குடி குடியைக் கெடுக்கும்
க. கெளரி
முன்னுரை
மக்களில் பெரும்பாலானோர் பல்வேறு தீய பழக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றுள் அவர்களுடைய வாழ்வினையே சீரழிக்கும் பழக்கமாகக் குடிப்பழக்கம் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கும் மதுவிற்கு அடிமையாகி உள்ள மக்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களே. அவர்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த வருமானத்தில் தான் வாழ்க்கை நிலை அடிமட்டத்தில் உள்ளது என்று கூறுவதற்கில்லை. பெரும்பாலானோர் தங்களது வருமானத்தில் பெருமளவு பணத்தை மதுபானத்துக்குச் செலவிடுவதே முன்னேற்றத்திற்கான தடையாக உள்ளது. இந்நிலையில் அறிவை மயக்கி மனிதனை இழிவுக்குக் கொண்டு செல்லும் குடிப்பழக்கம் குடியினைக் கெடுக்கும் என்பதனை ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ எனும் நாவலின் வழி எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
குடிப்பழக்கம்
குடிப்பழக்கத்திற்கான காரணங்களைக் கூறும் மக்கள் முதலில் கூறுவது மனவேதனையே. தனக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கத் தெரியாத அல்லது முயற்சிக்காத மனிதனே குடிப்பழக்கத்திற்கு ஆளாகின்றான். இந்நாவலில் மதக் கலவரத்தில் ஈடுபட்ட காரணத்திற்காகக் காவலர்களால் கைது செய்யப்பட்டுச் சிறையில் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான இளைஞர்கள் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, தான் சிறைக்குச் சென்றதற்கான காரணத்தையோ, அதனால் தன் குடும்பம் அடைந்த வறுமை நிலையைப் பற்றியோ எண்ணிப்பார்க்காமல் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகின்றனர். இன்பத்திலும் துன்பத்திலும் விருந்து என்ற பெயரில் மது முதன்மையான இடத்தினை வகிக்கிறது எனலாம்.
‘விவேகம் மறைப்பதை குடிப்பழக்கம் வெளிப்படுத்தும்’
என்னும் பழமொழி சிறையிலிருந்து மீண்ட இளைஞர்கள் தங்களுடைய விவேகத்தினால் தீர்வு காணாமல் குடிப்பழக்கத்தினால் தீர்வு காண முயல்வதை இதன் வழி அறிய முடிகிறது.
மதுவின் விலை மரணம்
“2003 நவம்பர் மாதம் 29ம் தேதி அப்போது முதலமைச்சர் மதுக்கடைகள் ஏலம் மூலம் விடப்பட்டதை ரத்து செய்து விட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை இனிமேல், ‘தமிழ்நாடு மாநில விற்பனை கழக நிறுவனம் (டாஸ்மாக்) தமிழ்நாட்டில் விற்பனை செய்யும் என்ற முடிவை எடுத்தார்” (1) ஆனால் அரசாங்கம் விற்பனை செய்யும் மதுப்பாட்டில்களில்,
‘குடி குடியைக் கெடுக்கும்
குடிப்பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும்
உயிருக்கும் ஆபத்து’
என்ற அறிவிப்பையும் வெளியிடுகின்றது.
“தங்கமண் எடுத்து வேலைபார்க்கும் பொன்னன் சம்பாதித்த பணத்தையெல்லாம் தினமும் குடித்தே அழிப்பார். ஏப்பா இப்படி தெனோங் குடிக்கிற...?” என்று இப்புதினத்தில் ராசாத்தி கேட்கும் போதெல்லாம், சரக்கடிச்சாத்தான் அந்த நாத்தம் மறந்து நாலு வாயித்திங்க முடியுது என்பர். அப்படியே குடிச்சுக் குடிச்சுக் காமாலை வந்து வயிறு வீங்கி ஒருநாள் இறந்தார் பொன்னன் என்பதை இப்புதினத்தின் வாயிலாக ஆசிரியர் சம்சுதீன் ஹீரா வாழ்வின் இறுதி நாளைக் குடிப்பழக்கம் நிர்ணயிக்கிறது என்பதை நிறுவுகிறார்.
குடிப்பழக்கமும் - குழந்தைத் தொழிலாளரும்
குழந்தைகள் இந்நாட்டின் கண்கள். சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டு பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் தொழிற்சாலையில் வேலை பார்க்கக்கூடிய இழிவான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
“பென்சிலைப் பிடிக்க வேண்டிய
விரல்களில் இன்று
வேலைகளின் வித்தைகள்
உயர்ந்து விட்டேன் என்றுத்
திரும்பிப் பார்த்தேன். பள்ளிச்
செல்லும் குழந்தைகள் என்னைக்
குழந்தைத் தொழிலாளன் என்று
ஏளனமாய்...” (2)
என்னும் கள்ளிப்பால் கல்லறைகள் கவிதை வரிகள், குழந்தைத் தொழிலாளியின் பள்ளிச் செல்லும் ஏக்கத்தை பிரதிப்பலிப்பதாக அமைந்துள்ளது. இப்புதினத்தில் ‘தனது தந்தை இறந்ததால் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டுத் தன் அம்மாவுடன் பூக்கடையில் வியாபாரம் பார்க்கிறாள் ராசாத்தி! குழந்தைகளை வளர்த்து நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டிய பெற்றோர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகித் தங்களுடைய இன்பத்திற்காகக் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வருமானத்தை எதிர்பார்க்கிற அளவிற்கு குடிப்பழக்கத்தினால் ஏற்படும் வறுமை நிலை வேதனையைத் தருகின்றது என்பதனை சம்சுதின் ஹீரா புதினத்தின் வழி காண முடிகிறது.
வருமானத்தைக் களவாடும் குடிப்பழக்கம்
குடும்பங்களில் ஏற்படும் பெருமளவு பிரச்சனைகளுக்குக் குடிப்பழக்கமே அடிப்படையாக அமைகிறது. குடிப்பதற்குப் பணம் கேட்டு மனைவியைத் தொந்தரவு செய்யும் கணவன்மார்கள் பலர் உள்ளனர். வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வைக்கும் பெண்களிடம் அப்பணத்தையும் சுரண்டும் கணவன்மாரையும் காணமுடிகிறது. பலசரக்குக் கடைகளில் கூடுகின்ற மக்களைவிட மதுபானக் கடைகளிலேயே ஆண்கள் நிரம்பி வழிகின்றனர்.
“மது அளவுக்கு மீறி அருந்திவிட்டு
மனைவியை அடிக்கிறான்!
உழைத்து சம்பாதித்த பணத்தை எல்லாம்
டாஸ்மாக்கில் கொடுத்து விட்டு
உடலில் உடுப்பின்றி உருகின்றான்!” (3)
சமுதாய விடியல்கள் என்னும் இக்கவிதைத் தொகுப்பு ஏழை மக்களின் வாழ்வு விடியாதா? என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இப்புதினத்தில் குடிப்பழக்கம் தன்னுடைய குடும்ப வறுமை நிலையினைக்கூட எண்ணிப்பார்க்க இயலாத நிலைக்குத் தள்ளும் என்பதனை, ஆட்டோ டிரைவரான அலீம் “காலையிலிருந்து குடிக்க ஆரம்பித்து விடுவான். நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கக் கூடியவன்தான். ஆனாலும் இந்தக் குடிப்பழக்கம், வருமானத்தில் பாதியைக் களவாடிக் கொள்கிறது என்பதை இப்புதினத்தின் வாயிலாக ஆசிரியர் சம்சுதீன் ஹீரா எடுத்துரைத்துள்ளார்.
குடிப்பழக்கமும் சிதைந்த குடும்பமும்
“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது” (4)
என்று திருவள்ளுவர் வறுமைக்கு இலக்கணம் தருகிறார். மக்களைப் பாதிக்கின்ற சமூகச் சிக்கல்களுள் தலையாயது வறுமை. மனித வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் கிடைக்கப்பெறாத நிலையே இல்லாமையாகும். இன்றைய சூழலில் உறைவிடம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஆசிரியர் சம்சுதீன் ஹீரா தனது புதினத்தில் குடிப்பழக்கத்தினால் பொன்னன் இறந்த பிறகு குடும்பத்தின் வறுமைநிலை தலைவிரித்தாடியது. “இரண்டடி உயரத்தில் நான்கு புறமும் சுவர் இருக்கும், அதற்கு மேலுள்ள உயரத்தைப் பனையோலைக் கொண்டு மூடியிருந்தனர். குடிப்பழக்கம் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை இதன் மூலம் நிறுவுகிறார் ஆசிரியர்.
தீர்வுகள்
பெரும்பாலான மனிதர்கள் தங்கள் குடிப்பழக்கத்திற்குத் தத்துவ விளக்கம் அளிப்பவர்களாகத்தான் உள்ளார்கள். குடும்பக் கஷ்டம், காதல் தோல்வி, பணிக்களைப்பு, திடீர் மகிழ்ச்சி முதலிய அனைத்தும் இந்தத் தத்துவ விளக்கத்தில் அடங்கும். இவர்கள் அனைவரும் ‘சும்மா’ என்றுதான் ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் பின்னாளில் அதைவிட முடியாமல் அதற்கு அடிமையாகியிருப்பார்கள்.
‘குடியும் செல்வமும் புத்திசாலியின்
நடத்தை மாற்றும்’
என்னும் பழமொழி, குடிப்பழக்கம் உள்ளவர்களின் குடும்பங்களில் நம்பிக்கைத் துரோகங்கள், அடிதடி மோதல்கள், கொலைகள், தற்கொலைகள், குழந்தைத் தொழிலாளர் அவலங்கள் முதலிய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படையான வறுமையையும் ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்துவதாக அமைகிறது.
“உலகளவில் டீகோவின், இரண்டாவது பெரிய
மதுபானச் சந்தையாக இந்தியா திகழ்கிறது” (5)
என்னும் தினமலர் நாளிதழ்ச் செய்தி. இந்தியப் பங்குச் சந்தையில் தனது புள்ளிகளில் குறைந்து வருகிறது. பதக்கப் பட்டியலிலேயே காணமுடியவில்லை என்கின்ற நிலையில் மதுபானச் சந்தையில் உலகளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது “மயங்கியே வரிதிரட்ட” (6) என்னும் கவிதையினை நினைவூட்டுவதாக அமைகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களும் மதுவுக்கு அடிமையானவர்களால் தான் அதிகளவில் நடக்கிறது.
“தமிழகத்திலேயே மிகவும் குறைவாக மதுபானங்கள் விற்பனையாகும் மாவட்டங்களாக தர்மபுரி, பெரம்பலூர் மாவட்டங்கள் உள்ளன. இதற்குக் காரணம் இந்த மாவட்டங்களில் தான் மிகக் குறைந்த அளவிலான மதுபானக் கடைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது” (7) குடிப்பழக்கத்தினை குறைக்கப் பள்ளி, கல்லூரி, கோயில்கள், மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும். குடிப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளையும், சமூகச் சீரழிவுகளையும் பள்ளியிலிருந்தே மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தல் அவசியம். குடிப்பழக்கத்தின் தீமையினை எண்ணிப் பல்வேறு மாநிலங்களில் மதுவிலக்கினை அமுல்படுத்தியுள்ளதைப் போன்று தமிழ்நாட்டிலும் மதுவிலக்கைக் கொண்டுவர முன்வரவேண்டும்.
முடிவுரை
பழங்காலத்தில் ‘மது’ உண்ணும் உணவாகவே இருந்த நிலையில் காலப்போக்கில் அதுவே பழக்கமாகிப் பல்வேறு தீயச் செயல்களுக்கு அடித்தளமாக உள்ளது. குடிப்பவர்களில் பெரும்பாலானோர் குடிப்பழக்கம் பழங்காலந்தொட்டே இருந்து வருகின்றது என்று மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் மது அருந்துதல், குடிகாரப் பெற்றோர்களால் குழந்தைத் தொழிலாளி உருவாதல், சாலை விபத்து எனச் சொல்லி முடியாத பல்வேறு சமூகச் சீரழிவுகள் குடிப்பழக்கத்தினால் ஏற்படுகிறது. குடி தன்னுடையக் குடியை மட்டுமல்லாது தான் குடி கொண்டிருக்கும் நாட்டையும் கெடுக்கும் என்பதை நம் குடிமக்கள் உணர வேண்டும்.
பார்வை நூல்கள்
1. தினத்தந்தி நாளிதழ், ப.19, 14.2.2016.
2. ம. நர்மதா, கள்ளிப்பால் கல்லறைகள், ப.50.
3. பூவை. செல்வராஜ், சமுதாய விடியல்கள், ப.74.
4. ஞா. மாணிக்கவாசகன், திருக்குறள் எளிய உரை, ப.212, குறள் 1041.
5. தினமலர் நாளிதழ், 31.12.2015, ப.13.
6. அமுதானந்த பாரதி, கவிதை அமுதம், ப.65.
7. தினத்தந்தி நாளிதழ், 14.2.2016, ப.19.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.