ஜெயமோகன் சிறுகதைகளில் வாழ்வியல் சூழல்
போ. சக்திஜோதி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,
சிவகாசி..
முன்னுரை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழினத்தின் சிந்தனைக் கொடியில் பூத்த சங்கப்பனுவல்களைக் கொண்ட மொழி நம் தமிழ் மொழி. மற்ற மொழிகளில் எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியவற்றிற்கு இலக்கணங்கள் உள்ளன. ஆனால் வாழ்வியலைப் பற்றிய பொருள் இலக்கணம் இல்லை. நம் தமிழ்மொழியிலோ வாழ்வியலுக்கான இலக்கணம் (பொருள்) அமையப்பெற்று
அதற்கான இலக்கியமாக சங்கப்படைப்புகளும் திறம்பட அமைந்துள்ளன. நம் தமிழர் வாழ்க்கை முறையானது இயற்கையோடு இயைந்த வாழ்வாகும். சங்ககால மக்கள் தங்களுக்குப் பிடித்தமான நிலத்தைத் தேர்ந்தெடுத்து வாழத் தளைப்பட்டனர். வாழிடமானது ஆரம்ப காலகட்டத்தில் காடாக, மலையாக, கடற்கரையாக. வயல் சூழ்பகுதியாக இருந்தது. அவற்றை நாகரிகத்திற்கு ஏற்றாற்போல்
மாற்றி அமைத்துக் கொண்டான். அதோடு மட்டுமில்லாமல் உலகத்தினைப் பற்றிய பரந்த அறிவு கொண்டவர்களாகவும் இருந்தனர். இந்தியாவின் தென்கோடியில் அமைந்திருக்கின்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள் தங்களின் வாழ்க்கையை இயற்கையோடு இயைந்த வாழ்க்கையாக வாழ்கின்றனர். அப்பகுதியானது நாஞ்சில் நாடு என்றும் அழைக்கப்படுகிறது.
அம்மக்களைப் பற்றிய வாழ்வியலை ஜெயமோகன் தனது சிறுகதையில் படைத்துள்ளார். அவற்றினை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நாஞ்சில் நாட்டு உணவு வகைகள்
ஒரு மனிதனுக்கு வாழ்வில் முதன்மையாகக் கருதப்படுவதும், உயிர் வாழ்வதற்குத் தேவையானதுமாக உணவு திகழ்கிறது. அதன் பின்பே, மற்ற தேவைகள் அடிப்படைத் தேவையாக அமைகின்றன. உணவு முறையானது காலத்திற்கேற்றாற் போல் மாறிக்கொண்டே வருகின்றது. சமையட்பொருட்கள், சமைக்கும்முறை ஆகியவை மாற்றம் பெற்றுக் கொண்டே வருகின்றன. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உணவுக்கென்று சிறப்பிடம் கொடுத்து வருகின்றனர். அதிலும் செட்டிநாடு உணவு வகைகள், கொங்கு நாட்டு உணவு வகைகள் நாஞ்சில் நாட்டு உணவு வகைகள் என்பன குறிப்பிடத்தக்கவை. ஜெயமோகனின் சிறுகதையில் நாஞ்சில் நாட்டு உணவு வகைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க உணவுகளான ஏரிசேரி, பப்படம், ரசகதலிப்பழம், பருப்பு, சாதம், நெய், புளிசேரி, ரசம், உள்ளித்தீயில் (துவையல்), பாயாசம், மரச்சீனி ஆகியவை முதலிடம் பெறுகின்றன. மேலும் புட்டு, நேந்திரம்பழம், தேன் ஆகியவை வீடு தவறாமல் வைத்திருப்பர். கருப்பட்டியை இளகவைத்துச் சாப்பிடும் பழக்கமும் உள்ளது. இதை அதிகமாக விரும்பிச் சாப்பிடுவர்.
தோப்பில் முகமது மீரான் ‘கூனன் தோப்பு’ எனும் புதினத்தில் உணவு வகைகளைக் குறிப்பிட்டுள்ளார். குறைந்த விலைக்குக் கிடைக்கப்பெறும் ஒரு கிழங்கு வகையாகவும், தினசரி வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் ஓர் உணவாகவும் மரவள்ளிக்கிழங்கு இடம் பெறுகிறது. பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மரவள்ளிக்கிழங்கை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
“அரப்பிட்ட மரச்சீனி கிழங்கை உண்டதும் மம்மக்கண்ணு கை அலும்பினான். கஞ்சியும் துண்டம் வெட்டி வேகவைத்த மரச்சீனியும் விளம்பினாள். ஒரு துண்டு கிழங்கை எடுத்துத் தோலைக் கழற்றினான். ஆவி பொங்கும் மரச்சீனிக் கிழங்கின் முன் உட்கார்ந்தாள். மரச்சீனி கிழங்கிலிருந்து உயர்ந்த ஆவியில் பல வண்ண சித்திரங்களைக் கண்டாள்” (1)
என்ற வரிகளின் மூலம் மரச்சீனி பற்றிய குறிப்பு புதினத்தில் இடம் பெற்றுள்ளதனை அறிய முடிகிறது.
மேலும், இவர்களின் வாழ்வில் மீன் உணவு அதிக இடத்தினைப் பிடிக்கின்றது. இதனை, “மீன்காரிகள் வராதினாலே சோறு இறக்கமில்லெ. மீன் நாற்றம் கொஞ்சம் உண்டெங்கிதான், சோறு தொண்டை விட்டு எறங்கும்” (2)
என்ற வரிகளின் மூலம் அம்மக்களின் வாழ்வில் மீன் உணவு எந்த அளவிற்கு இடம் பிடித்துள்ளது என்பதனை அறிய முடிகின்றது.
ஜெயமோகனின் ‘வேறு ஒருவன்’ எனும் சிறுகதையில், கொச்சப்பி தன் மனைவி தங்கம்மையை அதிகாலையில் மாட்டுக்கு வைக்கோல் போடுமாறு கூறினான். அவளும் துள்ளி எழுந்து ‘இப்பம் போட்டிருதேன்’ என்றபடி சென்றாள். பின்பு தங்கம்மையிடம், மகனை எழுப்பி தெற்கே உள்ள வயலில் தென்னை மட்டை, தேங்காய் விழுந்து கெடக்கா என்று பார்க்கச் சொல்லு என்று கூறினான். மகளை எழுப்ப வேண்டாம் என்றும் கூறினான் கொச்சப்பி.
“தன் மகனை வேலைக்கு அனுப்பும் பொருட்டு மரச்சீனி உப்புக்கண்டம் போட்டு கடும் காப்பி எடுக்கட்டா?”
(ஜெ.மோ.சி.க.ப.471) என்று கேட்டாள்.
மரவள்ளிக்கிழங்கு என்றும் கப்பக்கிழங்கு என்றும் நம் பகுதியில் அழைப்பதை நாஞ்சில் நாட்டில் மரச்சீனி என்று அழைக்கின்றனர். கடுங்காப்பி என்பது பால் இல்லாமல் தேயிலையும், கருப்பட்டியும் போட்டு வடிகட்டிய தேநீராகும்.
‘சோற்றுக்கணக்கு’ எனும் சிறுகதையில் கெத்தேல் சாகிப் என்பவர் உணவகம் ஒன்று நடத்தி வந்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு உணவகத்தைத் திறந்து வைத்திருப்பார். இரண்டு நேர உணவு (மதியம், இரவு) இலவசமாகப் போட்டுக் கொண்டிருந்தார். அவர் ஓட்டலில் ஒரு உண்டியல் வைத்திருப்பார். விரும்பியவர்கள் பணம் போடலாம், போடமலும் வரலாம். அங்கே அளவு சாப்பாடு என்பதும் இல்லை. சாகிப் அனைவரையும் ஒன்று போல் கவனித்தார். அந்த ஓட்டலுக்குக் கல்லூரியில் படிக்கும் இளைஞன் ஒருவன் சாப்பிடச் சென்றான்.
இளைஞனின் அருகே சென்றவர் அவனை ஏறிட்டுப் பார்த்தார். எந்தா புள்ளேச்சான், புத்தனா வந்நநா? என்றார். அவனை வெள்ளாளன் என்று எப்படிக் கவனித்தார் என்று வியந்து போசமலிருந்தான். அவனுக்குச் சோற்றைக் கொட்டி அதன்மேல் குழம்பை ஊற்றினார். ஒரு பெரிய பொறித்த சிக்கன் கால், இரண்டு துண்டு பொரித்த மீன் என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவிடும். என்று அவனுக்கு கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்று திரும்பிய சாகிப் ‘நீங்க அவிடே என்னு எடுக்கிணு? தின்னீன் மிளேச்சர்’ என்றதும் அவனுக்கு உடம்பெல்லாம் பரவியது ருசி! அப்படி ஒரு ருசியான உணவை அவன் வாழ்நாளில் உண்டதே இல்லை. அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி வாய் வரைக்கும் வழிந்தது.
ஒரு சின்ன கரண்டியில்; உருகிய நெய்போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு கெத்தேல் சாகிப் அவனருகே சென்றார். சோற்றில் அதைக்கொட்டி இன்னும் கொஞ்சம் குழம்புவிட்டு “கொழச்சு தின்னுடே ஹம்க்கே… …” என்றார். அந்தக் கொழுப்பு ஆற்று மீனின் கொழுப்பாகும். மீனின் செவிள் பகுதியில் இருந்து மஞ்சளாக வெட்டி வெளியே எடுப்பார்கள். கறிக்கு அது தனி ருசியைக் கொடுத்தது. அதிகமாகச் சாப்பிட்டுப் பழக்கமில்லாததனால் ஒரு கட்டத்தில் என் வயிறு அடைத்துக் கொண்டது. சட்டென்று இன்னும் ஒரு சிப்பல் சோற்றை என் இலையில் கொட்டினார் சாகிப்.
அய்யோ வேண்டாம் என்று தடுக்கப்போன என் கையில் அந்த தட்டாலேயே சுளீர் என்று அறைந்து, ‘சோறு வச்சா தடுக்குந்நே? ஏரப்பாளி. தின்னுடா இபிலீஸே என்றார்”
(ஜெ.மோ.சி.க.ப.88)
என்ற வரிகளின் மூலம் நாஞ்சில் நாட்டில் தவறாத உணவாக அசைவத்தையே விரும்பி உண்ணுகின்றனர். கடற்கரையோர மாவட்டமாக விளங்குவதால் அவர்கள் மீனை விரும்பி உண்ணுகின்றனர். கறியையும் உண்ணுகின்றனர் என்பதனை அறியமுடிகிறது.
ஜெயமோகனின் ‘சேறு’ என்ற சிறுகதையில் சுலோச்சனா என்ற பெண் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு இரண்டு குழந்தைகள், கணவன் இறந்து விட்டான். தனது மாமியாருடன் வாழ்ந்து வந்தாள். சுலோச்சனா வசதியாக வாழ்ந்த பெண் கணவனது இழப்பினால் சாப்பாட்டுக்குக் கூடக் கஷ்டப்படும் நிலையில் இருந்தாள்.
சுலோச்சனாவிற்கு குருசி என்ற தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தி உதவி செய்து வந்தாள். ஒருநாள் காலையில் குருசி மரவள்ளிக்கிழங்கைக் கொண்டு வந்தாள். வீட்டின் கொல்லைப்புறமாக வந்தாள். குருசி. மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு வந்திருந்தாள். அதனை வேகவைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்குமாறு கூறினாள் குருசி. பின் அவள் கிழங்கை எடுத்துக் கொடுத்தாள். சுலோச்சனா உலை ஏற்றினாள். இருவரும் சேர்ந்து கிழங்கை அவித்தார்கள்.
குருசி கொண்டு வந்த கிழங்கு என்று தெரிந்ததும், சுலோச்சனாவின் மாமியார் வேண்டாம் என்றாள். அதற்கு, சுலோச்சனா மாமியாரைப் பட்டினி கிடக்குமாறு கூறிவிட்டாள். குருசியை சபித்துக் கொண்டிருந்தாள் மாமியார். சுலோச்சனா தன் மாமியார் திட்டுவதைக் கண்டுகொள்ள வேண்டாம் என்று குருசியிடம் கூறினாள்.
குழந்தைகள் வேகவைத்த கிழங்கைப் பாய்ந்து சென்று எடுத்தனர். சுலோச்சனா குருசி கொண்டு வந்து கொடுக்கும் உணவுப்பொருட்களை வாங்கிக் கொண்டாள். அதற்குக் காரணம் அவள் குருசியைச் சாதிவேறுபாடு பார்க்காமல் அவளைத் தோழியாக நினைத்ததே காரணமாகும். நட்பின் விளைவு, அவர்களைச் சாதிவேறுபாடு களைய வைத்தது, நட்பானது விலைமதிப்பற்றது என்பதனையும் அவ்களின் உணவு முறையையும் இச்சிறுகதையின் மூலம் அறிய முடிகிறது.
மேலும் நாஞ்சில்நாட்டு உணவு வகைகளையும் அவர்களின் உபசரிக்கும் முறையும் நமக்கு மகிழ்வைத் தருவனவாக அமைகின்றதனையும் இச்சிறுகதைகளின் மூலம் அறிய முடிகிறது.
வாழ்விடம்
மனிதனின் இன்றியமையாத் தேவைகளுள் ஒன்று அவனது இருப்பிடமாகும். மக்களின் பொருளாதாரம், சமுதாயம் மற்றும் வசதி வாய்ப்புக்களுக்கேற்ப இருப்பிடமானது சிறிய பெரிய வீடுகள், ஓட்டு வீடுகள், கூரை வீடுகள், கான்கீரீட் வீடுகள் எனப் பரிணமிக்கின்றன.
ஜெயமோகன் ஆய்வுக்கு உட்பட்ட புதினங்களில் குமரி மாவட்டத்தில் பெரிய மனிதர்களையும், கேரளத்து நாயர் குல வழக்கங்களையும் கையாள்வதனால் செல்வச் செருக்கோடு கூடிய வசதியான இருப்பிடங்களையேத் தம் புதினங்களில் சுட்டிச்செல்கிறார்.
“ஓவர்சீயர்ஸ் பங்களா ஒரு குன்றின் மீது அமர்ந்திருந்தது. அருமையான இடம், ஜன்னலுக்கு வெளியே தொலைதூரம் வரை விரிந்த மலைச்சரிவில் மாலை வெயில் இடதுபக்கம் ஒளியுடன் இன்னொரு பசியமலை வெள்ளைக்காரர்கள் காட்டிய எல்லா பங்களாக்களும் மிக அழகிய இடங்களில் எந்த இடத்தை மிகச் சிறப்பாகப் பார்க்கக்கூடிய கோணங்களில் அமைக்கப்பட்டிருப்பதைப் பிறகு நிறையத் தடவை கண்டிருக்கிறேன். உயரமான மேல் தளம் தேக்குத் தடிகளினாலான கனத்த உத்தரங்கள் மீது வெண்சுதைப் பரப்பாகப் பரந்திருந்தது. உத்தரங்களில் பலவிதமான இரும்பு வளையங்களும் கொக்கிகளும் இருந்தன. எங்கள் ஏட்டின் வாசல்களைவிடப் பெரிய ஜன்னல்கள், அவற்றில் பித்தளைக் கம்பிகளும், மூன்று மடிப்புகளாக மடங்கும் சன்னல் கதவுகள், வாசல்கள் மிக உயரமாக இருக்க கதவுகள் கீழே பித்தளைச் சக்கரங்கள் மீது நின்றன. தரையில் பெரிய சிவந்த தரையோடு பாவப்பட்டிருந்தது” (3)
ஜெயமோகனின் ‘தனிமையும் இருட்டும்’ எனும் சிறுகதையில் அச்சுதன் பணிக்குச் சென்றுவிட்டு, வீட்டில் மனைவியைத் தேடுகிறான். அப்பொழுது அவள் வைக்கோல் போருக்குப் பின்னாலிருந்து ஓடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து வயல் வெளிகளின் அருகிலேயே வீடு அமைந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.
‘வேறு ஒருவன்’ எனும் சிறுகதையில், “கொச்சப்பி தங்கம்மையைத் திருமணம் செய்வதற்கு முன்பு தினக்கூலி வேலைகூட சரிவரக் கிடைக்கவில்லை அவனுக்கு. அந்தக் காலகட்டத்தில் இருப்பதற்கு ஒரு வீடு கூட இல்லாமலிருந்தான். அப்பொழுது சூரியநாயர் டீக்கடையின் திண்ணைதான் கொச்சப்பியின் உறங்கும் இடமாக இருந்தது. திருமணத்திற்குப் பின் வயல், கிணறுகளுடன் கூடிய
தோட்டத்திற்கு உரிமையாளனாக ஆக்கினாள் தங்கம்மை” என்ற வரிகளிலிருந்து திண்ணை அமைப்புக்கொண்ட வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்ற என்பதனையும், வீட்டருகினில் தோட்டமும் அமைத்துக் கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர் என்ற செய்தியையும் அறியமுடிகிறது.
பண்பாடு
நம் வாழ்வியல் அங்கங்களான நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், பழமொழிகள், தொன்மங்கள், பழங்கதைகள், கதைப்பாடல்கள், விழாக்கள், சடங்குகள் போன்ற அனைத்தும் பண்பாட்டின் உட்கூறுகளாகும். அதனை,
“பண்பாட்டில் வழங்கி வரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பழமொழிகள், விடுகதைகள், தொன்மங்கள், தொல்பழங்கதைகள், கதைகள், நிகழ்கலைகள், பொருள்சார் கலைகள், நடத்தை முறைகளும் சடங்கு செயல்பாடுகள் இவை அனைத்தும் இவை தவிரவும் பண்பாட்டின் வழக்காறுகளாகும்” (4) என்று பிலவேந்திரன் பண்பாட்டுக் கூறுகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
இவை போன்று ஜெயமோகனின் சிறுகதைகளில் காணப்படும் வாழ்வியல் அங்கங்களாக திருமணம், விழா, வழிபாடு. புராணக்கதை, நம்பிக்கைகள், நாட்டுப்புறக் கதைப்பாடல், பழமொழி,
சமயம், ஈமச்சடங்கு ஆகியவை இடம் பெற்றுள்ளன. அவற்றினை விரிவாகக் காண இருக்கின்றோம்.
குறிப்பாக ‘தேவகிச்சித்தியின் டைரி என்ற கதையில் ஒரு ஐயர்வீடு மாமிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனுக்கு, குஞ்சு என்ற ஒரு ஆண்பிள்ளையும், விளி என்ற பெண்பிள்ளையும் இருக்கின்றனர். இளையவளின் மனைவி தேவகி. அவள் அலுவலகத்திற்குச் செல்பவள். தேவகி அலுவலகத்திற்குச் செல்வது, அவளது மாமியாருக்கும் அவளது அக்காவிற்கும் (ஓரகத்தி) பிடிக்கவில்லை. தேவகி பணிக்குச் செல்வதால் சுதந்திரமாக இருக்கின்றாள். விரும்பிய புடவை என்பது. டைரி எழுதுவது என்று தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கின்றாள்.
இதைக்கண்டு பொறாமை கொண்ட மாமியார், குஞ்சுவின் அம்மா மற்றும் பக்கத்துவீட்டு இராணி ஆகிய மூவரும் புறம் பேசுகின்றனர்.
“மானம் கெட்ட பிழைப்பு, எங்கள் குடும்பத்தில் இல்லை. நாலு பேர் முன்னால் உட்கார்ந்து அரட்டையடிப்பதும் கண்டவன் வாயால் பேச்சு கேட்பதும்” (ஜெய.மோ.சி.க.ப.25)
என்று தேவகி பணிக்குச் செல்வதை, குடும்பத்தினர் விமர்ச்சிக்கின்றனர்.
தேவகி பணிக்குச் செல்வதால் தங்கள் குடும்பத்தின் பாரம்பரியமும், பண்பாடும் மாற்றம் பெற்றுவிட்டதாக அவளுடைய மாமியார் எண்ணுகிறாள்.
திருமணம்
மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியான அங்கங்களுள் திருமணமும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரு மனங்கள் இணைவது திருமணம் என்ற நிகழ்வாகும். மனித வாழ்வில் நடக்கும் திருப்பு முனைகளில் திருமணமும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதில் திருமணம் சிலருக்கு நல்ல வாழ்க்கையும், சிலருக்கு மோசமான வாழ்க்கையும் கொடுத்து விடுகிறது.
ஜெயமோகனின் ‘ஆயிரம்கால் மண்டபம்’ என்ற சிறுகதையில் திருமண வாழ்வியல் அங்கத்தில் ஒருபகுதியாக மாப்பிள்ளை அழைப்பைக் குறிப்பிட்டுள்ளனர்.
“ஆனந்தன் மாமா எட்டிப் பார்த்து, மாப்பிள்ளை அழைப்புக்கு நேரமாச்சு பெண்கள்லாம் வாங்கோ என்றார்.
… … … … … நாதசுரமும் தவுலும் ஒலிக்கத் தொடங்கின. சித்தியும் அத்தையும் முன்னால் சென்றனர். கையில் தாம்பளத்தில் சிறிய அகல் விளக்கு எரிந்தது” (ஜெ.மோ.சி.க.ப.234)
என்ற வரிகளின் மூலம் திருமண நிகழ்வினை ஜெயமோகன் விளக்கியுள்ள விதத்தினை அறிய முடிகிறது.
வழிபாடு
இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் அதன் நிகழ்வுகளை வழிபாடு செய்யத் தொடங்கினான் எனலாம். தனக்கு இடமளித்த மரத்தினையும் தனக்கு பயனளித்த பலவற்றையும் நன்றி உணர்வுடனும், அச்ச உணர்வுடனும், வழிபடத் தொடங்கினான் என்று கருதப்படுகிறது.
வழிபாட்டின் தோற்றத்தைப் பற்றி லூர்து அவர்கள்,
“இயற்கையிறந்த சக்தியின் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டு புனிதமான நடத்தைகளில் மக்கள் குழுவினர் ஈடுபடும்போது தான் வழிபாடு தோன்றும்” (5) என்ற கருத்தினைப் பதிவு செய்கிறார். இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஜெயமோகனின் ‘படுகை’ என்ற சிறுகதையில் பேச்சி என்ற பெண் தெய்வத்திற்குச் செய்யப்படுகின்ற வழிபாட்டு முறையினைக் குறிப்பிட்டுள்ளார்.
“வருடந்தோறும் கொடையும், பவுர்ணமி தோறும் பூசையும் ஏற்பாடு செய்தான். மஞ்சளும் மூத்த கருங்கிடாயும் வெட்டி பூசத்து வேலையைத் தொடங்கினான்” (ஜெ.மோ.சி.க.ப.57)
என்ற வரிகளின்மூலம் தெய்வத்திற்குப் படையல் இட்டு வழிபட்ட முறையை ஜெயமோகன் விளக்கியுள்ளார்.
திருவிழா
கோயில் திருவிழாக்களும், சமூகத் திருவிழாக்களும் பண்பாட்டின் அங்கங்களாக விளங்குகின்றன. மனிதர்களில் பல பிரிவினர்களாக உள்ளனர். இருப்பினும், திருவிழாவின் போது அனைத்து மக்களும் ஒன்றிணைந்து மகிழ்வுடன் கூடிக் கொண்டாடுவது விழாவின் போது மட்டுமே வருடந்தோறும் வயல் வெளிகளில் உழைத்து, களைத்த மனிதன் தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ளவும், பிரிந்து சென்ற உணர்வுகளைச் சந்தித்து மகிழவும் உருவான அங்கமாக விழாவினைக் கூறலாம். மேலும், சமயத்தின் வளர்ச்சியில் திருவிழா பெரும்பங்கு வகிக்கின்றது என்றும் கூறலாம். இதனை,
ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ என்ற சிறுகதையில் மாடன் என்ற தெய்வத்திற்குக் கோயில் கட்டி மக்கள் திருவிழா கொண்டாடிய சிறப்பினைச் சித்திரித்துள்ளார்.
“பழைய நாட்கள் புதுப்பொலிவுடன் திரும்புவது போன்று தோன்றியது. கோவில் கட்டி முடிந்து, திறப்பு விழாவும் பிரதி~;டை மகாகர்மமும் நிச்சயிக்கப்பட்டது. உற்சாகம் கொண்ட ஜனத்திரள் வந்து குழுமியது. பொருட்காட்சிகள், தெருக்கடைகள், ரங்கராட்டினம், நாலுதலை ஆடு, கம்பிசர்க்கஸ் என்று திருவிழாக் கோலாகலம்” (ஜெ.மோ.சி.க.ப.122)
என்ற வரிகளில் திருவிழாவின் நிகழ்வுகளை அறிய முடிகின்றது.
புராணம்
திருவிழாக் கொண்டாட்டங்களுடன் புராணக் கதைகளும் பின்னிப் பிணைந்திருக்கும் என்பர். திருவிழாக்களின் போது நாட்டுப்புறக் கதைகளும், புராணக்கதைகளும் வில்லுப்பாட்டின் மூலம் எடுத்து இயம்பப்படுகின்றன. சிறு தெய்வங்களின் வரலாறுகள் புராணக்கதைகளின் வடிவில் இடம் பெறுகின்றன எனலாம்.
“புராணக்கதைகள் உரைநடைக் கதைகளாகவும், பாடல்களாகவும் அமையலாம். புராணக் கதைகள் வழங்கப்பட்டு வரும் சமூகத்தில் வரலாற்றுக்கு முந்திய தொல் பழங்காலத்தில் உண்மையாக நிகழ்ந்த வரலாறுகள் என்று நம்பப்படுவன” (6)
என புராணக் கதையைப் பற்றி லூர்து விளக்கம் தருகிறார்.
ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’என்ற சிறுகதையில் இந்து சமயத்திற்கும், கிறிஸ்துவ சமயத்திற்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. மாடன் என்கிற தெய்வத்தை வழிபடும் சேரி மக்களிடம் சிவபெருமானின் முடிக்கற்றையிலிருந்து தோன்றியவர் மாடன் என்ற புராணக்கதையை எடுத்துக்கூறி இந்து சமயப் பற்றினை ஏற்படுவதைக் குறிப்பிட்டுள்ளார்.
தட்சன் யாகம் செய்த போது தன்னை முறைப்படி அழைக்காததனாலும், பார்வதியை அவமானப்படுத்தியமையாலும், சினம் கொண்ட சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து, ஊழி நடனம் ஆடி, யாகசாலையை அழித்தார். அப்போது அவர் பிடுங்கி வீசிய சடைமுடிக் கற்றைகளிலிருந்து பத்ரகாளியும், வீரபத்திரகாளிலும் உதித்தனர். உதிரி மயிர்களில் இருந்து உதித்த அனேகதேவி பூத கணங்களில் ஒருவன்தான் மாடன் என்று அவர் அறிவித்தனர் என்பதன் மூலம் மாடனின் பிறப்பு பற்றிய புராணக்கதையை ஜெயமோகன் சித்திரித்துள்ளார்.
சமயம்
சமயம் என்பது அமைப்பின் உயிர்மூச்சு என மக்களால் கருதப்படுகிறது. புனிதத் தன்மையின் இடம், பொருள் போன்ற ஏதேனும் ஒன்றோடு தொடர்புடையதாக இருக்கின்றது.
பண்டைய காலத்து மக்கள் ஆவியையும், தற்போது உள்ள இந்துக்கள் பிரம்மன், சிவன், விஷ்ணு, சரஸ்வதி போன்ற கடவுளர்களை வணங்கி வருகின்றனர்.
கிறித்தவர்கள் இயேசுபிரானையும், இஸ்லாமியர் முகமது நபியையும் புனிதத்தன்மை என்று பின்பற்றி வணங்கி வருகின்றனர். இப்புனிதத் தன்மையோடு தொடர்புடையவைகளும் புனிதத்தன்மையாக மதிக்கப்படும். இது அந்தந்தச் சமய நம்பிக்கையைப் பொறுத்து அமையக்கூடியது. இயற்கைப் பொருளாகவோ, பலியிடும் இடமாகவோ, கோவிலாகவோ, கற்பூரத்தட்டாகவோ, தீர்த்தம் தரும் பாத்திரமாகவோ, அணியும் அணிகலன்களாகவோ (சிலுவை, கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட அணிகள்) இருக்கலாம். இவை மட்டுமல்லாமல், இறைவனுக்கென்று விடப்பட்டுள்ள விலங்குகள், அரசமரம், வேப்பமரம், பாம்பு, கருடன், மயில் முதலியவையும் சமய நம்பிக்கைகளாக கருதப்படுகின்றன.
சமயமானது பல உட்கூறுகளைக் கொண்டுள்ளது. அவை,
1. புனிதத்தன்மை என்ற கருத்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை
2. சடங்கு முறைகளைப் பெற்றுள்ளமை
3. நம்பிக்கை முறைகளைப் பெற்றுள்ளமை
4. சமயத்தின் அனைத்துத் தன்மைகளையும் உறுதியாகப் பின்பற்றக்கூடிய நம்பிக்கையாளர்களைப் பெற்றுள்ளமை.
என நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சோதிடத்தில் குடும்பத் தலைவர் படுக்கும் இடமானது மாடன் செல்லும் வழியில் இருப்பதால் இத்தடை வருவதாகக் கூறுகிறார். இதன் காரணமாகத் தலைவரின் தூங்கும் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.
வடமேற்கே உறைமாடனும், புலைமாடனும். அத்தனை பேரும் நதியிறங்கி நீராடவேண்டும். சுடுகாட்டில் சிதை காண வேண்டும். தங்கள் மாறாத பாதைகளில் காலமின்மையில் அவர்கள் நடந்தபடியே இருந்தார்கள். அவர்கள் பாதையில் மனிதர்கள் இல்லை. ஆனால் மனிதர்களின் பாதையில் அவர்கள் உண்டு. குறுக்கே புகும் மனிதர்களை அவர்கள் சக்திகள் அவர்கள் சிரித்து, அழுது, பித்தெடுத்து, வெறிமூத்து, மந்தித்து வரைகளத்தில் ஆடுகிறார்கள்.
அப்பா இரவில் படுக்கும் கட்டில் உறைமாடனின் சூட்சும வழியில் உள்ளது என்றான் மலையன். அவரது மார்பில் ஏறி இறங்கி மாடன் மறுபக்கம் போகிறான். உக்கிரமூர்த்தி, அப்புக்குட்டன் ஏணி வைத்து ஏறி ஓடு பிறித்துப் போட்டான் அப்பாவிடம் அதையே காரணமாகச் சொல்லிக் கட்டிலை இடம் மாற்றினோம் என்று கூறுவதின் மூலம் மக்களிடம் நிலவி வரும் தெய்வ நம்பிக்கையை ஜெயமோகன் எடுத்துக் காட்டியுள்ளமையை அறிய முடிகிறது.
முடிவுரை
மனிதனின் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, உறையுள், ஆகியவை முதன்மையாக அமைந்துள்ளதனை இக்கட்டுரை விவரித்துள்ளது. நாஞ்சில் நாட்டுக்கே உரித்தான மரச்சீனி மற்றும் நேந்திரம்பழம் ஆகியவற்றைத் தினசரி உணவாகக் கொண்டுள்ளனர். இவர்களின் வாழ்விடமானது, வீட்டினருகில் தோப்புகளை அமைவிடமாகக் கொண்டுள்ளது. இப்பகுதி மக்கள் அதிகமான தெய்வ நம்பிக்கையையும் பேய் பற்றின நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். மேலும், இம்மக்களின் பண்பாடு, திருமணம், வழிபாடு ஆகியவை பற்றின செய்திகளையும் புராணம், சமயம் பற்றின கருத்துக்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுவதனையும் இக்கட்டுரை விவரித்துள்ளது.
சான்றெண் விளக்கம்
1. தோப்பில் முகமதுமீரான், கூனன்தோப்பு ப.247
2. மேலது ப.248
3. ஜெயமோகன், ரப்பர் ப.221
4. ச.பிலவேந்திரன், தமிழ்ச்சிந்தனை மரபு ப.87.
5. தே.லூர்து. நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள். ப.334
6. மேலது. ப.335
துணைநூற்பட்டியல்
1. தோப்பில் முகமது மீரான், கூனன் தோப்பு, மணி அச்சகம் சென்னை, 1993.
2. ஜெயமோகன், ரப்பர், தமிழ் புத்தகாலயம், சென்னை, 1990.
3. ச. பிலவேந்திரன், தமிழ்ச்சிந்தனை மரபு தன்னனானானே பதிப்பகம், சென்னை, 2001.
4. தே.லூர்து, நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள், வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 2000.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.