தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
37.சு. சமுத்திரத்தின் 'மானுடத்தின் நாணயங்கள்' காட்டும் பெண்மனம்
முனைவர் செ. தட்சிணாமூர்த்தி
முன்னுரை
இலக்கிய வடிவங்களுள் சிறுகதை என்பதும் ஒன்று. இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பரப்பில் பெரும்பகுதியைத் தழுவிக் கொண்டிருக்கும் சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என்ற நான்கு கோணங்களுள் சிறுகதையின் பரப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சமுதாயச் சிக்கல்களையே கருப்பொருளாகக் கொண்டு விளங்கும் சிறுகதைகளைப் படைக்கும் எழுத்தாளர்களில் சு.சமுத்திரம் குறிப்பிடத்தக்கவர். அவருடைய படைப்புகளில் ‘மானுடத்தின் நாணயங்கள்’ என்னும் சிறுகதையினை இக்கட்டுரை ஆராய்கிறது.
இலக்கியங்களில் பெண்மை
வாழ்க்கையை வகுத்துக் காட்டிய தொல்காப்பிய நூலில் காதல், காதல் மண உரிமை கூறியபோதும் குடும்பத்தில் கட்டுப்பாடுகள் இருந்தன. புற உலகில் வேலை செய்யவோ, கணவனுடன் கடல் கடந்துச் செல்லவோ உரிமை அளிக்கப்படவில்லை. 'முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை' என்று (தொல்காப்பியம்-பொருள் அகத்திணையில்) இலக்கணம் வகுத்துள்ளார்.
சங்க இலக்கியங்களில் 'மகளிர்க்கு ஆடவரே உயிர்' ஆகவும், குடும்பப் பொறுப்புகளே பெண்ணின் கடமையாகவும் உடைமையாகவும் போற்றப்பட்டன. திருக்குறளில் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் எனும் அதிகாரமே வகுத்துப் பெண்ணின் கடமையை வகுத்துள்ளார். சங்ககாலச் சமுதாயத்திலும் சரிநிகர் சமத்துவம் காணப்படவில்லை என அறியமுடிகிறது.
பெண்ணின் பெருமையைப் பேச வந்த முதற்காப்பியம் சிலப்பதிகாரம். மணிமேகலையும் பெண்ணையே காவியத் தலைவியாகக் கொண்டது. ஓர் ஆண் எட்டு பெண்களை மணக்கலாம் என்பதை சீவகசிந்தாமணி காப்பியம் காட்டுகிறது. ஆனால் பெண்களின் பெருமைகளும் பேசப்பட்டன. குடும்பக் கடமைகள், கணவனைப் பேணுதல், விருந்தோம்பல், இல்லறத்தைச் சிறப்பாக நடத்துதல் ஆகியவை மகளிரின் பொறுப்புகள் ஆயின. முழு உரிமை பெற்ற பெண்ணுலகு காட்டப்பெறவில்லை.
சமய நிலையில் பெண்களை சமயத்திற்குத் தடை எனக் கருதினர். பெண்களின் வாழ்வை இருளடையச் செய்தனர். ஆண் பிறப்பு உயர்வாக மதிக்கப்பட்டது. பெண்களின் வாழ்வும் வளமும் இடைக்காலத்தில் ஒளிமங்கி இருந்தன என்பதும் அறியத்தக்கது. இக்காலத்தில் பெண் உரிமை, பெண் விடுதலை, சமத்துவம் பற்றி கவிஞர் பெருமக்கள் தம் எழுத்தாலும், பேச்சாலும் போராடி பெண் மக்களின் உயர்வுக்கு பாடுபட்டனர்.
பாரதி கண்ட இலட்சியப்பெண்,
'நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்...'
உடையவள் எனச் சுட்டியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் பெண்ணின் பெருமையை நன்கு உணர்ந்தவர்கள். அதனால்தான்,
'மங்கையராகப் பிறப்பதற்கே -
நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மா...'
எனக் கவிமணி பெண்ணின் அருமையைக் கவிதை நயத்தாலே 'மலரும் மாலையும்' என்ற நூலில் பெண்மையைப் போற்றியுள்ளார். சிறுகதை ஆசிரியர்களும் பெண்ணின் பெருமையை உணர்ந்து தமது படைப்புகளில் உயர்வாகப் படைத்துள்ளனர்.
நாவல் மற்றும் சிறுகதைப் படைப்பாளர்களில் சற்று வித்தியாசமானவர் சு.சமுத்திரம். இவர் மன உறுதியுள்ள பெண்கள் உருவாக வேண்டும் என்ற ஆவலும் அக்கறையும் கொண்டு எழுதி உள்ளார். ‘மானுடத்தின் நாணயங்கள்’ எனும் சிறுகதையில் வரும் சிவகாமி பாத்திரமும் பழைய மரபை மீறிப் புதுமரபை உருவாக்கும் புரட்சிப் பெண்ணாகப் படைத்துள்ளார்.
சிறுகதையின் சுருக்கம்
சு. சமுத்திரம் தனது படைப்புகளில், குடும்பக் கதைகளில் பணக்காரக் குடும்பம், நடுத்தரக் குடும்பம், ஏழைக்குடும்பம் என மூன்று பிரிவாகப் பிரித்துள்ளார். இவ்வாறு அமைத்துக் கொள்வது அவரது படைப்பாற்றலின் தனித்தன்மையைக் காட்டுகின்றன. 'மானுடத்தின் நாணயங்கள்' எனும் சிறுகதையினை நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த கதையாக எழுதியுள்ளார்.
சிவகாமி சராசரி மாந்தர்களைப்போல், குடும்பத்தில் வாழ்ந்து வருபவள். சிவகாமியின் கணவன் மார்த்தாண்டம் தகாத உறவை (ராக்கம்மாவுடன்) ஏற்படுத்திக் கொண்டு, தன்னை நம்பி வந்த மனைவியை அடித்துத் துன்புறுத்தி வரதட்சணைக் கேட்டு, அவளது தம்பி (தங்கராஜா)யிடம் விட்டுச் சென்றான். தங்கராஜா தன் அக்காவிடம் தான்படும் துன்பத்தையும் எடுத்துக் கூறினான். பிறந்த வீட்டை நோக்கி பயணம் செய்த சிவகாமி தன் நிலை அறியாது இருந்தாள். பின்பு தன் நிலையை உணர்ந்த பிறகு குழந்தையை தூக்கிக் கொண்டு எவருக்கும் சுமையாக இருக்கக்கூடாது என எண்ணி மானுடத்தின் நாணயங்கள் எங்கே உள்ளது என்பதைத் தேடி புறப்பட்டாள்.
சிவகாமியின் அமைதி
உலகில் மிகப்பெரிய ஆயுதம் 'அமைதி' ஆகும். இக்கதையில் வரும் சிவகாமியும் அமைதிப் புரட்சி செய்திருக்கிறாள். இல்லறத்தின் அடிப்படை 'அன்பு' ஆகும். அது பிற உயிர்கள்மேல் அருள் பிறக்கச் செய்யும் காரணியாக அமைந்துவிடுகிறது. இதனைத் திருக்குறள்,
'அருளென்னும் அன்பீன் குழவி'
அருளைக் குழந்தையாகவும், அன்பைத் தாயாகவும் குறிப்பிட்டுள்ள வள்ளுவர்,
'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்'
எனக் கூறிய பெண்ணாக விளங்குபவள் சிவகாமி ஆவாள். தெய்வமாக எண்ணிய கணவன் கேட்க கேட்க, தன்னிடம் இருந்த இருபது பவுன் தங்க நகைகளையும், ரூபாய் பத்தாயிரத்தையும் கொடுத்த பின்பு எங்கே பொருள்கள் என கேட்காது, அமைதியாக விளங்கிய மற்றொரு கண்ணகியாக சிவகாமி விளங்கினாள்.
கணவன் மார்த்தாண்டம் தகாத உறவை ராக்கம்மாவிடம் ஏற்படுத்தி உன் அப்பாவால் எனக்கு இரண்டாயிரம் நஷ்டம் ஆனது. உன் அப்பாவிடம் சென்று 2000 ரூபாய் வாங்கி வா எனக் கூறும்போது,
'அப்பாவும் நீங்களும் கூட்டா வியாபாரம் பாத்தீங்க அவரு... நீங்க ரெண்டாயிரம் ரூபாய் தரணும்னு சொல்றார். நீங்க அவர்தரணுமுன்னு சொல்றீங்க... அந்தக் கூட்டு உடைஞ்சதுக்கு இந்தக் கூட்டை ஒடைச்சால் எப்படி' எனச் சொல்லப் போனாள்.
ஆனால், சிவகாமி ஆணின் ஆதிக்கத்திற்குப் பயந்து அமைதியாக இருந்தாள். ஆனால், பிறகு அனைத்தும் கெட்டு அழிந்து மார்த்தாண்டம் இந்த சிவகாமியைத் தேடி மீண்டும் வருவான் என்பது மட்டும் உண்மை.
அன்பு
கணவனால் துரத்தப்பட்டு தம்பியிடம் விட்டுச்சென்ற பின் தம்பி தங்கராஜைப் பார்த்தாள். உழைப்பாளியான தங்கராஜா தன் அக்கா கைக்குழந்தையோடு நிற்பதைக் கண்டான்.
'சிவகாமியின் தம்பி தங்கராஜா இரண்டு வாழைக்குலைகள் சைக்கிள் பாரில் கட்டப்பட்டிருக்க கேரியரில் ஒரு மூட்டை கத்திரிக்காய் சவாரி செய்ய, ஹாண்ட்பாரில் இரண்டு பெரிய பைகள் தொங்க வந்து கொண்டிருந்தான். அக்காவைப் பார்த்த அதிர்ச்சியிலோ அல்லது ஆனந்தத்திலோ பாலன்ஸ் போக, கீழே விழுந்தான். கடைப்பையன் ஓடிப்போய் அவனைத் தூக்கிவிட்டான் முழங்காலில் ரத்தம் கசிந்தது.
சிவகாமி தம்பியை ஏறிட்டுப் பார்த்தாள். லேசாகத் துடித்த உதடுகளைக் கடித்துக் கொண்டே மீண்டும் பாதாளச் சாக்கடைக்குள் கண்களை விட்டாள். கீழே விழுந்து அடிப்பட்டு ரத்தம் கசிவதைக் கண்ட சிவகாமியின் உள்ளம் துடித்தது. ஆனால், வெளிக்காட்டாது அமைதியாக இருந்த பெண்ணின் அன்புள்ளத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
தன்னை அறிந்த சிவகாமி
தன் தம்பியைச் சந்தித்த பின் பொறந்த வீட்டின் கஷ்டத்தையும் நினைத்து, தான் யாருக்கும் சுமை ஆகிவிடக்கூடாது என எண்ணினாள். சென்னை எழும்பூரில் ரயிலில் ஏறியவள் மதுரையில் இறங்கினாள். மீனாட்சி அம்மன் கோயில் முன் வந்தாள். கண் தெரியாதவர்கள், ஊனமுற்றவர்கள், ஞானம் பெற்றவர்கள் கோயிலைச் சுற்றி அமர்ந்து இருந்த அனைவரையும் கண்டாள். தனக்காக ஒதுக்கப்பட்ட இடமோ என எண்ணி துண்டை விரித்துக் குழந்தையைப் போட்டாள். மானுடத்தின் நாணயங்கள் துண்டில் கீழே விழுந்தன.
முடிவுரை
சு. சமுத்திரம் படைத்த சிவகாமி வயிற்றுக்கும் வாய்க்கும் போராடுபவள் அல்ல. உண்பதும் உடுப்பதும் உறங்குவதும் மனிதப்பிறவியின் இலட்சியமாகாது என்பதை உணர்ந்தவள். அடிமை எனும் அடைப்புக்குறியை அழிப்பவள். குடும்பச் சிக்கலில் சிக்காது விழிப்புணர்வுடன் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டவள். சமுதாயத்தில் 'மானுடத்தின் நாணயங்கள்' எனும் மனிதர்களின் நன்மதிப்பைத் தேடிச் சென்றவள்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.