தொன்ம இலக்கியங்களில் நெசவு
இரா. விஜயகுமார்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
இரத்னவேல் சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரி , சூலூர்.
முன்னுரை
பண்டைக்கால மனிதன் மலைகளிலும், காடுகளிலும், அலைந்து திரிந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தான். காலப்போக்கில் ஆற்றங்கரையோரத்தில் நிலையான வாழ்க்கை முறையை மேற்கொண்டு படிப்படியான நாகரீக வளர்ச்சிக் கூறுகளைப் பெருக்கத் தொடங்கினான். நாகரீக வாழ்க்கையின் தொடக்கமாக வேளாண்மை அமைந்தது. வேளாண் உற்பத்தியில் நிறைவு கண்டதன் விளைவாகப் பருத்தியினைக் கொண்டு ஆடை நெய்யக் கற்றுக்கொண்டான். அக்கால மக்கள் தென்னை மரத்தின், பண்ணாடை, சிலந்தியின் வலை, பறவைகளின் கூடு கட்டும் திறம் ஆகியவற்றை உற்று நோக்கியே நாகரீகக்கால மனிதன் நெசவுக்கலையைக் கற்றிருக்கக் கூடும் எனக் கருத இடமுண்டு. தமிழ் மொழியின் தொன்மை வரலாற்றினைத் தாங்கி நிற்கும் சங்க இலக்கியங்கள் நெசவுத் தொழிலின் சிறப்பினையும், அதன் முக்கியத்துவத்தையும், எடுத்துக் கூறியுள்ளதன் மூலம் நெசவுத் தொழிலின் மேன்மையை உணர முடிகின்றது. அவ்வகையில் தொன்ம இலக்கியங்களில் காணலாகும் நெசவு குறித்தப் பதிவுகளை எடுத்துக் காட்டுவதாக “தொன்ம இலக்கியங்களில் நெசவு”என்னும் கட்டுரை அமைகிறது.
நெசவுத் தொழில்
நெசவுத் தொழில் என்பது பலரது கூட்டு முயற்சியால் நடைபெறுகின்ற தொழிலாக அமைந்துள்ளது. பல்வேறு படிநிலைகளைக் கடந்தே ஆடைகள் உருவாக்கப்படுகின்றன. நெசவுத் தொழில் எங்ஙனம் மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பின்வருமாறு காணலாம்.
* நெசவுத் தொழிலின் தொன்மை
* பருத்தியினைச் சுத்தம் செய்தல்
* நூல் நூற்கும் பெண்கள்
* பாவோட்டுதல்
* சாயமிடுதல்
* துணி நெய்தல்
* நெய்த ஆடைகளை விற்றல்
* அகழ்வாய்வில் கிடைத்த நெசவுப் பொருட்கள்
நெசவுத் தொழிலின் தொன்மை
தமிழர் நாகரீகம் தொன்மையானது. மனித நாகரீகத்தின் தொடக்கமாக வேளாண்மையில் பருத்தி கிடைத்தது. பருத்திக்கும் இந்தியாவிற்குமான உறவு தொன்மையானதாகும். பஞ்சினைக் கொண்ட ஆடை நெய்யும் அறிவினைப் பண்டைய மக்கள் அறிந்து வைத்திருந்ததைச் சிந்து சமவெளி நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்டப் பொருட்கள் காட்டுகின்றன.
“மொகஞ்சதரோவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற நூற்கதிர்த் திருகுகள் இம்மக்களில் ஏழை செல்வந்தர் என்ற வேறுபாடின்றி அனைவரும் நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததை காட்டுகின்றது” என்பர்.
பருத்தி என்னும் செம்பொருள் இந்தியாவிற்குரியது என்பதை வேற்றுநாட்டார் குறிப்புகளும், பிறநாட்டுத் தொல்லியல் சான்றுகளும் உறுதிபடுத்துகின்றன. உலகில் மற்ற நாடுகள் நாகரீகம் அடையும் முன்னரே, இந்திய மக்கள் பருத்தியைக் கொண்டு ஆடையை உற்பத்தி செய்து நெய்யக் கற்றுக் கொண்டனர்.
பருத்தியினைச் சுத்தம் செய்தல்
சங்ககால மக்கள் வேளாண்மையிலிருந்து கிடைத்த பஞ்சினைக் கொண்டு ஆடை நெய்தனர். பஞ்சினை நெய்வதற்கு ஏற்ற நூலாக மாற்ற வேண்டிப் பல்வேறு நிலைகளில் அதைத் தூய்மைப்படுத்த வேண்டியிருந்தது. விதை, தேவையற்ற அழுக்குகள் போன்றவற்றை நீக்கி நூல் இழைக்கு நூற்பதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்தனர். இதனை,
‘வில்லெறி பஞ்சின் மல்கு திரை”(நற். 299)
என்ற நற்றிணைப் பாடல் அடியால் அறியலாம்.
வில், எஃகு போன்ற கருவிகளைப் பயன்படுத்தி அக்கால மக்கள் பஞ்சினை அடித்துத் தூய்மை செய்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. மேலும்,
“கார்தலை மணந்த பைம்புதற் புரவின்
வில்லெறி பஞ்சின் வெண்தழை தவழும்
பெய்து புலம் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுறு பஞ்சின் துய்ப்பட்டன்ன துவலை தூவல்” (அகம். 217)
என்ற அகநானூற்றுப் பாடலடிகளும் நூலின் பெருமையை எடுத்துரைத்துள்ளன.
கடையப்படுகின்ற பஞ்சு மேகத்தின் மென்மையான அசைவிற்குச் சிறப்பு ஒப்புமையாகின்றது. வெண்மையான மேகத்தைப் பார்க்கும் போது பஞ்சு பரந்து செல்வதைப் போலப் பழந்தமிழர் எண்ணியுள்ளனர்.
நூல் நூற்கும் பெண்கள்
சங்ககால பெண்கள் சுத்தம் செய்யப்பட்டப் பஞ்சினைக் கொண்டு நூல் நூற்பதில் வல்லவராய் இருந்தள்ளனர். மேலும், கணவனை இழந்த பெண்கள் நூற்புத் தொழிலில் ஈடுபட்டுத் தங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை நிறைவு செய்துள்ளனர். இதனை,
“பருத்திப் பெண்டிர் பனுவல்”(புறம். 125)
“ ஆளிற் பெண்டிர் தபளிற் செய்த நுணங்குநண்பனுவல்” (நற். 353)
என்னும் சங்கப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
கணவனை இழந்த சூழலில், தன் உழைப்பினால் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூல் நூற்று இரவு வரை பணி செய்துள்ளனர். இதனொடு நெசவினை வாழ்வியல் தொழிலாகவும் மேற்கொண்டு வந்தனர்.
பாவோட்டுதல்
பருத்தியினைச் சுத்தம் செய்த பின்னர், நூலாக நூற்பு செய்த அந்நூலினைக் கொண்டு பெரிய இராட்டினத்தில் துணி நெய்வதற்குத் தகுந்தாற் போல் பாவோட்டப்படுகின்றது. அதனை எடுத்து நீளமாக விரித்துப் பசையிட்டு நன்கு மென்மையாகத் தேய்த்து நூலுக்கு மெருகு ஏற்றப்படுகின்றது. நெசவு நெய்தலுக்கு ஏற்றபடி அமைத்தலை ‘பா’ எனச் சங்ககால மக்கள் அழைத்துள்ளனர். இதனைத் தற்காலத்தில் “பாவாற்றுதல்” அல்லது “பாவோட்டுதல்”என வழங்குகின்றனர்.
‘பா’ என்னும் சொல் பாவுதல் (பரப்புதல்) என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டள்ளதைக் காணமுடிகின்றது. நெசவு செய்வதற்கு முன்பு பாவோட்டி, பாவினைப் பரப்பி வைக்கும் தன்மையினைச் சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. சான்றாக,
“துகிலாய்ச் செய்கைப் பாவிரித்தன்ன
வெயிலவிர்வு நுடங்கும் வெவ்வங்கள்ளின்" (அகம். 293)
என்னும் பாடலைச் சுட்டலாம்.
சாயமிடுதல்
சங்ககால மக்கள் நெசவு செய்த ஆடைகளுக்குச் சாயமிடும் பணியைச் செம்மையாக செய்து வந்துள்ளனர். இறைவனின் படைப்பில் மனிதன் பெற்ற பல சிறப்புகளுள் நிறம் பற்றிய சிந்தனையும் ஒன்று. இச்சிந்தனை பழங்கால மக்களிடம் இருந்துள்ளன. உடுத்துகின்ற ஆடைகள் பல வண்ணங்கள் கொண்டிருப்பதை விரும்பியதன் காரணமாகத் துணி நெய்யும் படைப்பில் அது ஒரு கலைத்திறனை உருவாக்க வழிவகை செய்தது. இதன் காரணமாக, சிவப்பு, மஞ்சள், நீலம், கறுப்பு போன்ற பல நிறங்களைப் பயன்படுத்தித் துணியினைச் செய்துள்ளனர். இவ்வாறு பல சாயமிட்ட ஆடைகளை அக்கால மக்கள் அணிந்திருந்தனர்.
“அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த ஆடையர்
இணையா விருப்பிற் நம் விளையாட்டு முனைக்
கயம் பாடவிய புறங்கறை போந்த பின்” (பெருங்கதை 42 ; 193 96)
என்ற பாடலடிகள் அக்காலமக்கள் ஆடைகளை வண்ணமிட்டு ஒப்பனை செய்து அணிந்து கொள்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
“ வெண்ணூல் பூந்துகில் வண்ணம் கொளீஇ
நீலக்கட்டியும் மரகதத் தகவையும்
பாசிலைக்கட்டியும் வீதகப் பிண்டமும்
பிடித்துருக் கொளீஇக் கோடித் திரியோட்டிக்
கையமைத் தியற்றிய கலிங்கத் துணியினர்” (பெருங்கதை 42 ; 193 96)
என்ற பெருங்கதை காப்பியப் பாடலடிகள் சாயமிடும் முறையை எடுத்துரைத்துள்ளது.
துணி நெய்தல்
சாயமிட்ட பாவினைக் கொண்டு பழங்கால மக்கள் துணி நெய்துள்ளனர். இது ஆடை உருவாக்கத்தின் நிலையாகும். இதற்காகத் தறி எனும் இயங்திரம் பயன்படுகின்றது. தறியின் பல்வேறு பகுதிகளின் துணையினால் ஆடை உருவாகின்றது. நெசவு நெய்யப்படும் முறையில் தறி நெசவு, விரல் நெசவு, மேல்நோக்கி நெசவு, கீழ் நோக்கி நெசவுஎனப் பலவகையுள்ளன. தறியின் பகுதிகளாக அச்சு மரம். படுமரம், விழுது,கம்பு, குத்துக்கம்பி, கால்பலகை, ஓடம், ஊடைகுழல், பாவு போன்றவை அமைகின்றன. இவற்றுள் ஊடைகுழலும், ஓடமும் நெய்யும் போது இணைந்த பாவு குறுக்காகச் செல்லும் தன்மையுடையது. சங்ககாலத்தில் அழகிய வண்ண வேலைப்பாடுகளுடன் துணிகளை நெய்துள்ளனர் என்பதை,
“புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு” (நற் .90)
“தேம்பாயுள்ள தேங்கமழ் மடருளப்
பாம்புரியன்ன வடிவன காம்பின்
கழைபடு சொலியின் இழையணி வாரா” (புறம். 383)
ஆகிய பாடலடிகள் எடுத்துக் காட்டுகின்றன.
பாம்பின் தோல் போன்ற வடிவினையுடையதாக மூங்கில் குழலின் உள்ளகத்தேயுள்ள தோலைப் போன்று மெல்லியதாக அணியப்பட்ட இழையணி வரிசை அறியாத வகையில் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளைப் பழந்தமிழ் மக்கள் உடுத்தியுள்ளனர் என்பதை இதனால் அறிய முடிகிறது.
நெய்த ஆடைகளை விற்றல்
சங்ககாலத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட மக்கள், நெய்த ஆடைகளை அங்காடிகளில் வைத்து விற்றுள்ளனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும் முதுமொழிக்கேற்ப உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் தாங்கள் நெய்த ஆடைகளை விற்று வந்தனர் என்னும் செய்தியை,
“தெண்டிரை அவிர்விரல் கடுப்ப
குறியவும் நெடியவும் மடிதரு விரித்து
சிறியரும் பெரியரும் கம்பியர் குழீஇ
நால்வேறு தெருவிலும் காலுற நிற்றர்” (மதுரைக்காஞ்சி - 512)
எனும் பாடலடிகள் காட்டுகின்றன.
இவ்வாறு நெசவாளர்கள் தாம் நெய்த துணியைப் பலரும் கூடியிருக்கும் அங்காடித் தெருக்களில் விற்று வந்ததை அறிய முடிகிறது.
அகழ்வாய்வில் நெசவுத் தொழில்
சங்ககாலத்தில் நெசவுத் தொழில் சிறப்புற நடைபெற்றதை இலக்கியங்கள் மட்டுமல்லாது, அகழ்வராய்ச்சிகளும் நிருபித்துள்ளன.
“அரிக்கமேட்டில் நிகழ்த்தப் பெற்ற அகழ்வாய்யில் வெண்மையான ஆடைகளுக்குச் சாயமிடுவதற்குப் பயன்படுதத்ப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட இரண்டு சாயத் தொட்டிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன” என்பர்.
சங்ககால சோழர் தலைநகரான “உறையூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டச் சாயத் தொட்டியின் இடிபாடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது” என்பர்.
தொகுப்புரை
* தமிழகத்தில் தொன்று தொட்டு நெசவுத் தொழில் இருந்த வந்தமையைச் சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைத்துள்ளன.
* தமிழகத்தில் நெசவுத் தொழில் சிறப்புற இருந்தன என்பதை வேற்று நாட்டாரின் குறிப்புகள் எடுத்துரைத்துள்ளன.
* பருத்தியினைச் சுத்தம் செய்த பின்னரே ஆடை நெய்வதற்குரிய நூல் தயாரிக்கப்பட்டது என்பதை அகநானூற்றுப் பாடல் எடுத்துரைத்துள்ளது.
* நெசவுத் தொழிலில் பாவோட்டுதல் என்பது தொன்று தொட்டு இன்று வரையிலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றதையும் அறியமுடிகின்றது.
* ஆடைகளுக்குச் சாயமிடும் முறையைத் தமிழக மக்கள் முறையாகச் செய்து வந்தனர் என்பதைப் பெருங்கதைப் பாடல்கள் எடுத்துரைத்துள்ளன.
* நெய்யப்பட்ட ஆடைகளை அங்காடிகளில் வைத்து விற்பனை செய்ததை மதுரைக்காஞ்சி வழி அறிய முடிகிறது.
* தமிழகத்தில் நெசவுத்தொழில் சிறப்புற நடைபெற்று வந்ததை அகழ்வாராய்ச்சிகளும் நிருபித்துள்ளன.
துணை நின்ற நூல்கள்
1. சங்க இலக்கியம், ச. வே. சுப்ரமணியம்
2. தமிழர் ஆடைகள், பாக்டர் பகவதி.
3. பண்டைத்தமிழர் தொழில்கள், வி. சி. சசிவல்லி
(குறிப்பு: துணை நின்ற நூல்களில் நூலின் பெயர், ஆசிரியர் மட்டுமின்றி, கூடுதலாக நூலை வெளியிட்ட பதிப்பகம், ஊர், பதிப்பாண்டு போன்றவைகளையும் குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக அமையும் - ஆசிரியர்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.