தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
42.பாரதியின் பேய்க் கூட்டத்தில் அழகியல்
முனைவர் ரெ. குணசுந்தரி
முன்னுரை
இலக்கிய வரலாற்றின் வரிசையில் இக்கால இலக்கியம் என்பது தனித்தன்மைக்குரியதாகும். யாப்பு வடிவத்தினை விளங்கிக் கொள்ள முடியாமல் இலக்கியங்களையும் புறக்கணிக்கின்ற போக்கின் பொழுது, படைப்பாளர்களின் கவனம் யாப்பு எல்லையை விட்டு விலகிச் சென்றன. இந்நிலையில் உரைநடைக்காலம் தோற்றம் பெற்றது. இங்கு கருத்து வெளிப்பாடு ஒன்றே இடம் பிடித்தது. மேலும் இலக்கியங்கள், உருவம், உள்ளடக்கம், வடிவம் என்ற நிலையில் புதிய பரிணாம வளர்ச்சியைப் பெற்றது. அவற்றில் புனைகதைகள் தனித்த இடத்தைப் பிடித்தன எனலாம்.
“சமூகத்தில், குடும்ப, நிறுவனத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு தனிமனிதன் முதன்மை பெறும் காலத்தில், அவனுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவுகளை எடுத்துக்காட்டும் முகமாக புனைகதைகள் தோன்றின என்பர். இவை உரைநடை ஊடகத்தின் வாயிலாக எழுதப்பட்டன. புதினமும் சிறுகதையும் இத்தகைய புனைகதைகள் ஆகும். இவை நவீன காலத்தியவை ஆகும்” என்று சிறுகதையின் தோற்றத்தைக் கூறுவர் கோ. கேசவன் அவர்கள். (தமிழ்ச் சிறுகதைகளில் உருவம்).
“பொதுவாக ஒரு சம்பவத்தை விட அச்சம்பவத்தில் மனிதமனம் படும்பாட்டை அல்லது அதனால் ஏற்படும் உணர்வு அலையைக் குறிப்பதுதான் சிறுகதை” என்பர் மௌனி.
பாரதியின் பேய்க்கூட்டம்
பாரதியார் பேய்க்கூட்டம் எனும் சிறுகதையைப் படைத்துள்ளார். அது சிறுகதையின் பண்பு நிலைகளில் ஒன்றான ஆசிரியர் கூற்றாக அமைந்துள்ளது. அதில் சமூகத்தில் தான் கண்ட காட்சிகளையும் தனக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவுமுறைகளையும் எடுத்துக் காட்டும் வகையில் அமைத்துள்ளார் எனலாம்.
இன்று மகாகவி பாரதியையும் அவரது ஆக்கங்களையும் பின்னோக்கிப் பார்க்கும்பொழுது இருபதாம் நுர்ற்றாண்டுத் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்க்கைக் கூறுகளில் அவர் தடம் பதிக்காத இடம் எதுவுமே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அவரது எழுத்து மதிக்கப்படுவதைக் காண்கின்றோம். மேலும் அனைத்துத் துறையிலும், ஏதோ ஒரு வகையில் தம் சிந்தனையைச் செலுத்தி அவற்றின் பயனாகத் தனது சமூகத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் கருத்துத் தெரிவித்திருப்பதைக் காணலாம்.
படைப்பாளர்
எந்த ஒரு படைப்பாளனும் பொழுது போக்குக்காக மட்டுமின்றி, மனித மனங்களை வளப்படுத்துவதற்காகவும், அதில் ஒரு நல்விளைவை ஏற்படுத்துவதற்காகவும் படைக்கிறான் எனலாம். மனித சமுதாயம் நாகரிக வாழ்க்கை வாழத் துவங்கிய காலம் முதல் படைப்பாளனின் பெருங்கனவுகளில் ஒன்று ஒரே உலகம் உருவாக வேண்டும் என்பதே. இதை மனதில் கொண்டே பல இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன எனலாம்.
“மனிதன் படைத்துள்ள கற்பனை மாந்தர்கள் பல வகையினராக அமைகின்றனர். உணர்ச்சி வழிப்பட்டு ஒவ்வொரு காரியத்தையும் செய்பவர் போலச் சில கதை மாந்தர் தோன்றினாலும் கூர்ந்து நோக்கினால் அவர்களுக்கும் ஓர் உலக நோக்கு இருத்தல் புலப்படும்” என்பர் க. கைலாசபதி அவர்கள். (இலக்கியச் சிந்தனை).
மனித மனம்
பாரதியின் சிறுகதை வழி இக்கூற்றினை நன்கு உணர முடியும். பேய் கூட்டம் எனும் சிறுகதையானது மனித மனம் எப்படிப்பட்டது. சூழ்நிலைகள் மனிதனை எவ்வாறெல்லாம் சிந்திக்கச் செய்கின்றன என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் அந்நியர் சொல்வதால் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. சரியானதென்றால் பின்பற்றலாம் என்று கூறுமிடத்தும், இதற்கு ஏன் இந்த பெயர் ஏற்பட்டது, இவ்வாறு கூறி இருக்கலாமே என சிந்தித்து விளக்கம் கூறும் திறன் கொண்டவனுமாக கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளதும் போற்றுதற்குரியது. இந்நிகழ்வுகள் தூக்கம் வராத இரவு நேரத்தில் சிந்திப்பதாக அமைத்துச் செல்வது ஆசிரியரின் சிறப்பை உயர்த்திச் செல்கிறது. மேலும் அங்கு அவனின் உலகளாவியப் பார்வை சுட்டப்பட்டிருப்பதை உணரலாம். சான்றாக,
“சுதேசமித்திரன்” பத்திரிக்கையைத் திறந்து பார்த்தேன். ருஷ்யாவில் உள்நாட்டு கலகம் சச்சரவு அதிகரிக்கின்றது என்ற பகுதி தென்பட்டது …….. ருஷியா விசயம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று தூங்க முயற்சி செய்தால் மனம் இணங்கவில்லை. ருஷியக் குடியரசின் தலைவன் லெனின் படும் கஷ்டம் ஞாபகம் வந்தது” என்று அமைந்துள்ளப் பகுதி உலகலாவிய சிந்தனையை நன்கு விளக்கிச் செல்லும்.
மனித இயல்பு
அனுபவ ரீதியாகக் கண்டறிந்த வாழ்க்கையை உணர்வுப் பூர்வமாக, அறிவுப் பூர்வமாகக் கொண்டு செல்லும் பாங்கினைப் பாரதியிடம் காணலாம்.
நடு இரவில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது நான்கு பேர் வந்து கதவைத் தட்டி முழுவதும் திறப்பதற்கு முன் தன் கண்களைக்கட்டி எங்கோ அழைத்துச் செல்வதாக உணர்கிறார். அப்பொழுது மனிதன் எந்நிலையில் காணப்படுவான் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
“இவர்கள் நம்மை கொன்று விடுவார்களோ? நாம் செத்தால் இந்தக் குழந்தைகளும், பொண்டாட்டியும் எப்படி ஜீவிக்கும்? அடபோ! அதெல்லாம் வீண் கதை எல்லா உயிர்களையும் தெய்வந்தானே காப்பாற்றுகிறது. நாம் செத்தால் ஒரு மாசம் அழும். அப்புறம் சௌக்கியமாகவே இருக்கும். பிறகு, நம்முடைய பிதா செத்துப்போனாரே, நாம் உடன்கட்டை ஏறினோமா?” என்று தன்னைத்தானே கேள்விக்கேட்டுக் கொண்டு, சமாதானம் செய்து கொள்ளும் நிலையினைக் காண முடிகிறது. இங்கு இதுதான் உலக நியதி என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டிச் செல்வதை உணரலாம்.
உபதேசம்
சமூக உறவுகள் தன்னைப் பாதிக்கும் சமயத்தில், அவற்றிற்கிடையேப் போராடிப் பெறும் உணர்வினாலும் ஒரு மனிதன் பாதிக்கப்படுவான் என்பதை நுணுக்கமாக எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர்.
மக்களிடையே அறியாமை நீங்கி அறிவுக் கண் பெற, விழிப்புணர்வு அடைய விரும்பும் ஒருவர் அடையக்கூடிய சிக்கல்கள் இங்கு இலைமறை காயாகச் சுட்டப்படுகிறது.
கதையில், அடையாளம் தெரியாத நான்கு பேரால் அழைத்துச் செல்லப்பட்ட ஆசிரியர் கூட்டத் தலைவனிடம் கொண்டு சேர்க்கப்படுகிறார். அங்கு அவர், “வாப்பா காளிதாசா உன்னைச் சோதிக்கவே இவ்வாறு செய்தேன். ‘எதற்கும் அஞ்சோம்’, ‘எப்போதும் அஞ்சோம்’, ‘தலைமேல இடி விழுந்தாலும் தளர மாட்டோம்’ என்று நீ பாடினதை நான் நேற்று ஒரு புத்தகத்தில் பார்த்தேன். அது உண்மையான அனுபவமா அல்லது வெறுங் கற்பனையா என சோதித்தேன். ஆனால் நீ ஆற்காட்டு பயம் பயப்படுகிறாயே! என ஏளனமாக சிரிக்கிறான். அதோடு நில்லாமல் பல அறிவுரைகளையும் கூறுகிறான்.
“மனித வாழ்க்கை நிலையில்லாதது. இன்பம் வேண்டுமாயின் யோகி ஆகிவிடு. பகைவனுக்குத் தீமை நினைக்காதே. பகைவனையும் சிவனென்று கும்பிடு. பொய் பேசாதே. பாம்பின் வாய்க்குள் விரலைவிடு. சிவாய நம என்று சொல். உன்னைக் கடிக்காது”. என்கிறான். மேலும், உனக்குத்தான் நன்கு எழுதத் தெரியும் என்று கிறுக்கித் தள்ளிவிடாதே. மாயை உலகில் வாழக் கற்றுக் கொள் என உபதேசிக்கிறான். இதைக் கேட்ட ஆசிரியர், சரி நீ யார் எனக் கேட்கிறார். “நான் தான் இந்த சுடுகாட்டிலுள்ள பேய்களுக்கெல்லாம் தலைவன்” என்றான். இங்கு சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற கருத்தை உணர்த்தி முடித்துச் செல்கிறார் ஆசிரியர்.
முடிவுரை
இங்கு அழகியல் என்பது நுவல் பொருள், வடிவம், புனைந்துரைகள், படிமம் இவற்றைப் பயன்படுத்த அமைந்துள்ள உத்தி முறைகளே ஆகும். எழுத்தானது வெறும் மொழியைக் கொண்ட ஒன்றல்ல. அது அம்மொழியின் பண்பாட்டினையும் கொண்டிருக்கிறது. அம்மொழி பேசும் மக்களின் வாழ்நிலைகளையும் பதிவு செய்வதாக அமைகின்றது. இவ்வாறு பல விசயங்களை ஒரு மொழியானது தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது எழுத்து இலக்கியத்திலும் வாய்மொழியிலும் பிரதிபலிக்கிறது எனலாம். இவை தனிக்கூறாக இல்லாமல் இணைந்து காணும் பொழுது அழகியலை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் எனலாம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.