தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
36.க. நா. சுப்ரமணியத்தின் சிறுகதைகளுக்கான கதைக்களத் தேடல்
முனைவர் நா. ஜானகிராமன்
சிறுகதைக்கான களங்கள் ஆசிரியரைப் பொறுத்து மாறுபடுகின்றன. படைப்பாளன் தாம் வாழ்கின்ற சூழல் மற்றும் வாழ்விடம் சார்ந்த நபர்களால் கதைக்களங்கள் தீர்மானிக்கப்பெறுகின்றன என்கின்றனர் அறிஞர்கள். இலக்கியங்கள் படைப்பாளர்களின் மனதில் ஏற்படும் தாக்கங்களாலும் (Influence), பாதிப்புகளாலும் (Suffer) உருவாகின்றன. ஒரு படைப்பு சிறப்புறவும் வெற்றிபெறவும் கதைக்களத் தேடல்களிலும், புரிதல்களிலுமே வெற்றியடைகின்றன என்பது முற்றிலும் உண்மையாகும். எட்கர் ஆலன்போ இதற்குப் பல சான்றுகளைத் தருகின்றார். அனைத்துப் படைப்புகளும் எழுத்தாளனின் கதைக்களத் தேடல்களிலேயே நாட்கள் பல போகின்றன. சில படைப்பாளர்களை அணுகிக் கேட்கையில் எனக்குக் கதைக்கரு அல்லது கதைக்களம் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். ஒவ்வொரு படைப்பாளரின் அனுபவத்திற்கு ஏற்பவும் பழகும் கதைமாந்தர்களுக்கு ஏற்பவும் கதைக்களம் மாறுபாடு அடைகின்றது. கதையும் வெற்றியடைகின்றது. க. நா. சுப்ரமணியமும் கதைக்களத் தேடலுக்கான வித்தகர். அவர் பல கதைக்கருவினையும், கதைக்களத்தையும் தேடி அதில் வாசகர்களை ஒன்றவைத்தவர். அவர் தேர்ந்தெடுத்த சில கதைக்களங்களைப் பற்றியும் அவற்றில் ஆசிரியரின் ஆளுமைப்பற்றியும் பல்வேறு கோணங்களில் நோக்கலாம்.
க. நா. சுப்பிரமணியம்
வலங்கைமானில் பிறந்த க. நா. சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட க. நா. சு தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். இராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது.
* தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதிமணி க. நா. சு. வின் மருமகன்
* சர்மாவின் உயில், பசி, வாழ்வும் தாழ்வும், சக்தி விலாசம், ஏழு பேர், ஒரு நாள், புழுதித்தேர், மால்தேடி, நடுத்தெரு, கோபுரவாசல், பொய்த்தேவு, அசுரகணம், பித்தப்பூ ஆகியவை இவர் எழுதிய நாவல்களாகும்.
* விமர்சனக் கலை, படித்திருக்கிறீர்களா, உலகத்து சிறந்த நாவல்கள், இலக்கிய விசாரம் போன்றவை இவர் எழுதிய விமர்சனக் கலை நூல்களாகும்.
* அன்புவழி, தபால்காரன், மதகுரு, நிலவளம், மிருகங்கள் பண்ணை (Animal Farm) ஆகியவை இவர் எழுதிய மொழிபெயர்ப்புப் படைப்புகளாகும்.
சிறுகதைப் படைப்புகள்
1940 களில் இருந்தே பல்வேறு சிறுகதைகளை எழுதி வந்தவர் க. நா. சு. ஏறத்தாழ 67 சிறுகதைகளை எழுதியுள்ளார். “தெய்வ ஜனனம்”தொடங்கி “கபாலி” என்பது வரையிலான கதைகள் அனைத்தும் சிறப்பு பெற்ற கதைகளாகும். இவர் தேர்ந்தெடுத்த அனைத்துக் களங்களும் மிக இயல்பாக அனைவரும் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் மற்றும் சூழல்களாக அமைந்துள்ளன. பொதுவாக ஓர் படைப்பு ஜனரஞ்சக இயல்பைப் பெற்று விட்டதென்றால் அது ஓர் இயல்பான படைப்பாகி விடுகின்றதெனலாம். மக்கள் இலக்கியம் என்ற சொல்லக்கூடியது இதுவே ஆகும்.
மக்களின் நன்மதிப்பைப் பெற்ற இலக்கியங்கள் மக்கள் சார்ந்த சிக்கல்களையும் அதனை அவிழ்ப்பதற்குமுரிய தீர்வுகளையும் சொல்லியாக வேண்டும். க. நா. சு. வின் கதைகளில் இது உள்ளது. மேலும், தமிழ்ப்பண்பாட்டுப் பதிவுகளை மெல்லிய இழையில் ஓடவிட்டு அதனை அழுத்தமாகப் பதிவு செய்தவர் சுப்ரமணியம் என்றால் அது மிகையில்லை.
க. நா. சு. வின் இலக்கிய ஆளுமைகள் பின்வரும் பாகுபாடுகளில் தனிச்சிறப்பு பெறுகின்றன. அவற்றுள் முக்கியமானது தமிழ்ப்பண்பாடு மற்றும் கலைகள், அவரின் முதல் சிறுகதையே இதற்குச் சான்றாய் விளங்குகின்றது. 1943-ல் எழுதிய இவரின் சிறுகதையில் குறிப்பிட வேண்டியதாகும். ஏறத்தாழ 45 ஆண்டுகள் எழுதியுள்ளார்.
க. நா. சுவின் ஆளுமைகள்
உறவுகள், தெய்வ நம்பிக்கை, தனிமனிதம், சமூகம், கலைகள், கற்பனை, தனிமனித உணர்ச்சி, பொதுப்பண்புகள், இல்லறம், துறவு, பிராமணியம், தமிழம், வரலாற்றுக்குறிப்புகள், நம்பிக்கை, எளிமை, கேலி, ஆழ்மனம், இறைநட்பு என இந்தப்பாகுபாடுகள் மிகக் குறுகியதாக இருப்பினும், இவரது படைப்புகளில் பல்வேறு ஆளுமைக் கூறுகள் பொதிந்துள்ளன.
இறையுணர்வு வெளிப்பாடு
“தெய்வ ஜனனம்” என்னும் தலைப்பில் க. நா. சு எழுதிய சிறுகதை பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக உள்ளது. இக்கதையில் வரும் பாத்திரங்கள் உலகளாவிய சிந்தனைகளை முன்வைக்கின்றன. தமிழர்களுக்குத் தம் திறமையில் என்றும் நம்பிக்கை வைப்பது கிடையாது என்பதை உணர்த்தியுள்ளார். பூம்புகார் நகரத்தைப் பொன்பரப்பும் நகரம் என்று வருணித்துள்ளார். காவிரிப்பூம்பட்டினம் என்ற நகர் கந்தர்வர்கள் வந்து உலவும் நகரம் பாலும் என்றும் உவமிக்கின்றார். பத்து நாட்கள் நடக்கும் சிற்பத் திருவிழாக் கண்காட்சியில் ஐம்பத்தாறு தேச சிற்பிகள் வந்து தத்தம் சிற்பங்களை வைத்துள்ளார்கள். அவற்றுள் தமிழ்சிற்பியின் சிற்பமும் காட்சியளிக்கின்றது. ஆனால், அது மறைந்திருக்கின்றது. அது ஏன் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கு க. நா. சு தரும் விளக்கம் பல. இருப்பினும் தமிழர்களுக்கு அவரவர் திறமை மீது நம்பிக்கை வெகுவாகக் குறைந்தே காணப்பெறுகின்றது என்பதை வலியுறுத்தியுள்ளார். அந்தச் சிற்பத்தைச் செதுக்கியவன் சாதாரணமானவன் அல்லன். அவன் ஓர் தேவலோகச் சிற்பி, அவன் பெயர் மயன். அவனுக்கு ஏன் மயன் எனப் பெயர் வந்துள்ளது தெரியுமா? அவன் மாயவரத்தில் பிறந்தவன் என்பதாலேயே என்னும் காரணத்தை முன்வைக்கின்றார். அவ்வப்போது கதையில் சுந்தாப்பாட்டி வந்து போகின்றாள். தம் 67 கதையிலும் இப்பாட்டி வருகை குறிப்பிடத்தகுந்தது. பெரும்பாலும் கதையின் நிகழ்வுகள் களங்கள் முடிந்துவிடும். ஆனால், இவரின் கதையில் வரும் பாத்திரங்கள் சில தொடர்ந்தே அனைத்துக் கதையிலும் வருகின்றது. யவனச் சிற்பி பிராக்டிலிஸ் மற்றும் வசுதேவன் வடித்த சிற்பங்கள், நேபாளத்திலிருந்து வந்த பதுமன் ஆகியோர் வடித்த சிற்பங்களைத் தமிழக மக்கள் பார்வையிடுகின்றனர். ஆனால். தமிழகத்துச் சிற்பி வடித்த ஒளிவடிவச்சிலை மட்டும் யவன நாட்டுச்சிற்பியால் கண்டெடுக்கப்படுகிறது. இங்கே ஆசிரியர் இறையுணர்வுக் காட்சியையும் தமிழகத்துச் சிற்பத்துக் கலையினையும், நடராசபெருமானின் திருவடி நடனத்தையும் பதிவு செய்கின்றார் க. நா. சு. ‘இது உருக்கிய உலோகமுமல்ல, செதுக்கிய கல்லுமல்ல, பிசைந்து வைத்த மண்ணுமல்ல, ஒளியையே பிடித்து வடிவாகச் சமைத்து வைத்திருக்கிறானடா! என்றான்’ என்னும் வகையில் பிரமிப்புச் செல்கிறது.
தனிமனிதப் பாத்திரங்கள்
பாத்திரங்கள் கதைக்களமாக இருப்பதைக் காணமுடிகிறது. சாம்பமூர்த்தி மற்றும் சீதாராமன் ஆகியோர் மனவுணர்வுகள் கதைகளாகி விட்டன. சாம்பமூர்த்தியின் வாழ்க்கை நிகழ்வுகளைப் படிக்கும்போது ஒரு நாவலுக்கான உணர்வு எழுகிறது. வசதி படைத்த தமது தந்தை சேகரித்து வைத்துள்ள சொத்துகள் அனைத்தும் பின்னாளில் குறைய மனைவியின் உடல்நலம் குன்ற சேகரித்து வைத்த சொத்துகள் ஒவ்வொன்றாய்க் குறைகிறது. “குந்தித்தின்றால் குன்றும் மாளும்” என்ற பொன்மொழிக்கேற்ப வளம் குன்றிய வாழ்க்கையாகிறது சாம்பசிவத்தின் வாழ்க்கை. தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட சோகத்தை மறைக்க தாசி, மதுவுக்கு அடிமையாகிறார் சாம்பமூர்த்தி. இருந்தாலும் மனம் அதில் ஒட்டவில்லை. ஆனால் குடிப்பழக்கத்திலிருந்து அவரால் முடியவில்லை. ஒருநாள் குடித்துவிட்டு மணிக்கூண்டைப் பார்த்த படியே செல்கிறார். அந்த மணிக்கூண்டில் உள்ள முள்ளானது தம்மைத் துரத்தி வந்து குத்துவது போல உள்ளதாகக் கதை சித்திரிக்கப் பெற்றுள்ளது. தானதர்மங்கள், குடி, கூத்திகள், இப்படியாக முக்கால் வாசிக்கு மேல் மறைந்து விட்டது. எஞ்சி இருந்தது ஒரு வீடு மட்டும் தான். நிலத்தில் ஒன்றிரண்டு வேலிதான் மிச்சம். இவ்வாறு சாம்பமூர்த்தியின் வாழ்க்கை செல்கிறது. ஒவ்வொரு தனிமனிதவாழ்விலும் எல்லை இதுவாகவே அமைகின்றது. விதியின் வழியே மதி செல்லும் என்பதற்கும் விதியைவிட வலியது ஒன்றுமில்லை என்பதற்கும் சாம்பமூர்த்தியின் வாழ்க்கை ஒரு உதாரணமாகும். எல்லோர்க்கும் வாழ்வில் விரக்தி உண்டு. விரக்தியின் விளிம்பில் நிற்கும் மனிதர்கள் என்றாவது ஓர்நாள் மீண்டு வருவோம் என எண்ணுவதும், அது பின்னாளில் முடியாமல் போவதும் வாழ்க்கை நிகழ்வுகளாகி விடுகின்றன. இவரது கதைகளிலும் இதனைக் காணலாம்.
பெண்மனம் சார்ந்த உணர்வுகள்
பெண்மனம் சார்ந்த உணர்வுகள் களமாக்கப்பட்டுள்ளன. இரு மனைவியர் கட்டிக்கொண்ட ஒருவன் தம் மூத்த மனைவியின் பிள்ளைக்குச் சொத்தில் பாகம் சரியாகக் கொடுக்காமல் வஞ்சனை செய்தால் பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும் என்பதே இந்தச் சிறுகதையின் களம் மற்றும் கரு. உலகில் பலர் இத்தகைய செயல்களையே செய்கின்றனர். “தன் கணவன் உயிரோடு இருக்கும்போது செய்த அக்கிரமங்கள் போதாதென்று இறந்த பிறகும் மூத்தாள் பிள்ளைக்கு அநீதி செய்ய முயலுகிறாரே என்று லட்சுமிக்கு மிகவும் வருத்தம். தம் மூத்த பிள்ளையை ஒதுக்கிவிட்டு மற்ற மூவருக்கும் தம் ஆஸ்தியைச் சமமாகப் பங்கிட்டு அவர் உயில் எழுதியபோது அவள் தன்னால் ஆனவரையில் ஆட்சேபித்துப் பார்த்தாள். தர்ம நியாய சாஸ்திரங்களில் புலியான சுப்பையா தீட்சிதர் அவள் பேச்சைக் காதில் வாங்கவே இல்லை” என்னும் வரிகள் பெண்மனச் சிதறல்களை வெளிக்காட்டுகிறது. க. நா. சு. அவர்கள் இத்தகைய பல நிலைகளில் உள்ள பெண்களில் மனக்குமுறல்களைப் படம்பிடித்துள்ளார்.
மாயை மற்றும் மனப்பிரம்மை
மாயை மற்றும் மனப்பிரம்மையை வைத்துப் பல ஆசிரியர்கள் கதைகள் பின்னியுள்ளனர். அவற்றுள் இக்கதை மிகவும் சுவாரஸ்யமானது. திருமண நிச்சயதார்த்த விழாவில் அனைவருக்கும் விருந்து கொடுக்கப்பட்டு வெற்றிலைப்பாக்கு வழங்கப்பட்டது. முற்றத்தில் வந்திருந்த மக்கள் திடிரென்று கூச்சலிட்டனர்.
இதனை, “திடிரென்று சபை அல்லோப்பட்டது. சபா தாம்பூலத்தில் வைத்து வழங்கிய வெற்றிலையில் வைத்திருந்த பாக்கெல்லாம் தேளாக மாறிவிட்டது. கையில் தாம்பூலத்தை வாங்கியவர்கள் “ஐயோ தேள்” என்று கீழே போட்டார்கள். ஏற்கனவே கையில் வாங்கி வைத்திருப்பவர்கள் கையில் ஏதோ நகருவது போன்று உணர்ந்தார்கள். தேள்! தேள் என்று பதறினார்கள். கல்யாணவீடெல்லாம் தேளாக மாறிவிட்டது” என்று நிறைவு செய்கிறார். மனதில் உள்ள அதீதக் காட்சி இவ்விடத்து வெளிப்படுவதை உணரமுடிகிறது. படைப்பாளனின் மனநிலையும் மக்களின் மனநிலையும் ஒன்று சேர்வது இவ்விடத்தில்தான். ஏற்கனவே சுடுகாட்டைக் கடந்துவரும் ஒருபாத்திரம் வீடடைந்து பிறகு பேய் வருவதைப்போலவே உணரும் மனநிலையை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
தொகுப்புரை
க. நா. சு. சிறந்த இலக்கிய விமர்சகர். பல படைப்புகளை வெளியிட்டுள்ளார். தமது சிறுகதையில் பல்வேறு உணர்வுகளைக் களமாக்கியுள்ளார். பாத்திரங்கள் களமாகியுள்ளன. 67 சிறுகதைகளில் உள்ள ஆளுமைகள் பல “தெய்வ ஜனனத்தில்” வெளிப்பட்டுள்ளது. மயன், சித்ராந்தகி, ஐம்பத்தாறு தேசங்கள் போன்ற செய்திகள் தமிழகத்தின் பாரம்பரியத்தைக் காக்கின்றன. வசதி படைத்தவர்கள் வறுமைக்குள்ளாவதும், வறுமையுற்றவர்கள் மீண்டு வருவதும் இயல்பாகும். இத்தகைய பதரப்பட்ட வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். பெண்மனவுணர்வுகள் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. சாம்பமூர்த்தி போன்ற பாத்திரங்கள் தனிமனித உணர்வுகளைக் காட்டுகின்றன.
துணைநூற்பட்டியல்
1. ஞானசம்பந்தன். அ. ச, இலக்கியக்கலை, பாரிநிலையம், சென்னை (1985)
2. மதியழகன். மா, நவீனத்தமிழ் இலக்கியம், நியு செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை ( 2002)
3. தமிழவன், இலக்கியக் கருத்தாடல், பாரிநிலையம், சென்னை (2003)
4. வையாபுரிப்பிள்ளை. எஸ், இலக்கியச் சிந்தனைகள் (1978)
5. வரதராசன். மு , இலக்கியத்திறன் (1987)
6. ராகவையங்கார். வ , தற்காலத் தமிழிலக்கியம் (1980)
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.