சூடாமணி நிகண்டினில் பின் வரும் செய்திகள் இடம் பெறுகின்றன அவை:
மறைந்து தோன்றும் கோள்கள் பத்து. இக்கோள்கள் பத்தினை சூரியன், இந்து, சந்திரன், இராகு கேது, பரிவேடம் - சூரியப் பரிவேடம் (சூரியனைச் சுற்றி வட்டமிடுதல்), சந்திரப்பரிவேடம் - (சந்திரனைச் சுற்றி வட்டமிடுதல்) நெடுகை எனப் பெறும் வால் நட்சத்திரம் ஏழு. வால் நட்சத்திரம் தோன்றுதல் தீய அறிகுறி என்பர், பெருந்தூமம் - புகை தோன்றுவது, (தூமகேது), எதிர்ந்தவில் - கிழக்கில் தோன்றும் வில், மேற்கில் தோன்றும் வில் (இந்திரவில்) என்பன. இவற்றை,
“பரிதியிந்திரண்டு சீறும்பைநாகக் கோளிரண்டோ
டிருசுடர் வளைந்து சூழும் பரிவேட நெடுகவீண்டுப்
பெருகிய வான்மீன் வானிற் பெருந்தூமமெதிர்ந்த வில்லும்
கருதுமிவ் வெல்லாம் பேசிற்கரந்துறை கோள்களாமே”
(சூடாமணி நிகண்டு மூலமும் உரையும், 12. பல் பெயர்க் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி, செய்யுள் எண், 110) என்ற பாடலால் அறிய முடிகிறது.
சாதக அலங்காரம் தூமாதி ஐவர் குறித்து பின்வரும் செய்திகளைத் தெரிவிக்கின்றது.
1. தூமன்
2. புகை சமூகத்தை ஒட்டி வால் நட்சத்திரமாகக் காணப்படுவான்
3. வியதீபாதன் கொள்ளிக்கட்டை நெருப்பைப் போல் காணப்படுவான்
4. பரிவேடன் சூரிய சந்திரர் பிம்ப அந்தர்க்கதனாய் அவர்கள் உதிக்கும் போது அவர்கள் மண்டலத்தைச் சுற்றி பல வித வர்ணங்களுடன் வட்ட வடிவாகக் காணப்படுவான்.
5. இந்திரதனுசு பல வித வர்ணங்களுடன் அந்தியில் கிழக்கிலும், அதிகாலையில் மேற்கிலும் வில்லைப் போல் உலகப் பிரசித்தமாகக் காணப்படுவான். இந்த உபக்கிரகங்கள் விகார வடிவமும், சூரிய கட்சியில் உண்டாகி உலகத்திற்குத் தீமையும், ஜாதகம் - ஆரூடம் - முகூர்த்தங்களில் எந்தப் பாவகத்தில் இருக்கிறார்களோ அந்தப் பாவகத்திற்குக் கெடுதியைச் செய்பவர்களுமாவர். இவர்கள் ஸ்புடராசியாதிகளை நீக்கிப் பாகாதிகளில் சூரியாதி கிரணங்களுடன் சம பாகத்திலாவது, பிருஷ்ட (பின்) பாகையிலாவது இருந்தால் கெட்ட பலன்களையும், முக (மேல்) பாகைகளில் இருந்தால் சம பலன்களையும் தருவார்கள்.
சாதக அலங்காரம் எனும் நூல் தூமாதி பஞ்சகிரகங்கள் குறித்து, பிரகாசம் இல்லாதவர்களாய் மேற்கு, திக்கு கனமுடையவர்களாய் சஞ்சரிப்பார்கள். சில காலம் சிறிது தோற்றப்படின் அக்காலம் உலகத்திற்கு மிகத் துன்பத்தைத் தரும் காலமாகும்.
தூமன் புகைக் கூட்டத்தை ஒத்து வால் நட்சத்திரம் போல் காணப்படுவான். வியதீபாதன் கொள்ளிக்கட்டை நெருப்பைப் போல் காணப்படுவான். பரிவேடன் சூரிய சந்திரர்களைச் சுற்றிக் காணப்படும் வட்ட வடிவினன் ஆவான்.
உலகத்திற்கு பிரத்தியட்சமாய் காணப்படுவதே தேவேந்திரன் வில் என்னும் இந்திர தனுசு ஆகும். இது தோன்றின் உலகத்திற்கு உபத்திரம் உண்டாகும்.
இவற்றால் உலகுக்கு உண்டாகும் தீமையை சோதிட கலாநிதி முதல் தொகுதியில் பரக்கக் காணலாம்.
“ பரிவேடம் தனக்கு உச்சம் மிதுனமே அகும்
பகர்தூம னுக்குஉச்சம் சிங்கம் எனல் ஆகும்
உரியஇந்த்ர தனுசுஉச்சம் தனுசே ஆகும்
உற்ற நுட்பம் தனக்குஉச்சம் கும்பம்எனல் ஆகும்”
என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது.
(நடராசர், சா.அ.,ப -120.)
வெள்ளி விழா அகராதி, பஞ்சார்க்கம் - ஐந்தருக்கம், அவை இந்திர வில், கேது, தூமம், பரிவேடம், விதி பாதம் என்றும், தமிழ்மொழி அகராதி, மழைக்குறி மூலங்கள் குறித்து, மழை பெய்வதை அறியும் குறிக்கு ஆதாரங்கள், அது அதிவெப்பம், இடி, காற்று, குளிர், மழைக்கால், மின்னல், மேகம், பரிவேடம், வானவில் என்பனவாகும். பரசுகரியன் - பரிவேடம். (மே,ப.941) பரிதி - சூரியன், பரிவேடம். பரிவேசம், பரிவேஷம் - சந்திர, சூரியரைச் சூழத் தோன்றும் வட்டம். பரிவேடணம் - சூழுதல். பரிவேடம் - பரிவேசம். (மே, ப.961) கோட்டை - பரிவேடம். த. மொ. அகராதி பரிவேசம், பரிவேடம் - சந்திர சூரியரைச் சூழத் தோன்றும் வட்டம். ஜோ. க. பொ. வி. அகராதி கரந்துறை கோள் - காணாக் கிரகம். தூமாதி கிரகங்கள் - உபக்கிரகங்கள் ஐந்து அவை தூமன், விதிபாதன், பரிவேடம், இந்திர தனுசு, தூம கேது. குளிகன் - கரந்துறை கோட்களில் ஒன்று. 1. தூமன் - உபக்கிரகங்கள் ஐந்தினில் ஒன்று. 2. தூம கேது - அக்கினி, கேது, கொடுமை, வால் நட்சத்திரம், விண் வீழ் வெள்ளி. 3. பரிவேசம், பரிவேடம் - சந்திர சூரியரைச் சூழத் தோன்றும் வட்டம். ஊர், ஊர்கோள், ஊர் கோள்வட்டம் - பரிவேடம். சூரியப் பிரபை - பரிவேடம். வட்டம் - பரிவேடம்.
பரிவேடம் : பரமசிவன் பார்வதிக்கு உபதேசித்த மழைக்குறி சாஸ்திரம் கூறும் செய்திகள்:
கிராணப் பரிவேடம்
வியாழனானவன் அதிசாரத்தில் இருக்கும் போது சனியானவன் வக்கிரகதியிலிருந்தால் அக்காலத்தில் பல விதமான உணவுப் பொருளதிகமாயிருக்கும். சூரியனையாவது, சந்திரனையாவது கிராணம் பிடிக்கும் சமயத்தில் பரிவேடம் உண்டாகில் மனிதர்கள் நாலில் மூன்று பங்கு சுகம் பெற்று இருப்பார்கள்.
' உண்டாம் பொன்னனதிசாரத் துற்றேயிருக்கவக்கிரத்திற்
பண்டாங் காரி வந்திடவே பலவா ருணவு மதிகமதாய்க்
கண்டாங் குலவுங் கதிர்மதியைக் கவிந்தே யரவந் தொடும்போது
துண்டாம் பரிவே டந்தோன்றச் சுகமா மனுக்கள் நாலிலொன்றே”
என்றும் குறிப்பிடுகின்றது.
ஒரு நாள் பகல் - ஒரு நாள் இரவு - முதற்சாமம் - பரிவேடம் தோன்றுதல்
ஒருநாட் பகல் முதற் சாமத்தில் சூரியனையும் இரவு முதற் சாமத்தில் சந்திரனையும் பரிவேடம் சூழுமாகில் கலகமாகும். இரண்டாஞ் சாமத்தில் பரிவேடம் இட்டால் மழை அதிகமாகப் பெய்யும். மூன்றாஞ் சாமத்தில் பரிவேடம் உண்டானால் தானியங்கள் அதிகமாக விளையும். நாலாஞ் சாமத்தில் பரிவேடம் தோன்றில் மேலாம் பயிருங் கீழாம்.
'ஒன்றாஞ்சாமங் கதிர்மதியை யோங்கும் பரிவே டஞ்சூழக்
குன்றாக் கலக மிருசாமங் குலவு முதக மதிகமதாம்
நன்றா மூன்றாஞ் சாமமெனில் நாட்டிற் பயிரு மிகச்செழிக்கும்
அன்றாஞ் சாமம் நான்காகி லடுக்குஞ்சேத மெனச் சொல்லே”
என்றும் குறிப்பிடுகின்றது.
வியாழனைப் பரிவேடமிடல், செவ்வாயைப் பரிவேடமிடல், புதனைப் பரிவேடமிடல், சுக்கிரனைப் பரிவேடமிடல்
வியாழனைப் பரிவேடமிடல்
வியாழனைச் சுற்றி பரிவேடமிட்டால் பிராமணர்களுக்குப் பீடையாம்.
செவ்வாயைப் பரிவேடமிடல்
செவ்வாயைச் சூழ்ந்து பரிவேடமிட்டால் மனிதர்கள் அநேக விதமான சேட்டைகளைச் செய்வார்கள்.
புதனைப் பரிவேடமிடல்
புதனைப் பரிவேடம் சூழின் (செய்யில்) நிலத்தில் விதை விதைக்க முதலில்லாமற் செய்யும்.
சுக்கிரனைப் பரிவேடமிடல்
சுக்கிரனைப் பரிவேடம் வளையுமாகில் புடவியில் மடவாருக்கு ஆகாவாம். பெண்களுக்கு ஆகாது.
'சொல்லு மரசன் றனைவேடன் சூழப் பீடை யந்தணர்க்காம்
செல்லுங் குசனைக் கவித்திடிலோ சேட்டை யதிகஞ் செய்திடுவார்
புல்லுங் கன்னிக் குடையோனைப் பொருந்த விதைக்கு முதலில்லை
வெல்லுங் கவியைக் கலந்திருக்க மேவும் பெண்கட் காகாதே”
என்றும் குறிப்பிடுகின்றது.
சனியைப் பரிவேடமிடல், சூரியனுக்குச் சமீபமாகப் பரிவேடம் தோன்றல்; பரிவேடத்தின் நிறங்களின் தன்மைகள்
சனியைப் பரிவேடமிடல்
சனியைப் பரிவேடங் கவிக்கில் வேந்தர் தமது நாட்டை விட்டு விலகி நிற்பர்.
சூரியனுக்குச் சமீபமாகப் பரிவேடம் தோன்றல்
சூரியனுக்குச் சமீபமாக பரிவேடல் தோன்றில் மனிதர்கள் இன்புறாமல் துன்புறுவார்கள்.
'ஆகா மந்தன் றனைக்கவிக்கி லரசர் பதியை விட்டிடுவர்
வாகாமிரவிக் கடுத்திருக்கில் மாந்தர்க் கதிகவிபத் துண்டாம்
பாகாம் புகையைப் போலிருக்கிற் பலவாம் பொருளுஞ் சேதமுறும்
போகாக் கறுப்பு வருணமெனிற் புவியிற் பஞ்ச முற்றிடுமே”
என்றும் குறிப்பிடுகின்றது. (மழைக்குறி சாஸ்திரம், செ.எண்.27-30, பக்.10-11.)
பரிவேடம் தோன்றும் நிறத்தின் தன்மைகள்
1. அப்பரிவேடமானது புகை நிறம் போல இருந்தால் பற் பல விதமான பொருட்களும் நட்டமாகும்.
2. அஃதன்றி கறுப்பு நிறமாக இருந்தால் பாரில் பஞ்சம் உண்டாம்.
3. அப்பரிவேடமானது இரத்த வருணமாயிருந்தால் உலகத்தால் வேந்தருக்கு துன்பம் (வாதனை) உண்டாகும்.
“உற்ற விரத்த வருணமெனி லுலகி லரசர்க்காகாவாம்”
என்றும் குறிப்பிடுகின்றது. (மே.செ.எ.31:1, ப.11.)
கூட்டுக் கிரகங்கள்: சந்திரன், செவ்வாய் (அ) சந்திரன், சனி
சந்திரனைச் செவ்வாய் அல்லது சனி கூடியிருக்குங் காலத்தில் பரிவேடம் போடல்
சந்திரனை, செவ்வாயாவது அல்லது சனியாவது கூடியிருக்குங் காலத்தில், சந் + சனி (அ) சந் + செவ் வானில் பரிவேடம் போடுமாகில் அக்கினி தாபசுரம் உண்டாகி அதனால் பூமியிலுள்ள மனிதர்களில் நான்கிலொரு பங்கு சேதத்தையும், மற்றவர்கள் சுகத்தையும் அடைவார்கள். (மே,ப.13.)
'ஆகுஞ் சசியைச் சேயேனு மலது காரி கூடுங்கால்
வாகு வானிற் பரிவேடம் வருகு மாகி லிப்புவியில்
நோகும் வன்னி தாபசுரநோயால் மாந்தர் மெலிவடைந்து
சாகும் நாலில் முப்பங்கு தங்குமிங்க ணெனச் சொல்லே”
என்றும் குறிப்பிடுகின்றது. (மே.செ.எ.34, ப.12.)
சந்திரப் பரிவேடம்
இது குறித்து விதானமாலை இரவிலே சந்திரனை வளைக்கும் பரிவேடத்துக்குள் கிரகங்கள் நிற்கினும் அப்பரிவேடம் மிகச் சிவந்து பெரிய வட்டமாயிடினும் பெருமழையாம் என்பதனை,
“ஒரு திக்கிலே பற்றியெப்போதுந் தூமமிடிலந்நாடுங்
கருதப்படும் பதியுங்கெடுங்கங்குலெழுமதியைப்
பொருதுற்றவட்டத்துட் கோளுறினும் பொலியச் சிவந்து
பெருவட்டமாயிடினும் பெரும்பான்மை மழை பெய்யுமே”
விதானமாலை செய்யுள் மெய்ப்பிக்கின்றதால் அறியலாம்.
சந்திரனை வளைத்து இரண்டு பரிவேடம்; அமையின் அரசன் நாட்டைக் கோவிப்பன். 3, 4 பரிவேடமிடில் அரசர்க்குத் துன்பமாம். பரிவேடத்துட் செவ்வாயுறில் போராம். மழையில்லை. அப்பரிவேடத்துட் சனியுறில் கலகமாம் என்பதனை,
“வட்டமிரண்டிடின் மன்னவனாட்டை முனியுமென்க
வட்டமொரு மூன்று நான் காகின் மன்னவற்கே துயராம்
வட்டமதுள்ளே குசனுறிற்போரென் மழையிலையாம்
வட்டமதுட் சனியேற் கலகம் மென் மதியிடத்தே”
என்று விதானமாலை செய்யுள் மெய்ப்பிக்கின்றதால் அறியலாம்.
சனி பரிவேடம்
சனி பரிவேடம் குறித்து சனியை வளைத்துப் போடும் பரிவேடத்துக்குட் சந்திரன் கூடுகினேயாம். அப்பரிவேடத்துக்குட் சுக்கிரன் கூடின் மழை இல்லையாம். வியாழன் கூடுகிற் பெருமழையாம். புதன் கூடுகினன்றாம். பரிவேடிக்கும் நாள் முதல் ஏழு நாளைக்குள் மழை இல்லையாயின் (பிரசைகள் நாசமாம்) அழிவாம் என்பதனை,
“சனிதானுற வட்டஞ்சந்திரன் சாரிற்பிணி புகரேற்
பனியே மழையில்லைப் பார்ப்பானுறுகிற் பெருமழையா
மினிதே புதனுறிலின்னாண் முதலேழு நாளிடத்து
நனிசேர் மழையில்லையே நாசமாமென்பர் நல்லுயிரே”
என்று விதானமாலை செய்யுள் மெய்ப்பிக்கின்றது.
சூரியப் பரிவேடம்
சூரியனை உதய காலத்தும், அத்தமன காலத்தும் பரிவேடிக்கிற் போராம் முன்னேரம் ஆகில் அழிவாம் மத்தியானமாகில் அதிக மழையாம். பின்னேரமாகில் பிரசைகளுக்கு இலாபமாம். கிரகண காலத்தில் ஆதித்தியனைப் பரிவேடிக்கின் நன்மையாம் என்பதனை,
“உதயத்து மத்தமத்தும் பரிவேடமிடினும் போராஞ்
சிதைவிக்குமுன் பகல் வானினைச் செய்யநட்டுச்சியினி
லதிவிட்டி பின் பகலாக்க முயிரி னுக்காங் கரவு
பதியுற்ற வெங்கதிரைப் பரிவேடிக்கினன் றென்பரே”
என விதானமாலை செய்யுள் மெய்ப்பிக்கின்றதால் அறியலாம்.
சூரியனுக்கு நாற் திசையில் பரிவேடம் தோன்றலின் பலன்
சூரியனுக்கு வடக்குப் பரிவேடிக்கின் மழையாம். தெற்காகின் காற்று மிகுதியாம். மேற்காகில் அரசர்க்குக் கேடாம். கிழக்காகின் நோயாம். இரு பக்கத்தும் மழையில்லை. அத்தமன காலத்தும் விடியற் காலத்துமாயின் மழையாம். உச்சிக்காலமாயின் இராச கலகமாம் என்பதனை,
“வடக்கு மழை தெற்குவாயு மிகு மன்னர் கேடுமேல்கீ
ழிடிற்பிணி காரிலையாங் கிருபக்கத்துமந்திபடு
மிடத்தின் மலரெழும் போதின் மழையுச்சியினரசர்
படப்போர் மலைவர் பதிசூரியன் செயல்பார் குறித்தே”
எனும் விதானமலை செய்யுள் மெய்ப்பிக்கின்றது. (செ.எண். 12 -16, பக்.161 -162)
பரிவேடக்குறி - பரிவேடக்குறியின் குறி
ஆடி மாதம் பூரணையில் முதற் பத்து நாழிகையில் சந்திரனைப் பரிவேடமிட்டால், ஐப்பசியிலும், இரண்டாம் பத்திலிட்டால் கார்த்திகையிலும், மூன்றாம் பத்திலிட்டால் மார்கழியிலும் மழை உண்டு. இரவு முழுவதும் இட்டிருந்தால் இந்த மூன்று மாதங்களிலும் மழை உண்டு. சந்திரன், குரு, சுக்கிரருடனே பரிவேடம் இட்டால் நல்ல மழை உண்டு. செவ்வாய், சனியுடன் பரிவேடம் இடில் மழை இல்லை. கிரகண காலத்தில் பரிவேடம் உண்டானால் அரசர்களுக்கு ஆகாது என்றும், பரிவேடக்குறியின் குறி குறித்து, பூரம், உரோகிணி, உத்திரம், அத்தம், சித்திரை, சோதி, விசாகம் ஆகிய இந்நாட்களில் மழை பெய்யும் போது வில்லிட்டால் 5, 6, 10, 20, 21 இந்நாட்களுக்குள் மழை பெய்யும். உத்தரம், பூரம், இரேவதி, திருவதிரை இந்நாட்களிலே சந்திராதித்தர்களைப் பரிவேடிக்கில் 7, 8, 9, 18 ஆகிய இந்நாட்களுக்குள் மழை பெய்யும் என்றும் (விதானமாலை) அபிதானசிந்தாமணி எனும் நூல் குறிப்பிடுகின்றது.
தமிழ்மொழி அகராதி, பரிவேடக்குறி - ஊர்க்கோள் மழைக் குறியில் ஒன்று. அது ஆடி மாதம் பூரணையின் முதல் பத்து நாழிகையில் சந்திரனைப் பரிவேடம் இட்டால், ஐப்பசி மாதத்தில் மழை உண்டு என்றும், இரண்டாம் பத்து நாழிகையில் பரிவேடம் இட்டால் கார்த்திகையில் மழை உண்டு என்றும், மூன்றாம் பத்து நாழிகையில் பரிவேடம் இட்டால் மார்கழியில் மழை உண்டு என்றும், இரவில் பரிவேடம் இட்டிருந்தால், இந்த மூன்று மாதங்களிலும் மழை உண்டு என்றும் சொல்லப்படும். சந்திரன், குரு, சுக்கிரன் இவர்களுடன் பரிவேடம் இட்டிருந்தால், நல்ல மழை உண்டு என்றும், செவ்வாய், சனி இவர்களுடன் பரிவேடம் இட்டிருந்தால் மழை இல்லை என்றும், கிரகண காலத்தில் பரிவேடம் உண்டானால் இராசாக்களுக்கு ஆகாது என்றும் சொல்லப்படும்.
ஜோதிடக் கலைச்சொல் பொருள் விளக்க அகராதி, பரிவேடக்குறி - ஊர்க்கோள் மழைக் குறியில் ஒன்று. அது ஆடி மாதம் பூரணையின் முதல் பத்து நாழிகையில் சந்திரனைப் பரிவேடம் இட்டால், ஐப்பசி மாதத்தில் மழை உண்டு என்றும், இரண்டாம் பத்து நாழிகையில் பரிவேடம் இட்டால் கார்த்திகையில் மழை உண்டு என்றும், மூன்றாம் பத்து நாழிகையில் பரிவேடம் இட்டால் மார்கழியில் மழை உண்டு என்றும், இரவில் பரிவேடம் இட்டிருந்தால், இந்த மூன்று மாதங்களிலும் மழை உண்டு என்றும் சொல்லப்படும். சந்திரன், குரு, சுக்கிரன் இவா;களுடன் பரிவேடம் இட்டிருந்தால், நல்ல மழை உண்டு என்றும், செவ்வாய், சனி இவர்களுடன் பரிவேடம் இட்டிருந்தால் மழை இல்லை என்றும், கிரகண காலத்தில் பரிவேடம் உண்டானால் இராசாக்களுக்கு ஆகாது என்றும் சொல்லப்படும்.
அனைத்திலும் அ.சி., த. மொ. அ., ஜோ. க. பொ. வி. அ., ஆகிய யாவற்றிலும் இதே செய்தியே குறிப்பிடப் பெற்றுள்ளது.
விற்குறி, பரிவேடக்குறி
விதானமாலை மூலமும் உரையும் எனும் நூல் இது குறித்து பூரம், உரோகணி, உத்திரம், அத்தம், சித்திரை, சோதி விசாகம் ஆகிய இந்நாட்களிலே மழை பெய்யும் பொழுது வில்லிட்டால் 5, 20, 10, 2, 6 ஆகிய இந்நாட்களுக்குள்ளே மழை பெய்யும். உத்திரம், பூரம், இரவேதி, திருவாதிரை ஆகிய இந்நாட்களிலே சந்திராதித்தியர்களைப் பரிவேடிக்கில் 8, 9, 18, 7 ஆகிய இந்நாட்களுக்குள்ளே மழை பெய்யும் என்பதனை,
“பூர முருளுத்திர முதலைந்தினும் போர்வில்லிடி
லாருமணி திசையஞ்சிருபான் பத்து மூவேழாறில்
சேரும் பரிவேட முத்திரம் பூரங்கலஞ் செங்கையில்
வாருமெட்டோரொன்ப தீரொன்ப தேழின் மழை வருமே”
எனும் விதானமாலை (செய்யுள் எண் 27, ப.172) மெய்ப்பிக்கின்றதால் அறியலாம்.
பரிவேடம், மேகங் கர்ச்சித்தல், காற்று உண்டாதல்
மழை நூல் மேலும் மார்கழி மாதம் பத்தாம் தேதி முதற்கொண்டு இருபத்தியேழாந் தேதி வரை பரிவேடம் போட்டாலும், அல்லது திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம் இந்தப் பதினான்கு நட்சத்திரங்கள் வரும் தினங்களில் மேகங்கர்ச்சித்தல், பரிவேடம், காற்று முதலியவை உண்டானால் அவ்வருடாந்தியம் வரை நல்ல மழை பெய்யும்.
'ஓங்குந் தனுவின் மதியதனி லுற்ற தசமாந் திகதிமுதற்
பாங்கா மிருபத் தேழுவரைப் பரிவே டந்தா னிட்டாலும்
சோங்காஞ் செங்கை முதலவுணன் றொடரும் வரைவே டங்காற்று
வாங்காக் குமுறு மாகிலந்த வருட மெல்லாம் பொழிந்திடுமே”
என்றும் இந்நூல் தெரிவிக்கின்றது.(மழை, செ.எ.92, ப.32.)
சூடாமணி உள்ளமுடையான் எனும் நூல் ஆதித்தன் உதய காலத்தில் பரிவேசிக்கில் வருஷம் (மழை) இல்லை. உச்சிக்காலத்தில் பரிவேசிக்கில் விளைவு உண்டாம். மத்தியான காலத்தில் பரிவேசிக்கில் அரசருக்கு அழிவு உண்டாம். மாலை மதியை பரிவேசிக்கில் அடுத்து மழை உண்டாம். வில்லாகில் அரசர் கீர்த்திக்கு அழிவாகும் என்றும்,
“சால அருக்கன் உதயத்தில் சாரில் வட்டம் தானழிவாம்
மேலை உச்சி விளைவுண்டாம் வெய்யோன் பாடி லரசழிவாம்
மாலை மதியைப் பரிவேடம் வளைக்கில் அடுக்க மழைபொழிதல்
கோல முலையாய்‚ படைவேந்தர்க் குடைசாய்ந் திடுதல் பிழைவருதல்”
என்றும் சான்று பகர்கின்றதால் அறியலாம்.
மேலும் சந்திரன், சுக்கிரன், பிரசாபதியுடனே பரிவேசிக்கில் வருஷம் (மழை) பெரிது ஏற்படும். வட்டம் சிறிதாகில் மழை தாழும், சந்திரனைச் சனி, செவ்வாயுடனே வளைக்கில் பசியும், நோயும் பெருக உண்டாம். கிரகணம் தீண்டும் பொழுது வளைக்கில் இராசாக்களுக்கு அழிவுண்டாம். விட்ட போது பரிவேசிக்கில் நாட்டுக் குடிக்கு அழிவுண்டாம் என்றும்,
“பிழையா மதியைப் பொன்வெள்ளி
யுடனே வளைக்கில் பெருமழையாம்
மழைதான் தாழ்க்கும் சிறிதாகில்
மதியைச் சனிசே யுடன் வளைக்கில்
பழிதான் பசிநோய் பலவுளவாம்
பாம்பு தீண்டும் பொழுதளவே
அழிவாம் அரசர் சாகாவிடில்
வளைக்கில் நாட்டுக் கழிவாமே”
என்றும் செய்யுள் குறிப்பிடுகின்றது. (செ.எ, ப.271 -272, ப.115)
வானியல் தீ நிமித்தங்கள் இது குறித்து விதானமாலை மூலமும் உரையும் எனும் நூல் தெரிவிக்கும் செய்திகள்
கலித்துறைப் பாக்கள் இடம் பெற்றுள்ளன. உற்பாதப் படலம் எனும் பகுதியினில் இரவில் வில்லுண்டாதல், நட்சத்திரம் பகலில் தோன்றல், திக்கெங்கும் புகைதல், ஆதித்தியன் இரண்டாய்த் தோன்றல், உச்சிக் காலத்தில் கூகை உறுமுதல் ஆகிய இவை தீது என்பதனை விதானமாலை செய்யுள் சான்று பகர்கின்றது.
“வில்லிரவாகுதன் மேதினி கம்பித்தல் விண்ணதிர்த
லல்லிடைமீன்; விழலம்மீன் பகலுற லாசையெங்குஞ்
சொல்லிற் புகைந் திடல் சூரியநோக்கி ரண்டாயுதித்தல்
கொல்லியலாய் நண்பகற் கூகை பாடல் கொடி தென்பரே”
எனும் செய்யுள் மெய்ப்பிக்கின்றதால் அறியலாம்.
ஆதித்தியனை வளைத்துப் பரிவேடித்தல், சூறாவளி உண்டாதல், நாய், நரியழுதல், பட்சிகள் நிறம் (பேதித்தல் வேறுபாடு வேறுபடத் தோன்றுதல், பெரிய ஆலமரம் பால் வற்றல் ஆகிய இவை உண்டாயின் அரசருக்குத் தீது என்பதனை,
“சூரியனைப் பரிவேடமிடல் சூறையாடல் சுவா
வோரியரற்றல் புட்டன்னிறம் வேறுபடலுலகிற்
பாரியவான் மரம் வற்றலுண்டேலப் படிபுரக்கும்
பேரியன் மன்னவர்க்குப் பெருந்தீங்குண்டு பெய்வளையே”
என்று இச்செய்யுள் குறிப்பிடுகின்றதால் அறியலாம்.
தேவர்கள் சிரித்தல், சலித்தல், திரும்புதல், வேர்த்தல், இளைத்தல் இவை செய்யின் அரசருக்கு மிகவும் தீது, முகில் இரத்த மழை வருடிக்கின் அந்நாட்டுக்கும் அரசனுக்கும் தீது என்பதனை,
“தேவர் சிரித்தல் சலித்தல் திரும்புதல் வேர்ப்பிளைத்தல்
நாவிலுரைத்தனடுங்குதல் செய்திடினானிலத்திற்
காவலர் தங்கட்கிடர் பெரிதாங்கருவானு திரந்
தூவிடினாடுந் தொடுகழன் மன்னுந் துளங்குறுமே”
என்றும் குறிப்பிடுகின்றது.
உயர்ந்த கோயில் புகைந்தாலும், அக்கினி பற்றினாலும் மேலாய் வளர்ந்த மரம் காற்றின்றி விழுந்தாலும், அரசனுக்கும், உலகுங்குங் கேடாம். ஆந்தை கோயிலிற் புகினும், முட்டை இடினும் உலகம் கெடும் என்பதனை,
“சிகரத்த கோயில் புகைந்திடிற்றீ யெழிற்பேர் படைத்துக்
ககனத்துறு மரங்காற்றின்றி வீழ்ந்திடிற் காவலர்க்குஞ்
சகமத்தனைக்குந் தடுப்பருங் கேடாந்தை வாலயத்துப்
புகன்முட்டை யீடலுண்டேற்புவி பாளக்கும் புணர்முலையே”
இடல் என்றது ஈடலென விகாரமாயிற்று என்றும் குறிப்பிடுகின்றது. (செ.எண். 1-4, பக்.158 -159)
பரிவட்டம் பற்றிய பழமொழிகள் சூரியனைச் சுற்றி அகல் வட்டம் இருந்தால் பகல் மழை, அகல்வட்டம் பகல் மழை என்பனவும் இவற்றினைப் பறை சாற்றுகின்றன.
இவ்விதம் பரிவேடத்தின் பல்வேறுபட்ட தன்மைகளையும் அறிந்து பயன் கொள்வோமாக.
நவகோள்களைப் போற்றுவோம்!

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.