மனித நோய் எதிர்ப்புக் குறைபாடு தீநுண்மம் (Human Immunodeficiency Virus) எனும் நோயினை ஆங்கிலத்தில் எச்ஐவி (HIV) என்று சுருக்கமாகச் சொல்வார்கள். இதனை பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி (Acquired Immune Deficiency Syndrome) என்றும் சொல்வார்கள். இதனை ஆங்கிலத்தில் எயிட்ஸ் (AIDS) என்று சுருக்கமாகக் குறிப்பிடுகின்றனர். இந்நோயினைத் தமிழில் உடற்தேய்வு நோய், உயிர்க் கொல்லி நோய், ஏமக்குறை நோய், வலியுறுக்கி வேட்டை நோய் என்றும் சொல்வதுண்டு.
பத்தாண்டுகளுக்கு முன் இந்நோய் உலகம் முழுவதும் பரபரப்பாய் பேசப்பட்டது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்தூசியினை (Syringe) கிருமி நீக்கம் செய்யப்படாமல் பயன்படுத்தும் போது, அந்த மருந்தூசியின் வழியாக எய்ட்ஸ் நோய்த் தொற்று பரவிவிடும் எனும் பயமிருந்தது. எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய்த் தொற்று இருக்கும் என்று மருத்துவ உலகம் அச்சமடைந்தது. கருப்பின மக்கள் அதிகமாக இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சில கணக்கெடுப்புகள் சுட்டிக்காட்டின. குறிப்பாகம் ஆப்பிரிக்காவிலிருப்பவர்களில் இருபத்தைந்து பேர்களில் ஒருவருக்கு இந்நோய் இருந்தது என்று சொல்லப்பட்டது. ஓரினச்சேர்க்கை வழியாக, இந்நோய் வேகமாகப் பரவியது என்றும் சொல்லப்பட்டது. கடந்த ஆண்டில் வெளியான ஒரு கணக்கெடுப்பில், உலகில் மொத்தம் 4 கோடி எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆன்ட்டிரெட்ரோ வைரஸ் சிகிச்சை மூலம் இந்நோய் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
சரி, பல் மருத்துவம் தொடர்பான இக்கட்டுரையில் எயிட்ஸ் நோய்த் தொற்று பற்றிச் சொல்ல வேண்டியது ஏன் என்று இவ்வேளையில் தாங்களேச் சிந்தித்திருப்பீர்கள்.
பற்களுக்கான குறள்கள்
*மாற்றடுக்கு பல்லெனினும் மாற்றிட நேராகும்
மாற்றிய பின் வாழ்த்தி மகிழ்.
* சிறப்புப்பல் நுட்பமுண்டு சீராக்கும் தேர்ச்சி
திறமும் அறிந்து தெளி.
- தஞ்சாவூர் ஹரணி
|
எய்ட்ஸ் நோய்த் தொற்று கொண்ட எய்ட்ஸ் நோயாளிகள் பலரும் கடுமையான பல் தொடர்புடைய பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அவற்றுள் குறிப்பாக,
1. உலர்ந்த வாய்
எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வாய்ப்பகுதி வறண்டிருக்கும். அதனால் அவர்களால் சரிவரச் சாப்பிடவோ, மெல்லவோ, விழுங்கவோ, பேசவோ முடியாது. உலர்ந்த வாயால் பற்சொத்தையும் பல் நோய்த் தொற்றுகளும் எளிதில் ஏற்படும்.
2. ஈறுநோய்
எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஈறு அழற்சி (Gingivitis) எனும் பல் ஈறு நோய் பொதுவாகப் பீடிக்கும்.
3. எலும்புத் தேய்மானம்
எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குப் பற்புறத்திசு நோய் (Periodontitis) ஏற்படும்.
4. வாய்ப்புண்கள்
எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வரும் வாய்ப்புண்கள் மிக மிக வலியைத் தரக்கூடியவை. இந்த வாய்ப்புண்கள் சுவை இழப்பையும் பல்லுறுப்புகள் இழப்பையும் ஏற்படுத்தக் கூடியவை.
5. வாய் மருக்கள் அல்லது வாய் பாலுண்ணிகள்
எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வாயில் மருக்கள் அதிகமாகக் காணப்படும்.
6. காய்ச்சல் கொப்பளம்
எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வரும் பொதுவான பிரச்சனை இது.
இவை தவிர, வாய்த் தெளிவநோய் (Oral Candidiasis), நாக்கில் வெண்படலம் நோய் (Leukoplakia), பற்சொத்தை போன்றவைகளும் ஏற்படுகின்றன.
எயிட்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் மூடிய வாயால் முத்தமிட்டாலோ, எச்சில் பரிமாற்றத்தாலோ மற்றவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதில்லை.இந்நோய்த் தொற்றுடையவர்களின் இரத்தத்தில் கலக்காத எச்சிலால், கண்ணீரால், வியர்வையால், மலத்தால் மற்றும் சிறுநீரால் நோய் தொற்றும் ஆபத்து இல்லை. ஆனால் எயிட்ஸ் நோய்த் தொற்றானது, விந்து, பெண்ணுறுப்புத் திரவம், இரத்தம், மலக்குடல் சீதம், தாய்ப்பால் போன்றவைகளின் வழியாக வெகு வேகமாகப் பரவுகிறது. மேலும், பாதுகாப்பற்ற உடலுறவு, தவறான வழிகளிலான உடலுறவு, மாசுபட்ட இரத்தக் கொடை, மாசுபட்ட உடலுறுப்புக் கொடை, போதை மருந்து ஊசிப் பயன்பாடு போன்றவைகளில் வழியாகவும் எயிட்ஸ் நோய்த் தொற்று பரவுகிறது.
இந்நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சந்தேகம் வந்தால் 72 மணி நேரத்துக்குள் பெப் (Post Exposure Prophylaxis - PEP) மருத்துகளை உட்கொள்ள வேண்டும். அதாவது, த்ருவடா (Truvada), ரால்ட் கிராவிர் (Raltegravir), டோலூட் கிராவிர் (Dolutegravir), பிரிஜிஸ்ட்டா (Prezista) எனும் மருந்துகளில் ஒன்றைத் தினம் ஒரு முறை அல்லது இருமுறை 28 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டியிருக்கும். இம்மருந்துகளை எடுத்துக் கொண்டால் வாந்தி மயக்கம் தலைவலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். பெப் மருந்துகளை உட்கொண்டபின் எய்ட்ஸ் நோய்த் தொற்று சோதனைகளை மேற்கொண்டு மருந்து வேலை செய்தததை உறுதி செய்து கொள்ளலாம்.
இந்நோய்ச் சந்தேகமுடையவர்களுக்குச் சிகிச்சை மேற்கொள்ளும் போது, பல் மருத்துவர்களும் பல் மருத்துவ உதவியாளர்களும் கையுறை, முக உறை, கண் பாதுகாப்பு கண்ணாடி அணிதல் பாதுகாப்பானது. எய்ட்ஸ் நோய்த் தொற்று நோயுடையவர்கள், எந்தவொரு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் செல்லும் போது, தனக்கு எய்ட்ஸ் நோய்த் தொற்று இருப்பதை மருத்துவருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்பது சட்டப்படி அவசியமல்ல எனினும், நோய்த் தொற்று இருப்பதைத் தெரிவிப்பது நல்லது. இதேப் போன்று, எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவருக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களும், அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பிறருக்குத் தெரிவிக்காமலிருப்பது நல்லது.
எய்ட்ஸ் நோய்த் தொற்றுடைய பல் மருத்துவர் சிகிச்சை அளிப்பது சரியா?
ஆர். காடேஸ்வரி, ஒண்டிப்புதூர்
எய்ட்ஸ் நோயாளி பல் மருத்துவராகப் பணிபுரியலாமா? இந்தியாவில் அவர்கள் மருத்துவம் செய்ய அனுமதிக்கப்படுகிறதா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
இந்தியாவில் எய்ட்ஸ் நோய்த் தொற்றுடைய பல் மருத்துவர் இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் எய்ட்ஸ் நோய்த் தொற்றுடைய பல் மருத்துவராகப் பணிபுரிகின்றனர். இந்தியாவிலும் எய்ட்ஸ் நோய்த் தொற்றுடைய பல் மருத்துவர்கள் பல் மருத்துவப் பணி செய்யத் தடை ஏதுமில்லை. காப்பு மூக்கு கண்ணாடி, கையுறைகள், முகஉறை, கிருமி நீக்கம் செய்யப்பட்ட கருவியை வைத்து பாதுகாப்பாகச் செயல்படுதல் போன்றவைகளின் வழியாக, பல் மருத்துவத்தைச் சிறப்பாகச் செய்யலாம். அவரால் செய்ய முடியாது என்று கருதும் சில பல் மருத்துவச் சிகிச்சைகளுக்கு உரிய பல் மருத்துவர்களைப் பரிந்துரை செய்து அனுப்பலாம்.
|
பல் மருத்துவத்திற்காக வரும் எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர் பல் மருத்துவரிடம் தனது நோய் குறித்துச் சொல்லிவிட்டால், அதற்கேற்ப அவருக்கு விரைவான சிகிச்சை அளிக்க முடியும். மேலும், எய்ட்ஸ் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டிருப்பவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவரிடம் கலந்தாலோசித்தும் அவருக்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
ஒரு சாதாரண பல் நோயாளிக்கு வெள்ளணுக்கள் 500 முதல் 1500 வரை இருக்க வேண்டும். எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்குப் பல் மருத்துவம் பார்க்கும் போது, நோயாளியின் வெள்ளணுக்கள் இரத்தத்தில் 200-க்கும் குறைவாக இருக்கக் கூடாது. எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்குப் பல் மருத்துவம் பார்க்கும் போது நோயாளியின் நோய் வரலாறு, அவரது எய்ட்ஸ் நோய்க்கான நடப்புச் சிகிச்சை, அவருக்கு கொடுக்கப்படும் மருந்துகளின் செயலாக்கம் முதலியவற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்குப் பல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது, குறுக்குத் தொற்று (Cross Infection) ஏற்படாமல் பல் மருத்துவர் கவனமாகச் செயல்படவேண்டும். இவ்வகை நோயுற்றவர்களுக்கு அடிக்கடி உறிஞ்சக் குடிநீர், சர்க்கரை இல்லாத பானங்கள், சர்க்கரை இல்லாத சுவிங்கங்கள் வழங்க வேண்டும். உலர்ந்த வாயைப் போக்கும் வாய்த் தூய்மிப்புப் பற்பசையினைப் பரிந்துரை செய்ய வேண்டும். மொத்தத்தில் ஒரு பல் மருத்துவர் ஒரு எய்ட்ஸ் நோய்த் தொற்றுடையவர்களுக்குப் பல் மருத்துவம் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.