தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
53. தமிழ் இலக்கணத்தில் உறுப்புச்செய்யுள்
செ. சுமதி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, ப. வேலூர்.
முன்னுரை
“வழக்கின் மரபியலின் நேர்ந்து வழுவாது
இழுக்கி வடவெழுத்தை இன்பம் வழுக்காது
முன்னையோர் பாட்டில் பயின்ற மொழியன்றோ
சொன்ன உறுப்பின் துணிபு”
என்று வரையறுக்கப்பட்ட வெண்பா பாட்டியலில் ‘உறுப்புச்செய்யுள்’ வகை என்று கூறப்பட்டுள்ளதை நம்மில் பலரும் அறிவர். இவ்விலக்கணத்தின் படி உறுப்புச் செய்யுளில் வரும் சொற்கள் மூன்று இயல்புகளை உடையனவாய் இருத்தல் அவசியம். அவையாவன.
1. வழக்கிலும் மரபிலும் பொருந்தாமல் இருப்பது
2. வடமொழி எழுத்துக்கள் கலவாமல் இருப்பது
3. இன்பம் நிரம்பிச் சான்றோர் செய்யுள்களில் பயின்று வந்த சொல்லுடமை
இந்த மூன்று இயல்புகளையும், தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் மிகவும் அவசியம் ஆகும். ‘வழக்கு’ என்பது ‘செய்யுள் வழக்கு’, ‘உலக வழக்கு’ என்ற இரண்டையும் குறிக்கும். ‘மரபு’ என்பது தொல்காப்பியத்தில் வகுக்கப் பட்டுள்ள (மரபியலில்) நியமங்களைக் குறிக்கும். ‘வடவெழுத்து’ என்பது வடமொழிக்கே உரித்தான சிறப்பாக அமைந்த எழுத்துக்கள். வருக்க எழுத்துக்கள் பலவும், ‘ஸ’ போன்ற எழுத்துக்களும் விரவிவரலாகாது. இயல்பாகவேச் செய்யுள்களில் அமைந்திருப்பது போன்று இன்பம் அளிக்கக்கூடியச் சொற்களைக் கொண்டே ஆளப்படுதல் வேண்டும்.
இப்படிப்பட்டச் சொற்கள் அமைந்த கவியை ‘உறுப்புச் செய்யுள்’ என்று பெயர் கூறி அழைப்பது என்ன காரணம் என்ற கேள்வி எழுதல் இயல்பே ஆகும்.
குற்றமற்ற உறுப்பு
காவியச் சரீரமாகிய சொல் தொகுதிக்குச் சொற்கள் உறுப்பாதல் தெளிவே. இவ்வாறு வரக்கூடிய சொற்களில் ஒருசில நல்லியல்பு கொண்டு இயன்று வரும் செய்யுளை ‘உறுப்புச் செய்யுள்’ என வெண்பா பாட்டியலாசிரியர் அழைத்தார் எனத் தோன்றுகிறது.
வீரசோழியம் எவ்வகைச் சொற்கள் ‘குற்றமற்ற உறுப்பு’ எவ்வகைச் சொற்கள் ‘பழிக்கப்பட்ட உறுப்பு’ என்பதை இரண்டு காரிகைகளால் உணர்த்துகின்றது.
“சார்ந்த வழக்கொடு தப்பா
வடவெழுத் தைத்தவிர்த்துத்”
என்று வரக்கூடிய 144-ம் காரிகையில் குற்றமற்ற உறுப்பு விளக்கப்படுகின்றது. ‘தப்பா’ என்ற சொல்லை ‘தமிழ் மரபினோடுங்கூடி’ என்று விளக்கப்பட வேண்டும். இதனை ‘தமிழினோடுங் கூடி’ என வீரசோழிய உரைக்காரர்கள் விளக்குவர். சொற்கள் திரிந்து பொருள் கூறாமல், இயல்பாகவே விளக்குவதாய் இருத்தல் வேண்டும்.
பழிக்கப்பட்ட உறுப்பு
குற்றமற்ற உறுப்புகளின் மறுதலை இயல்புகள் இவ்விடத்தே கூறப்பட்டுள்ளன. மறுதலையில்புகளாவன.
1. வழக்கோடு மாறுபடுதல்
2. இன்பமின்மை
3. வடவெழுத்துப் பயின்று வரல்
4. சான்றோர் செய்யுள்களில் பயின்று வாராமை
5. பொருள் மருண்டிருத்தல்
இவ்வியல்புகளை உட்கொண்டு வெண்பா பாட்டியலின் ஆசிரியரும்,
“துணிதற் கரிது பொருளென்றும் சோர்வு
பணிவுற்ற சொன்மெற் படுத்தும்-அணிப் பொருட்டால்
மற்றுமுண் டென்றும் உரைப்போர் வழுச் சொல்லின்
இற்றன்றோ பாவின் இழுக்கு”
இதுபோன்று இலக்கண விளக்கப் பாட்டியல் ஆசிரியரும் சூத்திரம் செய்தனர்.
மேலும் நவநீதப் பாட்டியலில் மேற்குறித்த வீரசோழியக் காரிகை (145) பெரும்பாலும் வேறுபாடின்றி வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இதில் பழித்த உறுப்பின் இயல்புகளே எடுத்துச் சொல்லப்படுகிறது. பழைய உரையும் இக்கருத்தினையே ஆதரிக்கின்றது. இச்செய்யுளின் உண்மை வடிவம்,
“தெற்ற வழக்கொடு தேர்ந்துணர்
விற்கின் பஞ் செய்தலின்றிப்
பற்றி வடநூல் எழுத்துக்க
ளைப்பழை யோருரையின்
மற்றிவை இல்லையென் றோத
லுடன்படல் மாலியலாற்
பெற்றி யுடைச் சொற் பழித்த
வுறுப் பென்று பேசுவாரே
என்பதனால் வேண்டும்”
வீர சோழிய உரைகாரர் கூறுவனவற்றுள் ஒரு சில கூற்றுக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாக உள்ளன. இவ்வுறுப்புக்களால் நிரம்பின உடல் (சொல்லின் தொகுதி அல்லது செய்யுள்) குற்றமுடையது என்பதாகும்.
மொழியின் வரம்பினை வகுத்துக் கூறும் இலக்கணக் கருத்திலும் வடமொழிக்கு நமது மொழி பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றது. ஆயின் மணிப்பிரவாளத்துக்கும் விரவியலுக்கும் வடமொழி மொழி எழுத்துகள் இருக்கும் எனில் இவ்விலக்கணம் கீழ்க்கணக்கு முதலாகிய செய்யுள்களுக்கு மட்டுமே என்று அறிய வேண்டும். அவைகள் அதாவது ‘பழித்த சொற்கள்’,
“அன்றுள்ளா னொரு குரிசிலைப் புகழ்ந்து
செய்யுங் கவியுள் மறந்தேயும் வரப்பெறாவெனக் கொள்க”
பரசு செய்யுள்
மேற்கண்ட கூற்றின் மூலமாகக் கவிஞர்கள் காவியம் இயற்றும் பொழுது பழித்து உறுப்புகள் வராமல் பார்த்துக் கொள்வது ஒரு பெரும் நியதியாகக் கொள்ள வேண்டும். ‘புகழ்ந்து செய்யுங்கவி’ என்பதனையே நவநீதப் பாட்டியலின் பழையவுரை (82) ‘பரசு செய்யுள்’ எனக் குறிக்கின்றது. பிறிதோர் இயல்பை அது கருத்திற் கொள்ளுதலும் அமையும்.
‘உத்படர்’ எனும் ஆசிரியர் தமது அலங்கார விளக்கத்தில் உபநாகரீகம், கிராமியம், பருஷம் என்ற மூன்றுவகை நெறிகளை உணர்த்துகின்றார். இவற்றுள் ‘பரு‘ம்’ என்பது ‘பரசு’ செய்யுள் எனப்பட்டது. ‘பரு‘ம்’ என்பது ‘கடுஞ்சொல் என்று பொருள்படும். இச்சொற்களே பழித்த உறுப்பிற்குரியனவாகும். மேலும் பழிக்கப்பட்ட உறுப்பிற்கு உதாரணமாக,
“தெளிந்த வழக்கொடு சிறந்த பொருள் படூஉம்
இன்பம் ஒரீஇ வடவெழுத்தே மிக்கு
முதிர்சொற் புணர்க்கா தெதிர் சொற் புணர்த்து
மாலுறச் செய்தல் வழுவா மென்பர்”
(பாடடியல் 126)
என்ற இலக்கண விளக்கப் பாட்டியலுடையாரின் செய்யுளைக் கூறலாம்.
நூல்கள் காலத்திற்குக் காலம் அதிகப்பட்டுக் கொண்டுடே வரும், அதன் போலவே மொழியின் வளர்ச்சியும் அதற்கேற்ப வேறுபட்டுக் கொண்டே வரும். இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது நூல்களை இயற்றுவதுதான் நன்மை பயக்கும். காலவேறுபாட்டைத் தவிர, தேச வேறுபாடும் இலக்கணத்தை வேறுபடுத்தும்.
தற்காலத்தில் எத்தனையோ புதிய வழக்கு நாம் பேசும் பேச்சிலும், படிக்கும் நாளிதழ்களிலும், நூல்களிலும் வழங்கி வரும் மரபுகளைத் தொகுத்துக் கொடுத்து இலக்கணம் வரைதல் அவசியம் ஆகும். இலக்கணம் என்பது அதன் ஆசிரியன் வாழ்ந்த காலத்திற்கும், அதற்கு முன்பும் உள்ள மொழி வழக்கு அனைத்தையும் வகைப்படுத்திக் கூற முயல்வதாகும்.
இவ்வாறு இயற்றப்பட்ட தற்காலத் தமிழ் இலக்கணத்தோடு அமைந்து விடாமல், பூர்வ காலம் தொட்டு, இன்று வரை உள்ள இலக்கியங்களை எல்லாம் நன்கு கற்று அவற்றைச் சங்க காலம், பக்தி நூற்காலம் முதலிய பகுதிகளாகப் பிரித்து அந்தந்த காலத்திற்குரிய இலக்கணங்களை இயற்றுதல் மிக அவசியமாம்.
தற்காலத்தில் எத்தனையோப் புதிய வழக்கு நாம் பேசிவரும் பேச்சுக்களிலும், பத்திரிகைகளிலும் நூல்களிலும் வழங்கி வரும் மரபுகளைத் தொகுத்துக் கொடுத்து இலக்கணம் வரைதல் அவசியம் ஆகும்.
வடமொழியில் தண்டியாசிரியர் ‘காவியங்களின் சரீரமும் அலங்காரங்களும் தொல்லாசிரியர்களால் காட்டப்பட்டுள்ளன. ‘கருதிய பொருளைப் புலப்படுத்தும் சொல்லின் தொகுதியே சரீரமாவது’ என்று கூறினார். இவர் கூறியதையே வீர சோழிய நூலாரும் கூறியுள்ளதைக் காணலாம்.
மேற்கூறிய கூற்றுக்களின் மூலமாக தமிழ் இலக்கணத்தில் ‘உறுப்புச் செய்யுள்’ இன்னது என்பதனை நாம் ஒருவாறு உணரமுடிகிறது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.