இன்றைய நூற்றாண்டில் மக்களால் பெரிதும் போற்றப்படும் கலை வடிவம் கதை இலக்கியம். வாழ்க்கையைக் காட்டும் ஏனைய இலக்கிய கலை வடிவங்களைப் போன்று கதைகள் கடந்த கால வாழ்வையும், நிகழ்காலச் சமுதாயத்தையும் எதிர்கால உலகையும் நமக்குக் காட்டுகின்றன. இக்கட்டுரையில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் “தோட்டியின் மகன்“ என்ற நாவல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தகழி சிவசங்கரன் பிள்ளையின் “தோட்டியின் மகன்” நாவல் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைப் பற்றிய கதையாக இல்லாமல், தனி மனிதனின் கதையாகவும் அவனைச் சுற்றி நிகழ்கின்ற நிகழ்வுகள் தொடர்பானதாகவும் கதை பின்னப்பட்டுள்ளது. மலையாள நாவலை சுந்தர ராமசாமி மொழி பெயர்த்திருந்தாலும், மலையாள எல்லையைப் பின்னணியாக கொண்டதாக நாவல் திகழ்கின்றன. இந்நாவலை தனி மனிதனின் நாவல் என்றும், தலித்திய நாவல் என்றும் தனித்து கூற இயலாதபடி இரண்டும் ஒன்றாகப் பின்னப்பட்ட கதைச் சூழலையுடைய நாவல் என்றே கூற வேண்டும்.
தலித் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சேரியில் வாழும் தோட்டியின் வாழ்க்கைச் சூழல் குறித்து எடுத்துக் கூறுவதாகவும் அதற்கு மூலமாக தகழி சிவசங்கரன் பிள்ளையின் தோட்டியின் மகன் நாவலில் இடம் பெறும் சுடலை முத்து கதாபாத்திரத்தினை மட்டும் எடுத்துள்ளேன். சுடலை முத்து பிறந்த வளர்ந்த சூழல், வேலை பார்க்க நேர்ந்த சூழ்நிலை தனது எதிர்காலத்தில் தான் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம், சுடலை முத்துவின் கடைக்கால நிலை ஆகியன எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
தோட்டியின் மகன்
தோட்டிகளும் தொழிலாளி வர்க்கம்தான் என்று ஜி. நாகராஜன் வார்த்தையை எத்தனை உள்ளங்கள் மனம் நெகிழ்ந்து ஏற்றுக் கொள்வார்கள் தோட்டியின் வாழ்விலும் அன்பு, ஸ்பரிசம், காதல் ஆசை, விருப்பம் ஆகியன உண்டு அவர்கள் வகிக்கும் வாழ்விடம் சேரியாக இருந்தாலும் ஒரு சிலரின் எண்ணங்கள் மேலோங்கி உள்ளன. அவ்வாறு ஆராயும் இடத்து தோட்டியின் மகன் நாவலில் இடம் பெறும் முக்கிய கதாபாத்திரமான சுடலை முத்துவின் பல்வேறு கோணங்கள் கதை முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
இசக்கி முத்து
இசக்கி முத்து சுடலை முத்துவின் தந்தை தனது இறப்பிற்குப் பின் தன் இடத்தில் தன் மகனையே நியமிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. முப்பது வருடமாகத் தான் சுத்தம் செய்யும் கக்கூசுகளை மூன்றாமவன் செய்வதா என்றா எண்ணம் இக்குலத்தொழில் முறையை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்று பாடுபட்டவர் தந்தை பெரியார். தற்சமயம் முற்றிலுமாக ஒழிக்கப்படாவிட்டாலும் ஓரளவிற்கு இக்குலத்தொழில் முறை மறைந்து இருக்கிறது எனலாம்.
சுடலை முத்து
இசக்கி முத்துவின் மகன் தொழிலில் தந்தைக்கு வாரிசு மட்டும்தான் சுடலைமுத்து, அவன் செயல், நடை, உடை, பழக்க வழக்கம் அனைத்துமே தன் தந்தை மற்றும் பிற தோட்டிகளிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவன். தன் தந்தைக்குப் பிறகு தானும் தோட்டியாகி விட்டால் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்பதை அவன் சிந்தித்து வைத்திருந்தான்.
தனது தந்தைக்குப் பிறகு தான் தோட்டியாகக் கூடாது என்று, ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவனையும் தோட்டியாக்கியது. தனது தந்தையின் தோற்றத்தை கண்டு தனது முகம் தன்னையறியாமல் இப்படி வக்கிரமாக இழுத்துக் கொண்டு விடுமோ? அதாவது அப்பனுக்கு மூக்கைச் கூழ்ந்துள்ள சதை, நாசித்துவாரத்தை அடைத்து விடுவது போல் சுருங்கி, கோணிப்போயிருந்தது. அதோடு மேலுதடும், மேல்நோக்கி வளைந்திருந்தது. முதன் முதலாவதாக வாளியும், மண்வெட்டியும் ஏந்தியபடி கக்கூசினுள் நழைந்த போது முகம் வலித்துப் போயிருக்கலாம். தனக்கும் அப்படி நேரும் என அச்சப்பட்டான். மேலே கூறியது போல தோட்டிகளின் தோற்றம் இவ்வாறு இருக்க, சுடலைமுத்து முற்றிலும் வேறுபட்டு காணப்பட்டான். பொடி மீசை வைத்துக் கொண்டு, உடம்பு சற்றுப் பருந்திருந்தது. அவனது பனியனும் நிஜாரும் துவைத்துக் கட்டியது. பார்ப்பவர்களுக்கு அவன் சாதாரணத் தோட்டியல்ல என்று கூறும் படியும், தொழிலுக்குரிய உபகரணங்களை ஏந்திச் சென்றிராவிடில் அவன் தோட்டிதாளை என்றுகூடச் சந்தேகம் வரும் அளவிற்கு அவன் தோற்றம் இருந்தது.
பணத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளத் தெரியும், மேலும் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும் தெரிந்து கொண்டான். கள் குடிக்க மாட்டான். முன் தினம், குடி போதையில் நினைவில்லாமல் வீதியோரம் எங்காவது படுத்துறங்கிவிட்டு, காலையில் வேலைக்கு வரும் பிற தோட்டிகள் போன்று இல்லை சுடலைமுத்து. அவனை நுட்பமாகக் கவனித்தால், அவன் கண்களில் தோட்டியின் பேடித்தனமும், தன்னையே கல்லியாக, அற்பமாக எண்ணிக் கொள்ளும் தாழ்ந்த மனப்போக்கும் இல்லை. அதே போன்று அவசியமில்லாமல் யாருக்கும் தலைகுனிய பண்பு மிகவும் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்றால் அவனைத் தொடர்ந்து வரும் அடுத்த தலைமுறை ஒருநாளும் தோட்டிகளாக இருக்கக் கூடாது என்று அவன் திடமாக எண்ணினான்.
இல்லற வாழ்க்கைக்கு காதல் மிக முக்கியமானது தோட்டிகள் ஒன்று சேரும் மலக்கிடக்கில் வள்ளி என்பவளைச் சந்திக்கின்றான். அவளிடம் பேசும் போதே தனது ஆசைகள், எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டியவை என ஏராளம் இருப்பதாகச் சொன்னான்.
வள்ளிக்கும், சுடலைமுத்துவிற்கும் திருமணம் முடிந்தது. மணம் முடிந்த மறுநாளே பழங்குடிசை செப்பனிடப்பட்டது. தட்டிகளால் மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தரைக்கும் புதியசிமிண்டு மொத்தத்தில் அந்த வீடு மற்றைய சேரி வீடுகளிலிருந்து மாறுபட்டிருந்தது. இப்படிப் புதுப்பிக்கப்பட்ட வீட்டுக்குத்தான் சுடலை தன் மனைவியை அழைத்துச் சென்றான்.
ஒரு வீட்டுக்குத் தேவையான எல்லாச் சாமான்களும் அங்கிருந்த செம்புப் பாத்திரங்கள், தவலைகள், குவளைகள் எல்லாம் இருந்தன. கட்டிலும் பெட்டிகளும் கூட இருந்தன. அறையின் ஒரு மூலையில் முருகக் கடவுளின் படம் ஒன்று மாலை அலங்காரத்துடன் காட்சியளித்தது.
வள்ளி பூரித்துப் போனாள். இங்கு மட்டுமல்ல தன் அத்தையுடன் அவன் வசித்து வந்த கடலோரத்துத் தோட்டிகள் காலனியிலும் கூட இவ்வளவு நல்ல வீடு கிடையாது. இவைகளை நோக்கும் போது வள்ளி தனது கணவன் பணக்காரன் தான், அவன் வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் அவளுக்குச் சொந்தம் என்று எண்ணும் போது பெருமை மீறிட்டது.
சுவைக்கும் சக்தி தோட்டியின் நாவிற்கும் உண்டு. தோட்டியின் நாசிக்கும் நறுமணங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தோட்டியின் சருமத்திற்கும் ஸ்பரிச உணர்வு இருக்கிறது. நல்ல இன்பமான இராகங்களை அவனும் கேட்டு அனுபவிக்கின்றான். இந்த உண்மைகளை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தனது மனைவி வள்ளியை சுடலைமுத்து முழுவதுமாக மாற்றி இருப்பதைக் கண்டு வள்ளியை வளர்த்த அத்தை மிகவும் பூரித்துப் போனாள். அழகாக உடுத்தி, தலை சீவிக் கொண்டை போட்டு, பொட்டு இட்டுக் கொண்டு, வாளிப்பான தேகக் கட்டுடன் நிற்கும் ஒரு புதிய பெண்ணைப் பார்த்தாள்.
சுடலை முத்துவின் மகன் பெயர் மோகன் அவன் வேலை செய்யும் அனைத்து வீடுகளிலும் குழந்தையின் பெயரைச் சொன்னான். மோகன் என்பது பெயர் செல்லப்பெயர் பேபி என்று, பலரும் ஏளனம் செய்தார்கள். தோட்டியின் மகனுக்கு மோகன் என்று பெயரா?
குழந்தைக்கு நல்ல பெயர் சூட்ட கூட உரிமை இல்லை. ஒரு தோட்டி ஒரு குடும்பத்தைக் கட்டி வளர்த்துத் தன் குழந்தையைப் பெரிய மனிதனாக்கி விடலாம் என்று எண்ணுவது சாத்தியம் இல்லை என்பதைச் சுடலை புரிந்து கொண்டு, சுடலை தன் மகனைப் பள்ளியில் சேர்ப்பது கூட தடையாக இருந்தது. ஆனால் அந்தப் பள்ளியில் அவ்வளவு சுத்தமக வரும் குழந்தை வேறு யாரும் கிடையாது.
சுடலை முத்து வசித்து வந்த சேரியில் காலரா பரவியது. அங்கு வசித்த ஒவ்வொருவரும் இறந்து போனதால் பயந்து தனது மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போகலாம் என்ற தீர்மானித்தான். தன் குழந்தையும் தாய் தகப்பனை இழந்து அனாதை ஆகக் கூடாது என்று எண்ணினான்.
ஆனால், அவனுடைய எந்த ஆசையும் நிறைவேறாமல் காலரா நோயினால் தாக்கப்பட்டு சுடலை, வள்ளி இருவரும் இறந்து போனார்கள். மோகன் தோட்டியின் மகனாக அந்த நகரத்தில் உலா வந்து கொண்டிருந்தான். சுடலை பயந்து நடந்து விட்டது.
இக்கதை நிகழ்ந்த கால கட்டம் 1957ம் ஆண்டு சூழ்நிலை. ஆனால், இன்னும் இதில் மாற்றம் இல்லை.