திருவாய்மூர் - மூன்றாம் இராஜராஜரின் கல்வெட்டு
முனைவர் ப. காளீஸ்வரன்
இளநிலை அறிவியல் அலுவலர்,
தடய அறிவியல் துறை,
சென்னை.
முன்னுரை
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான திருக்கோயில்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் சேர, சோழ, பாண்டியர், குறுநில அரசர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டவை. பல அந்நியப் படையெடுப்புகளுக்குப் பின்பும், இக்கோயில்கள் பாதுகாக்கப்பட்டு பழமையை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
சப்தவிடங்க தலங்கள்
திருவாரூரைச் சுற்றி சப்தவிடங்க தலங்கள் இருக்கின்றன. அவை;
1. திருவாரூர் - வீதி விடங்கர்
2. நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர்
3. திருக்கரவாசல் - ஆதி விடங்கர்
4. திருக்குவளை - அவனி விடங்கர்
5. திருவாய்மூர் (நாகப்பட்டினம் மாவட்டம்) - நீல விடங்கர்
6. திருநள்ளாறு - நாக விடங்கர்
7. திருமறைக்காடு (வேதாரண்யம்) - பவனி விடங்கர்.
திருவாய்மூரும் முசுகுந்த சக்கரவர்த்தியும்
கோவில்கள் ஒவ்வொன்றுக்கும் தல வரலாறு, அதற்கென்று, சில புராணக் கதைகள் என்று இருக்கின்றன. அதைப் போன்றே, சப்தவிடங்க தலங்களுக்கும் புராணக் கதைகள் இருக்கின்றன. இந்தக் கோயில்கள், ஏராளமான வரலாற்றுச் செய்திகளைத் தன்னகத்தேக் கொண்டிருக்கின்றன. சப்தவிடங்க தலங்களுக்குக் கூறப்படும் புராணக் கதையை முதலில் பார்ப்போம்.
சப்தவிடங்க தலங்கள் திருவாரூரைச் சுற்றி அமைந்திருக்கின்றன. முசுகுந்த சக்கரவர்த்தி, அசுரர்களுடன் தேவர்களுக்காகப் போரிட்டு வெற்றி பெறுகிறார். அவருக்கு இந்திரன் பரிசு கொடுக்க நினைத்து தங்கள் வேண்டுவது யாது? என்று கேட்கிறார். முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரன் வழிபடும் சிவபெருமானைக் கேட்கிறார். இந்திரன் வழிபடும் சிவபெருமான் உளியால் வடிக்கப்படாமல் அமைந்த திருமேனியாகும். அது தேவலோகத்தில் இருக்கின்றது. முசுகுந்தர் சிவபெருமானைக் கேட்க இந்திரனுக்குக் கொடுக்க மனம் வரவில்லை. இருப்பினும் வாக்கு கொடுத்து விட்டோமே என்று எண்ணிய இந்திரன் அவரைப் போன்று இன்னும் ஆறு திருமேனிகள் செய்வித்து இந்த ஏழு திருமுறைகளில் உண்மையான விடங்கரை கண்டுபிடித்து எடுத்துச் செல்லுங்கள் என்று முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கூறுகிறார்.
அவர், அதுவரை இம்மேனியைக் கண்டதில்லை. ஆதலால், விடங்கர் எவ்வாறு இருப்பார்? என்று அவர் அறியவில்லை. ஆகவே இறைவனை மனத்தால் வேண்ட உண்மையான விடங்கர் முசுகுந்த சக்கரவர்த்திக்குக் காட்சி தர அதனை தேர்ந்தெடுக்கிறார். மகிழ்ந்த இந்திரன் இறைவன் பூலோகத்திற்கு செல்ல விரும்புகிறார் என்பதை அறிந்து அவன் செய்வித்த மற்ற ஆறு திருமேனிகளையும் சேர்த்து ஏழு விடங்கத் திருமேனிகளாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்து அனுப்புகிறார். அவர் தமிழகத்திலே வந்து அந்த ஏழு விடங்கப் பெருமானையும் நிறுவி வழிபடுகிறார். அப்படி அவர் வழிபட்ட தலங்கள் சப்தவிடங்க தலங்களாகும். அவற்றில் ஒன்றுதான் திருவாய்மூர் என்னும் திருத்தலமாகும்.
திருமுறையில் திருவாய்மூர்
திருத்தலம் பல வரலாற்றுச் சுவை மிகுந்த செய்திகளைக் கொண்டுள்ளது. சைவ சமயத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் எனும் நால்வர் பெருமை பெற்றவர்கள். அந்த நால்வரில் இருவரும் சேர்ந்து வந்து பாடிய திருத்தலம் இந்த திருவாய்மூர் திருத்தலமாகும். திருவாய்மூருக்கு அருகிலே வேதாரண்யம் உள்ளது. வேதாரண்யத்திலேக் கதவினைத் திறப்பதற்கும், மூடுவதற்கும் தமிழ் பாடல்கள் மூலம் இறைவனை வழிபட்டுக் கதவினை மூடியும், திறந்தும் வழிபட்ட அப்பர் சுவாமிகளும், சம்பந்தர் சுவாமிகளும் வேதாரணியத்திலேத் தங்கி இருந்த ஒரு நாளிலே அப்பர் சுவாமிகள் வருத்தம் அடைகின்றார். ஏனென்றால், அப்பர் சுவாமிகள் 10 பாட்டு பாடிய பிறகுதான் கதவு திறந்தது. ஆனால், சம்பந்தமூர்த்தி ஒரு பாடல் பாடியதுமே கதவு மூடிக் கொண்டது.
இதை எண்ணி வருந்தி இருந்த நேரத்திலே, அப்பர்சாமிகளின் கனவிலே ஒரு ஒளி தோன்றி திருவாய்மூர் வா என்று அழைத்துச் செல்கின்றது. அந்த ஒளியானது புறப்பட்டுச் செல்ல, அதன் பின்னாலே அப்பர் சுவாமி எழுந்து புறப்படுகிறார். அது திருவாய்மூர் வந்து நின்று விடவே திருவாய்மூர் இறைவனை வழிபட்டு நிற்கின்றார். இச்செய்தி சம்பந்தர் சுவாமிகளின் காதுக்குச் செல்லவும், அவரும் திருவாய்மூர் வருகிறார். இருவரும் சேர்ந்து திருவாய்மூர் இறைவனைப் பாடுகிறார்கள். இதனை அப்பர் சாமிகள் தன்னுடைய பாடலிலேயேக் குறிப்பிடுகிறார். எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு என்ற பதிகத்திலே இதனைச் செய்தியாகப் பதிவிடுகிறார். இதனை வரலாற்றுச் செய்தியாக நாம் கொண்டோமேயானால் உண்மையிலேயே திருவாய்மூர் திருத்தலப் பெருமை எல்லையற்ற பெருமை கொண்டது.
வட்டணை ஆடல் உடையார்
திருஞானசம்பந்தர் தன்னுடைய பாடலிலே இத்திருத்தல இறைவனைப் பாடும் பொழுது, ஒரு சில முக்கியமான வரிகளை முன் வைக்கிறார்.
“வட்டணை ஆடலுடன... ... ... வாய்மூர் அடிகளார் வருவாரே” என்று பாடலிலே வட்டணை என்ற ஒரு பதத்தினை உபயோகப்படுத்துகிறார். இந்தப் பதம்தான் மூன்றாம் இராஜராஜன் காலத்திலே கல்வெட்டிலே இடம் பெறுகிறது. இந்தப் பதமானது நாட்டியத்தின் ஓர் அங்கமாகக் குறிப்பிடப்படுகிறது. வட்டணை என்ற பதம் காரைக்கால் அம்மையாரின் பாட்டிலும் பயின்று வருகிறது.
“கழலொலி கைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டு நட்டம்
அழலுமிழந் தோரிகதிக்க ஆடும்
அப்பனிடந் திருஆலங்காடே” (திருவாலங்காடு மூத்த திருப்பதிகம், 11-ம் திருமுறை, பாடல்-7)
பெரிய புராணத்திலும் வட்டணை என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதேப் பதம் மூன்றாம் ராஜராஜன் காலத்திலேக் கல்வெட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. அவர் காலத்திலே வாழ்ந்த ஒரு மனிதருக்கும் இப்பெயர் இருந்தது. வரலாற்றில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும்.
மேலும், திருவலம்புரம் எனும் திருத்தலத்தைப் பற்றி அப்பர் சுவாமிகள் பாடும் பொழுது, வட்டணை பட நடந்தார் என்ற சொல்லினைப் பயன்படுத்துகிறார். ஆக, இந்த வட்டணை எனும் சொல் வரலாற்றில் இடம் பிடித்த ஒரு சொல்லாகவே நாம் கருத வேண்டும். ஏனென்றால், இந்தச் சொல்லானது ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர், அப்பர்சாமிகளால் பயன்படுத்தப்பட்டு 12ஆம் நூற்றாண்டில் இருந்த மூன்றாம் இராசராச சோழனால் கல்வெட்டிலேயேப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, திருமுறையில் இருக்கக்கூடிய பல பெயர்கள் புழக்கத்தில் இருந்த செய்தியை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
திருவாய்மூர்
திருவாய்மூர் திருத்தலம் திருவாரூருக்கு அருகில் இருக்கக்கூடிய திருத்தலம். திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியிலே எட்டுக்குடி சாலையில் பிரிந்து திருவாய்மூர் அடையலாம். எட்டுக்குடிக்கு மிக அருகில் இருக்கக்கூடிய திருத்தலம். திருவாரூரில் இருந்து எட்டுக்குடி சாலையில் செல்லும் பொழுது கச்சனம், கோயில் கண்ணாப்பூர், திருக்குவளை ஆகிய திருத்தலங்களையும் தரிசித்துவிட்டு திருவாய்மூர் செல்லலாம். திருவாய்மூர்க்கு அருகிலே இருக்கக்கூடிய தேவாரத் தலம் திருக்குவளை. திருக்குவளையும் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும்.
மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டுகள்
திருவாய்மூர் திருத்தலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இதுவரை படியெடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் நாகப்பட்டினம் மாவட்டக் கல்வெட்டுக்கள் எனும் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
திருவாய்மூர் திருத்தலத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் 12 கல்வெட்டுகள் மூன்றாம் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்தவை. இவர் காலத்து கல்வெட்டுகளில் வட்டணை என்ற சொல் புழக்கத்தில் இருந்திருக்கிறது. இந்தத் திருவாய்மூர் திருத்தலத்தை குறிப்பிடும் பொழுது, இவருடைய காலத்திலே வட்டணை உடையார் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்திருக்கோயிலில் காலத்தால் முற்பட்ட பரகேசரி, கோப்பரகேசரி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த சோழர் காலத்தில் கற்றளியாக எழுப்பப்பட்டு இருக்கலாம் என்று ஓரளவு நம்மால் ஊகிக்க முடிகிறது.
சம்பந்தரும், அப்பரும் பாடியதினால் இந்த திருக்கோவில் ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே வழிபாட்டில் இருந்ததை நாம் அறிய முடிகிறது.
மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டு திருவாய்மூர் திருத்தலத்தில் பன்னிரண்டு இருக்கின்றன . அந்தப் பன்னிரண்டு கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது. காலத்தால் முற்பட்டது மூன்றாம் இராசராசரின் எட்டாவது ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஆகும். கி.பி 1224 ஆம் ஆண்டு சார்ந்த கல்வெட்டு, காலத்தால் முற்பட்ட மூன்றாம் இராசராசரின் கல்வெட்டு கூறும் செய்தியே வியப்பிற்குரியச் செய்தியாகும்.
இதற்கு முன்னர் திருக்கோயில் எப்பகுதியில் இருந்தது என்ற செய்தியினை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றது உடையார் திரு வாய்மூர் உடையார் கோயில் என்றும் , இத்திருக்கோவிலில் இருக்கக்கூடிய ஆடல் உடையார், நடராச பெருமாள் வட்டணை ஆடல் உடையார் என்று இவர் காலத்திலே அழைக்கப்பட்டிருப்பதை கல்வெட்டுகள் சொல்கின்றன.
இராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றது உடையார் திருவாய்மூர் உடையார் கோயில், வட்டணை ஆடல் உடையாருக்கு என்று சொல்வதில் இருந்து மூன்றாம் இராசராசர் காலத்திலே இங்கு நடராசப் பெருமாளுக்கு முக்கியத்துவம் அளித்த செய்தியை நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
மூன்றாம் இராசராசர் காலத்திற்கு முன்பே இப்பகுதி சதுர்வேதி மங்கலமாக மாற்றப்பட்டு இருக்கின்றது என்பதனை இவருடைய ஈச்சனூரான பரமேஸ்வர சதுர்வேதி மங்கலத்து பெருங்குடி சபையோர் நாட்டு வண்டாழை வேளூர் கூற்றது உடையார் திருவாய்மூர் உடையார் என்ற வரிகளின் மூலம் இப்பகுதி சதுர்வேதிமங்கலமாக இருந்ததை நம்மால் அறிய முடிகிறது.
திருவாய்மூர் உடைய நாயனாருக்கு அரசூர் உடையான் களப்பாளராயர் என்பவர் நந்தா விளக்கு எரிக்கவும், கோவிலில் நித்தியப்படி என்று சொல்லக்கூடிய திருசென்னடைக்கும், திருநந்தவனத்திற்கும் நிலக்கொடை அளித்துள்ளார் . 14 மா நீளமானது எல்லைகளோடு குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. இந்த எல்லை குறிப்பிடப்படும் பொழுது 41 திருநந்தவனம், திருஞானசம்பந்தன் திருநந்தவரம் என்று அப்பகுதியில் இருந்த வேறு சில நந்தவனத்தின் பெயர்களும் நம்மால் அறிய முடிகிறது.
திருவாய்மூர் வராகன் என்ற ஒரு பதம் இங்கு வந்துள்ளது. இப்பகுதியில் பணமானது திருவாய்மூருக்கு என்று தனியாக பயன்படுத்தப்பட்டிருந்த செய்தியை நம்மால் அறிய முடிகிறது.
இதற்கு அடுத்தபடியாக இவருடைய இருபதாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு நான்கு காணப்படுகிறது. இந்த இருபதாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் வானிலைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே பார்க்கும் பொழுது, இக்கல்வெட்டின் காலம் 23-4-1236 என்று கணிக்கப்பட்டுள்ளதாக நமக்குத் தகவல் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.
மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டுகளில் இக்கல்வெட்டில் தான் முதலில் வட்டணை ஆடல் உடையார் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. அவருடைய இருபதாம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் நான்கிலுமே வானிலைக் குறிப்புகளின் அடிப்படையில், காலமானது கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு கல்வெட்டுகளிலும் இந்தக் கல்வெட்டேப் பழமையான கல்வெட்டு. ஆகவே, இந்தக் கல்வெட்டில்தான் வட்டணை ஆடல் உடையார் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை நம்மால் அறிய முடிகிறது. மேச ஞாயிற்று அச்சரபட்சத்தில், பிரதமையும் புதன்கிழமையும் பெற்ற விசாகத்தினால் என்று குறிப்பிடுவதில் இருந்து 23- 4-1236 என்று அறியப்படுகிறது.
இராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாளை வேளூர் கூற்றத்து உடையார் திருவாய்மூர் உடையார் கோயில் உடையார் வட்டணை ஆடல் உடையாருக்கு என்று இப்பகுதியில் இறைவன் பெயர் குறிப்பிடப்படுகிறது.
இதே நாட்டைச் சேர்ந்த சிற்றாமூருடையார் அரையன் கம்பி காதனான வீர ராஜேந்திர பல்லவரையர் என்பவர் தலைமையில் நடக்கக்கூடிய புரட்டாசி திருநாளுக்கும், சித்திரை திருநாளுக்கும் கொடை தந்த செய்தியைக் குறிப்பிடுகிறது.
சித்திரை மற்றும் புரட்டாசித் திருநாளில் இறைவனை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். அந்த நாளிலே, இறைவனின் ஊர்வலத்திற்கும், நீராட்டு, சாத்துப்படி, திருப்பள்ளி தாமம் தொடுத்தல், அதாவது மாலை தொடுத்தல், அமுதபடி ஆகியவற்றிற்காக விலைக்கு நிலம் வாங்கி அளித்துள்ளார் . நிலத்துக்கான வரிகள் நீக்கப்பட்டுக் கோவிலுக்கு கொடுக்கப்படுகின்றன.
இது வானியல் கால அடிப்படையில் 19-5-1236 அன்று அளிக்கப்பட்ட கொடை பற்றிய செய்தியைத் தெரிவிக்கிறது. திருவாய்மூர் திருத்தலத்தில் உள்ள அழகிய விநாயகப் பிள்ளையாருக்கு காட்டூர் எனும் ஊரைச் சேர்ந்த செம்பொற் சோதி வட்டணை ஆடல் உடையான் என்பவர் கொடை அளிக்கிறார். செம்பொற்சோதி வட்டணையாடல் உடையார் என்பவர் தான் இந்தத் திருமேனியை எழுந்தருளுவித்தார். அவர் எழுந்தருளுவித்த அழகிய விநாயகப் பிள்ளையாருக்கு திருப்படி மாற்றுக்கு திருநாமத்துக் காணியாக அளித்த நிலக்கொடையைத் தெரிவிக்கிறது.
இக்கல்வெட்டில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்ன உள்ளது என்றால், வட்டணை ஆடலுடையான் என்னும் பெயருடன் வாய்மூர் கோயிலின் இறைவன் பெயரை வைத்த ஒருவர் இருந்திருக்கிறார். கோவிலின் சாமி பெயர்களை வைக்கும் பழக்கம் இன்றும் பலரிடம் நடைமுறையில் உள்ளது. இறையுருவங்களின் பெயர்களை மக்கள் வைத்துக் கொள்ளும் பழக்க வழக்கம் அன்றே இருந்துள்ளது எனும் செய்தியை நம்மால் தெரிந்து கொள்ள இயலுகிறது.
இதற்கு அடுத்து அவருடைய இருபதாம் ஆட்சியாண்டு கல்வெட்டு வானியல் குறிப்புகளின் அடிப்படையில் 26-4-1236. கல்வெட்டில் குறிப்பிடக்கூடிய வானிலை குறிப்பானது ரிஷப ஞாயிற்று அட்சரபட்சத்தில் சஷ்டியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் ஆகும். திரிபுவன வீர தேவர் எனும் மூன்றாம் குலோத்துங்கனின் 38 ஆட்சி ஆண்டிலே இக்கோயிலின் தேவரடியாளான வடுகி வம்பு பழுத்தாள் ஆன திருவாய்மூர் மாணிக்கம் என்பவர் நந்தா விளக்கு எரிப்பதற்கு நிவந்தம் கொடுத்துள்ளார். அந்த நிவந்தத்திலிருந்து வரும் பொலிசை, அதாவது வட்டியைக் கொண்டு விளக்கெரிக்கப்படச் செய்த நிவந்தம் கொடுத்த போது, கல்வெட்டில் வெட்டப்படாமல் இருந்துள்ளது. கல்வெட்டானது ராஜேந்திர சோழர் காலத்திற்குப் பிறகு மூன்றாம் இராசராசரின் காலத்தில் கல்வெட்டில் வெட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
மூன்றாம் இராசராசரின் அடுத்தக் கல்வெட்டு வானியல் குறிப்புகளின் அடிப்படையிலே 19-5-1236 ஆம் ஆண்டு சார்ந்த கல்வெட்டு. ரிஷப ஞாயிற்று பூர்வ பட்சத்தில் ஏகாதசியும் திங்கள்கிழமையும் பெற்ற நாளாகக் குறிப்பிடப்படுகிறது. ராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றது உடையார் திருவாய்மூடையார் கோயிலில் செம்பற்சோதி வட்டணை ஆடல் உடையார் எழுந்தருளுவித்த அழகிய விநாயகர் பெருமாளுக்கு மூன்று சந்தியிலும் விளக்கு எரிப்பதற்காக 600 காசுகளை இக்கோவில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவபிராமணர்களிடம் கொடுக்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது.
மூன்றாம் இராசராசரின் 29 வதாவது ஆட்சியாண்டு, அதாவது கிபி 1245 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. செம்பற்சோதி என்பவர் எழுந்தருளுவித்த அழகிய விநாயகர் பிள்ளையாருக்கு சந்தி விளக்கு ஒன்று, மூன்று சந்திக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று சந்தி விளக்கு எரிப்பதற்கு மூன்று செவிடு நெய்க்காக இக்கோவில் முப்பது வட்டத்து காணி உடைய சிவபிராமணர்களிடம் 600 காசு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வரும் வட்டியின் மூலம் இந்த மூன்று விளக்கினையும் எரிப்பதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டச் செய்தியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
முடிவுரை
மூன்றாம் இராஜராஜ சோழனின் திருவாய்மூர் திருத்தலத்துக் கல்வெட்டுகள் பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும், மக்களின் சமூக நிலையும், அன்றைய மக்களின் வாழ்க்கை முறையினையும், கோவில் வழிபாட்டு முறையினையும் தெளிவாக நமக்கு எடுத்துச் சொல்கின்றன. இன்னும் பல சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இக்கோவிலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கல்வெட்டுகளும் பல்வேறு வரலாற்றுச் செய்தியைத் தாங்கி நிற்கின்றன என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.
மேற்கோள் நூல்கள்
1. தமிழ்நாட்டு கல்வெட்டுகள் வரிசை 29, நாகப்பட்டினம் மாவட்டக் கல்வெட்டுக்கள் - தமிழக அரசு தொல்லியல்துறை வெளியீடு (மார்ச் 2007)
2. பன்னிரு திருமுறை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை (நான்காம் பதிப்பு, மார்ச் 2013)
3. நாட்டு சிவாலயங்கள் - தொகுதி 1, மா. சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை (செப்டம்பர் 2013)
4. தமிழ்நாட்டு சிவாலயங்கள் - தொகுதி 2, மா. சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை (ஜூலை 2016)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.