சங்க இலக்கியத்தில் 1. அம்புகை: அடிசில் புகை மணம், சந்தனப்புகை வேங்கையின் மிசைத் தவழும் பறம்பு, தாளிப்பு புகை மணம், புகை சூழ்ந்த கொட்டில் - அட்டில், 2. நறும்புகை - செவ்வேள் கடி மரத்தை ஏத்துதல் கோல் விளக்கையும், வையை வரவு - புகைபூ கொண்டு செல்லல், பௌத்தப்பள்ளி - புத்தர் பெருமான் வழிபாடு புகை பூசைப்பொருள் அமண் பள்ளி, தாபதர்கள் ஆவுதிப்புகை, பெரும்பெயராவுதி, அடுநெய்யாவுதி, இல்லம் - நறும்புகை - அகிற்கட்டை, கமழ் புகை, கடிநறை வெண் சிறு கடுகுப் புகை, புகை ஆலைப் பாகு புகை, துவர்புகை சாந்தம், கூந்தலுக்கு புகையூட்டுதல் - கூந்தல் நறும் புகை, புனத்தின் கண் எழுந்த நறிய புகை, அகில் சுடு புகை, நறுவிரை - சந்தனம், அகிலின் புகை, கரும்புகை - அகில் விறகுப்புகை. இடை மகனின் அக அழகு - புகைமணம் - புல்லாங்குழல், முடை நாற்றம் நீங்க இடும் நறும்புகை, 3. நடுகல் பூசை வழிபாடு, நெய் தீபம் புகை, 4. கலஞ் சுடும் சூளையின் புகை, 5. உவமையாகக் கையாளுதல் - புகை. புகைநிறம், பனிக்காலம், பனிப்புகை, மழை மேகம் போன்ற புகை புகை போன்ற பனித்துளிகள் வெண்மேகம் ஒத்த நறும்புகை, 6. முனைப்புலம் சுடு - மாப்புகை, 7. புகையினை உவமையாகக் கையாளுதல், கலி - புகையழல் - அரக்கு மாளிகை, புகை உவமை - வெண் மேகங்கள் தவழ்தல், 8. சூளைப்புகை கிள்ளி வளவனின் தாழிப்புகை, 9. செங்கண் புகை, 10. ஊர் எரி புகை, பண்பில் ஆண்மை, ஊர் சுடு புகை, 11. ஈம விளக்கு புகை, 12. விண்மீன்கள் புகை, 13. போர்ச் சுடு கமழ் புகை - பகை புலத்து எரி புகை, 14. மழைப் புகை, 15. ஈயல் புகை, 16. தீய புகை, 17. பல மணம் நாறும் புகை, 18. நிணஞ்சுடு புகை, 19. மீன் சுடு புகை 20. புகை நிழலை ஒக்கும் தலைவியின் கண்கள் முதலான பல்வேறு புகைகளின் பயன்பாட்டினைச் சங்க இலக்கியத்தின் வழிக் காண்போம்.
தமிழ்மொழி அகராதி புகை - துாமம், இது தென் கீழ்த்திசைப்பாலன் குறி, நீராவி, பனிப்படலம், புகை என்னேவல், யோசனை துாரம் என்றும், (தமிழ்மொழி அகராதி ப.1040) இது தீக்கு அறிகுறியாய் அது கொண்ட பொருளிடம் உண்டாகும் பொருள் என்றும் அபிதான சிந்தாமணி குறிப்பிடுகின்றது. ( அபிதான சிந்தாமணி, ப.1407)
பரிபாடலில் 17.செவ்வேள் கடிமரத்தை ஏத்துதல் கோல் விளக்கையும் (தீவர்த்தி), இசைக் கருவிகளையும், சந்தன முதலிய நறுமணப் பொருட்களையும், புகையையும், கொடிகளையும் சிலர் ஏந்தி வரத் தாம் மலர் தளிர் பூந்துகில் மணிவேல் முதலியவற்றைச் சுமந்து வந்து கடி மரத்தை ஏத்தி இசைபாடி மாலை தொறும் திருப்பரங்குன்றத்தின் அடியில் தங்குவோருள் வானுலகத்தில் உறைதலை விரும்புவர் உளரோ?
(பரிபாடல், ப.330)
“விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக்
கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ
மாலை மாலை அடியுறை யியைநர்”
(பரிபாடல், ப.எ.17: 5-7: ப.330-331)
எனும் பாடல் அடிகள் இதனை உணர்த்துகின்றது.
பரிபாடல் எட்டாம் பாடல் செவ்வேள் பற்றிய பாடலில், காற்றாலே மோதப்படும் உயரிய சிகரங்களையுடைய மலையின் கண்ணே பெய்த மழை நீர் பெருதேலானே தழைத்த, குளிர்ந்த குளங்கள் நீராலே நிறையவும் சிறப்புற்ற, மருத நிலத்தினூடே, செறிந்த மணல் பரந்த, மிக்க மலரினை உடையதாய்த் திருப்பரங்குன்றத்திற்கும், மதுரைக்கும் இடையே உள்ள பெரிய வழியின் கண்ணே, சிறந்த இறையன்புடையோர், அக்குன்றத்தன் கண் உறையும் முருகவேளுக்கு விழாச் செய்ய எழுந்து நிறத்தானும், மணத்தாலும் ஒன்றற்கொன்று மாறுபடுகின்ற பல்வேறு சாந்தங்களுடம், பெருமையுடைய புகைப் பொருட்களும் இயங்குகின்ற காற்றாலே அவியாத விளக்கிற்கு வேண்டுவனவும், என்றவிடத்து நறுமணப் புகையினைக் குறிப்பிடுகின்றது.
“சீறடியவர் சாறுகொள வெழுந்து
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்”
எனும் வரிகள் நறுமணப்புகையினை விளக்குகின்றது.
(பரிபாடல், பா.எ.8: 96 - 98: ப.167)
பரிபாடலில் 9.செவ்வேள் பற்றிய பாடலில் முறைமுறையாகத் தேய்ந்தொழிந்த கரையின் மேல் நின்ற சந்தன மரத்தை முறித்து வையை நீர் கொணர்ந்த வயிரமேறிய சந்தனக்கட்டையினது அழகிய புகை சூழ்ந்ததும், மாலையினையுடையதுமாகிய முருகனின் மார்பு என்பது பதிவாகியுள்ளது.
(பரி, 9:28, ப.189)
அந்நகர மக்கள், மின்னல் போல விளங்கும் ஒளியையுடைய அணிகலன்களை அணிந்து கொள்வோரும், பொற்றகட்டாலே செய்த பூவாகிய அணிகலன்களை அணிவோரும், சந்தனச் சாந்தினை மாற்றி அகிற் புகைமினாகிய சாந்தினைத் தம்முடம் பின் கண் மிகுதியாகப் பூசிக்கொள்வோரும் என்று நறுமணப் பொருட்களின் மணம், புகை ஆனது பயன்படுத்தப் பெற்ற குறிப்பினைச் சுட்டுகின்றது.
இதனை,
(மே, ப.266)
“பொன்னடர்ப் பூம்புனை திருத்துவோரும்
அகில்கெழு சாந்த மாற்றி யாற்றப்
புகைகெழு சாந்தம் பூசு வோரும்”
(பரிபாடல், பா.எ.12: 12 - 14, ப.262)
எனும் பாடலடிகள் குறிப்பிடுகின்றது.
வையை 16 ஆம் பாடலில், அவர் நினக்குக் கொணரும் கையுறையாகிய பொன் மீன் முதலியனவும் அவர் அணிந்த நறிய சந்தனக்குழம்பு முதலியனவும் அவர் ஈரணி உலர்த்தும் பொலிவுற்ற அகிற் புகையும் நினக்குத் தரும் உண்டியும் குறையாமல் நிறைதற் பொருட்டு, முகில் மழை மறாது நிரம்பப் பெய்வதாக. (மே, ப.328)
“ நாணா ளுறையு நறுஞ்சாந்துங் கோதையும்
பூத்த புகையும் அவியும் புலராமை.”
(பரிபாடல், ப.எ.16: 52 - 54, ப.320)
எனும் பரிபாடல் வரிகள் வையை ஆற்றினில் ஏற்படும் நறுமணப் புகையினைத் தெரிவிக்கின்றது.
21.செவ்வேள் பாடலில் தேருருள் போன்ற பூக்களையுடைய கடம்பின் கண் மேவிய நெடிய வேளாகிய நினக்கு, பூசையின் கண் காட்டும் பாத்திரத்தே எடுத்த நறுமணப்புகையின் ஊடே புக்கமையாலே அந்நறுமணத்தை ஏற்று நறுமணம் கமழ்ந்து நின்றது.
(பரி, பா.எ.21: 51, ப.410)
வையை வரவு - புகைபூ கொண்டு செல்லல்
பரி வையைப்பாடலில் வையை வரவு அவ்வெள்ளம் வையையாற்றின் கண் வந்த வருகையின் கண் புதுப்புனலாடுவதற்கு விழைந்த மகளிர் தம் கூந்தல் புலர்த்துவதற்கு வேண்டிய அகில் மரம் முதலிய புகைக்கப்படும் பொருளும் சூடுதற்குரிய மலரும் வையை ஆராதனைக்குரிய அவிப்பொருளும் கொண்டு சென்றதைப் பதிவிடுகின்றது.
(பரி, பா.எ.6: 11, ப.128)
வையைப்பாடலில் மகளிர் தங்கள் கூந்தலில் பூமாலைகளை மேலும் மணம் உடைத்தாக்குதல் கருதி வகை வகையான நறுமணப்புகை சூழ்வித்து அணிந்திருந்ததைப் பதிவிடுகின்றது.
(பரி, பா.எ.20: 27, ப.391)
பௌத்தப்பள்ளி - புத்தர் பெருமான் வழிபாடு புகை பூசைப்பொருள்
மதுரைக்காஞ்சியில் பௌத்தப்பள்ளியின் சிறப்பு குறிப்பிடுகையில் அழகுற்று விளங்கும் பேரிளம்பெண்டிர் பூசைக்கு வேண்டும் மலர், புகை முதலியவற்றோடே புத்தர் பெருமானை வழிபாடு செய்து வாயால் புகழ்ந்து பாடித் தொழுதனர் என்பதைப் பதிவிடுகின்றது.
(செய்தி, ப.153)
“காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர்…… ”
(மதுரை, பா.அடி 465 - 466, ப. 33)
எனும் அடிகள் சான்று பகர்கின்றது.
அமண் பள்ளி
வண்டுகள் படியும் படி பருவம் முதிர்ந்த தேனிருந்த தோற்றத்தை உடைய பூக்களையும், புகையினையும் ஏந்தி விரதங் கொண்டோர் சாவக நோன்பிகள் வாழ்த்தி நின்றச் செய்தியை,
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச் எனும் இவ்வடி பதிவிடுகின்றது.
(மதுரை, பா.அடி 475, ப.33)
பூவும் புகையும் ஆயு மாக்களும் …. என்பதனால் பூக்களையும், புகைப் பூசைப் பொருட்கள், சாந்தையும் நன்றாக ஆராய்ந்து விற்பார்களைப் பதிவிடுகின்றது.
(மதுரை, பா.அடி.515, ப.34)
மதுரை மாநகரில் கத்துாரியை அரைக்கும்படியும், நறிய சந்தனத்தை அரைக்கும்படியும், மெல்லிய நுாலாற் செய்த கலிங்கங்களுக்கு மணக்கின்ற அகிற்புகையை ஊட்டும் படியும், மாலைக் கால வரவும் நிகழ்ச்சிகளும் அமைந்திருந்தன.
(மதுரை, ப.175)
“நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னுாற் கலிங்கங் கமழ்புகை மடுப்பப்”
(மதுரை, பா.அடி. 554 - 555, ப.35)
எனும் அடிகள் இதனை மெய்ப்பிக்கின்றது.
தாபதர்கள் ஆவுதிப்புகை
தவப்பள்ளி - புத்த சமயத்தினரும், அமண் சமயத்தினரும், பிற சமயத்தினருமாகிய தாபதர்கள் தங்குமிடங்கள்.
பட்டினப்பாலையில் தவம் செய்வோர் உறையும் பள்ளிகளையுடைய தாழ்பூம்பொழிலிடத்தே விளங்கும் சடையினையுடைய தாபதர்கள் தீயிடை நெய் முதலியவற்றையிட்டு வளர்த்தலால் எழும் புகையைக் குறிப்பிடுகின்றது. ஆவுதி - தீயிலிடும் அவிப்பொருள். நெய் முதலியன இடுதலின் நறும்புகை என்றார்.
(பட், ப.43)
“அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம்”
(பட், பா.அடி. 54 - 55, ப.19)
எனும் இவ்வடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன. பெருமழைப்பலவர் பொ.வே.சோமசுந்தரனார்,
பெரும்பெயராவுதி, அடுநெய்யாவுதி
பதிற் - 1. அடுநெய்யாவுதி எனும் தலைப்பில் பெரும்பெயராவுதி பிற உயிர்கட்குத் தீங்கு நினையாமல் விளக்கமுற்ற கொள்கையாலும், ஞாயிறு போலத் தப்பாத வாய்மையுரையாலும், உட்குப் பொருந்திய முறைமையினையுடைய முனிவர்களைப் பரவுதற்காக, சொல்லிலக்கணமும், பொருளிலக்கணமும், சோதிடமும், வேதமும், ஆகமும் என்ற ஐந்தினையும் ஒருங்கே கற்று, அவை துணையாகக் கொண்டு எடுத்த வேள்வித்தீயின் கண் சுடர் எழுந்தோறும் உள்ளத்தெழுந்த விருப்பம் மெய்யின் கண் பரந்து வெளிப்படுதற்குக் காரணமான பெரிய பொருளைப் பயக்கும் ஆவுதிப்புகையும், ஆவுதியால் வேள்வி செய்வோர் தாம் கருதும் பொருள் கருதியவாறு பெறுபர் என்பதனால் பெரும்பெயராவுதி என்றார்.
அடுநெய்யாவுதி தம்பால் வருவோர் வரைவின்றி உண்ண வேண்டி விருந்தோம்பற்கு இன்றியமையாத அன்பு மாறாதே உண்பித்த ஆட்டு வாணிகர் ஊணை வெட்டும் மனை மேல் வைத்துக் கொத்தித் துண்டித்த நல்ல நிணம் பொருந்திய இறைச்சி, வேக வைத்துத் தாளிதம் செய்யும் தோறும் கடலொலி போல அமையாது ஒலிக்க செழுமையுடைய மனையின் கண்ணே, அடுதலாற் புகை எழுந்த அடிசிலின் கண் பெய்த நெய்யாகிய ஆவுதிப்புகையும் என்று இந்நுால் பதிவு செய்துள்ளது.
இதன் சிறப்பாலேயே பழைய உரைகாரர் அடு நெய்யை யாவுதி என்றது விருந்து புறந்தருதலையும் ஒரு வேள்வியாக்கி, ஆள்வினை வேள்வி என்று ஒரு துறையாக நுாலுட் கூறலான் என்பது என்றும், இச்சிறப்பானே இதற்கு அடுநெய்யாவுதி என்று பெயராயிற்று என்பர்.
(பதிற், பா.எ.21, பா.அடி.1 -15)
பெரும்பெயராவுதி, அடுநெய்யாவுதி என்ற இரு வகை ஆவுதிப்புகையும் கமழும் நறிய புகை மணத்தால் வானுலகத்தில் நிலை பெற்ற கடவுளர் தாமும் விருப்பம் கொண்டதை பறைசாற்றுகின்றது. இவ்விதம் இவ்விரு புகையும் சுட்டப் பெற்றுள்ளது.
இல்லம் - நறும்புகை - அகிற்கட்டை
கபிலரின் புறப்படல் கழுவப்பட்ட துகிலை விரித்த வழி அது நுடங்குவது போல நுடங்கி தண்ணென்று அகிற் கட்டையினின்றெழுந்த நறிய புகையானது மெல்லச் சென்று படிந்த கபில நெடுநகர்க் கமழும் மணம் பொருந்திய இல்லம் என்பதை,
“துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
அகிலார் நறும்புகை யைதுசென் றடங்கிய
கபில நெடுநகர்க் கமழு நரற்றமொடு”
(புறம், பா.எ.337: 9 - 11, ப.272)
எனும் புறப்பாடலடிகள் இல்லங்களில் நறிய புகை மணம் வீசுகின்ற அகிற் கட்டை எரிக்கப் பெற்றதைச் சான்று பகர்கின்றது.
கமழ் புகை
புறம் ஒய்மான் வில்லியாதன் புகழைக் கிணைப் பொருநன் சொல்லக் கேட்ட வேறொரு இணைப்பொருநன் அவனைக் காணும் ஆர்வத்தில் இருந்தான். “குற்றமில்லாத தாயிடத்துப் பாலுண்டற் கோடிவரும் குழவிபோல”, நின்பாற் பெறலாகும் பரிசின் மேல் சென்ற ஆசை செலுத்த வந்தேன் யான்: செல்வமுடைய நின் திருமனைக்கண் மெல்லிதாகத் தோன்றும் நறிய புகை பெய்தற்கு வரும் மழை முகில் படிந்து மறைப்பது போலத் தெருவெல்லாம் ஒருங்கு மறைக்கும்.
இச்செய்தியின் வழி நறிய புகை இல்லங்களில் அமைந்திருந்ததை அறியலாம்.
“தாயிறூஉங் குழவி போலத்
திருவுடைத் திருமனை யதுதோன்று கமழ்புகை”
(புறம், பா.எ.379: 15 - 16, ப.385)
எனும் புறப் பாடலடிகள் இதனை நிறுவுகின்றன.
பரிபாடலில் திருப்பரங்குன்றின் கண் உலகத்தார் செய்யும் பூசைக்கண் முருகன் ஆவியாகக் கொள்ளும் அகிற்புகை வானுலகத்தும் பரவுதலானே தேவர்கள் இமையாது நிற்பர். ஞாயிற்று மண்டிலமும் அப்புகையால் மறையும்.
(பரி, ப.330)
“வசைநீங்கிய வாய்மையால் வேள்வியால்
திசைநாறிய குன்றமர்ந் தாண்டான்
டாவியுண்ணும் அகில்கெழு கமழ்புகை
வாய்வாய் மீபோய் உம்பர் இமை பிறப்ப
தேயா மண்டிலம் காணுமா றின்று”
(பரிபாடல், ப.எ.17: 28 - 32, ப.330 - 331)
எனும் பாடலடிகள் இதனை நிறுவுகின்றன.
உலகத்தார் பலவிடத்தும் செய்கின்ற பூசைக்கண், முருகப்பெருமான் ஆவியாகக் கொள்ளா நின்ற அகிலிட்டெழுப்பிய நறுமணங் கமழும் புகை, அவ்வவ் இடந்தோறும் மேலே மேலே போலதால், இமையா நாட்டமுடைய தேவர்களும் இமைத்து அவணின்றும் அகலா நிற்ப, ஞாயிற்று மண்டிலமும் அவ்விடத்தே காணும் இயல்புடைத்தன்று.
(மே, ப.337)
கடிநறை :- வெண் சிறு கடுகுப் புகை
தீவிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனையிறைப்பில் செருகி, வளைந்த கோட்டையுடைய யாழும் பலவாகிய இயங்களும் இயம்ப, கையை மெல்ல எடுத்து மையாகிய மெருகினை இட்டு, வெண்சிறு கடுகைத் தூவி, ஆம்பற்குழலை ஊதி, ஓசையைச் செய்யும் மணியையியக்கி, காஞ்சிப் பண்ணைப் பாடி, நெடிய மனையின் கண் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்தனர் என்பதை அரிசில் கிழார் புறப் பாடல் சான்று பகர்கின்றது.
“ஐயவி சிதறி யாம்ப லுாதி
இசைமணி யெறிந்து காஞ்சிபாடி
நெருநகர் வனப்பற் கடிநறை புகைஇக்..”
(புறம், பா.எ.281: 4 - 6, ப.162)
எனும் பாடலடிகளில் இதனை மெய்ப்பிக்கின்றன.
வேம்பின் கிளையை ஒடித்து அதன் இலை கொணர்வதிலும், காஞ்சிப்பண் பாடுவதிலும், நெய்யுடைக் கையராய் மனையோர் வெண் சிறு கடுகைப் புகைப்பதிலும், எல்லாருடைய மனைகளும் கல்லென்ற ஆரவாரத்தை உடையதாய் இருந்ததை வௌ்ளைமாறனாரின் புறப்பாடல் சான்று பகர்கின்றது.
“வேம்புசினை யொடிப்பவுங் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கைய ரையவி புகைப்பவும்”
(புறம், பா.எ.296: 1-2: ப.192)
என்பது அவ்வடிகள்.
புகை: ஆலைப் பாகு புகை
முகில்கள் தவழ்ந்து விளையாடுகின்ற மூங்கில் வளரும் பக்க மலையிலே யாளியால் தாக்குண்ட யானைக் கூட்டங்கள் கதறினாற் போன்று, ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையையுடைய கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்கள் விருப்பமுடையவர் கரும்பின் இனிய சாற்றைப் பருகலாம் என்பதை,
(பெரும்பாணாற்றுப்படை, செய்தி, ப.122)
“விசய மடூஉம் புகைசூழ் ஆலைதொறும்
கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்”
(பெரும், பா.அடி:261 - 262, ப.25. விசயம் - கருப்பஞ்சாறு)
எனும் பாடல் அடிகள் இதனை நிறுவுகின்றது.
நறுமணப் புகை: பரிபாடலில் வையை 21 ஆம் பாடலில் பூமாலைகளை மேலும் மணமுடைத்தாக்குதல். கருதி நறுமணப்புகை சூழ்வித்த வகையாலே அணிந்த மகளிர் என்பதனை,
“புகைவகை தைஇயினார் பூங்கோதை நல்லார்
தகைவகை தைஇயினார் தார்”
(பரி, பா.எ.21: 27 - 28, ப.384)
இவ்வடிகள் சுட்டுகின்றன.
2 ஆம் வையைப்பாடலில், தொழிற்றிறம் படித் தொடுத்த தாரினையுடையவராய், தலையில் சூட்டும் மாலையினை உயைவராய், நுகர்ந்தோர் ஐ என்று வியந்து பாராட்டுவதற்குரிய நறுமணப் புகையூட்டிக் கொண்டோராய் வியக்கத்தக்க நுண்ணிய ஆடையினை அணிந்த செய்தியினை,
(மே, ப.459)
“ஐயெனு மாவியர் ஆடையர்
நெய்யணி கூந்தலர் பித்தையர்”
(பரி, பா.எ.2: 12 - 13, ப.454)
எனும் பாடல் தெரிவிக்கின்றது.
ஐ - வியப்ப. கண்டோர் ஐயெனக் கூறி வியப்பதற்குரிய என்க. ஆவி - மணப்புகை, நெய் - மணநெய். பித்தை - ஆடவர் மயிர். கூந்தல் - மகளிர் மயிர்.
(மே, ப.460)
நறுமணப்புகை குறுந்தொகையில் மாடலூர் கிழார் பாடலில் பரண் மேல் இருப்போன் கொளுத்திய நறுமணங் கமழும் புகையை உடைய கொள்ளி, விண்மீனைப் போன்று இடந்தோறும் இடந்தோறும் ஒளி வீசி நின்றது.
குறவர்கள் புனங்காத்தல் பொருட்டு உயர்ந்த மரத்தின் உச்சியில் பரண் கட்டி அதன் கண் தங்குவர். விலங்குகள் வாராத படி ஆண்டுக் கொள்ளிகள் விண்ணின் விளங்கும் மீன்கள் போல் ஒளி வீசும் என்பதனை, குறுந்தொகை மெய்ப்பிக்கின்றது.
(மே, ப.274)
“சேணோன் மாட்டி நறும்புகை ஞெகிழி
வானமீனின் வயின் வயின் இமைக்கும்”
(குறுந், பா.எ.150: 1 - 2, ப.273)
என்பதால் அறியலாம்.
துவர்புகை சாந்தம்: வையை
வையை 22 ஆம் பாடலில் மதுரைப் பெருமக்கள் தம் பணியாளர் துவர்களையும், புகைப் பொருள்களையும் சந்தனத்தையும், நீர் விளையாட்டிற்குரிய துருத்தி முதலியவற்றையும், மேலும் பலவற்றையும் எடுத்துக் கொண்டுச் செல்வதனை,
(மே, ப.422)
“தானைத் தலைத்தலை வந்துமைந் துற்றுப்
பொறிவி யாற்றுறி துவர்புகை சாந்தம்”
(பரிபாடல், பா.எ.22: 16 - 17, ப.423)
என்பதனை இவ்வரிகள் சுட்டுகின்றன.
கூந்தலுக்குப் புகையூட்டுதல்
வையாவிக் கோப்பெரும் பேகனை அரிசில் கிழார் பாடிய பாடலில் அரசனின் மனைவியின் கூந்தல் அழகு தழைத்த மயிலினது பீலியைக் காலொன்றக் குவித்தாற் போன்ற தழைத்த மெல்லிய கூந்தலின் கண்ணே மணம் கமழும் புகையைக் கொளுவித்தச் செய்தியை “ஒலிமென் கூந்தற் கமழ்புகை கொளீஇத்” எனும் இவ்வடி மெய்ப்பிக்கின்றது.
(புறம், பா.எ.146: 9, ப.306)
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடிய பாடலில் என் இடையில் சிதர்ந்து நார்நாராய்க் கிழிந்திருந்த உடையை நீக்கி, தன் அரையில் உடுத்திருந்த புகையை விரித்தாற் போன்ற உயர்ந்த உடையைத் தந்து என்னை உடுப்பித்தான் என்பதை “புகைவிரிந் தன்ன பொங்குதுகி லுடீஇ” எனும் அடி மெய்ப்பிக்கின்றது.
(புறம், பா.எ.398: 20, ப.459)
கூந்தல் நறும் புகை
கு.மூ.உ எனும் நுால் கூந்தலின் மணம் இங்கே குறிப்பிடப் பெறுகின்றது. அகிற் புகையும், புகை ஏற்றப் பெற்ற சந்தனப் புகையும் ஆகிய நறுமணம் மணக்கின்ற கருமணல் போன்ற கூந்தலினை உடையவள் தலைவி என்பதை,
“அமிழ்தம் ஊறும் செவ்வாய் கமழ்அகில்
ஆரம்நாறும் அறல்போல் கூந்தல்”
(பொ.வே,சோ, குறுந், பா.எ.286: 2 -3, ப.516)
எனும் எயிற்றியனாரின் பாடலடிகள் இச்செய்தினை நிறுவுகின்றன.
புனத்தின் கண் எழுந்த நறிய புகை
குறுந்தொகை மணமுடைய அகிலினது விளங்கிய செறிந்த புனத்தின் கண் எழுந்த நறிய புகை, (மழை) துளித்தல் ஒழிந்த முகில்களைப் போன்று சென்றதை,
“நறைஅகில் வயங்கிய நளிபுன நறும்புகை
உறைஅறு மையின் போகிச் சாரல்”
(பொ.வே,சோ, குறுந், பா.எ.339: 1 - 2, ப.609)
எனும் பாடலடிகள் அகிற்புகை மணத்தலைத் தெரிவிக்கின்றன.
புனத்தின் கண் குறவர் அகில் மரங்கொன்று சுடுதலானே உண்டாகிய நறும்புகை. துளியாது செல்லும் மேகம் அகிற் புகைக்கு உவமை.
அகில் சுடு புகை
(ஐங்குறுநூறு) சந்தனப்பொழிலின் கண்ணுள்ள அகிலினின்றும், எழுகின்ற நறுமணப்புகை, சந்தன மலரின் மணத்தோடு விரவிச் சிறந்த கலவை மணமாகக் கமழ்ந்துகின்ற நாடு. சாந்தமரம் - சந்தனமரம். பூழில் - அகில்.
சாந்த மரத்தின் இடைநிலத்து உளவாகிய அகில் சுடுபுகை அச்சந்தனப்பூ நாற்றத்தோடு கமழும் நாடு என்பதனை,
“சாந்த மரத்த பூழி லெழுபுகை
கூட்டுவிரை கமழு நாட”
(ஐங், பா.எ.212, ப.312)
எனும் பாடலடிகள் நல்ல நறுமணப்புகையினைத் தெரிவிக்கின்றன.
ஐங், குன்றின் கண் வாழும் குறவன் சந்தன மரத்தை அறுத்துச் சுட்டமையாலே எழுந்த நறுமணப்புகை பரவி அவ்விடத்து இயல்பாகவே கமழும் காந்தண் மலர் மணத்தோடு விரவிக் கமழ்ந்த மலைகள் பொருந்திய நன்னாடு என்பதை,
“குன்றக் குறவ னார மறுத்தென
நறும்புகை சூழ்ந்து காந்த ணாறும்”
(ஐங், பா.எ.254, ப.379)
எனும் பாடலடிகள் மெய்ப்பிக்கின்றன. சந்தன மரம் சுட்ட புகையாதலின் நறும்புகை எனப்பட்டது.
மேலும் குன்றத்தின் கண் வாழ்கின்ற குறவன் சந்தன மரத்தைத் தடிந்து சுடுதலான் எழுந்த நறுமணமுடைய புகை தேன் மனங் கமழ்கின்ற பக்க மலைகளை உடைய மடையிடம் எல்லாம் பரவி மணத்தலைச் செய்கின்ற காடு.
“குன்றக் குறவன் சாந்த நறும்புகை
தேங்கமழ் சிலம்பின் வரையகங் கமழும்”
(ஐங், பா.எ.253, ப.377)
எனும் பாடலடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
சாந்த நறும்புகை சந்தன மரத்தைச் சுடுதலால், எழுகின்ற நறுமணப்புகை, குறவர், தினை முதலியன விளைதற்குக் காட்டினூடே நிற்கும் சந்தன மரம் முதலியவற்றைத் தடிநுது அவற்றைச் சுட்டு நிலத்தைப் பண்படுத்தும் வழக்கமுடையர்.
(மே, ப.337)
சாந்த நறும்புகை இயல்பாகவே சிலம்பின்கண் கமழும் தேன்மணத்தோடு விரவிக் காடெல்லாம் கமழ்ந்து அக்காட்டின் ஊடே இருக்கும் தீ நாற்றத்தை மாற்றும் தன்மை உடையது.
நறும்புகை: அகில் புகை
திருமுருகாற்றுப்படை பழமுதிர்ச்சோலை பதிகத்தினுள், சிறிய பசு மஞ்சளோடே நறிய சந்தனம் முதலியவற்றைத் தெளித்துப் பெரிய குளிர்ந்த செவ்வலரி மாலையையும், ஏனைய நறியபடி நாலவிட்டுச் செறிந்த மலைப் பக்கத்துள்ள நல்ல ஊர்களைப் பசியும், பிணியும் நீங்குக என்று வாழ்த்தி, நறிய மணப்புகை கொடுத்து அந்நிலத்திற்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடினர்.
நறுவிரை - சந்தனம்
நறும்புகை - அகில் முதலியவற்றாலாய நறிய மணப்புகை.
சிபசுமஞ்சர் - மஞ்சளில் ஒரு வகை.
“நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி”
(திருமுருகு, பா.அடி 239, ப.16)
எனும் அடி இதனை மெய்ப்பிக்கின்றது.
நற்றிணையில் அம்மூவனார் பாடலில் பெரிய தெய்வமெனப் பெயர் கொண்ட யாண்டுகள் பல சென்றதனால் அங்குள்ள தெய்வத்தை தொழிலை விட்டமையால் அவ்விடத்தில் நல்ல நறுமணம் மிகுந்த துாமத்தினைக் கொண்டு வழிபட்டனர் “நறுவிரை நன்புகை” என்பதைப் பதிவிட்டுள்ளது. துாமம் - புகை.
(நற், பா.எ315: 6, ப.389)
அகிலின் புகை
குறிஞ்சிக்கலியில் தினைப்புனத்தில் இட்ட பரணிடத்து எரிந்த அகிலின் புகையால் உண்ணப்பட்டு ஒளி மழுங்கித் திரியும் வானிடத்தே சென்று அம்மலைத்தலையில் தங்கிற்று என்பதை
“ஏனல் இதணத் தகிற்புகை யுண்டியங்கும்
வானுார் மதியம் வரைசேரின் அவ்வரைத்”
(நச்சினார்க்கினியர் உரை, குறிஞ்சிக்கலி, பா.எ.39, 7 - 8, ப.109)
இவ்வடிகள் பதிவிடுகின்றது.
கரும்புகை:- அகில் விறகுப் புகை
சிறுபாணாற்றுப்படையில் உயர்ந்த தன்மையை உடைய ஒட்டகம் உறங்கிக் கிடந்தால் ஒத்த, மிகுகின்ற அலை உடைய கடல் கொணர்ந்து ஒதுக்கிய மணத்தை உடைய அகிலாகிய விறகினாலே, கரிய புகையை உடைய சிவந்த நெருப்பை எரத்துப், பெருந்தோளையும், மதிமுகத்தையும், வேல் நோக்கையும் உடைய நுளைமகள் காய்ச்சி அரித்த தேறல் என்பதனை,
(மே, ப.39)
“வீங்குதிசை கொணர்ந்த விரைமர விறகிற்
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்
… … ... பழம் படுதேறல்”
(சிறு, பா.அடி.155 - 159, ப.6)
விரை - மணம். எனும் இப்பாடல் அடிகள் சுட்டுகின்றன.
இடை மகனின் அக அழகு - புகைமணம் - புல்லாங்குழல்
பெரும்பாணாற்றுப்படை இலக்கியம் கன்றுகளை விரும்பும் ஆனிரைகளோடே காட்டிலே தங்கி, அழகிய நுண்ணியதாய் விளங்கம் புகை முற்படப் பிறக்கும் படி கையாலே கடைந்து படுத்த கோலிடத்தே உண்டாக்கிக் கொண்ட பெரிய வெற்றியை உடைய கடைக்கொள்ளியாலே துளையிட்ட, கரிய துளையினையுடைய குழலால் எழுப்பின இனிய மாலை என்கின்ற பண்.
புகை கமழ்தல் என்றது தீக்கடையும் பொழுது தீத்தோன்றும் முன்னர் மணக்கும் புகை மணத்தை, கட்புலனாகாதிருந்து பின்னர்க் கட்புலனாகத் தடித்து விளங்குதலின் அம்நுண் அவிர் புகை என்றார்.
(மே, ப.98)
“அந்நு ணவிர்புகை கமழக் கைமுயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்”
(பெரும், பா.அடி, 177 - 179, ப.23)
எனும் இப்பாடல் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
புறம் செல்வக்கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடும் பாடலில் வலியவாகும் நின் முழந்தாளைப் பொருந்திய பெரிய கைகள் புலால் நாற்றத்தை உடையவாகிய செவ்வித்தடியை பூ நாற்றத்தவாகிய புகையைக் கொளுத்தியச் செய்தியை,
“புலவு நாற்றத்தை பைந்தடி
பூநாற்றத்த புகைகொளீஇ யூன்றுவை”
(புறம், பா.எ.14: 12 - 13, ப.38)
எனும் புறப்பாடலடிகள் மெய்ப்பிக்கின்றன.
முடை நாற்றம் நீங்க இடும் நறும்புகை
நற்றிணையில் கூடலூர்ப் பல் கண்ணனார் மருதம் நிலப் பாடலில், பாணனே! எம்முடைய ஆடைதானும் நெய்யும், நறும்புகையும் அளாவிப் புதல்வர்க்குத் தீட்டும் மையும் இழுகி அழுக்கும் படிந்திரா நின்றது. நெய் - வாலாமை நீங்க ஆடும் நெய், குய் - அவ்வாலாமை முதலாய முடை நாற்றம் நீங்க இடும் நறும்புகை.
“நெய்யும் குய்யும் ஆடி மையொடு
மாசுபட் பன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்”
(நற், பா.எ.380: 1 - 3, ப.468)
எனும் பாடல் அடிகள் இதனை உணர்த்துகின்றது.
இல்லங்களில் அடப்படும் கள்ளினை உடைய சிலவாகிய குடிகள் வாழும் சீறூர் பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலத்துப் பலியைப் படைத்து, நல்ல நீரையாட்டி, நெய் விளக்கேற்றுதலால் உண்டாகிய மேகம் போலும் புகை எழுந்து தெருவில் மணக்கும்.
“புடைநடு கல்லி னாட்பலி யூட்டி
நண்ணீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குன் மாப்புகை மறுகுடன் கமழும்” (புறம், பா.எ. 329: 2 - 4, ப.255)
எனும் புறப் பாடலடிகள் நடுகல்லிற்கு நெய் விளக்கேற்றி, பலி படையல் வைத்து பூசை செய்ததைக் குறிக்கின்றது.
அகம் குறிஞ்சி நித்திலக்கோவையில் வெண் மேகம் - கலஞ் சுடு புகை. அகம் - நித்திலக்கோவை - குறிஞ்சி நிலப்பாடலில் பிசிராந்தையார் இப்புகையினைக் குறிப்பிடுகின்றார். விளங்கும் மலை மறையுமாறு வௌ்ளிய மேகம் சூழ்ந்து, மட்கலம் சுடும் சூளையிற் புகை போலத் தோன்றும் நாடனே! என்பதனை,
“இலங்குமலை புதைய வெண்மழை கவைஇக்
கலஞ்சுடு புகையிற் றோன்றும் நாட” (அகம், நித், பா.எ.308: 5 - 6, ப.21)
எனும் இவ்வரிகள் மெய்ப்பிக்கின்றன.
அகநானூறு நித்திலக் கோவையில், வடமோதங்கிழார் பாலை நிலப் பாடலில், வானின் கண்ணே மழை பெய்து முடிந்ததாக, பரப்பி வைத்தாற் போன்ற இருளினைப் பகலினும் விரித்து, புகையின் நிறம் போலும் உருவினை உடைய பனிக்காலம் நீங்க என்பதனை, (மே, ப.41)
“பாஅய் அன்ன பகலிருள் பரப்பிப்
புகைநிற உருவின் அற்சிரம் நீங்கக்...” (அகம், பா.எ. 317: 2 - 3, ப.40)
என்று குறிப்பிடுகின்றார்.
அக - மணி - அகன்ற வானில் உயர்ந்து புகை போலப் பொலிவுற்று பனி தவழும் என்பதனை, பாலை நிலப்பாடல்,
“புகையிற் பொங்கி வியல்விசும்பு உகந்து
பனியூர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்” (அகம், பா.எ.265: 1 - 2, ப.341)
எனும் பாடல் அடிகள் சான்று பகர்கின்றது.
பாலைக்கலியில் இப்பனிப்புகை இடம் பெற்றுள்ளது. புகை என்னும் படி சிறு தூறுகளைச் சூழ்ந்து பூவாய் அழகிய கள்ளைப் பொதிதலைச் செய்யாத முகை, போலும் வௌ்ளிய பல்லின் நுனைகள் தம்மிற் பொரும்படி முதிர்ந்த கூடிய பனி இருந்ததை, (செய்தி, ப.87)
“புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா
முகைவெண்பல் நுதிபொர முற்றிய கடும்பனி” (நச்சர் உரை, பாலைக்கலி, பா.எ.31: 19 - 20, ப.85)
எனும் இப்பாடல் அடிகளால் பின்பனிப்பருவம் - தை, மாசி முதிர் பனிப்புகையை இங்கே சுட்டுகின்றது.
வையைப்பாடலில் மதுரையின் கண் அழகிய மேல் மாடங்களின் அகத்திருந்து மகளிர்கள் துாவிய பனிநீர் மணத்தோடே கலந்து தென்றல் காற்று மணமுடையதாய் மாறுதற்கு அம்மகளிர் மாடத்தின் கண் அகில் முதலியவற்றைத் தீயிலிட்டு எழுப்பும் நறும் புகை, செறிந்த மலையின் கண் பூங்கொடிகளிடத்தே தங்கிப் பின்னர் அவ்விடத்தில் இயங்கும் காற்றினைப் பற்றுக்கோடாகக் கொண்டு வானிடத்தே ஏறிச் செல்லும், மிக்க பனியாகிய ஆவியை ஒக்கும். (பரி, செய்தி, ப.229)
“துண்ணின்று துாய பனிநீருடன் கலந்து
காறிரி வாக்கும் புகை” (பரி, பா.எ.10: 124 - 125, ப.210)
எனும் அடிகள் இதனைப் பதிவிடுகின்றது.
மழை மேகம் போன்ற புகை
நல்லுார் சிறுமேதாவியார் பாடலில் அகிலைத் தீயிட்டுக் கொளுத்துங் கானவன் ஆங்குள்ள சருகில் முதலிலே தீயிடுதலானே நறுமணம் வீசுகின்ற புகையானது இயங்குகின்ற மழை மேகம் போல் மறைக்கப்பட்ட நாடு என்பதனை, “அகில்சுடு கானவன் உவல்சுடு கமழ்புகை” என்னு பதிவிட்டுள்ளது. (நற், பா.எ.282: 7, ப.349)
புகை போன்ற பனித்துளிகள்
அகம் மணி முல்லை நிலப்பாடலில் மிகவும் இருண்ட மேகமானது வானில் அதிர்ந்து முழங்கி குதித்தலாகிய பெய்தலைச் செய்து கழிந்த பின்பு புகையைப் போலப் புள்ளியாய நுண்ணிய பனித்துளிகள் பூக்களின் உள்ளே நிறைந்திருந்ததைப் பதிவிட்டுள்ளது. (அகம், மணி, பா..எ.294: 1 - 3, ப.411)
வெண்மேகம் ஒத்த நறும்புகை
14.செவ்வேள் பற்றிய பாடலில் முருகப்பெருமான் களங்கம் இல்லாத கார் காலத்து வெண் மேகம் கிளர்ந்தெழுந்தாற் போன்ற நறிய அகில் முதலியவற்றானே புகைக்கப்பட்ட நறுமணப்புகையை மிக விரும்பியவனே என்று குறிப்பிட்டுள்ளதை,
“கறையில் கார்மழை பொங்கி யன்ன
நறையி னறும்புகை நனிஅமர்ந் தோயே” (பரி, பா.எ.14: 19 - 20, ப.294)
எனும் இந்த அடிகள் பதிவிடுகின்றது.