தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
38.நாஞ்சில் நாடனின் பெருந்தவமும் விளிம்பு நிலை மக்களும்
முனைவர் இரா. அறிவழகன்
மனிதன் தனது வாழ்வியல் அனுபவங்களைப் படைப்பாக்குகிறான். அதன் வழியாக அவனுடைய கால சமூக வாழ்வியக்கங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இலக்கிய உலகின் வேறுபட்ட வடிவங்கள் அந்தந்த எல்லைகளுக்கு உட்பட்டு படைப்புகளாக உருவெடுக்கின்றன. சாதாரண மக்களைப் பற்றிய இன்றைய கவிதை, கதையாக்க மரபுகள் கவனம் பெறுகின்றன.
சிறுகதை
குதிரைப் பந்தயம் போன்று ஒரு நிகழ்வைக் கொண்டு தொடங்கி உச்சமெய்தி ஒரு முடிவிற்கு வருவது சிறுகதை எனலாம். வெறும் கதை என்பதாக இல்லாமல் சமூக பிரஞ்ஞையோடு எழுதப்படுவதால் அவை சிறப்புப் பெறுகின்றன. தமிழின் முதல் சிறுகதை முதல் இன்றைய கதைகள் வரை அதன் வளர்ச்சி நன்றாகவே இருக்கிறது.
பெருந்தவம்
நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகளில் ஒன்று பெருந்தவம். 1975ம் ஆண்டு வெளிவந்த விரதம் சிறுகதைகளில் தொடங்கி முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது படைப்புகளில் நாஞ்சில் நாட்டு மக்களும் மொழியுமே முதன்மையாக வெளிப்படுகின்றன. இவர் சங்க இலக்கியங்களிலும், கம்பராமாயணத்திலும் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் கொண்டவர். இதுவரை 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள் என வெளியிட்டுள்ளார். சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், “சூடிய பூ சூடற்க“ சிறுகதைத் தொகுப்புக்காக 2010ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். (மு.வரதராசன், 2009, 341)
பெருந்தவம் எனும் கதையில் உழைப்பைப் பெருந்தவமாகக் காட்டுகிறார். உடல் உழைப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு, மக்களின் வாழ்வியலை அழகாகப் பதிவு செய்துள்ளார் நாஞ்சில் நாடன். இவர் படைத்துள்ள விளிம்பு நிலை மனிதர்கள் தான் வறுமையுற்ற போதும் பிறரின் மகிழ்வை விரும்பும் மனிதநேய மிக்கவர்களாகவே வாழ்கின்றனர்.
கிராமிய வாழ்வு
நாகரிக வாழ்வில் மறந்து போன பல பண்பாட்டு விழுமியங்கள் இன்னும் கிராமங்களில்தான் உள்ளன என்றால் மிகையாகாது. மனிதாபிமானம், நேர்மை, ஒழுக்கம் போன்ற சமூக மதிப்புகளோடு வாழும் அம்மக்களை தமது பெருந்தவம் கதையில் பதிவு செய்துள்ளார் நாஞ்சில் நாடன். பொழுது விடிந்ததும் தொடங்கும் எளிமை வாழ்வு சிறிய பொருளாதாரத்தோடு நிறைவு அடைகின்றது. அது அவர்களுக்கு நிறைவாக உள்ளது. அம்மக்களின் அறிவு, உழைப்பு ஆகியவையே இந்த உலகம் இயங்கக் காரணமாகின்றது.
விளிம்பு நிலை மக்கள்
கிராமியச் சூழலில் வாழ்ந்து சமூக இயக்கத்திற்குப் பெரிதும் துணை நிற்பவர்கள் விளிம்பு நிலை மக்களே. அம்மக்களின் அடிப்படைத் தொழில்கள் பல உயர் வகுப்பு மக்கள் உட்பட பலரின் வாழ்விற்குத் துணை புரிகின்றது. உணவு உற்பத்தி, உயிர்ப்பு போன்ற அத்யாவசியத் தேவைகள் விளிம்பு நிலை மக்களாலேயே நிறைவேற்றப்படுகின்றன. அத்தகைய விளிம்பு நிலை மக்களில் ஒருவரே நாஞ்சில் நாடன் படைத்துள்ள சிவனாண்டி பாத்திரமாகும். சிவனாண்டியின் ஒரு நாள் வாழ்வே இக்கதை. காற்றில் சேதி வந்ததும் சிவனாண்டி பெரிய சாக்கு ஓட்டைகளைத் தைத்து, சீர் பார்த்து, வாய்க்கட்டும் சணலால் சுருட்டிக் கட்டி வைப்பான். சேவல் கூப்பிட எழுந்து, உமிக்கரியால் பல் துலக்கி, முகம் கழுவி, உப்புப் போட்டு ஆற்றிய பழஞ்சித் தண்ணி இரண்டு போணி குடித்து, சாரத்தை மடித்துக் கட்டி, துவர்த்தை தலையில் சுற்றி, கூப்புக்கு மலை ஏறத் துவங்குவான்.
தடம் தெரியும் போதே ஊர் தாண்டி, வயற்காடுகள் தாண்டி, ஓடைக்கரை தாண்டி, பனை விளைகள் பல கடந்து, சுடலை மாடன் காவல் காக்கும் மயான பூமிகள் போக்குவிட்டு, அனந்தனாற்றுப் பாலம் ஏறி இறங்கி மலையடிவாரம் வந்து மலை ஏறணும் (தங்க செந்தில்குமார், 2013, 53) என்பதாக அவனின் வாழ்வு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தொழில்
அடிப்படைத் தொழில்களுள் ஒன்றான கிழங்கு விவசாயம் இக்கதையில் காட்டப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் விளையும் கிழங்கைப் பிடுங்கி வந்து அதை வெகு சிரமத்துடன் தலைச்சுமையாய் கீழிறக்கி விற்பனை செய்யும் தொழிலாளியாக வருகிறார் சிவனாண்டி. லாப நோக்கில் செய்யப்படும் இன்றைய கார்பரேட் வணிகம் போலல்லாது மனித நேயத்தோடு அடித்தள மக்களின் பசி போக்கும் வியாபாரம்.
ஓரணாவுக்கு இரண்டு ராத்தல் கிழங்கு வாங்கினால், சின்னக் குடும்பம் ஒரு வேளை பசியாறும். காலணா, அரையணா பாக்கி வைத்து விடுவார்கள். முறித்துப் பேசினால் யாவாரம் போச்சு. சிலரிடம் உண்மையிலேயெ இருக்காது. நினைவிருந்தால் அடுத்த நாள் கேட்டு வாங்கலாம். சிலருக்கு அது ஒரு விலை குறைத்து வாங்கும் உத்தி. கிட்டத்தட்ட சிவனாண்டிக்கு இந்த யாவாரம் நாயர் பிடித்த புலி வால். ஒரு வகையில் வாழ்க்கையில் வாழ்க்கையே நாயர் பிடித்த புலி வால்தான். கச்சவடம் நிறுத்தினால் எப்படியும் இருபது, முப்பது போய் கடன் நின்றுபோகும். எந்தக் காலத்திலும் வசூல் ஆகாது. சரி, இதை நிறுத்தி விட்டு வேறு வாத்தியார் வேலைக்காப் போக இயலும்?
கொழுஞ்சிக் குழை பிடுங்கிக் கட்டிக்கொண்டு வரலாம். சுக்கு நாறிப் புல் அறுத்துக் கட்டி வரலாம். மலம்புல் அறுக்கலாம். விறகு வெட்டி வந்து விற்கலாம். கறிச் சக்கை யாவாரம் செய்யலாம். காவேரி ஆறு கஞ்சியாகவே ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கணும்? (தங்க செந்தில்குமார், 2013, 57) என்பதாக அவனது வேலையின் மதிப்பை சுட்டுகிறார் நாஞ்சில் நாடன்.
உணவு
இன்றைய நாகரிக உணவுக் கலாச்சாரத்தில் மனிதன் தன்னையும் அழித்துக் கொண்டு தன் பொருளாதாரத்தையும் வீணடித்துக் கொள்கிறான். ஆனால் பழைய தமிழ் மரபு மக்களின் பசி, மருத்துவம், இயற்கை என எல்லாவற்றையும் பாதுகாக்கக்கூடியது. அத்தகைய கிழங்கு உணவைப் பதிவு செய்கிறது நாஞ்சில் நாடனின் சிறுகதை. வாழும் இடத்தில் கிடைக்கும் உணவுகளை உண்டு தொழில் செய்யக் கூடியவர்களாக இன்றும் விளிம்பு நிலை மக்கள் உள்ளனர்.
கிழங்கு அடுக்கி, சாக்கு முடித்து, வாய்ப்புட்டுப் போட்டுக் கட்டி, குறுக்கு நிமிரும்போது, சுட்ட கிழங்கின் மணம் கிளர்ந்து வீசும். முதலில் பிடுங்கப்பட்ட செடிகளில் இருந்து பறிக்கப்பட்ட கிழங்குகளில் கூப்புக்காரர் ஒருவர் தலை எண்ணி, நல்ல பருத்துத் திரண்டு விம்மியவற்றைப் பொறுக்கிப்போவார். பாறை மீது காட்டு விறகுகள் சேர்த்துத் தீ மூட்டி, தீக்கங்குகள் விழுந்ததும் கிழங்குகளை அடுக்கி, அதன் மேல் ஆழப் பறித்த தீக்கங்குகளால் மூடிக் கிழங்கு சுடுவர்.
மேல் தோல் கருகி, உள் கட்டி வெண்தோலும் கருகி, கிழங்கு வெந்து வெடித்து மலர்ந்திருக்கும். தீக்கங்கு மூட்டத்தைக் கலைத்து விட்டு, கிழங்குகளைச் சூடு பொறுக்கப் பொறுக்கி. கரிந்த தோல்களைத் தட்டி, வாழை இலையில் அடுக்கி வைப்பார். மரச்சீனிச் செடிகளின் வெளி வட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கத்திரிச் செடிகளும் காந்தாரி மிளகாய்ச் செடிகளும காய்த்துக் கிடக்கும். காந்தாரி மிளகாய் என்பது மிளகாயில் சின்ன ஊசி ரகம், காரம் பத்து மடங்கு. இரண்டு கை கத்திரிக்காய்களைப் பறித்து தீக்கங்கில் போட்டுச் சுட்டு எடுப்பார். பாறை மேல் சற்று நிரப்பான பகுதி ஏற்கனவே கழுவப்பட்டுக் கிடக்கும். சிவலிங்கம்போல் வடிவுள்ள பாறைத் துண்டு ஒன்று குழவி. பிறகென்ன, கீழே இருந்து கொண்டுந்த பரல் உப்பு, புளிச் சுளைகளுடன் காந்தாரி மிளகாய், சுட்ட கத்தரிக்காய் சேர்த்து நெய் நொறுங்கச் சதைத்து, குப்பியில் கொண்டுவந்த தேங்காய் எண்ணெயைக் கணிசமாக விட்டுக் குச்சியில் கிளறினால் தீர்ந்தது சோலி.
சுட்ட கிழங்குக்குகள் சுள்ளென்று இருக்கும். கூப்புக்காரரும் அவரது வேலைக்காரர்களும் கிழங்கு வாங்க வந்தவர்களுமாக சமபந்தி போஜனம். கால் துண்டு இலையில் சுட்ட கிழங்கும் சம்மந்தியும் எடுத்துப் போடுவார் கூப்புக்காரர். கூடி இருந்து தின்பது ஏதோ மதச் சடங்கு போலிருக்கும். பக்கத்திலேயே சலசலத்து ஓடி இறங்கும் காட்டு நீரோடை. கொள்ளும் மட்டும் இரு கைகளாலும் கோரிக் குடித்து, முழங்கால், முழங்கை, கழுத்து, முகம், நெஞ்சு என நீர் அறைந்து வியர்வை உப்புப் போகக் கழுவிக் கொள்ளலாம். (தங்க செந்தில்குமார், 2013, 55) என்பதாக விளிம்பு நிலை மக்களின் உணவுப் பழக்கங்களைக் கதையாக்குகிறார். மேலும்
எந்தக் கோயிலிலாவது சாமிக்கு நைவேத்தியத்துக்குக் கிழங்கு அவித்து வைக்கிறார்களா என்று தெரியவில்லை. அக்கார வடிசிலும், நெய்யப்பமும், அப்பமும், மோதகமும், அதிரசமும், அரிசிப் பாயசமும், கொழுக்கட்டையும், தோசையும், சுண்டலும், வடையும், புட்டமுதும், பஞ்சாமிர்தமும், நெற்பொரியும், லட்டும் தின்னு சொகுசு கண்ட சாமிக்குலம், அவர்களுக்கு பஞ்சமா, விலைவாசியா என்ன கிடக்கிறது மரவள்ளி தின்ன? மிகப்பழைய காலத்து மனிதர்கள் கடவுள்கள், மரச்சீனிக் கிழங்கு இன்னும் நாஞ்சில் நாட்டின் கல்யாணப் பந்திக்கே வந்து சேரவில்லை
(தங்க செந்தில்குமார், 2013, 57)
என்று கூறி கடவுள் இத்தகைய சாதாரண உணவை ஏன் உண்ணுவதில்லை எனும் கேள்வியை முன் வைக்கிறார் நாஞ்சில் நாடனின் சிவனாண்டி.
உழைப்பு
கடினமான உடல் உழைப்புத் தளத்தை அதே சூழலில் காட்சிப்படுத்துகிறார் கதையாசிரியர். மலைப்பகுதியில் பிடுங்கிய கிழங்கைச் சுத்தம் செய்து எங்கும் இறக்கி வைத்து ஆசுவாசப்படுத்த முடியாத நிலையில் கடும் முயற்சியோடு கீழே கொண்டு வருகிறார்கள். அதை அடித்தள மக்களுக்கான உணவு என்ற எண்ணத்தோடு விற்பனை செய்யும் தொழில் என்பதாகச் சிவனாண்டியின் உழைப்பு உள்ளது.
அவ்வுழைப்பிற்கு வேறு ஒரு பணக்காரர் நல்ல விலை தருவதாகக் கூறும் போதும், அதை ஏற்காதவராகச் சிவனாண்டியைப் படைத்துள்ளார் நாஞ்சில் நாடன். தெனமும் எனக்கு அம்பது ராத்தல் மரச் சீனிக்கௌங்கு வேணும். நல்ல மொறட்டுக் கௌங்கா. சட்னு வெண்ணெ மாதிரி வேகக்கூடிய நாட்டு ... கடுப்போ கசப்போ இல்லாம ... என்ன நான் சொல்லுறது? நீயும் நம்ம பய... ஒனக்கு ஒரு ஏந்தலாட்டு இருக்கும்... அதான் உன்னைக் கூப்பிட்டுக் கேக்கேன். எனக்கு வேற ஆளு கெடைக்காம இல்ல.
கொண்டாறதுலே பாதி சாக்கு உமக்குப் போட்டுட்டா, நான் பொறகு ஊருக்குள்ளெ என்னத்தைக் கொண்டுகிட்டுப் போயி விக்கது?
நீ ஒரு மட சாம்பிராணி .... மொத்தமா ஒரு இடத்திலே கொண்டு போட்டுட்டு காசு மாறப்பட்ட வழியைப் பாப்பியா? ஊருக்குள்ளே போயி. கடனுக்கு கூவிக் கூவி விப்பியா?
அதுக்கில்லே ... பத்து அறுவது குடும்பம் எனத்த கெழங்கை நம்பிப் பசியாறும்.
நீ கடனுக்குத் தராண்டாம்டே ... ரொக்கம். முன் கூறா வேணும்னாலும் வாங்கிக்கோ. என்னடா, நாளையிலேர்ந்து போடுகிறாயா?
பாக்கட்டும் ... யோசிச்சு சொல்லுகேன். (தங்க செந்தில்குமார், 2013, 54)
என்பதாக அப்பணக்காரரை மறுத்து விடுகிறார் சிவனாண்டி.
படைப்பாக்கம்
ஒரு விளிம்பு நிலைப் பாத்திரத்தைப் படைக்கும் நாஞ்சில் நாடன் அப்பாத்திரமாகவே மாறிவிடுகிறார். அதனூடாக அம்மகளின் வாழ்வியலை அழகாகப் பதிவு செய்கிறார். ஒரு தேர்ந்த விவசாயியைப் போல் கிழங்கு வகைகளைப் பேசி விளிம்பு நிலைத் தொழிலைப் பேசுகிறார். கிழங்கு சமையலின் நுணுக்கங்களைப் படைத்து விருந்தளிக்கிறார்.
உழைப்பை உழைப்பின் வழியான வியர்வையைப் பேசி அம்மக்களின் வலியை நமக்குத் தருகிறார். அரசியல்வாதிகளையும் அவர்களின் மக்கள் விரோதப் போக்கினையும் அறியத் தருகின்றார். சிவனாண்டியின் மகன் எழுதுவதாகக் கதையை முடிக்கும் நாஞ்சில் நாடன் விளிம்பு நிலை மக்களின் உழைப்புத் தொழிலை உயர்த்திப் பிடிக்கிறார்.
முடிவுரை
ஒரு கிழங்கு விவசாயியின் வாழ்வை அதன் வலியைக் கதையாக்கிச் சிறந்த வாழ்வானுபவத்தை பதிவு செய்துள்ளார் நாஞ்சில் நாடன். விளிம்பு நிலை மக்களின் வாழ்வு உணவு, தொழில்கள் ஆகியவற்றோடு அவர்களின் உழைப்பு, நேர்மை, மனிதாபிமானம் ஆகியவற்றையும் கதையாக்கி உள்ளார். சிறந்த கதையமைப்பின் மூலம் நம்மை மூட்டை தூக்க வைத்துக் கிழங்கு திங்க வைத்து விடுகிறார் நாஞ்சில் நாடன்.
துணைநூற் பட்டியல்
1. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, 2009, சாகித்ய அகதமி, புதுடெல்லி.
2. தங்க செந்தில்குமார், ஒளிச்சேர்க்கை, 2013, அய்யா நிலையம், தஞ்சாவூர்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.