சங்க இலக்கியத்தில் ஆலி
முனைவர் தி. கல்பனாதேவி
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
ஆ. கோ. அ. கலைக்கல்லூரி, திண்டிவனம்.
முன்னுரை
திவாகரம் தெய்வப் பெயர்த் தொகுதி, தமிழ் மொழி அகராதி ஆலி குறித்து தரும் விளக்கம், ஆலங்கட்டியின் பெயர், ஆலி பொறுக்குதல், மாம்பிஞ்சு பொறுக்குதல் காட்சி, ஆலி - குளிர் மழை பெய்தல், இருப்பை மலர் தோற்றம் - பனிக்கட்டி போல் காட்சி அளித்தல், இருப்பை மலர் தோற்றம் - பனிக்கட்டி போல் காட்சி அளித்தல் - கரடிகள் உண்ணுதல், இரவம் பூக்கள் தோற்றம் - ஆலங்கட்டி போல் காட்சி அளித்தல், வெண் கடப்ப மலர்கள் தோற்றம் - இரண்டு உவமைகள் - பனிக்கட்டி போல் காட்சி அளித்தல், உழவரது வெண்ணெலின் விதை போல் காட்சி அளித்தல், ஆலங்கட்டியை ஒத்த முத்து ஆலிக்கு வடிவம் உருவம் - பனங்காயின் நீர் நிறைந்த நுங்காகிய கண் போல - பனிக்கட்டி மழை பெய்தல், ஆலியின் தட்ப மிகுதி, நிலம் குளிரல், ஆலி பெய்தல், இலவ மரத்தின் கொட்டைகள் - ஆலங்கட்டிப் போல பரவிக்கிடத்தல், கழங்கினை ஒத்த பனிக்கட்டி, கமுக மரக்காட்சி - வெள்ளிய பூக்கள் பரந்து, பலகறையை ஒத்த ஒள்ளிய நிறத்தை உடைய ஆலங்கட்டி போலக் காட்சி அளித்தல், ஆலங்கட்டி - பளிங்கினைச் சொரிவது போலப் பெய்தல், இடியுடன் கூடிய ஆலி, ஆலங்கட்டி பொழிதல், ஆலி நகுதல் ஆகியன பற்றி இங்கு காண்போம்.
திவாகரம் தெய்வப் பெயர்த் தொகுதி
திவாகரம் தெய்வப் பெயர்த் தொகுதி மழை, ஆலி பற்றி தருவனவற்றைக் காண்போம்.
மழையின் பெயர் - துவலை, பெயலை, துளி, மாரி, உறை, பெயல், ஆலி, உதகம், சிதறி, தூவல், சீகரம், தூறல், வருடம் ஆகும்
“துவலை, பெயலை, துளி, மாரி,
உறை, பெயல், ஆலி, உதகம், சிதறி,
தூவல், சீகரம், தூறல், வருடம்”
என்று குறிப்பிடுகின்றது. (திவாகரம் தெய்வப் பெயர்த் தொகுதி, ப.145, ப.55)
துளியின் பெயர் - உறை, துளி ஆகும்
“தளிபெய லாளி யுறைதுளி யாகும்.”
என்று குறிப்பிடுகின்றது. (திவாகரம் தெய்வப் பெயர்த் தொகுதி, ப.151, ப.57)
ஆலங்கட்டியின் பெயர்
ஆலி - ஆலாங்கட்டிப் பெயர் குறித்து ஆலி, ஆலாங்கட்டி ஆகும்.
“ஆனி சனோபலம் ஆலாங்கட்டி.”
என்றும் குறிப்பிடுகின்றது. (திவாகரம் தெய்வப் பெயர்த் தொகுதி, ப.152, ப.58)
தமிழ் மொழி அகராதி இது குறித்து ஆலம் - நீர், மழை, மஞ்சளுஞ் சுண்ணாம்பும் கலந்த நீர் என்றும், ஆலி - ஆலாங்கட்டி, காற்று, மழைத்துளி என்றும் குறிப்பிடுகின்றது. (தமிழ் மொழி அகராதி, பக். 194 - 195)
ஆலி பொறுக்குதல் : மாம்பிஞ்சு பொறுக்குதல் காட்சி
ஐங்குறுநூறு - குறிஞ்சி நிலப் பாடலில் வடி - மாம்பிஞ்சு. இதனை வடு என்றும் கூறுவர். நறிய வடுக்களை உடைய மாமரத்தினின்றும், தாமே வெம்பிக் காம்பற்று உதிர்ந்த ஈரிய குளிர்ந்த பெரிய வடுக்களை அப்பாலை நிலத்திலே உறைகின்ற குன்றக் குறவர்கள் மழைத்துளியோடே வீழா நின்ற ஆலிகளைப் பொறுக்குமாறு பொறுக்கி ஓரிடத்தே எடுத்து வைத்ததை இப்பகுதி சான்று பகர்கின்றது.
“வீரந்தண் பெருவடுப் பாலையிற் குறவ
ருறைவீ ழாலியிற் றொகுக்குஞ் சாரன்”
என்பதனால் உறை - மழைத்துளி, உறையோடு வீழும் ஆலி, ஆலி - ஆலங்கட்டி, மழைத்துளியோடு விழும் பனிக்கட்டியை ஆலங்கட்டி என்று கூறுவர். குளிர் மிக்க நாட்டில் ஆலி மழை மிகப் பெய்யும். நம் தமிழ் நாட்டிலும் இவ்வாலங்கட்டி மழைப் பொழிதல் இருந்ததையும், இதனைப் பொறுக்கியதையும் நாம் அறியலாம். (பொ.வே.சோ. உரை, ஐங்குறுநூறு, பா.213: 2 - 3, ப.314)
ஆலி - குளிர் மழை பெய்தல்
முல்லை நிலப் பாடலில் நம் தலைவன் சென்ற வழியில் ஆலியாகிய குளிர்ந்த மழை பெய்த பகுதி என்பதனை,
“யாலித் தண்மழை தலைஇய
வாலிய மலர்ந்த முல்லையு முடைத்தே”
இவ்வடிகள் சான்று பகர்கின்றது. (பொ.வே.சோ. உரை, ஐங்குறுநூறு, பா.437: 2 - 3, ப.692)
இருப்பை மலர் தோற்றம் - பனிக்கட்டி போல் காட்சி அளித்தல்
அகநானுநூறு - களிற்றியானை நிரை பாலை நிலப் பாடலில் குப்பி நுனையை ஒப்ப அரும்பிய இருப்பையது செப்புத் தகட்டை ஒத்த சிவந்த தளிர்களிடைதோறும் நெய்யை ஒத்த இனிய துளையுள்ள பூக்கள் காம்பு கழன்று, காம்பினை நீக்கிக் காணத் தக்க துளையினை உடையனவாய் வானின்று விழும் பனிக்கட்டி போலக் காற்றால் சிதறுண்டு கிடந்ததை,
“உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல்
பாலிவானிற் காலொடு பாறித்”
இவ்வடிகள் சுட்டுகின்றது. (ந. மு. வேங்கடசாமி, அகம் - களிற். பா. 9: 6 - 7, ப.34)
இருப்பை மலர் தோற்றம் - பனிக்கட்டி போல் காட்சி அளித்தல் - கரடிகள் உண்ணுதல்
அகம் - களிற் பாடலில், பொரிந்த அடியினையும், கொட்டைகளையும் உடைய அரையினையும் உடைய இருப்பையினது குவிந்த குலையினின்றும், கழன்ற, பனிக்கட்டி போலும் உட்டுளையினையும் உடைய திரண்ட பூக்களை உடைய வழிச்செல்லும் புதியர் அந்நீண்ட நெறியிடத்தே அஞ்சிப் போக்கினைத் தவிர, ஈன்ற கரடிகளின் பெருங் கூட்டம் கவர்ந்து உண்ணுகின்ற காட்சியினை,
“… … … … … பொரிகால்
பொகுட்டரை யிருப்பைக் குவிகலைக் கழன்ற
ஆலி யொப்பின் தூம்புடைத்திரள்வீ”
இவ்வரிகள் சுட்டுகின்றன. (நச்சினார்க்கினியர் உரை, கலித்தொகை, 95:5 - 7, ப.243)
இரவம்பூக்கள் தோற்றம் - ஆலங்கட்டி போல் காட்சி அளித்தல்
அகநானுநூறு - மணிமிடைபவளம் - பாலை நிலப்பாடலில் இர - ஒரு மரம். இது இரவு, இரவம் எனவும் வழங்கும். இரவம் வித்தினை ஒக்கும் அரும்பு முதிர்ந்த ஈங்கையினது ஆலங்கட்டி போலும் வெள்ளிய பூக்கள் தாவ,
“இரங்காழ் அன்ன அரும்புமுதிர் ஈங்கை
ஆலி அன்ன வால்வீ தாஅய்
வைவால் ஓதி மையணல் ஏய்ப்பத்”
எனும் அடிகள் சான்று பகர்கின்றது. (ந. மு. வேங்கடசாமி, அகம் - மணி, பா. 125: 3 - 5, ப.15)
வெண்கடப்ப மலர்கள் தோற்றம் - இரண்டு உவமைகள் - பனிக்கட்டி போல் காட்சி அளித்தல், உழவரது வெண்ணெலின் விதை போல் காட்சி அளித்தல்
அகநானுநூறு - மணிமிடைபவளம் - பாலை நிலப்பாடலில் வெண் கடப்ப மரத்தைப் பறையினை ஒத்த வட்டமாகிய பரந்த அடியினையும் உடைய, வலிய தாளினையும், திண்ணிய நிலை வாய்ந்த கோட்டினையும் உடைய வலிய களிறு உரிஞ்சுதொறும் வெள்ளிய சுண்ணாம்பு பரந்திருந்தால் ஒத்த, அதன் பலவாய பூக்கள், தண்ணிய மழையொடு விழும் பனிக்கட்டி போல உதிர்ந்து பரவி, உழவரது வெண்ணெலின் விதை போலப் பாறையின் மீது காய்ந்து கிடக்கும் என்பதனை,
“திண்ணிய மருப்பின் வயக்களிறு உரிஞதொறும்
தண்மழை ஆலியில் தாஅய் உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்”
இப்பாடலடிகள் சான்று பகர்கின்றது. (ந. மு. வேங்கடசாமி, அகம் - மணி, பா. 211: 4 - 6, ப.214)
ஆலங்கட்டியை ஒத்த முத்து
குறிஞ்சி நிலப் பாடலில் கானவன் யானைக்கோடும், பொன்னும், முத்தும், சந்தனமும், வேங்கை மலரும் பெற்று வருவன் என்று மலையின் சிறப்பினைக் கூறும் இடத்து, கூரிய முனையையுடைய வெள்ளிய யானைக் கொம்பு ஒடிதலால் உதிர்ந்த, தெளிந்த நீர்மையை உடைய ஆலங்கட்டியை ஒக்கும் முத்துக்களுடன் கூட்டி என்று அழகிய முத்திற்கு உவமை காட்டப்பெற்றுள்ளது.
“வைந்நுதி வான்மருப் பொடிய உக்க
தெண்ணீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு”
இவ்வடிகள் இடம் பெற்றுள்ளன. (ந. மு. வேங்கடசாமி, அகம் - மணி, பா. 282: 6 - 8, ப.382)
ஆலிக்கு வடிவம் உருவம் - பனங்காயின் நீர் நிறைந்த நுங்காகிய கண் போல - பனிக்கட்டி மழை பெய்தல்
அகநானுநூறு - நித்திலக் கோவை: ஆலி: முல்லை நிலப்பாடலில் விடியற் காலைப் பொழுது அழகுடன் சித்தரிக்கப் பெற்றுள்ளது. பெரிய வானில் எழுந்த தொகுதியாகிய கரிய மேகம், பனங்காயின் நீர் நிறைந்த நுங்காகிய கண் சிதறி விழுந்தவை போலும், தெய்வம் நடுக்கஞ் செய்தல் போன்ற குளிர்ச்சி பொருந்திய பனிக்கட்டியோடு, பருத்த பெயலாய மிக்க துளிகளைப் பொருந்தி வானிடத்தே பயின்று, விளக்கம் வாய்ந்த அத்துளிகளைச் சொரிந்த இருள் மிகப் பொலிந்த விடியற்காலத்து நிகழ்வினை இடைக்காடனார் பாடல் சுட்டுகின்றது. (ந. மு.வேங்கடசாமி, அகம் - நித், ப.13)
'இருவிசும் பிவர்ந்த கருவி மாமழை
நீர்செறி நுங்கின் கண் சிதர்ந் தவைபோற்
சூர்பனிப் பன்ன தண்வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழித்துளி தலைஇ வானவின்று
குரூஉத்துளி பொழிந்த பெரும்புலர் வைகறை”
எனும் இப்பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. (ந. மு. வேங்கடசாமி, அகம் - நித், பா.எ.304: 1 - 5, ப.12)
நுங்காகிய கண், கண் போறலின் கண் எனப்பட்டது. நுங்கு என்றது பனங்காயை உணர்த்திற்று. நுங்கின் கண் ஆலிக்கு வடிவம் உருவம் பற்றிய உவமையாகும்.
ஆலியின் தட்ப மிகுதி
வடக்கில் இருந்து வரும் காற்று வாடைக்காற்று எனப்படும்.
சூர் பனிப்பு அன்ன என்றது ஆலியின் தட்ப மிகுதியை உணர்த்தியது. பாலை நிலப்பாடல், பகற்காலத்தும் நீங்காதாகிப் பெய்து, இரவினும் நீங்குதல் இல்லாத வெள்ளத்துடன், மெல்லெனக் கரிய மேகம் மழையைச் சொரிந்தமையால், குளிர்ந்து வருதலையுடைய வாடைக்காற்றால் நடுக்கம் மிகும். (ந. மு. வேங்கடசாமி, அகம் - நித், பா.எ.304: பக்,14 - 16) இதனை,
'தளிமழை பொழிந்த தண்வரல் வாடையொடு
பனிமீக் கூரும் பைதற் பானாள்”
எனும் வரிகள் நிறுவுகின்றன. வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் பாடல் இதனைச் சான்று பகர்கின்றது. (ந. மு. வேங்கடசாமி, அகம் - நித், பா.எ.305: 3 - 4, ப.15)
நிலம் குளிரல்
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார், முல்லை நிலப் பாடலில், நீலமணியை ஒத்த நீர் பொதிந்த சூலினைக் கொண்டு, கரிய வானிடத்தே அதிர இடித்து, ஆலியின் பெய்த நீரினால், நிலம் தட்பமுற்றது இச்செய்தியை,
'நீலத் தன்ன நீர்பொதி கருவின்
மாவிசும் பதிர முழங்கி ஆலியின்
நிலந்தண் ணென்று கானங் குழைப்ப”
எனும் இவ்வடிகள் மெய்ப்பிக்கின்றன. (ந.மு.வேங்கடசாமி, அகம் - நித், பா.எ.314: 1 - 3, ப.32)
ஆலி பெய்தல்
பிசிராந்தையார், குறிஞ்சி நிலப்பாடலில் புலியோடு பொருதுழந்த வருந்திய நடையினை உடைய களிற்றி யானையின், நீண்ட பிளப்பாகிய மத்தளப் புண்ணைக் கழுவி, இரவில் முகில்கள் ஆலங்கட்டியுடன் கூடிய மிக்க பெயலைப் பொழிந்தமையால், விடியற் காலத்தே, மிக்க வெண்மையையுடைய அருவியின் நீர் மிக்குப் பெருகி வருகின்றதை, (ந.மு.வேங்கடசாமி, அகம் - நித், பா.எ.308: 1 - 5, பக்.21 - 22)
“ஆலி யழிதுளி பொழிந்த வைகறை
வால்வெள் ளருவிப் புனன்மலிந் தொழுகலின்
இலங்குமலை புதைய வெண்மழை கவைஇக்”
எனும் அடிகள் வெண் மழை பெய்து விட்ட சிறந்த மழையைக் குறிப்பிடுகின்றன. (ந.மு.வேங்கடசாமி, அகம் - நித், பா.எ.308: 3 - 5, ப.21)
இலவமரத்தின் கொட்டைகள் - ஆலங்கட்டிப்போல பரவிக்கிடத்தல்
கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடலில், களிறு தன் புறத்தினை உரசிக் கொண்ட கரிய அடியினையுடைய இலவ மரத்தின், விதையாய வெள்ளிய கொட்டை, ஆலங்கட்டிப் போலப் பரவிக் கிடக்கும் காடுகள் என்பதனை, (மே, ப.24)
“களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரிலை வெண்காழ் ஆலியில் தாஅம்”
எனும் இவ்வரிகள் மெய்ப்பிக்கின்றன. (ந.மு.வேங்கடசாமி, அகம் - நித், பா.எ.309: 7 - 8, ப.23)
கழங்கினை ஒத்த பனிக்கட்டி
மகளிர் கழங்கினை விரும்பி விளையாடுவர். கழங்கு என்பது ஓராடல். 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பெண்பாற்பிள்ளைத் தமிழில் பத்து பருவங்களுள் இதுவும் ஒன்று ஆகும்.
மதுரைக் கூத்தனார் முல்லை நிலப் பாடலில், பாகனே! மேகமானது, ஒலி முழங்கும் கடலின் கண் நீரை முகந்தெழுந்ததாலாய முழக்கினொடு, கரிய பிடிகளின் கூட்டம் போன்று சேரந்து திரண்டு, பெரிய களிற்றின் பருத்த கை போலக் கால் இறக்கி, வளைந்த முன் கையினை உடைய மகளிர் விரும்பி விளையாடும் கழங்கினை ஒத்த பனிக்கட்டியுடன், விரையும் துளிகளைச் சிதறி, பெய்தலைத் தொடங்கி விட்டது. (மே,ப.76 -77)
'வணங்கிறை மகளிர் அயர்தனர் ஆடும்
கழங்குழற் ஆலியொடு கதழுறை சிதறிப்
பெயறொடங் கினால் வானம் வானின்”
எனும் இப்பாடலடிகளைச் சுட்டுகின்றார் எனும் இவ்வடிகள் மெய்ப்பிக்கின்றன. (ந. மு. வேங்கடசாமி, அகம் - நித், பா.எ.334: 7 - 9, ப.76)
கமுக மரக்காட்சி - வெள்ளிய பூக்கள் பரந்து, பலகறையை ஒத்த ஒள்ளிய நிறத்தையுடைய ஆலங்கட்டி போலக் காட்சி அளித்தல்
மதுரைத்தத்தங் கண்ணனார் பாலை நிலப் பாடலில், குறிய இறைகளையுடைய திரண்ட அடியினை உடைய கமுக மரத்தின், தொடுத்தல் அணைந்த பல மலர்களின் தொகுதியை மூடிக் கட்டிய குடையினை ஒத்த, காய்த்தல் பொருந்திய எருத்தினிடத்துள்ள, பாளை பற்று நீங்கி ஒழிய, புறத்தை அடைந்து, வாளை வடித்து வைத்தாற் போன்ற வயிற்றினை உடைய பொதியின் கண்ணவாய, பருவம் உற்றவிடத்து வெளிப்பட்ட இனிமை பொருந்திய அழனையுடைய, ஆரம் போலும் அழகு விளங்கும் புதிய பூக்கள், நீட்சி பொருந்திய சுவரியின் கண்ணே வண்டு தேன் உண்ணுமாறு விரிய, முத்துக்களைப் போன்ற வெள்ளிய பூக்கள் பரந்து, பலகறையை ஒத்த ஒள்ளிய நிறத்தையுடைய ஆலங்கட்டி போல மகிழ்ச்சியை மிகுதியும் உண்டாக்கும் சிறப்புடன், அழகு மிக, பூவொடு வளர்தலுற்ற முற்றாத இளங்காயினது, நீரைக் காட்டினும் இனிமையுடையவாகி, கூரிய பற்களிடத்தே அமிழ்தம் ஊறும் சிவந்த வாயினையும் ஒளி பொருந்திய வளையினையும் உடைய, இளையளாய தலைவி இருப்பதை,
(மே, பக்.79 - 80)
'முத்தின் அன்ன வெள்வீ தாஅய்
அலகின் அன்ன அரிநிறத் தாலி
நகைநனி வளர்க்குஞ் சிறப்பிற் றகைமிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினு மினிய வாகிக் கூரெயிற்று”
எனும் இப்பாடல் வரிகள் மூலம் கமுகின் சிறப்பு, ஆலியின் சிறப்பினையும் குறிப்பிடுகின்றார்.
(ந. மு. வேங்கடசாமி, அகம் - நித், பா.எ.335: 20 - 24, ப.79)
கணைக்கால் - திரண்ட காலையுடைய கமுகமரம். கமுகம் பாளை அகத்தே தொடுத்த மாலை போலும் பூக்களை உடைமையின் தொடையமை பன்மலர்த்தோடு பொதிந்தியாந்த குடையோரன்ன பாளை என உவமை கூறப்பட்டது.
பூவின் கொத்து கவரி போல்வதாகலின் கவரி எனப்பட்டது. பசுங்காய் - தட்ப மிகுதியால் ஆலி போல் மகிழ்ச்சி விளைக்கும். கமுகின் முற்றாத பசுங்காயின் நீர் இனிமை மிக்குடையது.
(மே, பா.எ.335, பக்.80 -81)
இதனை,
'அங்கருங் காலி சீவி யுறவைத் தகைக்கப் பட்ட
செங்களி விராய காயுஞ் செம்பழுக் காயும் தீந்தேன்
எங்கணுங் குளிர்ந்த இன்னீர் இளம்பசுங் காயும் மூன்றும்
தங்களி செய்யக் கூட்டித் தையலார் கைசெய் தாரே”
(சீவக. இலக்கணை 2473)
'பைங்கருங் காலிச் செங்களி அளைஇ
நன்பகற் கமைந்த அந்துவர்க் காயும்
இருங்கண் மாலைக்குப் பெரும்பழுக் காயும்
வைகறைக் கமையக் கைபுனைந் தியற்றிய
இன்றேன் அளைஇய இளம்பசுங் காயும்”
(பெருங். மகத.14:81 - 85)
என்னும் காப்பியப் பாடல்கள் பாக்கின் மருத்துவத்தினைப் பறை சாற்றுகின்றன.
(மே.ப.81)
ஆலங்கட்டி - பளிங்கினைச் சொரிவது போலப் பெய்தல்
அகம் - களிற் - குறிஞ்சி நிலப்பாடலில் மலைத்தலையில் முத்துக்கள் சிதறியவை போல் விளங்கும், யானையின் புள்ளியினையுடைய முகத்தில் மோதி வீழ்ந்த புதிய ஆலங்கட்டி, பளிங்கினைச் சொரிவது போலப் பாறையில் வீழ்ந்து கோலம் செய்ததை,
“புகர்முகம் பொருத புதுநீர் ஆலி
பளிங்குசொரி வதுபோல் பாறை வரிப்பக்”
எனும் பாடல் அடிகள் ஆலங்கட்டி மழையினைச் சுட்டுகின்றது. (அகம் - களிற், பா.எ.108: 4 - 5, ப.275)
இடியுடன் கூடிய ஆலி
புறநாட்டுப் பெருங்கொற்றனார் தமது பாலை நிலப் பாடலில், பலா மரங்கள் பல திரண்டுள்ள, மூங்கில் நெருங்கிய பக்க மலையில், செல்லுகின்ற யானைக் கூட்டத்தினைப் போல, வானின் கண் விளங்கும் ஞாயிறு மழுங்குமாறு பரவி, பாம்பினது படம் அழிய இடிக்கும் கடிய குரலினையுடைய இடியேற்றத்துடன் நீர்க்கட்டியுடன் கூடிய மிக்க துளிகளைப் பெய்ததை,
'வயங்குகதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின்
பைபட இடிக்குங் கடுங்குரல் ஏற்றொடு
ஆலி யழிதுளி தலைஇக்”
எனும் இவ்வடிகள் மெய்ப்பிக்கின்றன. (ந. மு. வேங்கடசாமி, அகம் - நித், பா.எ.323: 10 - 12, ப.53 - 54)
ஆலங்கட்டி பொழிதல்
பதிற்றுப்பத்து: 10. வெருவரு புனற்றார் - எனும் தலைப்பில், பெரிய மலையின் கண்ணே, மேகம் தன் முழக்கத்தினால், விலங்குக் கூட்டம் அஞ்சி நடுங்க, காற்றுக் கலந்து மோதுதலால் விரைவுடன் பொழியும் மழை ஆலங்கட்டியோடு சிதறிப் பொழிந்ததை, (பதிற், ப.227)
'மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கான்மயங்கு கதழுறை யாலியொடு சிற்றிக்”
எனும் வரிகள் சுட்டுகின்றன. (சு. துரை, பதிற், பா.எ.10: 2 - 3, ப.226)
ஆலி நகுதல்
கலித்தொகை நெய்தற்கலியில் பலவாய்த் தழைகின்ற கூந்தலை உடையாளாகிய ஒருத்தி தன் குணங்களை எல்லாம் நுகர்ந்து தன்னைக் கை விட்டவனை நினைத்து நெட்டுயிர்ப்புக் கொள்ளும். அவனோடு கூடுமாற்றினைச் சிலரோடு உசாவும். நெஞ்சு சுழலும். பேய்கின்ற மழையைச் சேர்ந்த மதி போலே தன் முகம் தோன்றும் படியாகக் கயலை ஒக்குந் தன் கண்களினின்றும் அரித்து விழுகின்ற நீர் முகத்தே வடியும்படி ஒழியாளாய் அழா நிற்கும். அவனை மறந்தாளைப் போலே ஆரவாரித்து இடையே நகுவதுஞ் செய்யும். ஆலி - நீர் என்பதனை பின்வரும் பாடலடிகள் சான்று பகர்கின்றது. (ப.457)
“பலவொலி கூந்தலாள் பண்பெல்லாந் துய்த்துத்
துறந்தானை யுள்ளியழூஉ மவனை
மறந்தாள்போல் ஆலிநகூஉம் மருளுஞ்” (நச்சினார்க்கினியர் உரை, கலித்தொகை, 145:7 - 9, ப.455)
இவ்விதமாகச் சங்க இலக்கியத்தில் ஆலி எனும் அழகிய தமிழ்ச்சொல் மழை, பனிக்கட்டி, உவமையாகக் கையாளுதல், குளிர் மழை முதலிய பல நிலைகளில் பயன்படுத்தப் பெற்றுள்ளது.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.