அவரைக்காய் கூட்டு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அவரைக்காய் - 100 கிராம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
4. கடலைப் பருப்பு - 1/4 கப்
5. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
6. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
7. சோம்பு - 1/2 தேக்கரண்டி
8. மிளகாய்த் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
9. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. அவரைக்காய் மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தக்காளியைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பைப் போட்டு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
5. தேங்காய்த் துருவலுடன் சோம்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
6. பருப்பு வெந்ததும் அதில், அவரைக்காய், பச்சை மிளகாய், தக்காளி, மிளகாய் தூள், முக்கால் அளவு நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும். (சிறிது வெங்காயத்தைத் தாளிப்பதற்குத் தனியாக எடுத்து வைக்கவும்)
7. காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் தேங்காய், சோம்பு விழுதை ஊற்றிக் கிளறிச் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி விடவும்.
8. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
9. வெங்காயம் வதங்கியதும் அதை எடுத்து அதைக் கூட்டுடன் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.