தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
23. வாழ்வு தந்த ஜக்காத் சிறுகதையில் பெண்ணியம்
முனைவர் செ. அனிதா
முன்னுரை
தமிழ் இலக்கியம் காலந்தோறும் பல வளர்ச்சி நிலைகளைக் கடந்து வளர்ந்துள்ளது. சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பிய இலக்கியம் என்று அதன் வளர்ச்சி தொடர்கிறது. இக்கால இலக்கியங்களில் சிறுகதையானது சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. சிறுகதைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. சிறுகதைகளைப் படைத்துவரும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் பல கோணங்களில் சிறுகதை எழுதுகின்றார்கள். அந்த வகையில்; ‘சுகந்தி வெங்கடேஷ்’ என்பவர் படைத்த சிறுகதைத் தொகுப்பானது பெண்களை மையப்படுத்தி எழுப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் 25 சிறுகதைகள் உள்ளன. இதில் 5 சிறுகதைகள் மட்டுமே இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வைந்து சிறுகதைகளும் பெண்ணின் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ‘வாழ்வு தந்த ஜக்காத்’ (1) என்பதே இவருடைய சிறுகதையாகும்.
சிறுகதை வரையறை
சிறுகதை என்பது பெயருக்கேற்பச் சிறியதாக அமையவேண்டும். குதிரைப் பந்தயம் போலத் தொடக்கமும் முடிவும் விறுவிறுப்பாக இருக்க வேண்டும். முப்பது நிமிடம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் படித்து முடிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். சிறுகதைக்கு இதுதான் இதற்கு பாடுபொருளாக அமைய வேண்டும் என்னும் வரையறை இல்லை. வாழ்க்கையில்; நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறுகதைக்குக் கருவாக அமையலாம். சிறுகதையின் கட்டுக்கோப்பில் ‘கதைக் கருவானது’ முக்கியமானதாகும்.
ஆசிரியர் குறிப்பு
‘வாழ்வு தந்த ஜக்காத்’ என்ற நூலின் ஆசிரியர் திருமதி சுகந்தி வெங்கடேஷ். இதுவே இவரது முதல் சிறுகதை நூலாகும். இச்சிறுகதை நூலானது எளிமையான நடையில் வாசகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து கொண்டு இணையத்தளங்களில் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல் எழுதி வருகிறார்.
பெண்ணியம்
Feminism என்ற ஆங்கில சொல் Femina என்ற இலத்தீன் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். இச்சொல் பெண்ணின் குணாதிசயங்களைக் குறிப்பதாகும். 7ஆம் நூற்றாண்டில் தான் பெண்ணியம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. பெண்ணியம் என்பது பெண்ணியல், பெண்ணிய நிலைவாதம், பெண்ணுரிமை, பெண்விடுதலை ஆகிய பொருள்களில் அடங்கும்.
பெண்ணியம் என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்துகொண்டு அவற்றை நீக்க முயல்வதாகும். அதன்மூலம் உலகளவில் அரசியலிலும், பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும், பெருத்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார். (2)
கதைக்கருவும் கதைச்சுருக்கமும்
இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ஐந்து சிறுகதைகள்
1. அழகு சிரிக்கிறது
2. பழைய ப்ரூ பாட்டில்
3. சீதனம்
4. நான் மட்டும் தனியாக…
5. பொருத்தம்
என்பவைகளாகும். இக்கதைகளின் சுருக்கமும் கதைக்கருவும் பின்வருமாறு,
1. அழகு சிரிக்கிறது
களைப்பாக இருந்தாலும் ஆனந்தமாக இருந்தான் ஆனந்த். இன்றுதான் அவனுக்குத் திருமணம் கோலாகலமாக நடந்தது. அவனுடைய ஆசையை அறிந்து அவன் அம்மா திருமணத்தை கச்சிதமாக முடித்ததை எண்ணி மகிழ்ந்தான். ஆனால் தன் புது மனைவி சரண்யா கண்களில் தெரிந்த கேள்வி நிறைந்த பார்வையானது அவனைச் சிந்திக்க வைத்தது. தன் மனதில் இருக்கும் குழப்பத்தைத் தீர்க்க நினைத்து அன்றிரவு தன் மனைவியிடம் நீ கேட்க நினைப்பது என்ன என்று கேட்டான். அதற்கு சரண்யா உங்களிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்க நினைத்தேன் என்றாள். நீங்கள் அமெரிக்காவில் வேலை பார்த்தாலும், உங்கள் வசதிக்கு ஏற்றபடி வரதட்சணை வாங்கியோ அல்லது படித்த பெண்ணையோ திருமணம் செய்யாமல் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த என்னைத் திருமணம் செய்யக் காரணம் என்ன? உங்களுக்குக் காதல் தோல்வியா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? என்றாள். பொறுமையோடு அவளின் பேச்சைக் கேட்ட ஆனந்த் புன்னகையோடு பதில் கூறினான்.
‘என்னதான் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் போது வீட்டுக்குள்ளேயே இந்தியனாகவும், வெளியே மற்றவருக்காகவும் வாழ்ந்து கொண்டிருந்தாலும் கணவனுக்குத் தன் மனைவி திறமைகளை மூட்டை கட்டி வைத்திருப்பது வேதனையாக இருக்கும்’. மனைவியோ தன் இயலாமையை நினைத்துக் கணவன் மீது கோபத்தைக் காட்டுவாள். தன் வாழ்வையும் ரசிக்கத் தெரியாமல் போய்விடும். இதனால் பிரச்சனைகள் தான் உண்டாகும். அதேபோல் பணம், நகை என்று வரதட்சணை வாங்கினாலும் பெட்டியில் வைத்துதான் பூட்டி வைப்போம் என்பதையும், எதிர்பார்ப்புகள் என்ற சிறையில் நீ வாழ்க்கை நடத்த வேண்டாம். உனக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய்யலாம். உனக்கு நீதான் துணை என்று புரியும் போது உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் கூறினான். அதனைக் கேட்ட சரண்யா நாணத்தோடு அழகாய்ச் சிரித்தாள்.
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு”
என்ற பாரதியின் சொல்லுக்கிணங்க இச்சிறுகதை அமைந்துள்ளது.
கதைக் கரு
திருமணமாகிய பின் வெளிநாட்டிற்குச் செல்வதால் ஏற்படும் குடும்பச் சிக்கல்களை பற்றியும், படித்திருந்தால் கூட அங்கு வேலைக்குப் போக முடியாது என்பதையும், பெண் (மனைவி) என்பவள் பிறருக்கு அடிமைப்பட்டு வாழ்க்கை நடத்தாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்பதையும் இந்தச் சிறுகதை உணர்த்துகிறது.
2. பழைய ப்ரூ பாட்டில்
மேரி கீரை வியாபாரம் செய்து வருபவள். தன் வீட்டில் காய்த்திருக்கும் முருங்கைக் காயையும் சேர்த்து விற்றால் இன்று ஒரு நூறு ரூபாய் தேறினால் நன்றாக இருக்கும் என்ற நினைப்புடன் தன் நடையில் வேகத்தைக் காட்டினாள். மேரியின் கணவனோ குடிகாரன். மகள் மார்த்தா கர்ப்பிணி பெண், மகன் பீட்டர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அவன் தலையெடுத்தால்தான் தன் கஷ்டம் தீரும் என்ற நினைப்புடன் வாழ்கிறாள். அரிசிப் பானையில் பழைய ப்ரூ பாட்டிலில் தன் மகளின் பிரசவத்திற்காக 500 ரூபாய் வரை சேர்த்து வைத்திருக்கிறாள். கீரை விற்றுவிட்டு மதியம் 12 மணிக்குத்தான் வீடு திரும்புகிறாள். அப்போது பணத்தை வைப்பதற்கு ப்ரூ பாட்டிலைத் தேடுகிறாள். காணவில்லை, அதிர்ச்சியில் நெஞ்சு ஒரு நிமிடம் நின்று விட்டது போல இருந்தது. ‘கர்த்தரே என்ன சோதனை’ என்று சரிந்தாள். தன் மகளிடம் கூறி அழுகிறாள். என்ன பணம், எங்கே வச்சுருந்தே என்று கேட்கிறாள் மார்த்தா. அதற்கு மேரி உன்னோட பிரசவத்திற்குத்தான் வைத்திருந்தேன் என்றாள். அந்த நேரம் பார்த்து வலி வந்து விட்டது. உடனே மேரி பணம் இல்லையே என்ற வேதனையுடன் தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயல்கிறாள். அந்த நேரத்தில் சாவியைத் தேடும் போது மகனின் சட்டையிலிருந்து காசு சிதறுகிறது. உடனே மகன் தான் பணத்தை திருடிவிட்டான் என்ற வேதனையுடன் செல்கிறாள். மார்த்தாவுக்கு சுகப்பிரசவமானது, மகிழ்ச்சியைத் தந்தது. குழந்தையைப் பார்க்க வருகிறான் பீட்டர். அவனை அடித்துத் திட்டி அனுப்புகிறாள்.
அன்று சமைத்துக்கொண்டு வரலாம் என்று வீட்டுக்குத் திரும்பும்போது எதிரே பாதர் அவளிடம் உன் மகன் பணம் கொடுத்தானா? என்று கேட்கிறார். மேரிக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் பாதர் அவனுக்கு நீ பஸ்ஸீக்கு கொடுத்த 2 ரூபாயும், வேலை செய்து சேர்த்த பணத்தையும் தன்னிடம் கொடுத்து வைத்திருந்தான். அதை நேற்றுதான் அக்காவின் பிரசவச் செலவுக்காக வாங்கி வந்தான் என்றார். இப்படி பொறுப்பா இருக்கிறவன திருடன் என்று நினைதது அடித்துவிட்டதை எண்ணி வேதனையோடு வீட்டுக்குச் சென்றாள். அங்கே வீட்டு வாசலில் குடிபோதையில் கிடந்த கணவனின் கையில் உருளுகிறது அந்த பழைய ப்ரூ பாட்டில்.
வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலும் எதிர்ப்படும்போது ஒதுங்கிச் செல்வதுமுண்டு, பதுங்கி விடுவதுமுண்டு, ஒதுங்கிச் செல்லும் வாழ்க்கை அச்சம் நிறைந்தது. பதுங்கிச் செல்லும் வாழ்க்கை அக்கறையற்றது. இந்த இரண்டும் பயனில்லை. சிக்கலைத் தீர்த்து வெல்லும் வீரம் வேண்டும். அதுவே ‘புத்துலகின் திறவுகோல்’ என்று மெர்வின் கூறுகிறார். (3)
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டும் அம்மா”
என்ற கவிமணியின் சொல்லுக்கிணங்க பெண்ணால் மட்டுமே குடும்பத்தையும், சமூகத்தையும் உயர்த்த முடியும்.
கதைக்கரு
‘வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்’ என்பதற்கேற்ப உறுதியோடு கூடிய விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் தன் வறுமையை எதிர்கொண்டாள் என்பதையும் இச்சிறுகதை மூலம் அறிய முடிகிறது.
3. சீதனம்
சேலம் கோட்டை மாரியம்மனைத் தரிசிப்பது ரஞ்சனியின் வழக்கம். அம்மன் ‘உனக்கு நான் இருக்கிறேன்’ என்று அபயம் காட்டியது. அந்தத் தெம்பில் தான் தாய் தந்தையரை எதிர்த்து முகுந்தனை அதே கோவிலில் காதல் திருமணம் செய்து கொள்கிறாள். சிறு வயது முதல் செவ்வாய், வெள்ளி கோவிலுக்குச் சென்று விடுவாள். அன்று ஆடி வெள்ளி கூட்டம் அலை மோதியது. அடுத்த வாரம் வரலட்சுமி விரதம். கணவன் இல்லாத சமயத்தில் மாமியார் வெள்ளிக் குத்து விளக்குக்காக, நான் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் தங்கத்திலேயே விளக்கு கொண்டு வந்திருப்பாள் என்றும் மற்றவர்களைப் போல அம்மா வீட்டிற்கு விரட்டவா முடியும் என்று சொன்ன கொடூரமான வார்த்தைகள் அவள் மனதை துளைத்தது. ரஞ்சனி தன் பாரத்தை அம்மனிடம் இறக்கி வைத்து விட்டு தனது திருமணத்திற்காக தவணை முறையில் சீட்டு கட்டி எடுத்த பட்டுச் சேலைக்கான பணத்தையும் கட்டுவதற்காக மனதில் அம்மனை நினைத்தபடியே கடைக்குச் சென்றாள். பணம் கட்டுவதற்காக நிறைய பேர் வரிசையில் நின்றனர். ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் அவள் முறை வந்ததும் பணத்தை எடுத்து நீட்டினாள். அடுத்த நிமிடமே கல்லாவில் இருந்தவர் ஆயிரமாவது நபர் பணம் கட்டியாச்சு என்று அறிவித்தார். அங்கு இருந்தவர்கள் பலமாக கைதட்டினார்கள். ஆனால் ரஞ்சனிக்கோ ஒன்றும் புரியவில்லை.
‘வாழ்த்துக்கள் அம்மா’ என்றபடி ஒரு வயதான பெண்மணி இரண்டு பெரிய வெள்ளிக் குத்துவிளக்குகளை அவள் கையில் கொடுத்தார். எனக்கு எதுக்கு இது? என்று ரஞ்சனி கேட்டாள். அப்போது ‘ஆடி மாதம் பட்டு எடுக்க வருபவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த மாதத் தவணைப் பணம் கட்டும் ஆயிரமாவது நபருக்கு வெள்ளிக் குத்துவிளக்கு பரிசு என்றும், இன்றுதான் கடைசி நாள் என்றும் உனக்குத் தெரியாதா? என்றார். அப்போது அவர் கண்களில் தெரிந்த சிரிப்பு அந்த அம்மனே காட்சி தருவதாக ரஞ்சனிக்கு அடையாளம் காட்டியது. தன் தாய் தந்த சீதனத்தை நெஞ்சில் அணைத்துக்கொண்டு அவர்காலில் விழுந்து வணங்கினாள்.
நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்.
கதைக்கரு
பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்துகொண்டதால் ஏற்படும் இன்னலையும், மாமியாரின் கொடுமையையும் இச்சிறுகதை உணர்த்துகிறது.
4. நான் மட்டும் தனியாக
ஒரு பெண் வேலை பார்த்து வந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரையும் மூடிவிட்டார்கள். வேறு வேலைவாய்ப்பிற்கு வழி இல்லாத சூழ்நிலையில் தான் எதற்காகத் தனியாக வாழ வேண்டும் என்ற நினைப்புடன் தற்கொலை செய்து கொள்ள வேகமாக காரை ஓட்டிச் செல்கிறாள். தன் கடந்த கால நினைவுகளை மனதில் சுமந்தபடி எங்காவது சென்று மோதிக்கொள்ளக் கூடாதாயென்று எண்ணுகிறாள். 20 வயதில் தன் கணவனுடன் அமெரிக்கா சென்ற நினைவுகள். அப்போது அவள் மகன் சுந்தர் கைக்குழந்தை. கணவனோ கல்லூரி ஆசிரியர். மகனுக்கு 5 வயது இருக்கும்போது விவாகரத்து கொடுத்து விட்டார். ஏனென்றால், மற்றவர்களைப் போல வாழத் தெரியாத மடச்சாம்பிராணி. நீ எனக்கு பெரிய சுமையாகிவிட்டாய். உன்னால் என் வாழ்க்கையும் நிம்மதி இல்லாமல போச்சு என்று சொல்வார். கணவன் வேறு திருமணமும் செய்து கொண்டார். வருடமோ கடந்து விட்டது. என் வாழ்க்கையோ இருண்டது போல் ஆனது. இந்தியாவிற்குப் போகலாம் என்றாலும் திருமணமாகாத இரண்டு தங்கைகளையும் நினைத்து விட்டு அங்கேயே இருந்து விட்டாள். இருண்டு போன அவள் வாழ்வானது சுந்தரினால் மீண்டும் வசந்தமாகும் என எண்ணினாள். ஆனால் அதுவும் நடக்கவில்லை. சுந்தரோ இப்போது திருமணமாகிச் சவுதியில் அமெரிக்கா இராணுவத்தில் இருக்கிறான், தன் அமெரிக்கா மனைவியுடன்.
கதிரவனின் ஒளியைத் தடுத்தபடி மரங்கள் அடர்ந்த சாலையோரம். அப்போது எதிர்ப்பக்கத்திலிருந்து ஒரு கார் வருகிறது. என் காரின் முன்னே அணில் ஒன்று ஓட நான் என் கால்கள் என்னை அறியாமல் பிரேக்கை அழுத்தின. எதிரே வந்த காரும் நின்றது. அணிலை காப்பாற்றிய பெருமிதத்தோடு எதிர் காரில் இருந்தவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு, மகிழ்ச்சியோடு மீண்டும் காரை வீட்டிற்குத் திருப்பினாள்.
கதைக்கரு
‘வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! சாவதற்கு அல்ல’ வாழ்க்கை ஒரு போர்க்களம். அதை வாழ்ந்துதான் பார்க்க வேண்டும் அல்லது வாழப் பழக வேண்டும்’ இறப்பின் வலி புரியும்போதுதான், உயிரின் மதிப்பு தெரியும் என்பதை இச்சிறுகதை உணர்த்துகிறது.
5. பொருத்தம்
ரேவதி கோபத்தோடு தன் தாய் வீட்டுக்குள் நுழைந்தாள். சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மாவிடம் எனக்கு அவருடன் வாழப் பிடிக்கவில்லை. நான் விவாகரத்து வேண்டும் என்று கேட்டேன், அவரும் தருவதாக சொல்லி விட்டார் என்று கூறி அழுதாள். கல்யாணம் ஆன ஆறு மாதத்தில் நாலு மாதம் ஏதாவது சொல்லிகிட்டு அம்மா வீட்டில் வந்து உட்கார்ந்தா பின்னே என்ன நடக்கும்? என்றபடி பாட்டி தண்ணீரோடு சமையலறையில் இருந்து வந்தாள். ரேவதியின் அம்மா செய்வதறியாது அவளைத் தேற்றுகிறாள். அவள் அப்பா வேலை நிமித்தமாக சிங்கப்பூர் சென்று விட்டார். இன்னும் 2 மாதத்தில் திரும்பி வருவார். நான் வேலைக்குப் போய்விட்டு வந்து மாப்பிளை மற்றும் மாமனாரிடம் பேசுகிறேன் என்று கூறி விட்டு தாய் இருமனதாக வேலைக்குச் செல்கிறாள். ரேவதியின் கணவனோ தோற்றத்தில் எளிமையானவன். அவள் கணவனின் தலை வழுக்கையாகவும், கன்னத்தில் தழும்பும், பல் எத்திக் கொண்டும் இருக்கும். ஆனாலும் அவன் புத்திசாலி, நல்ல சாந்த குணம் உடையவன். பாட்டி தன் கணவன் போட்டாவின் முன் அமர்ந்து கடந்த கால நினைவுகளை நினைத்து அழுது கொண்டிருக்கிறாள். அப்போது ரேவதி தன் கணவன் தனக்கு பொருத்தமானவனாக இல்லை என நினைப்பதைக் கூறுகிறாள்.
பாட்டி ரேவதியிடம் நான் என் விதியால் துணையை இழந்து தவிக்கிறேன். நீ உன் முட்டாள் தனத்தால் வாழ்க்கையை இழக்காதே! என்றும் கற்பனைக்கும் நிஜவாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும் ஆறுதல் கூறுகிறாள். அவளுக்குத் தெரியுமா? அவள் முட்டாளா அல்லது புத்திசாலியாயென்று!
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாகும். பெண்களைச் சம மரியாதையுடன் நடத்த வேண்டும். கணவன் மிகக் கொடுமையானவனாக இருக்கும்போது மட்டுமே ஒரு பெண் குடும்பத்தைத் துறந்து வெளியே வரலாம். மற்றபடி ஒரு பெண்ணுக்குக் குடும்பமே பாதுகாப்பானது. அதைக் கட்டிக்காப்பதில் பெண்களின் பங்கே முதன்மையானது. (4)
கதைக்கரு
‘அழகு என்பது முகத்தில் அல்ல அகத்தில்’ ஒருவருடைய அழகு அவரது குணத்தால் மட்டுமே அறியப்படுகிறது. ரேவதி தன் அறியாமையினால் வாழ்க்கையை இழப்பதை இச்சிறுகதையின் மூலம் அறியலாம்.
முடிவுரை
எந்த ஒரு செயலிலும் உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். ஆணாதிக்கமற்ற சமூகத்தையும், பெண்கள் எதிர்கொள்ளும் வறுமை நிலையையும், வரதட்சணை பற்றியும், பெண்ணின் அறியாமையையும், பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் இச்சிறுகதைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
துணை நின்ற நூல்கள்
1. சுகந்தி வெங்கடேஷ் - வாழ்வு தந்த ஜக்காத் சிறுகதைகள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
2. இரா. பிரேமா - பெண்ணியம் பக். 13, தமிழ் புத்தகாலயம், சென்னை.
3. மெர்வின் - பிறந்தது வாழ்வதற்கே, பக். 35, முருகன் பதிப்பகம், சென்னை.
4. திரு. வி. கல்யாணசுந்தரம் - பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை, பக். 177. புனித நிலையம். சென்னை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.