நண்டுக்குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 500 கிராம்
2. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
3. கடுகு -1 தேக்கரண்டி
4. பச்சை மிளகாய் 4 - எண்ணம்
5. வெங்காயம் - 3 எண்ணம்
6. தக்காளி - 2 எண்ணம்
7. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
8. மல்லிதூள் - 3 மேசைக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
10. சோம்பு - 1 தேக்கரண்டி
11. சீரகம் - 1 தேக்கரண்டி
12. மிளகு - 1 தேக்கரண்டி
13. தேங்காய்த் துருவல் - 1 கப்
14. கருவேப்பிலை - சிறிது
15. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் சோம்பு, சீரகம், மிளகு போட்டு இலேசாக வறுத்தெடுக்கவும்.
2. தேங்காய்த் துருவலைப் பொன்னிறமாக வறுத்தெடுத்து வைக்கவும்.
3. பின்னர், வறுத்தெடுத்தவைகளை விழுதாக அரைத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டு வெடித்ததும், கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்ந்து பொரியவிடவும்.
3 பின்னர் அதில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் அளவுக்கு வதக்கவும்.
5. பின்னர் அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
6. அதன் பிறகு, அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, உப்பு சேர்த்து அரை கப் தண்ணி ஊற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.
7. எண்ணெய் பிரிந்து வந்ததும், அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டு சேர்த்துக் கிளறவும்.
8. பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து நண்டு வெந்த பின்பு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.