காடை முட்டைக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. காடை முட்டை – 20 எண்ணம்
2. சீரகம் – 1 டீஸ்பூன்
3. தக்காளி – 2 எண்ணம்
4. வெங்காயம் – 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
6. இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
7. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
9. மல்லித் தூள் – 1 மேசைக்கரண்டி
10. கரம் மசாலா – 2 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை – சிறிது
12. கொத்தமல்லி – சிறிது
13. எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
14. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயத்தைச் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
2. பச்சை மிளகாயை நீளமாகக் கீறி வைக்கவும்.
3. தக்காளியை நறுக்கி, அதனை அரைத்து வைக்கவும்.
4. முதலில் காடை முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3 முதல் 4 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சீரகம் சேர்த்துத் தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
6. பிறகு, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி விட்டு, பச்சை மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்துக் கிளறி விடவும்.
7. பின்பு அரைத்து வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்து எண்ணெய் தனியாகப் பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
8. குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்து வைத்திருக்கும் காடை முட்டையைப் போட்டு, மிதமான நெருப்பில் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.