தமிழகம், தமிழ்மொழி, தமிழா்கள் எனும் சொல்லானது அமிழ்தெனப் பரவிட பூமண்டலமெல்லாம் போற்றிடும் வகையில், “சாத்தூா் சேகரனின் மொழியியல் விதிகளை” உருவாக்கிய மாபெரும் மேதையே சாத்தூா் சேகரன் அவா்கள் ஆவார். அவா் தம் மொழியியல் தொண்டு வரலாறுக்கு மத்தியில், இலக்கியப் பாதையின் வழித்தடங்களை ஆராய்வதாக இக் கட்டுரை அமைந்துள்ளது.
தமக்கென வாழாது தமிழுக்கெனவும், தமிழருக்கெனவும் வாழ்ந்தவா் சாத்தூர் சேகரன். அவர்தம் படைப்புலகம் பல பிரிவுகளை உள்ளடக்கித் திகழ்கின்றது.
தமிழின் வளம் ஒன்றையேத் தனது உயிர் மூச்சாகக் கருதிச் செயல்பட்டு, அயராது நற்றமிழுக்கு அரும்பணி ஆற்றியவரே சாத்தூர் சேகரன் அவர்கள். அவர்தம் படைப்புகளால், தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் என்றென்றும் தமிழ் மக்களால் நன்றியுணர்வோடு எண்ணிப் போற்றத்தக்கதாகும்.
நாடக இலக்கிய உலகில் சாத்தூர் சேகரன்
தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் ஊறித் திளைத்த சாத்தூர் சேகரன் அவர்கள் நாடக இலக்கிய உலகில் மூன்று மாபெரும் நாடகங்களை இயற்றியுள்ளார். அவை,
1. சேந்தமங்கலக் கோட்டை
2. ராஜா
3. உரிமைக்குப் பின்
போன்றவையாகும்.
இதனில், “சேந்தமங்கலக் கோட்டை” என்ற வரலாற்று நாடகம் 1961 ஆம் ஆண்டில் முதற்பதிப்பாக வெளிவந்தது. இந்நாடகம் மூன்றாம் இராசராச சோழன், பிற்காலப் பாண்டியர் சுந்தரன், பிற்காலப் பல்லவர் கோப்பெருஞ்சிங்கன் மற்றும் தமிழக கருநாடக எல்லையில் காணப்பட்ட போசள நாட்டை ஆண்டு வந்த சிற்றரசர் வீரநரசிம்மன் ஆகியோரிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள், போர்களின் நிலைகள், ஆட்சியைப் பிடிக்கும் ஆசைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகத் திகழும் வரலாற்று நாடகமாகும். இந்நாடகம் ஆசிரியரின் அனுமதியின் பேரில் பல ஊர்களில் மேடை நாடகமாக நடிக்கப்பட்டச் சிறப்புடையதாகும். இந்நாடக நூலினைப் பற்றி பல நாளிதழ்கள் தனது திறனாய்வில் பாராட்டி எழுதியுள்ளன.
ராஜா நாடகத்தின் கதைக்கரு
இந்நாடகக் கதாநாயகன் ராஜா முற்போக்குச் சிந்தனையும், சமூக சேவை ஆர்வமும் உடையவராகத் திகழ்கிறார். அவர் நல்லவராக இருந்தும் வில்லன்கள் பலர் தோன்றுகின்றனர். அவர்களது சூழ்ச்சி வலையில் கொல்லப்படல் இறுதியில் மக்கள் நினைவு கூறும் விதமாகச் சிலை எழுப்புகின்றனர். இது மாறுபட்ட நடையில் சிறப்புடன் அமைந்துள்ளது.
உரிமைக்குப் பின்
காமராசர் அணிந்துரையுடன் திகழும் இந்நாடகம் பலரால் பாராட்டப் பெற்றது. இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் உள்ள சமூக நிலையைப் பற்றியதே உரிமைக்குப் பின் நாடகமாகும். சாதி வெறி பிடித்த சாமிநாதன் வில்லனாகக் காட்சி தருகிறான். மகனையேக் கொல்வதற்கு முயற்சி செய்கிறான். இறுதியில் தனது தவற்றை உணர்ந்து மனம் மாறுகிறான்.
கவிஞராகச் சாத்தூர் சேகரன்
மொழி அறிவிலும், மொழி ஒப்புமை ஆராய்ச்சியிலும் மாபெரும் ஆற்றல் பெற்ற சாத்தூர் சேகரன் கவிதை எழுதுவதிலும் வல்லவராகத் திகழ்கிறார். ஐந்து கவிதை நூல்களுடன் ஒரு நெடுங்கவிதை நூலினையும் படைத்து ஒரு கவிஞராகவும் தமிழ் கூறும் நல்லுலகில் மிளிர்கிறார். அவர் இயற்றிய கவிதை நூல்கள் பின்வருவன,
1. மனத்தேர்
2. அறிவுத்தேர்
3. காவிய ஓடம்
4. நிலவின் தங்கை
5. ஆறடித் தேருலா
போன்ற கவிதை நூல்களுள் மனத்தேர் மற்றும் அறிவுத்தேர் இரண்டும் அவர்தம் வாழ்வில், இளமைப்பருவக் காலக்கட்டத்தில் முதலில் வெளிவந்தவையாகும். இவற்றுடன் “காதல் மணம்” என்ற நெடுங்கவிதை நூலினையும் கவிதை உலகிற்குப் படைத்துள்ளார்.
“ஒருமொழி நூல் ஆராய்ச்சியாளரால் எப்படி இப்படி ஒரு கவிதை நூலைப் படைக்க முடிகிறது என்பது எனக்கு வியப்பூட்டுகிறது. ஒரு கவிஞன், அதிலும் தேர்ந்து தெளிந்த கவிஞன் மொழிநூல் அறிஞனாகத் திகழ்வதும், ஓர் ஆய்வறிந்த மொழி நூல் அறிஞன் கவிஞனாகத் திகழ்வதும், ஒரு நாட்டின் பெருமைக்குப் பெருமையூட்டும் கிடைத்தற்கரிய பேறாகும். அந்தப் பேற்றினை சாத்தூர் சேகரன் நமக்கு நம் மண்ணிற்குஅளித்துள்ளார்”
(காவிய ஓடம், ப.VII) என்று தமிழ்க் கவிஞர் மன்றத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் பொன்னடியான் புகழாரம் சூட்டுகிறார்.
இயற்கைக் காட்சிகள், பறவைகள், சமுதாயக் கருத்துக்கள், மொழி முதலியவற்றை மையமாக வைத்து இயற்றப்பட்டதே “காவிய ஓடம்” எனும் கவிதை நூலாகும்.
“தரணியில் உயர்ந்ததெனக் கண்டு
தமிழ்ப்பண் இசைக்கும் வண்டு”
(காவிய ஓடம் - சாத்தூா் சேகரன், ப.56)
என்ற வரிகள் சாத்தூர் சேகரன் அவர்களது தமிழ்ப்பற்றை எடுத்துக் காட்டுகின்றது.
“வள்ளுவர் செய் திருக்குறளை மருவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்தோர்க் கொரு நீதி” என்ற மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் மன ஓட்டத்தை ஒத்தது போல,
“பிறப்பு ஒக்கும் எவ்வுயிரும் திருக்குறளே – இதனைச்
சிறுகுரலில் ஒப்பியது பெரும்புகழ்க் கீதையே”
(காவிய ஓடம் - சாத்தூா் சேகரன், ப.100)
என்ற சாத்தூர் சேகரனின் கவிதை வரிகள் மிளிர்கின்றன. மேலும், காலடிச்சுவடு என்ற படைப்பில் கவிஞன் உள்ளம் புலப்படுகின்றது.
“காலச் சுவடு கண்டு நடப்போமே – முத்தவர்
கண்ட மூதுரை கொண்டு கடப்போமே
பழமையின் பாங்கினைப் பழுதற ஆய்வோம்
பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் ஆவோம்
கால வெள்ளத்தில் கரையாதிருப்போமே – ஊழிக்
கரையான் கடும்பசிக்கு இரையாக திருப்போமே!”
(காவிய ஓடம் - சாத்தூா் சேகரன், ப.92)
என்ற வரிகளில் கவிஞரின் பண்புள்ளம், பணிவுள்ளம், கவியுள்ளம், அறிவியல் உள்ளம், வருங்கால வரலாற்றைப் பேணிக் காக்க வேண்டும் என்ற ஆர்வ உள்ளம் அனைத்தும் பொதிந்திருப்பதைக் காண முடிகிறது.
கவிஞர்களைப் பற்றி பாடும் போது, அவர் தம் மனக் குமுறல்கள் புலப்படுகின்றது.
"நையாண்டி மேளங்கள் நாங்கள்
நற்காலம் நழுவிய மழலைகள்
நேற்றும் நாளையும் அறிந்தவர்கள்
இன்றை அறியா அறிவிலிகள்
தனிநபர் பாடாக் கிள்ளைகள்
தான் கடல் பொழியும் காள மேகங்கள்"
(காவிய ஓடம் - சாத்தூா் சேகரன், ப.66)
என்ற வரிகள் நம் சிந்தனைக்கு விருந்தாக அமைவதுடன் நல் மருந்தாகவும் திகழ்கின்றன.
மொழித்துறையில் ஆழ்ந்து அகன்று ஆய்வுகள் பல செய்துள்ள சாத்தூர் சேகரன், அவர் தம் கவிதைப் படைப்புகளும் பைந்தமிழர் கவிதைப் பசிக்கு கவிதை விருந்துகள் பல நல்குகின்றன எனில் அது பொய்யில்லை. கவிதையின் சொற்கட்டும், புதுமையாகச் சொல்வதும், திறமான சொற்களை ஆள்வதும் ஆகிய திறத்தில் சாத்தூர் சேகரன் முதன்மையான நபர் என்பதை அவர்தம் கவிதை வரிகள் நமக்கு மெய்ப்பிக்கின்றன.
புதினத்திலும் கால்பதித்த சாத்தூர் சேகரன்
மொழியியலில் புதிய புதிய நுணுக்கங்களை அறிமுகப்படுத்திய சாத்தூர் சேகரன் அவர்கள் இலக்கியப் படைப்புலகிலும் முத்திரை பதித்தவர். புதின உலகிலும் கால் பதித்து ஆறு புதினங்களை தமிழ் உலகிற்கு நல்கியுள்ளார். மொழியியலில் பல வகையிலும் ஊக்கம் கொடுத்த அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் அவர்கள் சாத்தூர் சேகரன் அவர்களுக்கு அடிக்கடி வழங்கும் அறிவுரை, “உன் இலக்கிய முயற்சி மொழி ஆய்வும் பணிக்கு இடையூறு ஆகி விடக் கூடாது.” (சேந்தமங்கலக் கோட்டை, ப.4) என்பதே ஆகும்.
ஆயினும் அவ்வப்போது சில இலக்கிய முயற்சிகளைத் தொடர்ந்தமையால் கிடைத்தப் படைப்புகளே ஆறு புதினங்கள்
1. சேந்தமங்கலக் கோட்டை
2. புதுமைப் பெண்
3. தாய் நாடு
4. காளிதாசினி
5. கரையில் ஒரு மீன்
6. கடல் என் காதலி
மொழியியலில் இதுகாறும் யாரும் நுழையாத, உலக மொழிகளின் எழுத்துக்கள் தோற்றமும் வளர்ச்சியும், இந்திய மொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ் வேர்ச்சொல் ஆய்வு போன்ற பல ஆய்வுகளில் மூழ்கி வெற்றி பெற்றுள்ள சாத்தூர் சேகரன் புதினத்திலும் கால் பதித்து வெற்றிகள் கண்டவர் ஆவார்.
“வரலாற்று நவீனத்தில் புதிய சிகரங்களை எட்டிப் பிடித்த கல்கி அவர்களுக்கும், சாண்டில்யன் அவர்களுக்கும் வரலாற்று நவீனங்களைப் புதிய பாணியில் எழுத முற்பட்டிருக்கும் அடியேனின் சேந்தமங்கலக் கோட்டை என்ற இந்நூலை அந்தப் பெரிய உள்ளங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன்” (சேந்தமங்கலக்கோட்டை, என்னுரை ப.1) என்று சேந்தமங்கலக் கோட்டை நூலிற்கு என்னுரை வழங்கியுள்ளார் சாத்தூர் சேகரன் அவர்கள். சேந்தமங்கலக் கோட்டை என்ற வரலாற்றுப் புதினத்தை முதலில் நாடகமாகவே இயற்றினார். பின்பு விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் தூய தமிழில் நவீனமாக படைத்தளித்தார்.
பிற புதினங்கள் எழுதப்பட்ட காலங்கள் பற்றி கூறுகையில்,
“பல வேறுபட்ட கதைக் கருக்களைப் பல்லாண்டுகளாக கற்பனையிலேயே வைத்திருந்த நான் அவற்றைத் தாளில் உருவம் கொடுத்தேன். காளிதாசினி, கரையில் ஒரு மீன், கடல் என் காதலி போன்ற நவீனங்கள் ஆகும். இவையும் உச்ச நிகழ்ச்சி போன்றவை மனத்திருப்தி தராததால் முற்றுப்பெறாமல் உள்ளன. எப்படியும் 1997 இல் அச்சேறிவிடும்” (சேந்தமங்கலக் கோட்டை, ப.6) என்று தனது படைப்புச் சூழலைப் புலப்படுத்துகின்றார்.
“புதுமைப்பெண்” என்ற புதினத்தில் இடம்பெறும் அலமேலு ஒரு விதவை. முற்போக்கு எண்ணம் கொண்ட அவள், பல புரட்சிக்கரமான செயல்களைச் செய்கிறாள். எதிர்பாராத பல்வேறு திருப்பங்களை உள்ளடக்கியதே இப்புதினமாகும்.
“தாய்நாடு” எனும் புதினம் இந்திய சீனா பற்றிய வரலாற்றுக் குறிப்புகளுடன் திகழும் கதையாகும். தீயவன் ஒருவன் மனம் திருந்தி நல்லவனாக மாறி இந்தியப் படையில் இணைவதே கதையின் மையம்.
“காளிதாசினி” எனும் புதினம் முற்போக்கு நவீனம். கணவனால் கைவிடப்பட்ட பெண் தனது மனதை ஒருமுகப்படுத்தி கவிதையில் ஆழ்த்துகிறாள். தற்செயலாக காளிதாசினி என்ற கவிஞனைச் சந்திக்கிறாள். அவனது கவிதையின் ஆழம் அறிந்து பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்கிறாள். முற்றிலும் சமுதாயம் எதிர்பாராத முரண்பட்ட திருப்பங்களைக் கொண்டதே இப்புதினம்.
“கரையில் ஒரு மீன்” எனும் புதினம் துன்பவியல் புதினமாகத் திகழ்கின்றது. கிறிஸ்துவ கன்னிமாதாவாக திகழும் தலைமைப்பாத்திரம் காதலில் வீழ்ந்து அலைக்கழிக்கப்படுகிறாள். அரைமனதுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாலும் பின்பு இல்லற வாழ்வில் அவள் மனதில் நாட்டம் இல்லை. ஆகவே “கசையில் போடப்பட்ட மீனாகத் தவிக்கும் அவள் இறுதியில் நிகழும் பல சம்பவங்களால் மனமுடைந்து இறந்து விடுகிறாள்.” என்று கதையின் முடிவு துன்பவியலாகத் திகழ்கின்றது.
“கடல் என் காதலி” என்பது இந்து கிறிஸ்துவ சமயம் பூசலினைத் தூத்துக்குடி வட்டாரத்துடன் பதிவு செய்துள்ளது. இந்து சமயத்தைச் சார்ந்த ஆண் கிறிஸ்துவ சமயப் பெண்ணைக் காதலித்து சூழ்நிலையால் திருமணம் செய்கிறான். பின்னர் சுற்றத்தாரால் சமய ரீதியாக இருவரும் பிரிந்து செல்கின்றனர். முடிவில் ஆடவன் தற்கொலை செய்து, தனது வாழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளியை இடுகிறான். சமய ஒற்றுமையின் தேவைகளையும் தமது நவீனத்தில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
சிறுகதை ஆசிரியராககச் சாத்தூர் சேகரன்
சாத்தூர் சேகரன் அவர்கள் படைப்புகள் அடுத்தடுத்து அச்சில் வெளிவராமல் அதிக ஆண்டுகள் கழித்தே வெளிவந்தன. அதற்குக் காரணம் தந்தைக்கு சேகரன் அவர்கள் செய்து கொடுத்த சத்தியம். தந்தையின் கட்டளைப் பற்றி கூறுகையில், “எழுது, ஆனால் அச்சிடாதே, ஒவ்வொரு நாளும் எழுதிப் பதினைந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் அச்சிடு. அதுவரை வணிகத்தை மட்டும் கவனி.” என்றுரைக்கிறார். சத்தியத்தால் கெட்டவன் நான் என்று தன்னை சாத்தூர் சேகரன் குறிப்பிட்டுக் கொள்கிறார். ஏறத்தாழ 35 ஆண்டுகள் இடைவெளி விட்டு நூல்கள் வெளியிடும் பணியைத் தொடர்ந்துள்ளார். அவ்வகையில் அவர் கால் பதித்த மற்றொரு படைப்புலகம் சிறுகதை உலகம். சிறுகதை ஆசிரியராகவும் தமிழகத்தில் வலம் வந்தவரே பன்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் அவர்கள்.
“பனிமனிதன்” என்ற சிறுகதைத் தொகுப்பினைப் படைத்துள்ளார். இதனில் உள்ள சிறுகதைகள் (ஒன்பது) அனைத்தும் இதுகாறும் வெளிவராத புதுமை நிகழ்ச்சிகளைக் கொண்டது.
ராட்சச சக்கரன்
அறிவியல் கண்டுபிடிப்பாளராகிய முதன்மைப் பாத்திரத்தின் உணர்வுகளை பொதுமக்கள் யாரும் உணரவில்லை. தன் கண் முன்னே தனது முயற்சிகள் கண்டுபிடிப்புகள் ஒடுக்கப்படுவதைக் கண்ட விஞ்ஞானி மனம் நொந்து உலகை அழிக்க ராட்சச சக்கரத்தைப் படைக்கிறான். அது பலநூறு மக்களை அழிக்கின்றது. இதுவே கதைக் கரு. இது போல ஒரு கதை அமைப்பினை எவரும் படைத்ததில்லை.
பனிமனிதன்
இமயமலையில் நிகழும் துன்பமயமான நிகழ்ச்சியே பனிமனிதனின் கதைக் கரு. இதில் சாத்தூர் சேகரன் அவர்கள் பல முறை இமைய மலை உச்சிக்கு சென்றுள்ள அனுபவத்தையே இக்கதையில் பதிவு செய்துள்ளார்.
தாமரை நெஞ்சம்
கணவன் ஆண் என்ற அகம்பாவத்தால் மனைவியை ஒதுக்குகிறான். பின்பு மனம் திருந்தி மனைவியை விரும்பி அவளுடன் வாழ எண்ணி வருகையில் அவள் மறுக்கின்றாள். குடும்ப நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதே, தாமரை நெஞ்சம் கதையின் கரு.
மேலே கூறியுள்ள கதைக்கரு மட்டுமின்றி பிற கதைகளும் தன்னுள் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு இலங்குகின்றது. வேற்றுலக மனிதன் பூலோகம் வரும், கதைக்களம் படிப்போர் உள்ளங்களை அறியவியல் உலகிற்கு அழைத்துச் செல்வது மிகச்சிறப்பாகும். ஆயினும், சாத்தூர் சேகரன் அவர்கள் சிறுகதைகள் பல முத்திரைகளைப் பதிக்கும் வகையில் இருந்தாலும், அவர் தம் வாழ்வியல் சூழல்கள், சிறுகதைகளை இயற்ற வழி வகுக்கவில்லை என்பது வருந்தத்தக்க நிகழ்வாகும்.
இவ்வாறாக இலக்கிய உலகில் தனது படைப்புத்திறனால் சாத்தூா் சேகரன் அவா்கள் முத்திரை படைத்திருந்தாலும், மொழியியில் உலகில் பலரும் போற்றத்தகுந்த வெற்றியை அடைந்தவா் என்றேக் கூறலாம். உலக மொழிகளை ஒப்பீடு செய்ய “சாத்தூா் சேகரனின் மொழியியல் விதிகளை” உருவாக்கி, மொழியியல் துறையில் பல கருத்தாக்கங்களை கண்டறிந்த சாத்தூா் சேகரன் அவா்கள், மொழியியலில் யாரும் எட்ட இயலா உயர் நிலையினை மாபெரும் வெற்றியினைப் பெற்றவா் என்பது மறுக்க இயலா உண்மையே.
துணைமை ஆதாரங்கள்
சாத்தூா் சேகரன் இயற்றிய நூல்கள்:
1. சேந்தமங்கலக் கோட்டை, காமராஜ் பதிப்பகம், சென்னை-2. (1996)
2. காவிய ஓடம், வள்ளுவா் முத்தமிழ் மன்றம், 1, கந்தப்ப செட்டி தெரு, சென்னை – 600001 (2002 )
3. இருக்கு நூல் முதல் நூலுமல்ல மூல நூலுமல்ல, முத்தமிழ் பதிப்பகம், சென்னை - 600 099. (2012)
4. சொந்த நாட்டில் தமிழன் அகதியா, முத்தமிழ் பதிப்பகம், சென்னை – 600 099. (2012)
5. ஏன் வேண்டாம் துன்பத்திராவிடம்? முத்தமிழ் பதிப்பகம், சென்னை – 600 099. (2012)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.