முட்டை அடைக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
அடை செய்ய :
1. கடலைப்பருப்பு - 1/2 கப்
2. துவரம்பருப்பு - 1/2 கப்
3. முட்டை - 3 எண்ணம்
4. சின்னவெங்காயம் - 10 எண்ணம்
5. பூண்டு - 5 பல்
6. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
7. சோம்பு - 1 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
9. கருவேப்பிலை - சிறிதளவு
குழம்பு வைக்க:
10. புளி - எலுமிச்சை அளவு
11. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
12. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
13. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
14. சோம்பு - 1 தேக்கரண்டி
15. தேங்காய்த் துருவல் - 1/4 கப்
16. உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
17. கடுகு - 1 தேக்கரண்டி
18. சின்ன வெங்காயம் - 3 எண்ணம்
19. தக்காளி - 1 எண்ணம்
20. எண்ணெய் - 1 தேக்கரண்டி
21. கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
1. கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது சொரசொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், பூண்டு, கருவேப்பிலையைப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. அரைத்த விழுதுடன் முட்டை, மஞ்சள்தூள், நறுக்கிய வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து தோசைக் கல்லில் சிறிது தடிமனான தோசை போல் வார்த்து எடுக்கவும்.
4. பின் அதனைச் சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
5. தேங்காய், சோம்பை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
6. புளியைக் கரைத்து வடிகட்டி அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து வைக்கவும்.
7. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, அதில் புளிக் கரைசல் கலவை ஊற்றி, கொதி வந்தவுடன் தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
8. குழம்பு நன்றாகக் கொதித்து பச்சை வாசனை போன பின் முட்டை அடைத் துண்டுகளைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.