காளான் கிரேவி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. காளான் – 10 எண்ணம்
2. சின்னவெங்காயம் – 12 எண்ணம்
3. தக்காளி – 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
5. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
6. மல்லித்தூள் – 1 1/2 தேக்கரண்டி
7. கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
10. தேங்காய் பால் – 1/2 கப்
11. மல்லித்தழை – சிறிது
வறுத்து அரைக்க
12. மிளகு – 1 தேக்கரண்டி
13. சீரகம் – 1 தேக்கரண்டி
14. சோம்பு – 1 தேக்கரண்டி
15. முந்திரிப்பருப்பு – 10 எண்ணம்
16. ஏலக்காய் – 2 எண்ணம்
17. கிராம்பு – 2 எண்ணம்
18. கல்பாசி – சிறிது
19. இஞ்சி – சிறு துண்டு
20. பூண்டு – 6 பற்கள்
செய்முறை:
1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
2. பிறகு மிளகு, சீரகம், பெருஞ்சீரகம்,ஏலக்காய், கிராம்பு, முந்திரி கல்பாசி ஆகியவைகளை வதக்கி ஆறிய பின் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
3. தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய் சிறியதாக வெட்டி வைக்கவும்.
4. காளானை சிறிது மஞ்சள் தூள் போட்டு அலசி வெட்டி வைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
6. அதன் பின்பு, அதில் அரைத்த விழுதையும், பொடிகளையும் போட்டு நன்றாகக் கிளறவும்.
7. அதனுடன் நறுக்கி வைத்த காளானைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
8. தேங்காயை நன்கு அரைத்துப் பால் எடுத்து வைக்கவும்.
9. காளான் வதங்கிய பின்பு, அதில் தேங்காய்ப் பாலை ஊற்றி நெருப்பைக் குறைத்து வைத்து மூன்று நிமிடம் கழித்து, அதில் மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.