கண்ணகி - கதை நகர்விற்குப் பயன்படுத்தப்படுத்தப்படும் தலைமைப் பெண்பாத்திரம்
முனைவர் நீ. பகவதியம்மாள்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
டாக்டர் என். ஜி. பி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
முன்னுரை
மனித உலகில் நடக்கும் வாழ்க்கை அனுபவங்களைக் கதையாக்கி அதன் மூலம் சமூகத்தின் பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதே காப்பிய மரபுகளின் கட்டமைப்பாகும். சமூகத்தின் சாதாரணப் பின்புலங்களில் வாழும் மாந்தர்களின் செயல்பாடுகள் சூழ்நிலை வெளிப்பாடுகளாகத்தான் படைப்புலகத்தில் பிரதிபலிக்கின்றன. பெண்மையின் பூரணத்தைச் சமூகச் சித்தரிப்பில் கொண்டு வரும்போது உண்மையின் நிழல்கள் தென்படுகிறதா? அல்லது கதைப்போக்குகளுக்கான நகர்வு நிலையில் பயன்படுத்தப்படுகிறதா? என்ற இருவேறு மனவுணர்வுகளைத் தாங்கிய காப்பியக் கதை நிலையை இக்கட்டுரை ஆராய்கிறது.
கண்ணகி - பெண்மைப் பின்புலமும், கதைப்போக்கும்
“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்”
(சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப்பாடல் வரி-1)
என்று நிலவொளியில் தொடங்குகின்ற காப்பியக் கட்டமைப்பு, பெண்மையின் மென்மையான ஒளியில் நகர்கிறது என்பதை முதலிலிலேயே படிப்பவர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது.
“மணஉறவின் அடிப்படையில் அமையும் குடும்பத்தில் தலையாய உறுப்பினர் கணவனும், மனைவியுமே ஆவர்”
(பூ.தர்மலிங்கம், மனிதனும் சமூக இயைபும், பக்-23)
கண்ணகியின் திருமணம் மிகச்சிறப்பான விழாச் சிறப்புக்களை மையமிட்டு உற்றார், உறவினர் என்ற பந்தங்களின் பிணைப்பில் உருவாக்கப்பட்டதான ஒரு நிகழ்வு. கற்புநிலை வழுவாத குடும்பப் பின்னணி கண்ணகியினுடையது என்பதை வலியுறுத்த ஆசிரியரின் அறிமுகமே ஒரு சான்றாகும். 12 வயது மட்டுமே ஆன கண்ணகியின் கற்பு நிலையை மாதரால் ஏத்தும் போது
"தீது இலா வடமீனின் திறம் இவள்திறம்"
(சிலப்பதிகாரம், மங்கலவாழ்த்துப்பாடல் வரி-37)
என்று பாராட்டுகின்றார்கள். கதைப்பின்னணியை முதலிலேயே தெளிவுறுத்த முற்படும் ஆசிரியர் கதைமாந்தரிடம் தன் மன நிலையைத் திணிப்பதாகவே உள்ளதா? அல்லது சமூகம் இப்படிப்பட்ட மன நிலையைப் பெண்ணுக்குள் உருவாக்குவதற்கான சொல்லாற்றலா? என்ற இருவேறு கேள்விகள் நம் முன் நிறுத்தப்படுகிறது.
கணவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறவாக கண்ணகி இருந்ததனால்தான் மனைவியின் அழகை மனதில் ஏற்ற கோவலன்
“மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே ”
(சிலப்பதிகாரம் , மனையறம் படுத்தகாதை 73-74)
என்று பா வடிக்கின்றான். தன்னின் மிக்க ஓர் செயல்திறம் பெண்ணுக்குள் வேண்டும் என்று ஆண்மனம் விரும்பியிருக்கிறது. அதனால்தான் கலைதாகத்தின் ஈர்ப்பால் மாதவியின் மடியில் வீழ்ந்தான் கோவலன். பரத்தமை மறுக்கப்பட்ட சமூகம் என்பதால்தான் ‘ஆடல் மகள்’ என்றும், ‘சலம் புணர் கொள்கைச் சலதி’ என்றும் கோவலன் மாதவியைப் பழிக்கிறான்.
“சலம்புணர் கொள்கைச்
சலதியோடு ஆடிக்
குலந்தரு வான்பொருள்
குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத்
தரும் எனக்கு...”
(சிலப்பதிகாரம், கனாத்திறம் உரைத்த காதை 68-71)
திருமணமான ஆண்கள் இவர்களிடம் சென்று தங்கி வருதல் தவறாகக் கருதப்படவில்லை. அதுவும் குறிப்பாக வணிகச்சமூகத்தில் பெரும்பான்மையாகக் கடைபிடிக்கப்பட்ட பரத்தைத் தொடர்பு என்று நாம் வலிந்து பொருள் கொள்ளவேண்டியுள்ளது. கோவலன் தன் மனைவியை விட்டு மாதவியை நாடிச் சென்றிருக்கிறான். ஆனால் அவனை ஏன் யாரும் கண்டிக்க முன்வரவில்லை? அல்லது முன்வரவில்லையா? அல்லது ஆசிரியர் கதைச்சூழலுக்கான தேவையை உருவாக்கியிருக்கிறாரா? அவன் மாதவியை விட்டுப் பொருளாதார நிலை தளர்ந்த பிறகு தான் வெளியேறுகிறான். பரத்தையர்களின் தொடர்பு செல்வ நிலையில் கொள்ளப்படுவதாகவும் அல்லாத நிலையில் தள்ளப்படுவதாகவும் இருந்திருக்கிறது. தனக்கான நிலையை உணர்ந்த கோவலன் வெளியேறுகிறான் (வெளியேற்றப்படுகிறான்). கதைத்திருப்பத்துக்கு கானல் வரிப் பாடல்தான் காரணமாகக் கூறப்பட்டாலும், மாதவியுடன் கோவலன் இருந்த சூழலில் அவனின் செல்வம் தொலைந்த நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தப்படவில்லை. அவன் செல்வம் குன்றிய நிகழ்ச்சி கண்ணகியிடம் மீண்ட நிலையில் கோவலன் சொல்வழியிலேயே அறிவிக்கப்படுகிறது. குலம் தந்த மலை போன்ற செல்வத்தையெல்லாம் தொலைத்து விட்டுத் தலை குனிந்து நிற்கிறேன் என்று கண்ணகியிடம் கூறுகிறான். கண்ணகி தன் பொன்னகையைத் தொலைத்தாலும் புன்னகை மீண்டதென இன்புற்று, வணிகனின் அறிவாற்றலும் பொருள்திறனும் அவனின் செயல்திறனால் மீளும் என்பதைச் சுட்டி,
“சிலம்பு உள; கொண்ம்”
(சிலப்பதிகாரம், கனாத்திறம் உரைத்த காதை-73)
என்கிறாள் கண்ணகி. செல்வமெல்லாம் தொலைத்த நிலையில் கணவனின் சொல்லில் கட்டுப்பட்டு ஒரு வார்த்தையும் பேசா மட ந்தையாகக் கணவனோடு மதுரை செல்ல உடன்படுகிறாள். கண்ணகியைத் தூய்மையின் வடிவமாகவே சித்தரிக்க நினைத்து ஆசிரியர் கதையை நகர்த்துகிறார். பேசும் பேச்சில் மென்மையும், உலகமறியாப் பெண்மையுமாகவே அடையாளம் காணப்படுகிறாள் கண்ணகி. வம்பப்பரத்தையும், வறுமொழியாளனும் கண்ணகியையும் கோவலனையும் அவதூறு சொல்லும் போது துறவுக்கோலத்தில் உள்ள கவுந்தியடிகள் கோபம் கொண்டு சாபமிடுகிறாள். இச்செயலால் பேதுறும் கண்ணகியின் கூற்றை ஆசிரியர்
“நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியாமை என்றறிதல் வேண்டும்”
(சிலப்பதிகாரம், நாடு காண் காதை 237-238)
என்று தன் பெண்மையின் மென்மையான வெளிப்பாட்டைச் சொற்களால் மன்னிக்கிற பாங்கு சிறப்புடையது.
கதையோட்டத்திற்காகவேப் பயன்படுத்தப்படும் கதைத் தலைவி
தன் கணவனின் தவறைக் கூடக் கண்டிக்க மென்மையான சொற்கள்தான் பெண்மைக்குள் வேண்டும் என ஆசிரியர் கருதியிருக்கிறார். தன் எண்ணத்தைக் கண்ணகியின் சொற்களாக வலுப்படுத்தும் இளங்கோவடிகள்
“போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” (சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை - 81)
என்று கூறும் போது கூட தன் வருத்தத்தைக் கண்டு பொறுக்க முடியாது வருந்தும் கோவலனின் தந்தை தாய் பற்றிய கூற்றாகத்தான் கண்ணகி கூறுகிறாள். ஆணுக்குள் புதைந்த பெண்ணின் மன அடக்கச்செயல் திடீரென்று அவன் முன் வெளிப்படுவதில்லை.
இரண்டு வேறுமாதிரியான பிரிவுகள் கண்ணகியைக் கணவனிடமிருந்து பிரிக்கிறது.
1. கண்ணகியிடமிருந்து பிரிந்து மாதவியிடம் செல்லல்
2. குற்றம் சாட்டப்பட்டு நிரந்தரமாகக் கண்ணகியை விட்டு இறந்து போகிறான்
கோவலன் மாதவியுடன் சென்று இல்லறம் ஆற்றும் போது கண்ணகி தனிமைத்துயரில் ஆழ்கிறாள். அப்போது எந்த தெய்வமும் அவள் துயரம் கண்டு கணவனை மீட்க எழவில்லை. ஆனால் ஐயைக் கோட்டத்திலே கண்ணகி, கோவலன், கவுந்தி மூவரும் இளைப்பாறும் போது சாலினியின் மீதேறிய தெய்வம்
“ஒரு மாமணி ஆய் உலகிற்கு ஓங்கிய
திருமாமணி” (சிலப்பதிகாரம்,வேட்டுவ வரி : 49-50)
என்று புகழ்கிறது. அது மட்டுமல்லாமல் நிகழப்போவதையும் கோடிட்டுக் காட்டுகிறது. வாழப்போகிறோம் என்று மகிழ்ந்திருந்த பெண்மைக்குள் ஊழ் எனும் துன்பம் சூழ்கிறது. ஊழை எதிர்கொள்கிற ஆற்றலை கண்ணகி மட்டுமல்ல வாசகர்களும் அறிய வேண்டும் என்பதற்காக ஆசிரியர் முன்னோட்டமான கதையைத் தெய்வம் மூலமாகப் புனைந்துரைத்திருக்கிறார். கண்ணகி புகழை உலகறியும் முன்னே தெய்வங்கள் அவளைக் கொண்டாடியிருக்கிறது.
கற்புக்கடம்பூண்ட பொற்புடைத் தெய்வமாக்கப்பட்ட கண்ணகி தன் கணவன் கள்வனா? என்று கதிரவனை வினவுகிறாள். உடனே கதிரவனும் உன் கணவன் கள்வனல்லன் என்று மறுமொழி கூறுகிறது. அசாத்திய நிகழ்வுகளெல்லாம் கண்ணகிக்காக நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது ஆசிரியரின் புனைவாகக் காட்டப்பட்டதே அல்லாமல் உண்மை என்பது சாத்தியமாகாது.
மதுரையைத் தண்டிக்கத் துணிந்தபோது கண்ணகியின் முன் தீக்கடவுள் தோன்றி நான் இந்நகரைப் பாய்ந்து எரியூட்ட ஏவலை உடையேன் யார் பிழைக்க வேண்டுபவர் உரை என்று தலை தாழ்ந்து நிற்கிறது உடனே
“பார்ப்போர் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தோர் பக்கமே சேர்க” (சிலப்பதிகாரம் வஞ்சினமாலை 53-55)
எனக் கண்ணகி தீக்கடவுளை ஏவுந்திறம் எதார்த்தத்தின் பக்கங்களைக் கொஞ்சம் சிதைக்கத்தான் செய்கிறது.
பெண்ணை நோக்கிப் புனைந்த காவியம்
பெண்ணை நோக்கிப் புனைந்த காவியம் என்பதால்தான் அவளை யாரும் வெறுப்பதில்லை. முன்பின் காணாத பழகாத நங்கை நல்லாளான கண்ணகியைத் தன் மகளாய்க் கொள்கிறாள் கவுந்தியடிகள்.
கல்விகேள்விகளில் உயர்ந்த ஞானச்செருக்கின் எந்த ஆதாரமும் இல்லாத இந்தத் தலைமைப் பெண்பாத்திரமான கண்ணகி மன்னனின் அவைக்கு வருகிறாள். ஆராயாத மன்னனே என்று அரைகூவல் விடுக்கிறாள். புறாவினது துன்பம் பொறாது தன் சதையையே அறுத்து அதன் துன்பம் துடைத்தவன் சிபிச்சக்ரவர்த்தி. தாய்ப்பசுவின் கண்ணீரைத் தன்மேல் கொண்டு ஒரே மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான் மனு நீதிச்சோழன் என்று இந்தப் பின்புலத்திலிருந்து தோன்றிய செங்கோலாட்சியிலிருந்து வழுவாத மன்னவன் எம் மன்னன் என்று சோழர்களின் செங்கோலாட்சி கொண்டு ஆட்சி நிர்வாகத்தை எப்படி செம்மைப்படுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்திப் பாண்டியனின் குற்றத்தை நிறுவுகிறாள். கண்ணகிக்கு ஏற்பட்ட பெருந்துன்பத்தைத் தட்டிக்கேட்க ஊரார் யாரும் இல்லாத நிலையில் தன்னந்தனியே போராடும் சிந்தை கண்ணகிக்குள் நிகழ்ந்ததெப்படி? குற்றமே செய்யாத கணவனைத் தண்டித்த மன்னனின் மீதும் மக்களின் மீதும் இவ்வளவு பெரிய கோபாவேசம் வரும் நிலை சாதாரணப் பெண்ணுக்குள் நிகழுமா? நிகழ்ந்ததால்தான் அப்பெண்ணைக் கடவுளாக்கிக் கும்பிடுகின்ற மனநிலை தமிழ்ச்சமுதாயத்திற்குத் தோன்றியிருக்கிறது. அவளைக் கற்பில் சிறந்தாள் என்று தமிழுலகம் கொண்டாடி மகிழ்ந்தது.
தமிழ்ச்சமூக மரபுக்குக் காரணமான இலக்கியப் பேராற்றலை விளைவிக்க முடிந்திருக்கிறது.
சங்க இலக்கியத்தில் அன்னிமிஞிலி என்ற மன்னனின் மகள் தன் தந்தையின் கண்ணைப் பறித்தவர்களைக் குறும்பியன், திதியன் என்பவர்களின் துணை கொண்டு அவர்களைப் பழிவாங்கித் தன் சினம் தணிந்தாள் என்ற செய்தி வருகிறது (அகம் -196,262). மன்னனின் மகள் என்பதால் அவள் செய்கை நமக்கு மிகப்பெரிய வியப்பைத் தரவில்லை. ஆனால், எந்தப் பின்புலமும் இல்லாத கண்ணகியின் இந்தச் செயலுக்கு அசிரியரே காரணம் என்பது நமக்குப் புலனாகும். இக்கருத்தை வலியுறுத்திய ம.ரா.போ குருசாமி
1. இளங்கோவடிகள் கண்ணகி கதையைக் கூறுவதை நோக்கமாகக் கொண்டதோடு கண்ணகி வழிபாட்டையும் அறிமுகப்படுத்தி நிலை நாட்டிப் பரப்பவும் விரும்பினார். முதலிரு காண்டத்தில் கதையும், வஞ்சிக்காண்டத்தில் பத்தினி வழிபாடும் இடம் பெறுகின்றன.
2. தமிழகத்தின் மூன்று பகுதிகளிலும் நடந்து தன் திருவடிகளால் மண்ணை இணைத்த பெருமாட்டியின் கதையைச் சொல்லும் போதே, தமிழினத்தில் மனத்தை இணைக்கும் ஒற்றுமையையும் வற்புறுத்த நினைத்தார் இளங்கோவடிகள், ஆதலால் கண்ணகி கதையைக் கருவாகக் கொண்டு ஒற்றுமைக் காவியத்துக்கு உரிய உருவம் சமைத்தார். (சிலம்பு வழிச் சிந்தனை ம.ரா.போ.குருசாமி. பக்.118)
மணிமேகலையில் மகனை இழந்த இராசமாதேவிக்கு அறிவுறுத்தும் விதமாக மணிமேகலை கூறும் விளக்கம் வினையின் பாற்பட்டது. வினையால் சூழும் துன்பத்தை அனுபவிப்பதே வாழ்க்கை என்று அறிவுறுத்துகிறாள் . இந்த ஜென்மத்தில் ஏற்படுகிற பாவவினைகள் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அதற்கேற்ற வகையிலேதான் உயிர்கள் வாழ்க்கை அனுபவத்தைப் பெறுகிறது என்ற கோட்பாடுகளைக் கொண்ட ஒரே காலகட்டத்தில் தோன்றிய இருவேறுபட்ட இலக்கியங்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட முரண்பட்ட நிகழ்வுகள் ஆசிரியரின் வெளிப்பாடாகத்தான் இருக்கமுடியும். தன் கணவன் இறந்தது வினைப்பயனால்தான் என்பதை உணரமுடியாத பெண்மையின் கோபம் மதுரையையும் மன்னனையும் தீண்டுகிறது. மணிமேகலையை விரும்பிய உதயகுமாரன் கொலையுண்டு இறந்தான். காரணமானவள் மணிமேகலை என்று எண்ணிய இராசமாதேவி கோபம் கொண்டு அவளை அழிக்கப் பல வியூகம் வகுக்கிறாள். எதுவும் பயன்படாத நிலையில் மணிமேகலை அறிவின் விழி திறக்க இராசமாதேவியிடம் உடல் அழியும்! வாழ்கின்ற தகுதி உயிர்க்கே உரியது. எல்லா உயிர்க்கும் அன்பு செய்வதே உயர்வாழ்க்கையாகும் என்கிறாள்.
இருகொலைகளுக்கும் வேறுமாதிரியான காரணங்கள்
கோவலன் இறக்கிறான் குற்றமற்றவன் என்பதால் கோபம் கொள்கிறாள் கண்ணகி. அவன் மரணம் நியாமற்றது என வாதாடி வாசகர்களைக் கவர்கிறாள். அதுவே உதயகுமரன் இறக்கிறான் வினையே காரணம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உரைத்து அவன் மரணம் நியாயமானது என்று வாதிடுகிறாள் மணிமேகலைத் தலைவி. இந்த முரண்பட்ட தீர்வுகளெல்லாம் ஆசிரியரின் எண்ணமேயொழிய கதைமாந்தர்களின் செயலாகாது. கதைமாந்தர் செய்கைகளில் ஆசிரியரின் உணர்வுகளே வெளிப்படுகிறது.
“உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை
எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்” (மணிமேகலை, சிறைவிடு காதை (73-79))
ஏன் இச்செய்தி மணிமேகலையின் தாயான கண்ணகிக்கு எட்டவில்லை. கண்ணகி காவியம் புரட்சிக்காகப் படைக்கப்பட்டது. இங்கே ஆசிரியரின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதற்காக மட்டுமே தனக்கான சூழலை கதைமாந்தர்கள் வழி புனைந்துரைக்கிறார்.
முடிவுரை
இலக்கியத்துக்கு ஒரு மொழியின் காலப்பிரளயங்களையும் தாண்டிச் சில பண்பாடுகளை விளங்க வைக்கின்ற கடமை உண்டு. அவ்வாறு விளங்க வைக்கமுடியாத இலக்கியம் மனித மனங்களில் நிலைப்பதில்லை. வாழ்க்கையின் எண்ணவோட்டங்களை வெறும் சொற்றொடர்களால் மட்டுமே நிரப்பாமல், தேவைகளுக்கான புரட்சிகரமான மாற்றங்களையும் ஒரு இலக்கியம் விளைவிக்கும் போதுதான் அது வெற்றி பெறுகிறது. இளங்கோவடிகள் கண்ணகியின் வாழ்க்கைப் பின்புலத்தைக் கதையாக்கிச் சமுதாய விழிப்புணர்வுக்குத் தேவையான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியதால்தான் இன்றும் சிலப்பதிகாரம் கற்றோர் நெஞ்சைக் கரைக்கிறது.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
1. தொ. மு. சி. ரகு நாதன், இளங்கோவடிகள் யார்?, தமிழர் பதிப்பகம்
2. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், ந . மு வேங்கடசாமி நாட்டார் உரை
3. சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, ந .மு வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை உரை
4. ம. ரா போ குருசாமி, சிலம்பு வழிச் சிந்தனை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.