பழங்காலம் முதல் இன்று வரை தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வரலாற்றை எடுத்துச் சொல்லக் கூடியச் சான்றுகளாக விளங்குகின்றன. பழங்காலத் தமிழரின் வாழ்க்கை வரலாற்றுக்குச் சங்க இலக்கியங்கள் என்றால் தற்காலத்திற்கு சிறுகதைகள்,புதுக்கவிதைகள் ஆகியவை ஒரு நிலையான இடத்தைத் தமிழ் இலக்கியங்களில் பெற்று உள்ளன. பேராசிரியர் அ.கி பரமானந்தர் அவரது நூலான தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலில் சிறுகதை எழுத்தாளர்களை உரைநடைக் கவிஞர்கள் என்று சொல்கிறார். அதே நூலில் அவர், சிறுகதைகள் வாழ்க்கையில் காணப்படும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டும் என்றும், சிறுகதையின் பாத்திரங்கள் வாசிப்பவர்களின் அனுதாபத்தைப் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.
இன்றைய காலக்கட்டத்தில், தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகளில் சிறுகதைகள் ஒரு நிமிடக் கதைகளாக சுருங்கி, நான்கு வினாடிக் குறுங்கதைகளாகி விட்டன. இதனால் மக்களின் மனோபாவத்தை உணர்ச்சி ததும்ப எழுதும் நடை குறைந்து சிறுகதைகளில் புதுக் கவிதையின் சாயல் தெரிகிறது. ஆனால், பல புலம் பெயர் தமிழர்கள் தங்களின் மனநிலையை எடுத்துச் சொல்லும் ஒரு கருவியாக சிறுகதையைப் பயன்படுத்தி இணையதளங்களில் எழுதி வருகிறார்கள். அவர்களின் மனோநிலை உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் வாசகர்களின் மனநிலையை ஒத்துப் போவதால் அவர்கள் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர்களாகத் தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். அப்படி தன்னை அடையாளப்படுத்தத் தொடங்கி இருப்பவர்தான் பெண் எழுத்தாளர் வாணமதி.
வாணமதி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவர் இலங்கையை விட்டுக் குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் புலம் பெயர்ந்து வந்தவர். இன்று அவரது சிறு குடும்பத்துடன் சுவிஸ் நாட்டில் தற்போது வசித்து வருகிறார்.
அவர் தற்போது மார்த்தாண்டம் என்ற பத்திரிக்கைக்கு பெண்ணியக் கட்டுரைகளையும் இணையதளங்களில் புதுக்கவிதைகளையும் எழுதத் தொடங்கியுள்ளார். அதே போல சிறுகதை.காம் என்ற இணைய தளத்தில் அவர் சிறுகதைகளும் எழுதத் தொடங்கியுள்ளார். அவர் 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எழுதிய தமிழருவி, ஞானம் ஆகிய இரு சிறுகதைகள் இங்கே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.
இரு கதைகளும் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஒரு சிறு குடும்பத்தை மையமாகக் கொண்டு இருக்கிறது. கதையின் நாயகிகள் இருவரும் புலம் பெயர்ந்த தம்பதியரின் குழந்தைகளாக வருகிறார்கள். அந்நிய நாட்டைத் தாய் மண்ணாய்க் கொண்டு விட்ட தமிழ் குழந்தைகள் பள்ளிக் கால கட்டத்தில் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தைக் கண்டுபிடிக்க அனுபவிக்கும் குழப்பம் ஒரே பாதையில் செல்லும் இரு வேறு தடங்கள் கொண்ட இருப்புப் பாதையைப் போலாகும். அமெரிக்க உளவியல் கூட்டு நிறுவனம் இதைத் தெளிவாக கீழ் வருமாறு கூறுகிறது. “புலம் பெயர் மக்கள் தங்களுக்குத் தெரிந்த ஒரே கலாச்சாரத்தில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளோ வீட்டில் ஒரு கலாச்சாரமும் பள்ளியில் ஒரு கலாச்சாரமுமாக வாழ்கிறார்கள். அக்குழந்தைகள் தங்கள் பள்ளி வாழ்க்கையில் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை பெற்றோரிடம் கூறத் தயங்குகின்றனர். ஏனெனில் தங்கள் பெற்றோர்களுக்குப் புலம் பெயர் நாட்டின் கலாச்சாரம் தெரியாது, அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்று அக்குழந்தைகள் நினைக்கிறார்கள்” இந்தக் கருத்தை வாணமதி தன் இரு கதாப்பாத்திரங்கள் மூலம் அழகாகக் காட்டுகிறார்.
தமிழருவி என்ற சிறுகதை கதாநாயகியின் பெயரைத் தாங்கி வருகிறது. அக்கதையில் கதாநாயகியின் வயது ஐந்து. தாய்நாட்டில் வளரும் ஒரு ஐந்து வயதுக் குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது, அதனோடு விளையாடப் பள்ளித் தோழிகளும் தோழர்களும் நிறைய இருப்பர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்கு மொழியோ நிறமோ பழக்க வழக்கங்களோ ஒரு தடையாக இருக்காது. தாய் நாட்டில் குழந்தைகள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்லது இரு மொழி கலந்தோ பேசி விடுவார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கும் மொழி ஒரு தடையாக இருப்பதில்லை. ஏன் என்றால் அவர்களின் பெற்றோர் ஆங்கில மொழி தெரிந்தவர்களாக இருப்பார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நூல்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இருந்தாலும் பெற்றோரால் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தைக் கற்றுத் தர முடியும். ஆனால், அயல்நாட்டில் குழந்தை தமிழருவி மற்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் குழந்தைகளை விட ஒரு படி மேலான துன்பத்தைப் பள்ளியில் அனுபவிக்கிறாள். ஏனென்றால், அவளின் பெற்றோருக்கு ஜெர்மன் மொழி தெரியாது. அதனால் குழந்தைக்கு ஏற்படும் ஊமைக் காயத்தை அழகாகச் சித்தரிக்கிறார் கதாசிரியர்.
“இந்த நாட்டுக்கு வந்து படுகிற பாட்டைப்பாருங்க... நம்ம நாட்டில் என்றால் மொழியும் பிரச்சினையில்லை, நிறமும் பிரச்சினையில்லை எல்லோரும் தமிழ்ப் பிள்ளைகள் என்ற மனநிலையே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும். ஆனால் இந்த நாட்டில் காலநிலையில் தொடங்கிக் கலை, கலாச்சாரம், மொழி பண்பாடு யாவற்றிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் போராட வேண்டியுள்ளது. அதிலும் சிறுவர்களைப் பொறுத்தவரையில் அதுவொரு சுமைதானே”என் று தமிழருவியின் தாய் அங்கலாய்ப்பதும் “அம்மா எனக்குத்தானே அவங்க போல டொச்சுப் பேச (யேர்மன்மொழி) வராதே" என்று குழந்தை ஏக்கத்துடன் கூறுவதும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கொண்ட புலம்பெயர் தமிழ்க் குடும்பங்களில் நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும். ஒரு அன்றாட உண்மையைத் தன் எழுத்துக்களால் வர்ணம் பூசி வாசகர்களின் மனதைக் கவருகிறார் வாணமதி. ஆனால் ஒரு ஆசிரியரின் பார்வையில் அவர் வாசகர்களுக்குக் கொடுக்கும் அறிவுரையாக "ஒருவித தாழ்வுமனப்பான்மையும் அவளுள் வளர்ந்து கொண்டு வருகிறது. இதனைச் சிறுவயதிலிருந்தே போக்க வேண்டும். அதற்குப் பெற்றோராகிய நீங்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.உங்களது சமூகத்தொடர்பு உங்கள் மகளின் வாழ்வுக்கு உறுதுணையாக அமையும். விளையாட்டு மைதானம், நூலகம் போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள் அவள் வயது ஒத்த குழந்தைகளுடன் சுயமாகப் பழக அனுமதியுங்கள்"என்று தமிழருவியின் பள்ளி ஆசிரியர் குரலாக சொல்கிறார்.
அவருடைய இரண்டாவது சிறுகதையில் கதாநாயகி அர்ச்சனா பதினெட்டு வயதுப் பருவ மங்கை. அவள் இரு கலாச்சாரங்களையும் உள் வாங்கிக் கொண்டு இருக்கிறாள் என்பதை ஆசிரியர் "தன் தாய் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பைத் தன் மொழி மீதும் காட்டுகின்றாள் என்றாலும், தமது பெற்றோரினால் பின்பற்றப்படும் சில சம்பிரதாயங்களை மட்டும் அவளால் பூரணமாக உள்வாங்க முடியவில்லை" என்ற வரிகளால் சொல்கிறார். இலங்கையில் உள்ள பாட்டியுடன் இணையம் மூலமாகவும், இசுகை மூலமாகவும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தன் கலாச்சாரம் மொழி என்ற உயிரோட்ட வேர்களை அறிந்து கொள்ளும் கதாநாயகி மேற்கத்திய கலாச்சாரத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தெளிவான சிந்தனையையும் வெளிப்படுத்துகிறார்.
தமிழ் மண்ணில் இதே வயதுக் குழந்தைகள் தற்போது தம் மொழியை மறந்து, பொழுதுபோக்கு, காதல் என்று மனம் அலையும் நேரத்தில் மேற்கத்திய குழந்தைகளின் கண்ணோட்டம், பொது நலம் கொண்டதாக அமைகிறது என்பதைக் கதாநாயகி அர்ச்ச்னாவின் செயல்கள் காட்டுகின்றன. வெளிநாட்டுப் பள்ளிகளில் புலம் பெயர் மக்கள் தங்கள் மொழியை, கலாச்சாச்ச்சாரத்தை மதிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதேபோல புலம் பெயர்ந்த தமிழர்களும் தங்கள் இளம் வயதில் அறிந்திருந்த தமிழ் கலாச்சாரத்தைப் புகட்டுவதில் அக்கறை காட்டுகின்றனர்.
கதாநாயகி அர்ச்சனா புலம் பெயர் தமிழ் மாணவர் மன்றம் ஒன்றைத் தொடங்குவதாக காட்டியிருக்கிறார் ஆசிரியர். இது புலம் பெயர் நாட்டில் வாழும் பள்ளிக் குழந்தைகளின் ஒரு தனிப்பட்ட குணமாகும். எல்லாக் குழந்தைகளும் அர்ச்சனாவைப் போல மாணவர் மன்றம் ஆரம்பிப்பது இல்லை என்றாலும், அவர்கள் தங்கள் கலாச்சாரத்தின் மொழியின் தூதர்களாக உலகம் முழுவதும் வாழ்கிறார்கள்.
இதற்கு ஒரு நல்ல சான்று இன்றைய தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். ஆறு தலைமுறைகளாக அவர்கள் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் பாடுபட்டுக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதேபோல, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் தமிழ் மொழியோடு தங்கள் கலாச்சாரத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.
தன்னுடைய இரு கதைகளிலும் வாணமதி இன்னோரு விஷயத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, புலம் பெயர் பெற்றோர் செய்யும் தவற்றைச் சுட்டிக் காட்டுகிறார். புலம் பெயர் தமிழ் மக்கள் தங்கள் கலாச்சாரம் என்ற ஒரு பெரிய கறுப்புத் துணியைத் தன் கண்களில் கட்டிக் கொண்டு குழந்தைகளின் உள்ள நலனை மறந்து விடுகிறார்கள். இதை அழகாக ஞானம் கதையின் வரிகளில் “இந்த அம்மா நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சேர இரவு பத்து மணியாயிற்று. அதற்குப் பிறகு சில வீட்டு வேலைகளைச் செய்து குளித்துத் தூங்க இரவு பன்னிரண்டுக்கு மேல் இருக்கும். இந்த நிலையில் அதிகாலை ஐந்து மணிக்கே எழும்பிக் குளித்து முழுகி எப்பாவோ இறந்த பாட்டிக்காக, ஏன் இந்த ஆரவாரம். நினைக்கவே சிரிப்பாகத்தான் இருந்தது ஆனாலும் அம்மா மீது அனுதாபமே மேலோங்கியது" என்றும் தனக்குள் கதாநாயகி அர்ச்ச்னா நினைத்துக் கொள்கிறாள்.
தமிழருவி கதையில் "வேற்று நாட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது, ஏதாவது பிரச்சனைகள் வரலாம் அத்துடன் குழந்தையும் சில தப்பான பழக்கங்களை மொழி ரீதியாகச் செயல் ரீதியாகக் கற்றுக் கொள்ளலாம். இதையெல்லாம் ஊகித்தே நாங்கள் சிறுவயது முதல் குழந்தையை சக குழந்தையுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்கவில்லை" என்ற தமிழருவியின் தந்தையின் மூலமாகப் பெற்றோரின் செயலை விளக்கி, அதற்குத் தீர்வாக "ஒருவித தாழ்வு மனப்பான்மையும் அவளுள் வளர்ந்து கொண்டு வருகிறது இதனைச் சிறுவயதிலிருந்தே போக்க வேண்டும். அதற்குப் பெற்றோராகிய நீங்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். உங்களது சமூகத்தொடர்பு உங்கள் மகளின் வாழ்வுக்கு உறுதுணையாக அமையும். விளையாட்டு மைதானம், நூலகம் போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள் அவள் வயது ஒத்த குழந்தைகளுடன் சுயமாகப் பழக அனுமதியுங்கள்" என்று தமிழருவியின் பள்ளி ஆசிரியர் மூலமாகவும் சொல்கிறார் கதாசிரியர்.
புலம் பெயர் மக்களின் குழந்தைகள், முக்கியமாக எதிர் கொள்வது மற்றக் குழந்தைகள் அடாவடித்தனத்துடன் நம் குழந்தைகளை கொடுமைப்படுத்துவது ஆகும். இதில் தமிழ் குழந்தைகள் மிகவும் மன நலம் பாதிக்கப்படுகின்றனர். வீட்டுக்கு வெளியே பல சூழ்நிலைகளில் பாராபசட்சம் காட்டப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார்கள். இந்த நிலையில் தமிழ் குழந்தைகள் தங்களின் சுயத்தை அடையாளம் கண்டு கொள்ள மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். இதைப் பற்றி அமெரிக்க உளவியல் நிறுவனம் கூறுவதாவது, “அந்நியர் பற்றிய அச்சம் கொண்ட மக்கள் வாழும் சூழ்நிலையில் புலம் பெயர்ந்த மக்கள், பல சமயங்களில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள்” வேலையில் பல பதவிகளில் பொறுப்புகளில் இருக்கும் பெரியவர்களே இப்படி நடத்தப்படும் போது, பள்ளிக் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்?
அவர்களின் வெளியுலகப் போராட்டத்தைப் பற்றி வாணமதி இன்னும் சிறிது ஆழமாகத் தன் கதைகளில் கொடுத்து இருக்கலாம். புலம் பெயர் குடும்பங்களில் வரும் தினசரி வரும் சண்டை சச்சரவுகள் பல நேரங்களில் பெரிய போராட்டமாக மாறி விடுகிறது. அந்தப் போராட்டத்தின் விளைவுகள் சில நேரங்களில் எதிர்மறையாகவும் ஆகி விடுகிறது. வாணமதி, அவரது கதைகளினில் இந்த மாதிரி ஒரு பரிமாணத்தையும் ஆராய்ந்து எழுதும் போது, அவர் கதைகள் இன்னும் சிறக்கும். அவை புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை சித்திரமாகவும் பிரதிபலிக்கும்.
1. ஆ.கி, பரமானந்தர். சென்னை: அல்லி நிலையம், 2010. Print.
2. "American Psychological Association (APA)." Http://www.apa.org. N.p., n.d. Web. 31 Jan. 2016.