உருளைக்கிழங்கு குருமா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 4 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
6. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
7. மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு:
12. தேங்காய் (துருவியது) - 2 மேசைக்கரண்டி
13. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
14. கசகசா - 1 தேக்கரண்டி
15. முந்திரிப்பருப்பு - 8 எண்ணம்
16. சோம்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும்.
4. வெங்காயம் பொன்னிறமானதும், அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.
5. பின்னர் அதில் பாதி தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
6. அடுத்து, அதில் மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்துக் கிளறவும்.
7. பிறகு வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கைப் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
8. குழமபு சற்று கெட்டியானதும், அதில் கரம் மசாலாத்தூள் சேர்த்து, ஒரு முறை கிளறிக் கொதிக்க விட்டு இறக்கி விடவும்.
9. தேவைப்பட்டால், கடைசியாக அதில் மல்லித்தழையைத் தூவி விடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.