காலம்தோறும் இந்திரன் வழிபாடு
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி - (சுழல் - II),
மீனம்பாக்கம், சென்னை - 600061.
முன்னுரை
பழந்தமிழர்கள், இயற்கைப் பேரழிவுகளிலிருந்து தம்மைக் காப்பாற்ற வேண்டி, சூரியன், இடி, மின்னல், சந்திரன், மழை போன்ற இயற்கையையே வழிபட்டனர். பின்னர் நிலப்பகுப்பு ஏற்பட்டது. தொல்காப்பியரும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலப்பாகுபாட்டைக் கூறி, குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாக முருகனையும், முல்லை நிலத்திற்குரிய தெய்வமாகத் திருமாலையும், மருத நிலத்திற்குரிய தெய்வமாக இந்திரனையும், நெய்தல் நிலத் தெய்வமாக வருணனையும் கூறிச் சென்றுள்ளார். மருத நிலம் வயலும் வயல் சார்ந்த பகுதியாகும். அதன் உரிப்பொருள் ஊடலும், உடல் நிமித்தமும் ஆகும். மழையே அனைத்திற்கும் அடிப்படை. மழை பெய்தால்தான், புல் கூட முளைக்கும். எனவே, மழைக்குத் தெய்வமான இந்திரனைப் போற்றித் துதித்து விழா எடு்த்து வழிபாடு செய்தனர். காலங்கள் தோறும் இந்திரவழிபாடு எவ்வாறு நடைபெற்றது என்பதை இக்கட்டுரையின் வாயிலாகக் காண்போம்.
வழிபாடு
'வழிபாடு' என்ற சொல்லுக்கு, ‘இறை காட்டிய அறவழியில் செல்லுதல்' என்பதேப் பொருளாகும். 'வழிபடு' என்ற சொல்லிலிருந்து பிறந்ததே 'வழிபாடு' என்ற சொல்லாகும். வழிபடு என்பதற்கு 'வணக்கம்' என்று 'செந்தமிழ் அகராதி' பொருள் கூறுகிறது. (செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி) வழிபாடு என்ற சொல்லுக்கு அப்பியாசம், ஆராதனை, தாழ்மை, வணக்கம்,வழிபடல் என்று 'தமிழ்மொழி அகராதி' பொருள் தருகிறது. (நா.கதிரைவேற்பிள்ளை) தெய்வங்களை மகிழ்விப்பதற்காகவே மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும், பூசனை முறைகளுமே வழிபாடு என்றும், இறைவனுடன் இரண்டறக் கலப்பதே வழிபாடு என்றும், உள்ளத்தின் கதவுகளை இறைவனுக்காகத் திறப்பதே வழிபாடு என்றும் கூறப்படுகிறது.
வழிபாடு தோன்றக்காரணம்
'இயற்கையின் ஆற்றலைக் கண்டு அஞ்சிய மனிதன், அதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருக்க விரும்பினான். அதனடிப்படையில் வழிபாடுகள் உருவாயின என்று வழிபாடு தோன்றுவதற்கானக் காரணத்தை நாட்டுப்புறவியல் அறிஞர் சக்திவேல் குறிப்பிடுகிறார். (சக்திவேல்.சு, நாட்டுப்புறவியல் ஆய்வு)
இந்திரன்
தேவர்களின் தலைவன். மக்கள் நல்வினைப் பயனாகக் கிடைப்பது தேவர் உலகமாகும். தலைவர் பதவியைப் பெறுவதற்கு நூறு பரிவேள்விகளை சிறப்பாகச் செய்து முடிக்கவேண்டும். வேள்வி செய்யும் போது, ஒரு குதிரையை, நன்கு அலங்காரம் செய்து அதில் எல்லா விபரங்களையும் எழுதி, அந்தக்குதிரை செல்லும் எல்லா திசையிலும் உடன் சென்று, அங்கே உள்ள அனைத்து மன்னர்களையும் வென்று வெற்றி பெறுவதாகும்.
இந்திரன், வஜ்ராயுதத்தை உடையவன். ஐராவதம் என்ற தேவலோக வெள்ளை யானையைத் தன்னுடைய வாகனமாகப் பெற்றவன். இந்திரனின் தந்தை காஷ்யபமுனிவர், தாய் அதிதி ஆவார். இந்திரனின் மனைவி இந்திராணி. இந்திரனுக்கு ஜெயந்தன் என்ற மகன் உள்ளார்.(சிலப்பதிகாரம்- அரங்கேற்றுக்காதை-2)
ரிக்வேதத்தில் இந்திரன்
ரிக்வேதத்தில் இந்துக்களின் மிகப்பழைய புனித நூலில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவன் இந்திரனே ரிக் வேதத்திலுள்ள ஸ்லோகங்களில் கால் பங்குக்கு மேற்பட்டவை, இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவனுடைய வீரதீரச் செயல்களைப் பற்றி ஏராளமான குறிப்புகள் வேதங்களில் காணப்படுகின்றன. வேத காலத்திற்குப் பின் அவன் நிலை தாழ்ந்து விட்டது. ஆரியர்களால் உருவாக்கப்பட்ட இராமாயணத்தில் ஆரம்ப காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டு தொட்டே இந்திரன் பற்றிய இழிவான பேச்சுக்கள் தொடங்கிவிட்டன.
இந்திரனுக்கு விழா
இந்திர விழா என்பது இந்திரனைச் சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டு, தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்தி பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவை “தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்” என்று சாத்தனார் கூறியுள்ளார். (மணிமேகலை - விழாவரைக்காதை 35) இவ்விழாவின் முக்கிய நோக்கம் மழை. மழைக்குக் கடவுளாகிய இந்திரனுக்கு விழா எடுத்து வணங்கி அவனருளாலே மழையைப் பெறுவதே இந்திர விழாவாகும்.
இந்திரனின் படைக்கலமாகிய வஜ்ரமும், ஊர்தியாகிய ஐராவதமும், இருப்பிடமும் வழிபாட்டு சின்னங்களாக வழக்கில் இருந்தன. மருதநிலக் கடவுளான இந்திரனைக் குறிக்கும் விதமாக “உண்டாலம்ம உலக இந்திரர் அமிர்த” (புறநானூறு 182) என்றும் ஆயிரம் கண்கள் உடையவன் என்பதை “அணங்குடை உசுரத்தான் ஆயிரம் கண்” (முல்லைக்கலி 5:16) என்றும் கூறுகிறது.
சங்க இலக்கியத்தில் இந்திரன்
சங்க இலக்கியத்தில் இந்திர விழாவை மக்கள் கொண்டாடிய செய்தியை;
“இந்திர விழாவில் பூவினன்ன
புன் தலைப் பேடை வரி நிழலகவும்” (ஐங்குறுநூறு 62:1-2)
என்று இந்திர விழாவில் பூக்கள் மிகுதியாகப் பயன்பட்டமையைக் கூறுகிறது.
“வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
முரசு முழங்கு தலை” (புறநானூறு 141)
என்ற பாடலடி மூலம் இந்திரன் வழிபாடு நடைபெற்றதை அறியமுடிகிறது. பரிபாடலில் திருப்பரங்குன்றம் மலை சிறப்பு வழுதியுடன் ஏறியோர் கண்ட காட்சிகளில் மலையில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றுள்
“இந்திரன் பூனை, இவள் அகலிகை, இவன்
சென்ற கௌதமன் சினம் உறக்கம் உரு
ஒன்றிய படி இது என்று உரை செய்குவோரும்” (செவ்வேல் 50 -52)
இப்பூனையே இந்திரன், இவன் அவ்விடத்தைச் சேர்ந்த கௌதம முனிவன், இவள் தான் அம்முனிவனின் மனைவி அகலிகை. அம்முனிவர் தான், அவள் கல் உருவம் தந்த வகை இது என்றவாறு விளக்கம் தருவர். கௌதமன் மனைவி அகலிகை மீது மோகம் கொண்டு பூனை வடிவில் வந்த இந்திரன் அவளை வஞ்சகமாகப் புணர்ந்ததும், கௌதமன் அவனுக்கு சாபமிட்டது அகலிகையைக் கல்லுருவாக்கிய புராணச் செய்தியும் கூறுகிறது.
திருமுருகாற்றுப்படையில் இந்திரன்
இந்திரன் என்றாலே ஆயிரம் கண்களை உடையவன். நூறு வேள்விகளைச் செய்து முடித்த தேவர்களுக்குத் தலைவன் .நான்கு தந்தங்களை உடைய ‘ஐராவதம்’ என்னும் யானையை உடையவன் என்பதனை;
“நூற்று பத்துஅடுக்கிய நாட்டத்து, நூறுபல்
வேள்வி முற்றிய வென்றுஅடு கொற்றத்து,
ஈர் இரண்டு ஏந்திய மருப்பின், எழில்நடை,
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்” (திருமுருகாற்றுப்படை 155)
என்று திருமுருகாற்றுப்படையில் வஜ்ராயுதத்தை ஏந்திய கையை உடையவனாகத் திகழ்கிறார். திருமுருகாற்றுப்படையில் பரிவேள்வி மட்டுமல்லாது, வேறு பல வேள்விகளையும் செய்து இந்திரன் உயர்ந்தான் என்று கூறுகிறது. வானத்தில் மழைக்காலத்தில் தோன்றும் வில்லை ‘இந்திரவில்’ என்பர். தேவர்களுக்காக அவுணர்களை அழித்து, இந்திரனின் மகள் தேவயானையை முருகன் திருமணம் செய்துள்ளான் என்று பரிபாடல் கூறுகிறது. (9. செவ்வேள் பரிபாடல்)
திருக்குறளில் இந்திரன்
தேவர்களின் தலைவனான இந்திரனை,
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு கோமான்
இந்திரனே சாலும் கரி” (குறள் 25)
ஐம்பொறிகளையும் ஐம்புலன் மேல் செல்லாது, அவித்து அடக்கியவர் பெருமைக்கும் ஐம்புலன்கள் மேல் செலுத்தி அடக்கும் அடங்காதவர் பெருமைக்கும் இந்திரனே சான்றாவான். பொறி புலன் அடக்கிய தவத்தால் அடைந்த இந்திர பதவியின் பெருமையை, பொறி புலன் அடக்கப் பெறாமையால் துறவியின் சாபம் பெற்று, இழந்த சிறுமைக்கும் இந்திரனேச் சான்று ஆவான். உலகில் இந்திர பதவி ஏற்றோர் பலராவர். குறளில் ஐம்புலன்களின் ஆசையை அடக்கியவனுடைய ஆற்றலுக்கு இந்திரனே தகுந்த சாட்சியாக ஆவான் என்கிறார். (திருவள்ளுவர் - 25)
மழை வேண்டி வழிபாடு
உலகின் வளத்துக்குக் காரணமாக அமைவதும், உயிர்கள் வாழக் காரணமானது நீர். நீர் இல்லையெனில் இவ்வுலகம் இயக்கம் நிகழாது. எனவே, மழையை வழிபடும் பண்டைய வழக்கம் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. குன்றக் குறவர்கள் மழை வேண்டினர் என்பதை,
“குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
நுண்பல் அ ழிதுளி பொழியும் நாட
நெடுவரைப் படப்பை நம்மூரக்
கடுவரல் அருவி காணினும் அழாமே” (ஐங்குறுநூறு 187, 188, 189, 190)
எனும் பாடல் கூறுகிறது.
இயற்கையை வழிபட்ட மக்கள் நாளடைவில் தீ வளர்த்து நெய் சொரிந்து பலியிட்டு தெய்வத்தை வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதைக் கார் நாற்பது குறிப்பிடுகிறது.
“பொச்சாப்பு இலாத புகழ் வேள்வி தீ ப்போல
எச்சாரரும் மின்னும் மழை” (கார் நாற்பது பாடல் ஏழு)
வேள்வி செய்தால் மழை வரும் என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது என்பது பெறப்படுகிறது. தேவர்களை வணங்கிப் பூஜை செய்து வழிபட்டால், மழை வரும் என்ற நம்பிக்கை தமிழரிடையே இருந்துள்ளது என்பதை,
“புகழ்மிகு சாந்தெறிந்து புல் ரூட்டிப்
புண் கொடுக்கப் பெற்ற புலவோர் துகள் பொழியும்
வானுயர் வெற்ப இரவில் வர ல்வேண்டா
யானை யுடைய சுரம் “ (திணைமொழி ஐம்பது பாடல் 1)
மணத்தால் புகழ் பெற்ற சந்தன மரங்களை வெட்டி எறித்து, நெருப்பு வைத்த புகை வான்வழியேச் செலுத்த அதைப் பெற்ற தேவர்கள் பூந்தாது போன்ற மழைத்துளிகளைப் பொழிவார் என்று நம்பப்பட்டது.
இரட்டைக் காப்பியங்களில் இந்திரன்
சிலப்பதிகாரம், மணிமேகலை என்று இரண்டு நூல்களுமே இந்திரனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி, 28 நாட்கள் விழா எடுத்துச் சிறப்பாகக் கொண்டாடின. “தூங்கெயில் எரிந்த தொடித்தோட் செம்பியன்” எனும் சோழ மன்னன் இந்திரனிடம் பூம்புகார் நகரில் உன்னை முன்னிறுத்தி, நாங்கள் எடுக்கும் விழாவில் 28 நாட்கள் வந்திருக்க வேண்டும் என்று வேண்ட, இந்திரனும் அதற்கு இசைந்ததால், இந்திர விழா எடுக்கப்பட்டது. இந்திர விழாவின் தொடக்கம் சித்திரை நாள் மீன நட்சத்திரம் கூடிய சித்திரை நிலவு நாளில் சித்ரா பௌர்ணமியில் நடைபெற்றது என்பதை,
“கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்கின்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச்சித்திரைத் திங்கள் சேர்ந்தென“
(சிலப்பதிகாரம்-இந்திரவிழாவூரெடுத்தகாதை 62-64)
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
சித்திரை மாதம், சித்திரை நட்சத்திர நாள் அன்று தொடங்கி வைகாசி மாதம் அனுஷ நட்சத்திர நாள் முடிய, 28 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்திரவிழா தொடங்கும் போது, முசுகுந்த சோழன் தேவ உலகிலிருந்து கொண்டுவந்து நிறுவிய, ஐந்து மன்றங்களிலும், சிறப்பு வழிபாடுகள், பலி பூஜைகள் நடைபெறும். பின்னர் அரசர்களும் முக்கியமானவர்களும், வஜ்ர கோட்டத்தில் ஒன்று கூடி அங்கு மலர்களால் அலங்கரித்து
வைக்கப்பட்டிருக்கும் அரசமுரசத்தை எடுத்து, பொன் முகப்படாம் அணிந்த கோயில் யானையின் முதுகில் ஏற்றி வைத்து, ஊர்வலமாகப் புறப்பட்டு, ஐராவத ஆலயத்துக்குச் செல்வார்கள்.
அங்கேயேதான் முரசறைந்து, இந்திர விழாவின் தொடக்கம் பற்றியும், நிறைவு நாள் பற்றியும் அறிவிப்பார்கள். பிறகு செய்திகள் நாட்டுமக்களுக்குப் பறை அறிவித்துத் தெரிவிக்கப்படும். அறிவிப்பு முடிந்ததும், ஊர்வலம் அமரர் கூட்டம் சென்று ஐராவதச் சின்னத்துடன் கூடிய ‘அஷ்டமங்களம் ‘என்னும் கொடியைக் கோயில் முன் ஏற்றுவர்.
“ஐவகை மன்றத்து அரும்புலியுறீஇ
வச்சிரக் கோட்டத்து மணங் கெனழு
முரசம் கச்சை யானை ப்பிடர்த்தலை ஏற்றி”
(இந்திர விழா வூரெடுத்த காதை 141-143)
என்பதையும் அறியமுடிகிறது.
மதுரைக் காண்டத்தில் பாண்டியனின் பெருமை குறித்துப் பேசும் காடுகாண் காதை மாங்காட்டு மறையோன் பாண்டிய மன்னனின் வழித்தோன்றல்களை, ‘வடிம்பலம்ப நின்ற பாண்டியன்’ பற்றி சந்திர குல மரபு மேன்மையடையுமாறு ஆயிரம் கண்களை உடைய இந்திரன் அணிவித்த வலிமை பொருந்திய ஆரத்தை தனது அழகு விளங்கும் மார்பிலே பூண்டான். அவன் “ஆரம் பூண்ட பாண்டியன்” எனப் பாராட்டப்
பெற்றான். அந்தப் பாண்டியன் புகழ் வாழ்வதாக,
“திங்கள் செல்வன் திருக் குலம் விளங்கச்
செங்கன் ஆயிரத்தோன் திறல் விளங்காரம்
பொங்கொளி மார்பில் பூண்டோன்வாழி
முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று
இடையுடைப் பெருமழை எய்தா தேக ப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழை பிணித்தாண்ட மன்னன்”
(காடுகாண் காதை 24 - 30)
பாண்டியன் நம் குல முதல்வனான இந்திரன் தலையிலேச் சூடிய முடியில் இருந்த கிம்பிரியை உடைத்தவன் என இடியுடன் கூடிய மழை சில ஆண்டுகள் பாண்டி நாட்டில் பெய்யாது ஒழிந்தது. ஆயினும், தன் நாட்டில் தப்பாத விளையுளாகிய மிக்க வளம் பெருகும் வண்ணம் அம்மேகங்களைச் சிறைப்படுத்தி மழை பொழியச் செய்தான் பாண்டியன். கட்டுரைக் காதையில் பாண்டிய மன்னனிடம் தோற்று சாதாரண மனிதனாகவும் காட்டப்படுகிறான்.
கட்டுரைக்காதையில் ‘பொற்கைப் பாண்டியன்’ வரலாறு பேசப்படுகிறது. அதில் பாண்டிய மன்னன் தன் கையைத் தானே வெட்டிக் கொண்டான்.
“நெஞ்சம் சுடுதலில் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்
உச்சிப் பொன்முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து”
(கட்டுரைக் காதை 49 -52)
மன்னன் வச்சிரப்படையைத் தன் கையிலே ஏந்திய தேவேந்திரனுடைய தலையில் உள்ள அழகிய முடி அணியை ஒளியுடைய தனது சக்கரப் படையால் உடைத்த தனது கையினை வாளால் வெட்டினான். கண்ணகி மதுரையைக் கோபத்தால் எரித்த பின், நடந்து திருச்செங்கோடு சென்றாள். 14 நாட்கள் கடந்தபின், தான் கணவனைக் கண்டு தொழுகைக்குரிய நாள் இது எனக்கருதி, கோவலனை நினைத்து வாழ்த்தினாள். அப்போது இந்திரன் சுற்றத்தார் கோவலன் இறங்கி கற்புடைய நிற்குமிடம் வந்து கற்பக மலர்களை மழைபோல் அவள் மீது பொழிந்து கைகுவித்து வணங்கித் துதித்தனர். அந்நிலையில் மணம் கமழும் கூந்தலையுடைய கண்ணகி, மதுரையில் கொல்லப்பட்ட தன் கணவனான கோவலனுடன், வான ஊர்தியில் ஏறி விண்ணுலகு அடைந்தாள் என்பதை,
“வாடா வாடா மாரி செய்தாங்கு அமரர்க்கு
அரசன் தமிழ் வந்தேன் ஏத்த வானவூர்தி ஏறினால் மாதோ”
(கட்டுரை காதை 196- 199)
என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது.
சிலப்பதிகாரம் தொடக்கத்தில், இந்திரன் தேவர்களுக்கு அதிபதி, அவனை வேண்டினால், மழை கிடைக்கும், நாடு செழிக்கும், என்று இந்திர விழா கொண்டாடினர். பாண்டியன் இந்திரனை, எதிர்த்து அவன் தலைமுடியை சென்டால், அடித்துச் சிதறச் செய்தான், அதனால் இந்திரன் வெகுண்டெழுந்து எழில்மிக்க, மேகங்களை மழை பொழியாமல் தடுத்தான். அவற்றைச் சிறைபிடித்து, இழுத்துவந்து, நிறை மழைபொழிய பாண்டியன் கட்டளையிட்டான். மேகத்தைக் கால் தலையிட்டு பணித்த பாண்டியன் இவன் என்று பாராட்டப்பெற்றார். இச்செயலைச் செய்தவன் “உக்கிரப் பெருவழுதி”. கட்டுரைகளில் இந்திரனையே வெற்றி கொண்டவன் பாண்டிய மன்னர்கள் என்பதும், அவன் தயவு இன்றி மழையைப் பொழியச் செய்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கட்டுரைக் காதை இறுதியில், கண்ணகியை அழைத்துச் செல்ல இந்திரன் சுற்றத்தார் கோவலனுடன் வந்தனர் என்பதும் பெறப்படுகிறது.
சிலப்பதிகாரம் முதலில் இந்திரனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி, பின் சாதாரண நிலைக்கு மாற்றி, இறுதியில் உயர்த்திக் கூறியுள்ளது.
மணிமேகலையில் இந்திரன்
அகத்தியர் சொற்படி, இந்திரனை வணங்கி நிலவுலகில் எனது சிறந்த நகரில் மேலோர் விரும்புமாறு விழா நடைபெறும் 28 நாட்களிலும் நீயும் இங்கே வந்து மகிழ்ச்சியுடன் தங்கி அருள வேண்டும் என்று வேண்ட, இந்திரனும் உடன்பட விழா நடைபெற்றது.
“ஆயிரம் கண்ணோன் விழாக் கால் கொள்க என
வச்சிரக் கோட்டத்து மனம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி” (மணிமேகலை-விழாவரைக்காதை 26-28)
வச்சிர நிற்கும் முரசினை கச்சை அணிந்த யானையின் பிடர்த்தலை ஏற்றி வைத்து முரசு அடித்து ஊருக்கு அறிவித்தான். வீதி எங்கும் விழாக்கோலம் பூணவும், கோயில் எங்கும் வழிபாடுகள் செய்யவும், பட்டிமன்றம் செய்து வாதிடவும் கூறினான். இந்திர விழா கொண்டாடினால் நாட்டில் பசியும் நோயும், பகையும், நீங்கி மழையும் வளமும் பெருகுக என்று வாழ்த்தினான் என்று கூறப்பட்டுள்ளது.
பாத்திர மரபு கூறிய காதையில், இந்திரன் ஆபுத்திரனிடம் வந்தான் யாது நின் கருத்து.
“உன் பெரும் தானத்து உழுபயன் கொள்க என
நிரப்பு இன்று எய்திய நீளம் அடங்கலும்
பரப்பு நீராய் பல் வளம் சுரக்க என
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம் கன்னோன்
ஓங்கு உயர் பெருஞ்சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்
பன்னிரண்டு பாண்டி நல் நாடு” (பாத்திர மரபு கூறியகாதை 32 -35)
மிகுந்த நீரினை உடைய கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் ஆபுத்திரன் செய்த அறச்செயல் இந்திரன் இருக்கை ஆகிய வெண்ணிற பாண்டு கம்பளத்தை நடுங்கச் செய்தது. அவ்வளவில் தளர்ந்த நடையினனாக கோலையேக் காலாக ஊன்றி, கூனிய உடலை உடைய ஒரு மறையவனாக இந்திரன் ஓர் உருவம் கொண்டான். மிகப்பெரிய உலகத்தில் உள்ள நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கும் ஆபுத்திரன் முன் தோன்றினான்.
’இந்திரனாகிய நான், இங்கு வந்துள்ளேன் நின் கருத்து யாது, நினது பெரியவனான சிறந்த பயனைக் கொள்வாயாக’ என்றான். அது கேட்ட ஆபுத்திரன், வெள்ளை உள்ளத்தைக் கொண்ட ஒருவனைப் போல் விலா வெடிக்குமாறு சிரித்தான்.
அவனை இகழ்ந்தான். திரும்பிப் போகுமாறு கூறினான். இவ்வுலகில் செய்த நல்வினைப் பயன்களை அவ்வுலகில் காணத்தக்க சிறப்புடைய நும் போன்ற உயிர்களைப் பாதுகாப்போர் நல்ல தவம் புரிவோர் பற்று அற முயல்வோர் ஆகியோரில் ஒருவரும் இல்லாத இயல்பினது தேவர்களின் நாடு. அத்தகு நாட்டுக்கு தலைவனாகிய பேராற்றல் மிக்க வேந்தனே, எனது தெய்வக் கடிஞை வருத்தத்துடன் வருபவரின் கடும் பசியைப் போக்கி, அவர்களது இனிய முகத்தை நான் காணுமாறு காட்டும். விண்ணவர் தலைவனே நீ எனக்கு அளிப்பவை, உண்பன, உடுப்பன, மகளிரோ, நண்பரோ அல்லது வேறு யாவை என்றான். ஆபுத்திரன் மொழிகளைக் கேட்டு இந்திரன் சினம் கொண்டான். உயிர்களைக் காப்பாற்றும் ஆபுத்திரனின் பாத்திரத்தில் இடப்பட்ட உணவு பெருகிய போதிலும் இரப்போரைக் காணாது ஏக்கம் அடைந்து இருக்குமாறு பெரிய நிலம் உலகமெங்கும் வறுமை இல்லாதவாறு பெரு மழையால் பல்வகை வளங்களும் பெருகுவதாக என மேகங்களுக்கு கட்டளையிட்டான். இதன் காரணமாக ஆயிரம் கண்களையுடைய இந்திரன், இவனது மிக உயர்ந்த வளங்களை உலகினருக்கு அளித்தான் என்கிறது.
மணிமேகலை விழாவறைக் காதையில், இந்திரனுக்கு 28 நாட்கள் விழா எடுத்து தெய்வநிலைக்கு உயர்த்திக் கொண்டாடியது, பின் பாத்திர மரபு கூறிய காதையில், இந்திரனை ஒரு பொறாமைக்காரனாகவும், கோபக்காரனாகவும் சித்தரிக்கிறது.
பக்தி இலக்கியங்களில் இந்திரன்
சைவசமய இலக்கியங்களான நாயன்மார் பாடல்களில் இந்திரன் பற்றிய குறிப்புகள் உள்ளன. மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சியில். அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது. இந்திரனுக்குரிய கிழக்குத் திசையில்’சூரியன் தோன்றினான், இருள் விலகியது என்று கூறப்பட்டுள்ளது. வைணவ சமய ஆழ்வார்கள் பாடலிலும் இந்திரன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தொண்டரடிபொடியாழ்வார் பாடிய திருமாலையில் காணப்படுகிறது.
“பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமர்ரேறே ஆயர்தங் கொழுந்தே யென்னும்
இச்சுவை தவிரயான் போய் இந்திரலோகமாளும்
அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே” (நாலாயிர திவ்விய பிரபந்தம் 873)
என்ற பாடலில் இந்திரன் ஆளக்கூடிய உலகம் வேண்டாம், உன்னுடைய திருக்கோலம் காணும் பேறு மட்டும் போதும் என்கிறார்.
மதுரைக் கோவில் இந்திர விமானம்
மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலில், உள்ள சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரனுக்கு நேர்ந்த கொலை பாவத்தைப் போக்கும் பொருட்டு, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தான். சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய கடம்பவனமான மதுரையில், சுயம்பு லிங்கமாக இருப்பதைத் தரிசித்த இந்திரன் பாவ விமோசனம் பெற்றார். இதனால் இந்திரன் இங்கு விமானத்துடன்கூடிய பெருங்கோயிலை எழுப்பினான். தற்போது இது ‘இந்திரன் விமானம்’ என அழைக்கப்படுகிறது. (https://temple.dinamalar.com/news_detail.php?id=93812)
புராணங்களில் இந்திரன்
வைணவக் கடவுளான கண்ணன், இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடை செய்கிறான். இந்திரன் கோபம் கொண்டு ஊரை அழிக்கும் மழையைப் புயலை அனுப்புகிறான். கண்ணன் கோவர்த்தனகிரி மலையைத் தூக்கிப் பிடித்து, மக்களை காத்து, இந்திரனின் கர்வத்தை அழித்தான் என்கிறது. புராணங்களில் இந்திரன் கர்வம் நிறைந்தவனாகக் காட்டப்படுகிறான்.
பள்ளுப் பாடல்களில் இந்திரன்
மழை வேண்டி உழவர் குடிமக்களான பள்ளர்கள் தெய்வத்திற்குப் பூஜை செய்து வழிபடும் பகுதி அனைத்துப் பள்ளுப்பாடல்களிலும் இடம்பெறுகின்றன.
“இந்திரன் மனது மகள் பள்ளனி யானை’ (பொய்கைப் பள்ளு பாடல் 70)
என்ற பள்ளுப் பாடல் மருத நிலத்துக்குரிய தெய்வமான இந்திரனைச் சுட்டுகிறது. இதைப் போலப் பல பாடல்களும் இந்திரன் குறித்த செய்திகளைக் கூறுகின்றன.
”பண்பு சரி மன்னரெல்லாம் பரிவாய் குலதெய்வத்தை
கும்பிட்டு எல்லோரும் குலவை” (நரசிங்க பள்ளு பாடல் 32)
“திங்களை மும்மாரி உலகெங்கும் பெய்யவே
தெய்வத்தை போற்றி வந்தார் கை தருங்காண்” (முக்கூடற்பள்ளு பாடல் 32)
“ஆகும் இந்திரன்
பணி கொண்ந்த கார்” (மேலது 38)
“பாரினில் மருத வேலி பார் பொருள் பள்ளர் மாதர்
மாரிபெய்திடவே தெய்வம் வரன்முறை வழங்குவா” (மாணவப் பள்ளுபாடல் 151)
என வரும் பாடல்களிலிருந்து தெய்வத்தையும் அதன் வழிபாட்டையும் அறிய முடிகிறது.
சில நூல்களில் இந்திரன் வழிபாடு
பெருங்கதை, சூளாமணி, சீவகசிந்தாமணி, மேருமந்திரபுராணம், நீலகேசி, ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களிலும் இந்திரன் வழிபாடு நடைபெற்றதை அறியமுடிகிறது.
“வெந்துயர் அருவினை தீட்டிய அண்ணலை
இந்திரஉலகம் எதிர்கொண்டு” (பெருங்கதை 15)
“வானோர்த முலகுடைய மாநில வண்ணன்
மகிழந்திறைஞ்சு மலையணி மணி முடிமேல்வைகா
ஊனாரும் அறவாழி யோடமால் யானை
யுடையான்றன் ஒளிமுடியின் மேலுரையேநிற்கத்
தேனாரும் அரவிந்தஞ் சென்றேந்தும் போழ்து
திருவடிகள் செந்தோடு தீண்டாவேயாகில்
ஆனாவிம் மூவுலகும் ஆளுனடைபெம்மான்
அடியறு வாரிண்மைதா மறிவுண்டபன்றே” (சூளாமணி 1909)
“மால்யானையுடையான்...
களியானை நாற்கோட்டத்தொன்றுடைய செல்வன்
கண்ணொராயிர முடையான் கண் விளக்கமெய்தும்
ஒளியானை” (சூளாமணி1907)
“அந்தர அகடு தொட்டணவு நீள் புகழ்
வெந்தொய்பசும் பொனின் விழைவும் வெல்லொளி
மந்திரவாய்மொழி மறுவின் மாதவர்
இந்திரர் தொழுமடி இனிதி னெய்தினான்” (சீவகசிந்தாமணி 1239)
“தாமாதி....
... ... ... ... ...
... ... ... ... ... தேவர் கோமான்
தாமாதி யணிந்து பணிந் தெழுந்ததுவும்
தததுவெமன் தகவோ வென்ன” (மேருமந்திரபுராணம்)
“புரந்தரரும் வானவரும் புகழ்ந்தடியேங்
குற்றேவல் கொள் கென்றேத்தி
நிரந்தரம் வந்தனைசெய்ய இருந்தருளும்
அருந்தவரே” (திருக்கலம்பகம் 23)
“அரியவாயின செய்திட்டு அமரர் தந்துபி அறைந்து
புரியபூ மழைப்பொழிய பொன்னெயில் மண்டிலம்
புதைந்த” (நீலகேசி 156)
“பதநூபுரத்தின் அளகேசன்
நாடித் தேடிப்பாட எயில்
பரமாமுனு நாயகர் தமக்கும்
பாரில் மனித ரனைவோர்ககும்
முதனூலுரைத்த கனிவாயால்
முத்தந்தருக முத்தமே” (ஆதிநாதர்பிள்ளைத்தமிழ்)
இவ்வாறு சில நூல்களிலும் இந்திரன் வழிபாடு பற்றிய செய்தி காணப்படுகிறது.
முடிவுரை
தேவர்களின் தலைவனான இந்திரனைச் சங்க காலத்தில் மழைவேண்டி மக்கள் வழிபட்டனர் என்பதும், சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவூ ரெடுத்த காதையில் 28 நாட்கள் வழிபட்டு விழா கொண்டாடியதையும், கட்டுரைக்காதையில் பாண்டிய மன்னனிடம் தோற்று சாதாரண மனிதனாகவும், இறுதியில் கட்டுரைக்காதையில் கோவலனுடன் இந்திரன் சுற்றத்தார் வந்து கண்ணகியை அழைத்துச் சென்றனர் என்றும் உயர்த்தியேக் கூறப்பட்டுள்ளது. மணிமேகலையில் மங்கல வாழ்த்துப் பாடலில் விழா எடுத்துக் கொண்டாடப்பட்ட இந்திரன், பாத்திரமரபு கூறிய காதையில் ஒரு பொறாமைக்காரனாகவும், கோபக்காரனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளான். இராமாயணத்தில் இந்திரன் பெண்பித்தனாகவும், அடுத்தவர் மனைவி மேல் ஆசைகொள்பவனாகவும் காட்டப்படுகிறான். புராணங்களில் இந்திரன் கர்வம் நிறைந்தவனாகவும் காட்டப்படுகிறான். பள்ளுப்பாடல்கள், சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி, நீலகேசி, மேருமந்திரபுராணம், திருக்கலம்பகம், ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களில் மழை தரும் தெய்வமாகவும் காட்டப்பட்டுள்ளான் என்பதை அறியமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1. கதிரைவேற்பிள்ளை. நா., தமிழ்மொழி அகராதி கௌரா பதிப்பகக் குழுமம்.
2. சக்திவேல்.சு, நாட்டுப்புறவியல்ஆய்வு,மணிவாசகர் பதிப்பகம்,சென்னை. 2002.
3. சீவகசிந்தாமணி இரண்டாம் தொகுதி, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2016.
4. சுப்பிரமணியன். பெ.(உரை.ஆ) தட்சிணாமூர்த்தி.அ. பரிபாடல் மூலமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004.
5. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி, மதன் மண்டலம், முதற்பகுதி நா.தேவநேயப்பாவாணர், தமிழ் நாட்டுப்பாடநூல் நிறுவனம்,சென்னை.
6. தட்சிணாமூர்த்தி (உரை.ஆ) ஐங்குறுநூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004.
7. நாகராசன்.வி. (உரை.ஆ) பத்துப்பாட்டு மூலமும் உரையும், முதல், இரண்டு தொகுதி நியூ செஞ்சுரி செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004.
8. பாலசுப்பிரமணியன்.கு.வை (உரை.ஆ) புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004.
9. பெருங்கதை, பகுதி1, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, 1968.
10. ஸ்ரீ.சந்திரன், ஜெ.சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.
11. ஸ்ரீசந்திரன். ஜெ. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொகுதி 1,2,3, தமிழ் நிலையம், சென்னை, 2007.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.