வெஜிடபிள் சால்னா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. காய்கறி – 1 கப் (காலிபிளவர், பீன்ஸ், பச்சைப் பட்டாணி போன்றவை)
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
3. தக்காளி – 2 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
6. மல்லித்தூள் – 1/4 தேக்கரண்டி
7. கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
9. தேங்காய்ப்பால் – 1 கப்
10. சீரகம் – 1/4 தேக்கரண்டி
11. பட்டை – 1 சிறிய துண்டு
12. கிராம்பு – 2 எண்ணம்
13. அன்னாச்சி பூ – 1 எண்ணம்
14. உப்பு – தேவையான அளவு
15. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. காய்கறிகளை பொடியாக நறுக்கி, முக்கால்வாசி அளவு வேகவைத்து, பின் தண்ணீரை வடித்துவிட்டு தனியே வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
4. தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
5. ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ, சீரகம் சேர்த்து வதக்கவும்.
6. சீரகம் பொரிந்த பின்பு, அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
7. பிறகு அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
8. தக்காளி நன்கு வதங்கிய பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிரட்டி விடவும்.
9. தேங்காய்ப்பாலையும் இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க விடவும்.
10. தேங்காய்ப்பாலின் பச்சை வாடை மறைந்து, கெட்டியாக வரும் போது, வேக வைத்து வைத்திருக்கும் காய்கறிகளையும், தேவையான உப்பையும் சேர்த்துச் சில நிமிடங்கள் மிதமான நெருப்பில் வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.