றார்.
பெண்கள்
ஒளவையார் வாழ்ந்த காலத்தில் பெண்ணடிமைத்தனம் வேரூன்றி இருந்தது. பெண்களுக்கு கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்டிருந்த காலமாகும். அத்தகைய சூழலில் வாழ்ந்த பெண்களது ஆசைவயப்பட்ட பேச்சைக் கேட்காதே ‘தையல் சொல் கேளேல்’ (ஒள.ஆத் - 63) என்று கூறுகிறார். ஆனால் பாரதியோ பெண்களுக்கு எதிரான கைம்பெண் கொடுமை, இளமைத்திருமணம், சதி போன்றவற்றை ஒழித்து பெண்கல்வி, பெண்விடுதலை, மறுமணம், சமஉரிமை போன்ற கொள்கைகளை முன்வைக்கிறார். அதனால்‘தையலை உயர்வு செய்’ (பா.ஆத் - 50) என்று கூறுகின்றார்.
போர்
தமிழர்கள் போரையும் காதலையும் இருகண் எனப் போற்றியவர்கள். புலவர்கள் பெரும்பாலும் அரசனுக்காக போரிட வேண்டும் என வீரர்கள் மத்தியிலும், அரசனுக்கு இணங்கி திறை செலுத்தும்படி எதிரி மன்னர்களிடத்தும், அரசனை தெய்வத்துக்கு இணையாக பாடியவர்கள். ஆனால் மன்னராட்சி காலத்தில் வாழ்ந்த ஒளவையார் இதற்கு மாறான கருத்தினை முன்வைக்கின்றார். ‘போர்த்தொழில் புரியேல்’ (ஒள.ஆத் - 87), ‘முனைமுகத்து நில்லேல்’ (ஒள.ஆத்- 92) என்பன மன்னர்க்கும் வீரர்க்கும் எதிராக ஒளவையார் கூறும் கருத்துக்கள். போரினால் விளையக்கூடிய அழிவுகளைக் கண்டு ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால் பாரதியோ தமிழரின் வீரத்தைக் காட்டும் மரபிலே நின்று,
‘போர்த்தொழில் பழகு” (பா.ஆத்- 74)
‘முனையிலே முகத்து நில்’ (பா.ஆத் - 79)
‘சாவதற்கு அஞ்சேல்’ (பா.ஆத்-26)
என்று கூறுகின்றார். நாட்டின் சுதந்திரம், அமைதி, எல்லைகள் காக்க குழந்தைகளுக்கு போர்ப்பயிற்சி அவசியம் என பாரதி வலியுறுத்துகின்றார்.
முடிவுரை
• படைப்பென்பது மானுடசமூகத்தின் மறுமலர்ச்சிக்கான வழித்தடமென்பதை இவ்விருவரது படைப்புக்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
• காலத்தின் சூழலை இவ்விருவரது படைப்புக்களின் மூலம் வெளிக்கொணரமுடிகிறது.
• சமூகத்தை நெறிப்படுத்த கல்வி, நட்பு, தேசத்தை பாதுகாத்தல்,விவசாயம், கைத்தொழில், சோர்வினை அகற்றுதல், ஈகைக்குணம் ஆகிய கருத்துக்களில் இருவரும் ஒன்றுபடுகின்றனர்.
• ஒரு கையில் ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. அதேபோல் இருவேறு காலச்சூழலில் வாழ்ந்த ஒளவையார், பாரதியார் இருவரிடையே பெண்கள் பற்றிய சிந்தனை, சினம், போர் போன்ற சிந்தனையில் வேறுபட்டு நிற்கின்றனர்.
சுருக்கக்குறியீடு விளக்கம்
1. ஒள.ஆத - ஒளவையார் ஆத்திச்சூடி
2. பா.ஆத் - பாரதியார் ஆத்திச்சூடி
3. கடவுள்.வா - கடவுள் வாழ்த்து
பயன்பட்ட நூல்கள்
1. இனிய நீதி நூல்கள், கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், சென்னை – 600 017.
2. பாரதியின் புதிய ஆத்திச்சூடி, அ.சீனிவாசன் (உரையாசிரியர்), பதிப்பாளர், 10, வேதாசலம் தெரு, சென்னை – 42.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|