மனித உடம்பைத் தாக்கும் சில நோய்களைப் பற்றியும், அதற்கான மருத்துவத்தையும் சொல்லும் சில பழமொழிகள் தமிழில் இருக்கின்றன. அவை;
* கோழைக்கு எதிர் தூதுவளை; நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.
* வாதத்தை அடக்கும் முடக்கத்தான்; நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.
* கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி; மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி.
* குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி; சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.
* கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.
* அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.
* காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.
* ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.
* தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.
* வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.
* கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.
* நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம் விஞ்சு வாதத்தின் விளைவு போம்.
* நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.
* விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.
* விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.
* ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.
* வில்வம் பித்தம் தீர்க்கும்.
* காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும்.
* அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.