இரட்சண்ய மனோகரத்தில் இயேசுவின் இறைத்தன்மை
ரா. அபிஷா
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வு மையம்,
இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
நெய்யூர் -629802, கன்னியாகுமரி மாவட்டம்.
முன்னுரை
இயேசு இறைத்தன்மையை இழக்காமல் மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார். ஆபிரகாமுக்கும், தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழி மரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார். இயேசுவின் இறைத்தன்மையும், மனிதத் தன்மையும், பிரியாமல் இருக்கின்றன. மனிதத்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து விளங்குகின்றார். இயேசுவின் இறைத்தன்மை இரட்சண்ய மனோகரத்தில் இடம்பெற்றுள்ள தன்மை இக்கட்டுரையில் ஆராயப்பட்டு உள்ளது.
இறைத்தன்மை
இறைத்தன்மை என்பது இயேசுவின் அருட்செயலாகும். கிறிஸ்தவ இறைத்தன்மையின்படி, கடவுள் இறைத்தன்மையில் ஒருவராகவும், தந்தை, மகன், தூய ஆவி என விளங்குகின்றவராவார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் அல்லது அதிபுனிததிரித்துவம் ஆகும். படைத்த ஒரே கடவுள் அன்பிலும், பொறுமையிலும், தியாகத்திலும் சிறந்து திகழ்ந்து விளங்கியவர். மக்களுக்கு நல்வழிகாட்டி இறை அருளைப் பொழிந்து வல்லமை உடையவர்களாக அருள்பொழிவு செய்வதே இறைத்தன்மை ஆகும்.
இயேசுவின் வேதவாக்கு அருள்
இறைவனால் அருளப்பட்டது வேதம். இயேசுவின் அருளைப் பெறுவதற்கு வேதம் வழி வகுக்கிறது. இறையருள் பெற்றவர்களுக்கு நன்மையை விளைவிக்கும் தீயச் செயல்கள் செய்பவர்களுக்கு அச்சத்தைக் கொடுத்து மரணத்தை வழிவகுக்கக் கூடியனவாக இருக்கும். இது வேதத்தின் சிறப்புடையத் தன்மைகளாகவும் விளங்குகிறது. இயேசுவின் போதனைகள் மரணத்தை அழிக்கக் கூடிய ஆயுதமாகும். இயேசுவின் வேத அருள்வாக்கே தீய எண்ணங்களை மனதில் வரவிடாமல் தடுக்கும் சிறப்புடையதாக விளங்குகிறது என்பதை,
“தேவதூ தரும்வியந் தேத்து செம்பொருள்
பூவுலக குயவரு புனிதன் புத்துரை” (இ. ம.199)
என்பதை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
இயேசுவின் நற்செய்திப் போதனைகள்
தந்தை கடவுள் ஈசோ வழியாக நமக்கு அருளிய “மீட்பின் வார்த்தையே நற்செய்தி என்பனவாகும். ஈசோ என்பது இயேசுவைக் குறிக்கிறது. நற்செய்தி என்ற வார்த்தையின் பொருள் “நல்ல செய்தி” உலக மக்களுக்கு நலம் தரக்கூடிய வண்ணம் நற்செய்தியைப் பறைசாற்றி அவர்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்தார். (உலகின் உயிர் ப:137). இயேசுவின் நற்செய்தி மக்களின் மனத்தைத் தூய்மைப்படுத்தி நன்னிலை அடைய வழி வகுக்கும். இயேசுவின் நற்செய்தி அன்பு மிக்கது. இயேசு மக்களுக்கு நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே சென்றார். தந்தை கடவுளின் அன்பைக் குறித்து மக்களுடன் உரையாற்றினார். ஈசோ மக்களிடம், “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று கூறினார். (மாற்கு.1:15)
வாழ்வு தரும் சீவநதி
உலக மக்களைத் துன்பத்திலிருந்து பாதுகாப்பத்தற்காக சீவநதி உலகில் பாய்ந்து கொண்டிருக்கிறது. சீவநதி தண்ணீர் மக்களின் உடலுக்கு எந்தத் தீங்கும் வராத வண்ணம் தற்காத்துக் கொள்ளும் தன்மையுடையது. வானுலகையும், மண்ணுலகையும் இணைக்கும் இயல்புடையது. சீவநதி தண்ணீரில் மூழ்கி வருபவர்களின் பாவங்களும், அவர்கள் நோய்களும் அகன்று போகும். மனங்களில் இறை உணர்வை ஏற்படுத்தும் பிறவியான துன்பங்களைத் தொலைந்து போக இதை விட வேறு வழியும் இல்லை. சீவநதி தண்ணீரைப் பருகிக் கொண்டவர்கள் ஒரு நாளும் துன்புற மாட்டார்கள். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும், என்றுமே தாகம் இருக்காது. நான் கொடுக்கும் தண்ணீர், அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும் என்று இயேசு கூறினார். (யோவான்.4:14) அதுபோல சீவநதி நீரைப் பருகினால் பசி, துன்பம், சோர்வு, நோய் உடலை வருத்தும் துன்பங்கள் அழிந்து நிலை வாழ்வு கிடைக்கும் என்பதை,
“தாகமின் றாம்பசி தணியும் சஞ்சல
தேகமும் புனிதமாம் சீவ நீரினே” (இ.ம.216)
எனும் பாடல் வரிகள் உணர்த்துகிறது.
பாவங்களைப் போக்கி மீட்சியடையச் செய்தல்
பாவங்களில் விழாமல் காத்து மீட்சியடையத் துணையாக இருந்து வழி நடத்தி, பேய்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் மக்களை விடுவித்து அவர்களுக்கு அருள்புரிந்தீர். இறந்தோரை உயிர்த்தெழச் செய்து காட்சி கொடுத்தீர். உம் உதவியை நாடி நம்பிக்கையுடன் காத்திருக்கும் எளிய மக்களுக்கு என்றென்றும் அழியாத வாழ்வினை இயேசு நல்கி, அவர்களுக்கு நல்துணையாக வழிகாட்டினார் என்பதை,
“செத்தேன் உன் னருளாற்பிழைக் தேன்மறு செனம்மதாய்
எத்தோடங் களையும் பொறுத் தென்றுமிரங்குகவென்
அக்காவுன்னை யல்லாலெனக் கார்துணை யாருறவே” (இ.ம.313)
இரட்சண்ய மனோகரமும் மீட்படைந்தோர் என்றுமே வாழ்வார் என்றும்,
கீழ்க்காணும் கீர்த்தனைப்பாடலில்,
“மீட்டகப்பட்ட கூட்டமே
உங்கள் மீட்பர் பேரிலே
பாடி வாழ்த்தல் செய்யுங்கள்
மீட்பின் அன்பைச் சொல்லுங்கள்” (கீர்: 213)
விளக்குகிறது.
தொழுநோயாளிகளைக் குணப்படுத்துதல்
கண்களில் ஒளி இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் என் கண்களை உம் கையால் தொட்டு பார்வை பெறச் செய்தார். என் மேல் இரக்கம் கொண்டும் பார்வை அளித்தீர், காதுகேளாத என்னையும் குணமாக்கினீர். பசியுற்றோருக்கு உணவுக் கொடுத்து பசிக்கு உணவூட்டினார். வாய் பேசாதோரை பேச வைத்து குணமாக்கினார். தொழுநோயாளிகள் இறைவனிடம் “தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும் என்று உரக்கக் கத்தினார்கள்” என்பதை (மத்தேயு.21.30) வசனத்தில் கூறியது போல இரட்சண்ய மனோகரத்திலும் இடம் பெற்றுள்ளது.
“மையார்கண் ணிருண்டுசெவி வாயடைத்துக் குழறி
ஐயால்மூச் சொடுங்கிஉயி ராக்கைவிட் டேகிடு நாள்” (இ.ம.315)
உலகைக் காக்கும் இறைவன்
உலக மக்களின் பாவங்களைப் போக்கி மக்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து அவர்களுக்கு வழித்துணையாக நின்று காத்தல், படைத்தல், அழித்தல் என்னும் செயல்களில் அரசராக விளங்கியவர். துன்பக் கடலில் தவித்த மக்களை மீட்டவர். “இயேசு சீடர்களை நோக்கி நம்பிக்கை குன்றியவர்களை, ஏன் அஞ்சுகிறீர்கள்” எனக் கேட்டு எழுந்து காற்றையும், கடலையும் அடக்கிக் கொண்டார். உடனே மிகுந்த அமைதியுண்டாயிற்று” (மனிதகுமாரன் இயேசுபிரான்.ப.181)
இஸ்ரவேலர் மக்களைக் காத்தல்
இஸ்ரவேல் என்பதற்கு எபிரேயத்தில் ‘இறைவனோடு போராடுகிறான்’ என்பது பொருள். அதன் பின் ஆபிரகாம் சந்ததியில் பிறந்த அனைத்து மக்களுக்கும் இஸ்ரவேல் என்ற பெயர் கடவுளால் வழங்கப்பட்டது. இஸ்ரவேல் மக்கள் நானூறு ஆண்டுகளுக்கு மேல் எகிப்து நாட்டில் அடிமையாக வாழ்ந்து வந்தனர். இஸ்ரவேலரின் அழுகுரலைக் கேட்டு, கடவுள் மனமிரங்கினார். இஸ்ரவேல் மக்களின் உயிர்களைக் காக்கும் பொருட்டு கடவுள் யோசேப்பை எகிப்திற்கு அனுப்பினார். கடுமையான பஞ்சத்தால் எகிப்து நாடும் கானான் நாடும் வாடியது. கடவுள் இஸ்ரவேல் மக்களை அடிமை வாழ்விலிருந்து விடுவித்தார் என்பதை,
“கருப்பினில் இசரேல் மக்களைக் காத்த
கருணையங் கடவுளே போற்றி”
(இ.ம.391)
இஸ்ரவேல் மக்களை விடுவித்ததன் மூலம் இயேசுவின் இறைத்தன்மை வெளிப்படுகிறது.
அன்பால் வெளிப்பட்ட இறைத்தன்மை இஸ்ரவேல் மக்களைப் பஞ்சத்திலிருந்து கடவுள் காத்து அருள் புரிந்ததோடு மட்டுமல்லாமல் “குழந்தை வளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர். இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்து விட்டது” (கிறிஸ்தவக் தமிழ் இலக்கியம், ப.70). இதன் மூலம் கடவுள் இஸ்ரவேல் மக்கள் மீது கொண்ட அன்பு வெளிப்படுகிறது. அடிமை வாழ்வில் மருண்டு கிடந்த இஸ்ரவேல் மக்களை மோசே வழியாக மீட்டு, தெளிந்த புத்தியில்லாப் பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மடியச் செய்தார். இவையனைத்தும் ஆண்டவர் இஸ்ரவேல் மக்கள் மீது கொண்ட அன்பினால் நடைபெற்றது என்பதை,
“அருளினாற் செங்கோ லளித்து மோசேயை
அனுப்பிய அமலனே போற்றி”
(இ.ம.392)
இப்பாடல் வரிகள் உணர்த்துகிறது.
இஸ்ரவேல் மக்களுக்கு மன்னாவை அளித்தல்
இஸ்ரவேல் மக்கள் நானூறு ஆண்டுகளுக்கு மேல் எகிப்து நாட்டில் அடிமைகளாக வாழ்ந்தனர். பார்வோன் சிறையிலிருந்து கடவுள் இஸ்ரவேல மக்களை மீட்டு மோசே தலைமையில் வழி நடத்திச் சென்றார். இஸ்ரவேல் மக்கள் பயணம் செய்த நாற்பது ஆண்டுகளாகக் குடியேற வேண்டிய கானான்நாட்டை அடையும் வரை அவர்களுக்கு உணவாக மன்னாவை கடவுள் அளித்தார். கடவுள் அருளிய வானமுதத்தை “இஸ்ரவேல் குடும்பத்தார் மன்னா என பெயரிட்டழைத்தனர். இது கொத்தமல்லி போன்ற வெண்ணிறமாயும், தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்றும் சுவையாயும் இருந்தது” (வி.ப.16:31) என்று விவிலியம் குறிப்பிடுகிறது.
“மற்றவர் தமக்கு வழித்துணையாகி
வானமு கருளினாய் போற்றி” (இ.ம.393)
கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு வழித்துணையாக அவர்களுடன் சென்று, உணவாக மன்னாவை அருளி, தம் மக்கள் மீது கொண்ட அன்பைப் பறை சாற்றினார்.
கானானிய நாட்டில் இஸ்ரவேலர் குடிபுகல்
பாலும், தேனும் ஆறாக ஓடும் தன்மையைக் கொண்டது கானான் நாடு. இந்நாடே ஆண்டவர் இஸ்ரவேல் மக்களுக்கு வாக்களித்த நாடாகும். இஸ்ரவேலர் கடவுளின் வாக்குறுதிகளுக்கு உண்மையுள்ளவர்களாக நடந்தமையால், கொஞ்சம் கொஞ்சமாக கானானிய நாட்டைக் கைப்பற்றினார்.
“கொற்றமொ டிசரேல் வளமிகு கானான்
குடிபுக வருளினாய் போற்றி” (இ.ம.393)
இஸ்ரவேல் மக்கள் வளமிகுந்த நாட்டில் குடியேற ஆண்டவர் வரமருளினார்.
இயேசு மக்களுக்கு நற்செய்தி பறைசாற்றுதல்
இயேசு வழங்கிய முக்கியமான போதனையில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் அன்பு செய்ய வேண்டும் என்றும், எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்க வேண்டும். “விண்ணரசு நெருங்கி வந்து விட்டது என நற்செய்தியைப் பிறருக்கு பறைசாற்றுங்கள். இயேசு மலைமேல் ஏறி தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களுள் பன்னிருவரைக் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருந்தூதர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர். “சீமோன் எனப்பட்ட பேதுரு” அவனது சகோதரனாகிய அந்நிரேயா, செபெதேயு மகன் யாக்கோபு, அவனது சகோதரனாகிய யோவான், பிலிப்பு, பார்தொலெமேயு, தோமா, மத்தேயு, அல்வின் மகனாகிய யாக்கோபு, லெபேயு எனப்பட்ட ததேயு, கானானாகிய சீமோன், யூதாஸ்காரியோத் என்னும் பன்னிரெண்டு பேரைத் தலைமைச் சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்” (மீட்பராம் கடவுள், பக்.22) அவர்கள் நற்செய்தியை அறிவித்து இயேசுவின் பெயரால் நோயாளிகளைக் குணமாக்கினர் என்பதை,
“வந்தது பரம ராச்யம் மனந்திரும் புங்க என்று
முந்துப தேசஞ் செய்தி முத்திவித் தகனே போற்றி” (இ.ம:402)
இப்பாடல் வரிகள் உணர்த்துகிறது.
இயேசு கடல் மீது நடத்தல்
கலிலேயாக் கடலைக் கடந்து “பெத்சாயிதா” என்னும் நகருக்குச் செல்லுமாறு சீடர்களிடம் கூறினார். பின்பு இயேசு மட்டும் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலைவில் சென்று விட்டது. பெருங்காற்று அடித்தபடியினால் கடல் கொந்தளித்தது. படகு அலைக்கழிக்கப்பட்டது. இயேசு கடல் மீது நடந்து சென்று காற்றையும், புயலையும் நிற்கக் கட்டளையிட்டார் இயேசு. தோற்றதோர் அரசன் போல நின்றது சூறைக் காற்று மூண்டெழுந்த பெரும் புயல் காற்றையும் “இரையாதே அமைதியாயிரு” (உலகின் உயிர் ப:93) என்று கூறி விலகினார்.
“ஆழிழமீ துலவி ஆழி அலையினை அடக்க ஆங்தே
குழிரும் புச(ய)லைக் காத்த தொல்லைஎம் பரனே போற்றி” (இ.ம.401)
இயேசு வலிமை கொண்டு காற்றையும், புயலையும் அடக்கிக் கொண்டார் என்பதன் மூலம் இறைத்தன்மை வெளிப்படுகிறது.
இயேசு தோற்றம் மாறுதல்
பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரை அழைத்துக் கொண்டு இறைவேண்டல் செய்வதற்காக இயேசு தாபோர் மலைக்குச் சென்றார். அவர் இறைவேண்டல் ஏறெடுத்துக் கொண்டிருந்த போது அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்குத் தூய வெள்ளை நிறத்தில் ஒளி வீசியது.
“ஒரும லைச்சிக ரத்தொரு மூவருக்கு
அருதி லத்துச்சு பருமி ரவிபோல்
தரும சோறித ழைத்திடக் காட்டுமத்
திருமு கச்சுட ருள்ளித்தி யங்குவான்” (இ.ம.448)
“அங்கே அவர்கள் முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின்” (மத்தேயு 17.2) என்ற விவிலியமும் குறிப்பிடுகிறது.
இயேசுவின் பொறுமைக்குணம்
பொறுமை என்பது தமக்குத் துன்பம் ஏற்படும் போது கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். இயேசுவை கைது செய்ய குருக்களும், மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தனர். பின்னர் அவர்கள் இயேசுவைக் கைது செய்து இழுத்துச் சென்று தலைமைக்குக் கயபாவுடன் கூட்டிச் சென்றார்கள். அக்கொடியவர்கள் செய்த கொடூரச் செயல்களையும் தாங்கிக் கொண்டு சினம் கொள்ளாமல் பொறுமையாக இருக்கும் குணமுடையவர். இயேசுவிடம் அன்புள்ளமும், அருள் நோக்கமும் உண்டு என்பதை இச்செயல்கள் தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.
“குறும னக்கொடி யார்செய் குரூரமும்
சிறுமை யுமவர் தீச்சொல்லும் தாங்கியத்
தெறும கத்தவர் சிந்தை சினந்திபாய்
பொறுமை யுள்ளிப் புதைந்து புலம்புவான்"(இ.ம.456)
இயேசு பகைவரை மன்னித்தல்
மன்னித்தல் என்பது மிகப்பெரிய நன்மை தரும் நற்செயலாகும். மன்னிக்கிற மாண்புதான் மிக இன்றியமையாதது. மன்னிப்பு என்பது இறைத்தன்மை சார்புடையதாகும். தவறு செய்வது மனித இயல்பு. இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப் போல பகையைப் பகை அகற்ற முடியாது அன்புதான் பகையை அகற்றும் என்கிறார் மார்ட்டின் லூதர் கிங். இதைத் தொடர்ந்து இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு கொல்கோத்தா என்னும் மலையை அடைந்தனர். எல்லாத் துன்பங்களையும் இயேசு அமைதியுடன் தாங்கிக் கொண்டார். அவர்கள் செய்த பாவச் செயல்களுக்காக இயேசு மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார்.
“விருண மேனியில் செவ்விருப் பாணிசெல்
தருண மற்றிவர் தம்பிழை யோர்கிலர்
அருண யந்துமன் விக்கவத் தவெனுங்
கருணை யுள்ளிக்க சிந்துக லுழுவாய்" (இ.ம.457)
“அப்போது இயேசு தந்தையே இவர்களை மன்னியும் ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார்” (லூக். 23-33) துன்ப வேளையிலும் இயேசு மன்னிக்கும் குணம் உடையவர்களாகவும் விளங்குகின்றார்.
முடிவுரை
இயேசுவின் இறைத்தன்மையின் வாயிலாக உலக மக்கள் அனைவரும் பாவங்களில் இருந்து மீட்டு மக்களை நல்வழிகாட்டி துணையாக இருந்து அவர்களுக்கு வழிகாட்டினார். அளவில்லா நன்மைகளைச் செய்து மக்களை இன்பத்திலும், மகிழ்ச்சியலும் பங்களிக்க உதவகிறார். மக்கள் மீது அன்பு, இரக்கம் கொண்டு நோய் நொடிகளிலிருந்து விடுவித்து பாதுகாத்து வருபவர் இறைவன். ஏழை, எளியோர் மக்கள் மீது அளவில்லா இன்பத்தையும் கொடுத்து அருள் கொடைகளை மக்களுக்கு வழங்கியவர் இவ்வியலில் இயேசுவின் இறைத்தன்மையும், அவருடைய இரக்கக்குணம், பொறுமை, அன்பு, சேவை, தியாகம் கொண்டு மக்களைத் தொழுநோயிலிருந்தும் பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வை கொடுத்தும் இயேசுவின் இறையருளாக இக்கட்டுரையில் உணர்த்தப்பட்டுள்ளது. இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் அவரது திருப்புகழைப் போற்றிப் புகழ்பவராகவும் இருப்பர். இயேசுபிரான் மக்களுக்குள்ளே இணையற்ற பெருமைகளைச் செய்ததால் அவர் பின்னால் சீடர்கள் பலர் வந்தார்கள். அவர்களில் பன்னிருவரை மட்டும் தன் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து மெய் வண்ணம் போதித்தார். அவர்கள் பெயரை அப்போஸ்தலர் என்று விளங்கச் செய்தார்.
நம்பிக்கை கொண்டோர் அனைவரும் இயேசுவின் இறையருளின் மூலம் வாழ்வடைவர் என்பதை இயேசுவின் இறைத்தன்மை என்ற இக்கட்டுரையின் மூலம் ஆராயப்பட்டுள்ளது.
பயன்பட்ட நூற்கள்
1. ஆர். அருளப்பா, உலகின் உயிர், பதிப்பு ஆண்டு:1995
2. எச். ஏ.கிருஷ்ணபிள்ளை, இரட்சண்ய மனோகரம், சாரதா பதிப்பகம், பதிப்பு ஆண்டு:2010
3. தி. தியானந்தன் பிரான்சிஸ், கிறிஸ்து நெறிப் பாவலர்கள், பதிப்பு ஆண்டு: 2000
4. சென்ட் தோமஸ், மீட்பராம் கடவுள், பதிப்பு ஆண்டு: 2006
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.